உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Monday, August 20, 2012

உங்கள் குழந்தை வீட்டுப் பொருட்களை பிறருக்கு கொடுக்க சம்மதிப்பதில்லை. ஏன்?


ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தாய், தந்தை, குடும்பத்தில் உள்ளவர்கள் ஆகியோரோடு தன் வீட்டில் உள்ள பொருட்களின் மீதும் உணர்ச்சி பிணைப்பு ஏற்படும். வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களைப் போலவே பொருட்களுடனும் மன ரீதியான பிணைப்பை குழந்தைகள் இந்த வயதில் ஏற்படுத்திக் கொள்ளும். அம்மா அருகில் இருந்தால் குழந்தைகளுக்கு எத்தகைய தைரிய உணர்வு ஏற்படுமோ அதே போன்ற தைரிய எண்ணம் ஒரு சில பொருட்கள் குழந்தைகளின் அருகில் இருக்கும்போதும் ஏற்படும். குழந்தைகள் விடாமல் ஒரு பொம்மையை கட்டிபிடித்துக் கொண்டே இருப்பது இந்த காரணத்தினால் தான். அப்பொம்மையை யாரேனும் பிடுங்கி விட்டால் குழந்தையின் மனம் நிலைகுலைந்து போய்விடும். பொம்மையில் தொடங்கும் இந்த பழக்கம் நாளடைவில் வீட்டில் உள்ள பல பொருட்களுக்கும் பரவிவிடும். வேறு யாரேனும் வீட்டுப் பொருட்களை எடுத்து செல்லும்போது குழந்தைகள் அதை அனுமதிக்காததற்கு இதுவே காரணம்.

தொடக்கத்தில் சிறு குழந்தையாக இருக்கும்போது பிறருடன் தன் பொருட்களை பகிர்ந்து கொள்ளும் குழந்தை வயதாக வயதாக சற்று சுயநலம் மிகுந்ததாக மாறிவிடும். இது குழந்தையின் தவறல்ல. எல்லாக் குழந்தைகளின் இயல்பும் இதுதான். சில வருடங்கள் நிலவும் சுயநல எண்ணம் குழந்தையின் ஆளுமையை விட்டு விலகி விடலாம் அல்லது ஆளுமையில் நீடித்து நிலைத்து விடலாம். பெற்றோர் குழந்தையின் சுயநலப் போக்கை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே இது அமையும். ஒரு சில பெற்றோர் தன் குழந்தை வீட்டில் உள்ள பொருட்களை வேறு யாரையும் எடுக்க அனுமதிப்பதில்லை என்பதை கண்டு கொண்டவுடன் அதனை எல்லோரிடமும் பெருமையாக சொல்லிக் கொண்டே திரிவர். அதனைக் கேட்பவர்களும் ஆச்சரியத்துடன் ஏதேனும் பொருட்களை எடுப்பது போல் எடுத்து குழந்தையின் நடத்தையை சோதிப்பர். அப்போதெல்லாம் குழந்தை எப்பாடுபட்டாவது தன் பொருட்களை காப்பாற்றிக் கொள்ளும். எல்லாம் முடியும் தருவாயில் ‘பிற்காலத்தில் நன்றாகப் பிழைத்துக் கொள்வாய்’ என குழந்தையை பாராட்டி விட்டு பிறர் சென்று விடுவர். இதுபோன்ற பாராட்டுக்கள் குழந்தையின் தக்கவைத்துக் கொள்ளும் நடத்தையினை ஊக்குவித்துக் கொண்டே இருக்கும். நாளடைவில் அக்குணம் ஆளுமையில் ஒரு கூறாகவே மாறிவிடும். வேறு சில பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் தக்கவைத்துக் கொள்ளும் நடத்தையினை கண்டு கொள்ளவே மாட்டார்கள். அதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவும் மாட்டார்கள். குழந்தையும் வளர வளர தன் குணத்தினை மாற்றிக் கொண்டு பிறருடன் தன் பொருட்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்து விடும். பிற்காலத்தில் தன் அனுபவத்தின் துணை கொண்டு எதனைப் பகிர்ந்து கொள்ள வேண்டும், எதனை தனக்கென வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தானாகவே குழந்தை கற்றுக் கொள்ளும்.

உங்கள் குழந்தை பொருட்களை யாருக்கும் தராவிட்டாலும், அல்லது பிறரின் குழந்தை அதுபோல் நடந்து கொண்டாலும் அதனைப் பெரிதாக்காதீர்கள். அந்நடத்தையை கண்டும் காணததும் போல் அலட்சியப்படுத்தி செல்வதே போதுமானது.

Thursday, August 16, 2012

குழந்தைகள் பிற குழந்தைகளை அடிப்பது எதனால்?


கோபம் என்னும் உணர்ச்சி மனிதனின் மனதில் இயற்கையாகவே உண்டு. பிறப்பிலேயே நாம் பெறும் பல குணங்களில் கோபமும் ஒன்று. குழந்தகளுக்கு அது சற்று அதிகம். பக்குவப்பட்ட மனிதன் கோபம் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு வெளிக்காட்டுவதில்லை. குழந்தைகளுக்கு எந்த உணர்ச்சியையும் அடக்கத் தெரியாது. கோபத்தையும் எல்லா உணர்ச்சிகளையும் போலவே வெளிப்படுத்தி விடுகிறார்கள். நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் திடீரென அடித்து சண்டை போட்டுக் கொள்வது இதனால் தான். உணர்ச்சித் தூண்டலுக்குக் காரணமான அமிக்டாலா என்னும் மூளைப் பகுதி பெண்களை விட ஆண்களுக்கு சற்று பெரிதாக இருப்பதால் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளிடம் இக்கோபம் சற்று அதிகமாகவே காணப்படும். குழந்தைகள் கோபப்பட்டு அடிக்கடி பிற குழந்தைகளை அடித்து விடுவதால் பிரச்சனைகளும் அதிகம்.

கோபம் இயற்கையான குணம் என்றாலும் அதன் வெளிபாடு கற்றுக் கொள்வது தான். பெற்றோர்களாகிய நாம் நம் குழந்தைகளுக்கு கோபத்தை வெளிப்படுத்தும் விதங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். அதைச் சரியாக கற்றுக் கொடுக்காத போது தான் பல பிரச்சனைகள் தோன்றுகின்றன.

ஒரு வீட்டில் செல்லப் பிள்ளையாக ஒரு குழந்தை ஒன்று வளரலாம். அவ்வீட்டில் வளரும் வேறு சில குழந்தைகளை இக்குழந்தை அடிக்கும் போது சம்மந்தப்பட்ட குழந்தையின் பெற்றோர் உடனடியாக அவ்வாறு பிறரை அடிப்பது தவறு என்பதை தன் குழந்தைக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். ஏன் சண்டை வந்தது, எதற்காக அடிதடி நடந்தது என்பதை பெற்றோர் நன்கு ஆய்வு செய்ய வேண்டும். பிரச்சனைகள் தோன்றும்போது அடிக்காமல் தன் நோக்கத்தை எவ்வாறு நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பதை குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும். கூட்டுக் குடும்பத்தில் குழந்தைகள் அடிப்பது, கடிப்பது, கிள்ளுவது போன்றவைகளெல்லாம் சாதாரணமாக நடக்கக் கூடியவை. இவைகள் நடக்கும் போது அவரவர் குழந்தைகளை பெற்றோர் கண்டிப்பதில்லை. தன் குழந்தை தவறு செய்யும் போதெல்லாம் ‘குழந்தைகள் என்றால் அப்படித்தான் இருக்கும்’ என்று சாக்குபோக்கு சொல்லும் பெற்றோர்களே அதிகம். அதே பெற்றோர் பிற குழந்தைகள் தவறு செய்து தன் குழந்தைக் பாதிக்கப்படும்போது குழந்தைகளை கண்டித்து வளர்ப்பதில்லை என்று பிற குழந்தையின் பெற்றோர்களிடம் ஆதங்கப்படுவர். இந்த மனப்பான்மை அறவே கைவிடப்படவேண்டிய ஒன்று. யார் குழந்தை என்ற கேள்வியை விட்டுவிட்டு பொதுவான மனநிலையில் பிரச்சனைகளை அணுகினால் ஒரே வீட்டில் எல்லா குழந்தைகளுமே மகிழ்ச்சியாக வளர முடியும். பெற்றோர்களிடையேயும் சங்கடங்கள் வளராது.

சிறு குழந்தைகள் நான்கு பேர் ஒன்று சேர்ந்து எப்போது விளையாடினாலும் பெற்றோர் யாராவது ஒருவர் அவர்களின் அருகில் இருந்து மேற்பார்வையிடுவது நல்லது. தீவிரமாக கண்காணித்து வரும்போது எந்த குழந்தையாவது கோபம் கொண்டு வெறிச்செயல்களில் ஈடுபட்டாலும் துவக்கத்திலேயே அதனை தடுத்துவிட வேண்டும். தொடர்ந்து பிரச்சனைகள் இன்றி விளையாட ஏதுவான சூழ்நிலையை உருவாக்க பெற்றோர் உதவ வேண்டும். சிறுவயதில் இவ்வாறு விளையாட பழக்கி விட்டால் பின்னர் பெரியவர்களானதும் நல்ல நட்புடன் மற்றவர்களுடன் இருக்கும் குணம் குழந்தையின் ஆளுமையில் ஊறிப்போய்விடும்.

உங்கள் அக்கா, தங்கை, அண்ணன், தம்பியின் குழந்தைகள் உங்கள் குழந்தைகளை அடித்து விளையாடுகிறார்கள் என்றால் அதைக் கண்டு மன எரிச்சல் அடைய வேண்டாம். நேரடியாக அவர்களின் குழந்தைக்கு நல்ல பழக்கத்தை சொல்லிக் கொடுக்கும் உரிமையும், அதையும் மீறி தவறு செய்யும் போது கண்டிக்கும் கடமையும் உங்களுக்கு உண்டு. அதை விடுத்து எப்போது போய்த் தொலைவார்கள் என்ற எண்ணமும், அவர்கள் குழந்தைகளை கண்டிக்க மாட்டார்களா என்ற மனப் பொருமலும் கொண்டால் பெற்றோர்களிடம் வெறுப்பு அதிகமாகுமே தவிர மகிழ்ச்சி நிலவாது. உங்கள் மற்றும் அவர்கள் குழந்தைகளுக்கு பிற குழந்தைகளுடன் எப்படி விளையாடுவது என்ற திறமை வளராது.

நம் குழந்தை என்ற பாசத்தின் போர்வையில் குழந்தைகளின் ஆளுமையை அழிப்பது பெற்றோர் தான். நல்ல குழந்தைகளை உருவாக்குவது என்ற குறிக்கோளை மையமாகக் கொண்டு குழந்தைகளை வளர்த்தால் வருங்கால மனங்கள் வளமானதாக இருக்கும்.

தவறான வழிமுறைகளை கடைபிடித்து வன்முறைக் குழந்தைகளை உருவாக்காதீர்.



Tuesday, August 14, 2012

நாகரீகம் என்ற பெயரில் குழந்தைகளை அசௌகரியத்திற்கு ஆளாக்கலாமா?


நம்மை விட நம் குழந்தைகளை சிறப்பாக வளர்க்கவே நாம் அனைவரும் விரும்புகிறோம். அதிலும் குழந்தைகள் அழகாக இருக்க வேண்டும் என்பதில் நமக்கு அலாதிப் பிரியம். குழந்தைகளை நாகரீகமாக வளர்க்க வேண்டும் என்பதற்காக பலவற்றை நாம் அவர்கள் மீது திணிக்கிறோம். குழந்தைகளுக்கான உடைகள் அவைகளில் ஒன்று. பாவாடை சட்டையும், வேட்டியும் சட்டையும் போட்டு வளர்ந்த பெற்றோர்க்கு தன் குழந்தைக்கு நவ நாகரீக உடைகள் அணிவித்து வளர்க்க வேண்டும் என்று ஆசை இருக்கலாம். இதுபோன்ற பெற்றோர்களே தற்போது அதிகம். இவர்கள் தங்கள் பையன்களுக்கு வாங்கும் துணிகள் எல்லாம் கரடுமுரடாக, பதினைந்துக்கும் மேற்பட்ட பொத்தான்களுடன் இருக்கின்றன. பெண் குழந்தைகளுக்கு வாங்கும் துணிகள் எல்லாம் கையில்லாமல், முக்கால்வாசி முதுகு தெரியும்படி, தொப்புளுக்கு மேலே இருக்குமாறு பார்த்தே வாங்குகிறார்கள். இவைகளை சின்ன வயதில் போட்டு அழகு பார்த்தால் தான் உண்டு என்பதே இந்த உடைகளை வாங்குவதற்காக பெற்றோர் கூறும் வியாக்கியானம். ஆனால் இதுபோன்ற உடைகளை எல்லா சூழ்நிலைகளிலும் அணிவிக்க முடியாது. விஷேசங்களுக்கு செல்லும் போதெல்லாம் இருப்பதில் புதிய உடையை அணிவித்து குழந்தைகளை கூட்டிச் செல்வது தான் நம் கலாச்சாரம். குளிர்காலத்தில் அப்படி வெளியே செல்லும் குழந்தைகள் எல்லாம் கையில்லாமல், முதுகு போர்த்தாமல் நடுங்கிக் கொண்டுதான் செல்கிறார்கள். வெயில்காலத்தில் மோட்டா சட்டை பேண்டுகளை அணிந்து செல்லும் பையன்கள் ஏராளம். விவரம் இல்லாததால் பெற்றோர் சொல்லும் துணிகளை அணிந்து கொள்ளும் இக்குழந்தைகள் விவரம் தெரியும் பருவத்தில் நிச்சயமாக அசௌகரியத்தை உண்டாக்கும் இத்துணிகளை அணியவே மாட்டார்கள்.

குழந்தைகளின் ஆடைகள் காட்டன் துணியினால் தைக்கப்பட்டிருக்க வேண்டும். மெல்லியதாக இளகும் தன்மையுடன் இருந்தால் மிகவும் நல்லது. தலை வழியாக போட்டு கழட்டும் உடைகள் என்றால் எளிதாக போட்டு கழட்டும் வண்ணம் இருக்கிறதா என்பதை குழந்தைகளுக்கு போட்டுப் பார்த்து வாங்க வேண்டும். குளர் காலம், வெயில் காலம், மழைக் காலம் என எல்லா சூழ்நிலைகளிலும் அணியும் வண்ணம் பொதுவான வடிவமைப்பில் உள்ள துணிகளை வாங்குவதே சிறந்தது. குழந்தைகளுக்கு அதிகப்படியான உடைகள் தேவைப்படுவதால் பொதுவான வடிவமைப்பில் உள்ள துணிகள் அத்தேவையை நிறைவேற்றும். நூற்றுக்கு தொன்னூற்றி ஒன்பது பெற்றோர் குழந்தையின் அளவைவிட இரண்டு சைஸ் அதிகம் உள்ள துணிகளையே வாங்குகிறார்கள். குழந்தைகள் வளர வளர சரியாகிவிடும் என்னும் எண்ணமே அதற்குக் காரணம். இவ்வளவு விலை கொடுத்து வாங்குகிறோம், ஐந்தாறு வருடங்களுக்காவது போட வேண்டாமா என்ற ஆதங்கம் இன்னொரு காரணம். ஆனால் எந்த உடையும் அவ்வளவு வருடங்களுக்கு வராது. தற்போது தயாரிக்கப்படும் எல்லா ரெடிமேட் ஆடைகளும் 25 அல்லது 30 சலவைகளுக்கு மட்டுமே தாங்கும் வண்ணம் தயாரிக்கப்படுகின்றன. அதற்கு மேல் தாங்குவது நம் அதிஷ்டத்தைப் பொறுத்தது. எனவே மிகப்பெரிய சைஸ் உடைகளை வாங்கி பின் குத்துவது, கயிறு கட்டி இறுக்குவது, காலுக்கு கீழே மடித்து விடுவது போன்ற செய்து குழந்தைகளை தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களின் தற்போதைய அளவு உடைகளை வாங்கி அடிக்கடி அணிவிப்பதே நல்லது. அப்படி செய்யும் போது குழந்தை வளர்ந்து உடை சிறியதாக ஆவதற்கும், உடை பழையதாகி கிழிவதற்கும் சரியாக இருக்கும்.

தேவைக்கு அதிகமாக குழந்தைகளின் தலையில் எண்ணெய் பூசுவது இன்னொரு தொந்தரவு. சின்ன வயதில் அதிக எண்ணெய் தடவினால் தலைமுடி அதிகமாக வளரும் என்பது பெற்றோர்களின் எண்ணம். அதில் உண்மையில்லை. எவ்வளவு எண்ணெய் பூசினாலும் குறிப்பிட்ட அளவு வளர்ச்சியே இருக்கும். முடி வளர்ச்சி ஜீன்களாலும், குரோமோசோம்களாலும் தான் தீர்மாணிக்கப்படுகிறது. தலையில் முடியை அழகாக சீவி நல்ல தோற்றத்தை உண்டாக்கும் அளவுக்கு எண்ணெய் தடவினால் அதுவே போதும்.

பெண் குழந்தைகளுக்கு கண்ணுக்கு மை தீட்டுவது, உதட்டுக்கு சாயம் பூசுவது போன்றவற்றை சிறு வயதிலிருந்தே அறிமுகப்படுத்துவதில் தவறில்லை. ஆனால் அவைகளை அளவுக்கு மீறி பயன்படுத்துவது குழந்தைகளின் தோலுக்கு எதிர் விளைவுகளை உண்டாக்கும்.

குழந்தைகளுக்கு அணிவிக்கும் செறுப்புகள் அதிக இறுக்கமானவையாக இல்லாமல் இருக்க வேண்டும். ஷூக்களும் அப்படியே வாங்கப்பட வேண்டும். சாக்ஸ் இல்லாமல் கண்டிப்பாக ஷூ அணிவிக்கவே கூடாது. அப்படி அணிவிக்கப்பட்ட செறுப்பு, ஷூக்களையும் ஒரு மணிக்கு ஒரு முறை கழட்டி கால்களின் இறுக்கத்தை தவிர்ப்பது நல்லது.

திருமணம் போன்ற விஷேசங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றால் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை அவர்களை சிறுநீர் கழிக்க அழைத்துச் செல்ல வேண்டும். சற்று விபரம் தெரியும் வயது குழந்தைகள் என்றால் சிறுநீர் வருகிறதா என்பதை இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை கேளுங்கள். அவர்களுக்கு அடிக்கடி குடிக்க தண்ணீர் கொடுப்பதும் அவசியம். தேவையான அளவு தண்ணீர் கொடுப்பது குழந்தைகள் சோர்வடையாமல் இருக்க உதவும்.

நம் குழந்தைகள் நாகரீகமாக இருப்பது நல்லது தான். ஆனால் அவஸ்தைக்குள்ளாகக் கூடாது என்பதில் உறுதியாயிருங்கள்.





Friday, August 10, 2012

குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பது எப்படி?


நாம் வாழக்கூடிய சமூகம் எதை சரி என்று சொல்லுகிறதோ செய்யவும், எதை தவறு என்று சொல்கிறதோ அதை செய்யாமல் இருக்கவும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதே ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பது. குழந்தையின் வாழ்க்கையில் ஒருவயது முடிந்தவுடன் ஒழுக்கத்தை கற்றுக் கொள்வது தொடங்குகிறது. முதலில் பெற்றோரின் கட்டுப்பாடுகளின் மூலமும் பின்னர் தன் சொந்த அறிவின் மூலமும் குழந்தைகள் ஒழுக்கம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்கிறார்கள். சொந்த அறிவின் மூலம் ஒழுக்கம் என்றால் என்ன என்பதை குழந்தைகள் தெரிந்து கொள்ளும் முன்பே, பெற்றோர்கள் கட்டுப்பாடுகள் மூலம் பலவற்றை கற்றுக் கொடுத்து விடுகிறார்கள். குழந்தைகளின் ஒழுக்க நடத்தைகளில் 90 சதவீதம் இவ்வாறே கற்றுக் கொள்ளப்படுகிறது. இக்காரணத்தால் இரண்டு வயது வரையிலான குழந்தைகளின் நடத்தை ஒழுக்கங்களை உருவாக்கும் பெற்றோர் நல்ல நடத்தைகளை ஊக்குவிக்க வேண்டும். வார்த்தைகளால் பாராட்டுதல், திண்பண்டங்களை பரிசாக அளித்தல், விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுத்தல் போன்றவற்றின் மூலம் ஒழுக்கமான நடத்தைகளை ஊக்குவிக்கலாம். விரும்பத்தகாத நடத்தைகளை ஒதுக்கும் விதமாக முகம் சுளித்தல், முகத்தை திருப்பிக் கொள்ளுதல், பாராட்டு வார்த்தைகளை கூறாமல் இருத்தல் ஆகியவற்றைக் கடைபிடிக்கலாம். எந்த காரணத்தைக் கொண்டும் குழந்தைகள் ஒழுக்கம் தவறி நடந்தார்கள் என்பதற்காக அடித்தல், சூடு வைத்தல், கிள்ளி வைத்தல் போன்ற தண்டனைகளை அளிக்கக் கூடாது. தண்டனைகள் ஒருபோதும் கெட்ட பழக்கங்களை குறைத்து நல்ல பழக்கங்களை அதிகரிப்பதில்லை என்பதே உளவியல் ஆய்வுகளின் கண்டுபிடிப்பு.

பெற்றோர் ஒரு நடத்தை தவறானது என்று குழந்தைக்கு சொல்லிக் கொடுத்துவிட்டால், அதற்குப்பின் எல்லா சமயங்களிலும் அது தவறானதே என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். வீட்டின் நடுகூடத்தில் சிறுநீர் கழிப்பது தவறு என்று குழந்தையிடம் சொல்லி விட்டால் அதற்குப் பின் எப்போது குழந்தை நடுக்கூடத்தில் சிறுநீர் கழித்தாலும் அதனை ஏற்கக்கூடாது. ஒரு சமயத்தில் அதனை கண்டித்துவிட்டு, இன்னொரு சமயத்தில் அதனை கண்டிக்காமல் விட்டால் குழந்தைக்கு நடுக்கூடத்தில் சிறுநீர் கழிப்பது சரியா அல்லது தவறா என்பதில் குழப்பம் ஏற்பட்டு விடும். ஒருசமயத்தில் அதட்டும் அம்மா, இன்னொரு சமயத்தில் அதைப் பற்றி கேட்பதேயில்லை. என்பதை உணரும் குழந்தை அடுத்த முறையும் நடுக்கூடத்தில் சிறுநீர் கழித்துப் பார்க்கும். இதுவே தொடர்ச்சியாக நடக்கும். பல குழந்தைகள் பெற்றோர் என்ன சொன்னாலும் தன் தவறான நடத்தையை மாற்றிக் கொள்ளாததற்கு காரணம் இதுவே. ஒழுக்கம் பற்றி பெற்றோர் தாம் சொன்ன கருத்தை எப்போதும் உறுதியாக கடைபிடிப்பது அவசியம்.

நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்வதற்கு பெற்றோர் குழந்தைகளுக்குச் செய்யும் உதவி, குழந்தை நல்ல பழக்கங்களை கடைபிடிக்கும்போது அதைப் பாராட்டுதல், கெட்ட பழக்கங்களை குழந்தை வெளிக்காட்டும் போது அவற்றை ஆதரிக்காத முகபாவம், எது நல்லது-எது கெட்டது என்பதில் பெற்றோர் தொடர்ந்து உறுதியாக இருப்பது ஆகியவை குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்று கொடுப்பதின் அடிப்படை விதிகள்.

இரண்டு வயது வரையிலான குழந்தைகள் அவர்களைப் பாராட்டிப் பேசுவதை புரிந்துகொள்ளும் திறனைப் பெற்றிருக்க மாட்டார்கள் என பல பெற்றோர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் குழந்தைகளைப் பாராட்டிப் பேசுவதை பெற்றோர் தவிர்த்து விடுகிறார்கள். பாராட்டிப் பேசுவதை புரிந்து கொள்ளாவிட்டாலும், பெற்றோரின் முகத்தில் ஏற்படும் நல்ல முகபாவங்களைக் கொண்டு அம்மா, அப்பா பாராட்டுகிறார்களா அல்லது திட்டுகிறார்களா என்பதை குழந்தைகள் புரிந்து கொள்ளும். எந்தெந்த நடத்தைகளுக்கு பெற்றோரின் முகபாவம் மகிழ்ச்சியாக இருக்கிறதோ அந்நடத்தைகளை குழந்தை திரும்பத்திரும்ப வெளிக்காட்டும். பெற்றோரின் முகம் சுணக்கமடையும் நடத்தைகளை குழந்தை கைவிட்டு விடும். ஆறு மாதத்திலேயே இது தொடங்கி விடுகிறது. ஆதலால், பெரியோர்களைப் பாராட்டுவது போலவே குழந்தைகளையும் பாராட்டிப் பேசுவது ஒழுக்க நடத்தையை கற்றுக் கொள்ள உதவும்.

இரண்டு வயதிலிருந்து ஆறு வயதுக்குள்ளான குழந்தைகள் நல்ல பழக்கங்களை பெற்றோரின் அறிவுறுத்தலுக்காக கடைபிடிக்கத் தொடங்குவர். அவர்களின் அறிவு வளர்ச்சி முழுமை பெறாத இக்கால கட்டத்தில் எதற்காக ஒரு பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்ற கேள்வி அவர்களின் மனதில் தோன்றுவதில்லை. காரணம் தெரியாமலேயே நல்ல பழக்கங்களை கடைபிடிக்கும் வயது இது. ஒரு நல்ல நடத்தையால் என்ன நன்மை என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர் இச்சமயத்தில் சொல்லி கொடுத்தால் அந்நடத்தை அவர்களின் ஆளுமையில் வேறூன்றி ஆயுட்காலம் முழுமைக்கும் நிலைத்து நிற்கும்.

பள்ளிக்குச் செல்லும் வயதுக்கு முன் குழந்தைகளிடம் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றலாம். சொன்னபடி கேட்காமல் சொல்வதற்கு எதிராக நடப்பது பொதுவான ஒன்று. அவ்வாறு நடக்கும் போது பெற்றோரின் அதிகப்படியான கவனம் கிடைப்பது, அறியாமை, பொறுப்பான வேலை எதுவும் இல்லாமை ஆகியவையே குழந்தைகள் அப்படி நடப்பதற்குக் காரணம். இதனைப் புரிந்து கொள்ளாமல் கடுமையாக அடித்தல் போன்ற தண்டனைகள் குழந்தைகளை கெட்டவர்களாகவும் பெரும்கோபம் கொண்டவர்களாகவும் உருவாக்கிவிடும். சில குழந்தைகள் சிறிய தவறுக்கு இவ்வளவு பெரிய தண்டனை எதற்கு? பெற்றோர் எச்சரித்திருந்தால் அதுவே போதுமே என்று நினைப்பதும் உண்டு.

ஆறு வயதிற்கு மேற்பட்ட பதிமூன்று வயதிற்குப்பட்ட சில குழந்தைகள் அதிக அடாவடித்தனம் செய்வதும் சாதாரணமானதே. பள்ளியின் விதிமுறைகளை மீறி ஆசிரியர்களின் கோபத்துக்கு ஆளாவது அதிக குழந்தைகளிடம் தற்போது காணப்படுகிறது. பள்ளியின் மீது குழந்தைப் பருவத்தில் இருந்த பயம் குறைந்து போவதும், பள்ளி வாழ்க்கை அலுப்பைத் தருவதாக இருப்பதுவுமே இதற்குக் காரணம். நாளாக நாளாக இக்குழந்தைகள் தானாகவே சரியாகிவிடுவர். அதற்குள் பெற்றோர் பெரிய பிரச்சனையை உண்டாக்கி பெற்றோர்-குழந்தை உறவு பாதிக்கும் நிலைக்குப் போய்விடும். பெற்றோர் குழந்தைகளின் மனநிலையைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப பொறுமை காப்பது நன்று. குழந்தைப் பருவத்தில் சில கெட்ட பழக்கங்கள் இருந்தாலும் கூட பெற்றோர் பொறுமையுடன் இருப்பது வாலிப பருவத்தில் அவர்கள் தங்கள் சொந்த அறிவின் துணைகொண்டு ஒழுக்கமானவர்களாக வளர உதவும்.







Thursday, August 9, 2012

குழந்தைகளுக்கு தோல்வி ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும்?


நாணயத்தை சுண்டினால் பூ, தலை என இரண்டில் ஏதாவது ஒன்று தான் விழும் என்பது போல் முயற்சியின் விளைவுகள் இரண்டு தான். ஒன்று வெற்றி, மற்றொன்று தோல்வி. கரும்பின் சுவை போன்று இனிப்பானது வெற்றி. கசக்கும் இயல்பு கொண்டது தோல்வி. பெற்றோர்களாகிய நாம் தோல்விகளாலேயே துவண்டு போய் இருப்பதால் நம் குழந்தைகளும் தோல்வியடைவதை விரும்புவதில்லை. அனுபவம் என்னும் அகராதியை வைத்துக் கொண்டு குழந்தைகளின் ஒவ்வொரு முயற்சிக்கும் ஏதேனும் வகையில் உதவி அவர்களுக்கு வெற்றியை அளிக்க முயற்சிக்கிறோம்.

ஒரு சிறுவன் போட்டி ஒன்றில் விளையாடிக்கொண்டிருந்தான். மைதானத்தில் அமர்ந்து அவனின் பெற்றொர் மகன் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அச்சிறுவன் விளையாடும் போது ஒரு பாயிண்ட் எடுத்து விட்டால் பார்த்துக் கொண்டிருக்கும் பெற்றோர் துள்ளிக் குதிப்பதும், ஏதேனும் தவறு செய்து விட்டால் உடனே வெளியிலிருந்து கடிந்து கொள்வதுமாக பெற்றோரின் நடத்தை இருந்தது. கிட்டத்தட்ட சிறுவன் தோற்பது உறுதியாகிவிட்ட நிலை நிலவிய போது பெற்றோரின் முகம் பெரும் சோகத்தில் இருந்தது. விளையாட்டின் முடிவில் தோற்ற அந்த சிறுவனின் கண்களில் தாரைதாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருக்க அவனின் பெற்றோர் ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தனர். என்னுடைய மதிப்பீட்டின் படி சிறுவன் விளையாட்டில் தோற்றதைவிட பெற்றோரிடம் அவமானப்பட நேரிட்டதே என்பதற்காகத்தான் அழுவது போல் தெரிந்தது. ஏனென்றால் பெற்றோருடன் வராத சிறுவர்கள் தோற்றபோது பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் தங்கள் நண்பர்கள் போட்டியில் விளையாடுவதுப் பார்த்து அவர்களை மகிழ்ச்சியுடன் ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தனர். குழந்தைகளுக்கு ஏற்படும் தோல்விகளை பூதாகரமாக்குவது பெற்றோர்தான் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

நல்ல பெற்றோரின் கடமை வெற்றி தோல்வி பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதல்ல. மாறாக முயற்சி என்றால் என்ன என்பதை சொல்லிக் கொடுப்பது தான். விளையாட்டு, போட்டி, வாழ்க்கை என எல்லாவற்றிலும் முயற்சிப்பதே முக்கியம் என்பதையும், அறிவுப்பூர்வமாக முயற்சி செய்வது எப்படி என்பதையும், கடினமாக உழைப்பது எப்படி என்பதையுமே குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

முயற்சியின் முடிவு வெற்றியாக அமைந்துவிட்டால் குழந்தை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர்த்த வேண்டுமே தவிர, அதனைப் பெரிதுபடுத்தி குழந்தையின் மனதில் கர்வம் ஏற்பட பெற்றோர்க் காரணமாக இருக்கக் கூடாது. முடிவு தோல்வி என்றால் முயற்சி சரியான பாதையில் இல்லை என்பதை பெற்றோர் உணர்த்த வேண்டும். தோல்வியைக் காட்டி குழந்தைகளின் மனதில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தக் கூடாது.

சிறுவயதில் எளிய காரியங்கள் செய்யும் போது குழந்தைகள் தோல்வியை சந்திப்பது நல்லது. தோல்வி என்றால் என்ன என்பதை அவர்கள் புரிந்து கொள்ள இவ்வனுபவங்கள் உதவும். வெற்றிக்கான முயற்சிகளை எவ்வாறு எடுக்க வேண்டும் என்பதை இத்தோல்விகள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும். பிற்காலத்தில் பெரிய முயற்சிகளில் தோல்வியடையும் போது மனம் கலங்காமல் மீண்டும் முயற்சிக்கும் மனப்பான்மை வளரும். இக்கால கட்டத்திலோ சிறுவயதில், சின்னசின்ன முயற்சிகளில் பெற்றோர் உதவியுடன் ஏராளமான வெற்றிகளை குழந்தைகள் பெறுகின்றனர். எல்லோராலும் சாதிக்கக் கூடிய இவ்வெற்றிகளால் பயன் ஏதும் இல்லை. இதே குழந்தைகள் பெரியவர்களானதும் ஒரே தோல்வியில் தற்கொலை செய்து கொள்கின்றனர். அவர்களால் தனித்து முயற்சி செய்யவும் முடிவதில்லை. தோல்வியைத் தாங்கிக் கொள்ளவும் இயலவில்லை.

ஒரு குழந்தை எல்லா முயற்சிகளிலும் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது என்றால் பெற்றோர் சற்று உஷாராக இருக்க வேண்டும். அக்குழந்தையின் மனதில் தோல்வியே எனது வாழ்க்கை என்ற மனப்பான்மை உருவாக வாய்ப்புண்டு. அந்த மனப்பான்மை உருவாகிவிட்டால் அதற்குப் பின் குழந்தை எந்த முயற்சியையும் எடுக்காமல் வாழ்க்கையில் எது நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் நிலைக்குப் போய்விடும். இது போன்ற குழந்தைகளின் பெற்றோர் குழந்தைகளை புதிய முயற்சி எடுப்பதற்கு ஊக்கப்படுத்த வேண்டும். பழைய சூழ்நிலையில் ஏற்பட்ட தோல்விகள் புதிய சூழ்நிலையில் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதையும், புதிய சூழ்நிலை எவ்வாறு மாறியிருக்கிறது என்பதையும், குழந்தைக்கு அறிவு வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது என்பதையும் உணர்த்துவது பெற்றோரின் கடமை.

வெற்றியடைந்து விட்டால் வியாக்கியானம் பேசுவதும், தோல்வியடையும் போது துவண்டு போவதும் குழந்தைகளின் இயல்பு. பெற்றோர் இரண்டையுமே ஊக்குவிக்கக் கூடாது. வெற்றி தோல்வியை வைத்து குழந்தைகளை மதிப்பிடக் கூடாது. ஒரு குழந்தை வெற்றி பெறலாம் அல்லது தோற்கலாம். அவைகளுக்காக நம் குழந்தைகளுக்கு பாசத்தைக் காட்டுவதை விட அவர்கள் நம் குழந்தைகள் என்பதற்காக பாசத்தைக் காட்டினாலே உங்கள் குழந்தை வெற்றிக் குழந்தையாக வளரும்.

Wednesday, August 8, 2012

முதல் குழந்தை மற்றும் இரண்டாவது குழந்தை இடையே ஏற்படும் உளவியல் பிரச்சனைகள்


முதல் குழந்தை இருக்கும் போது தாய் இரண்டாவது பிரசவத்திற்கு தயாராவது முதல் மனைவி இருக்கும்போது இரண்டாவது மனைவியை திருமணம் செய்ய ஒரு கணவன் முயற்சி செய்யும் போது முதல் மனைவியின் மனதில் என்ன உணர்வுகளைத் தோற்றுவிக்குமோ அதே உணர்வுகளை முதல் குழந்தையின் மனதில் தோற்றுவிக்கும். தனக்கு இருக்கும் முக்கியத்துவம் பறிபோவதை எந்த குழந்தையும் விரும்புவதில்லை. அதே நேரத்தில் புதிய குழந்தையை கவனிக்கும் விஷயத்தில் காட்டும் அக்கறையை முதல் குழந்தையையும் கவனிக்கும் விஷயத்தில் பெற்றோர்களும், வீட்டில் உள்ள மற்றவர்களும், உறவினர்களும் காட்டுவதில்லை. இதனை கவனிக்கும் முதல் குழந்தை இதுவரை எனக்கு முழுமையாக கிடைத்து வந்த கவனிப்பை பறித்துக் கொண்டது புதிதாக வந்த குழந்தைதானே என நினைத்து அக்குழந்தையின் மீது வெறுப்பையும் பொறாமையையும் வளர்த்துக் கொள்கிறது. முதல் குழந்தைக்குத் தோன்றும் இம்மனநிலையை ‘உடன்பிறந்தோரிடம் நிலவும் பகைமை’ என உளவியல் கூறுகிறது. புதிய குழந்தையின் மீது பகைமை உணர்ச்சி அதிகமாகும் போது பெரிய குழந்தை யாருமில்லா நேரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் பாப்பாவை கிள்ளி வைப்பது போன்ற நடத்தைகளில் ஈடுபடலாம். பிற்காலத்தில் இரு குழந்தைகளுக்கு இடையே நிலவும் பிரச்சனை பூதாகரமாக விஸ்வரூம் எடுத்து அடிக்கடி அடித்துக் கொள்வது, அதன்பின் பெற்றோரிடம் புகார் சொல்வது என பெற்றோருக்கு தீராத தலைவலியைக் கொடுக்கும். இரண்டு வயது முதல் நான்கு வயது வரையிலான கால கட்டத்தில் குழந்தைகளிடம் இப்பிரச்சனை அதிகரிக்கும்.

இரு குழந்தைகளுக்கு இடையே நிலவும் பகைமை உணர்ச்சி இயற்கையானது என்றாலும் அதற்கு குழந்தைகள் காரணம் அல்ல. பெற்றோர் இரு குழந்தைகளையும் நடத்துகின்ற விதமே அதற்குக் காரணம். தாய் புதிதாகக் பிறந்த குழந்தையை கையில் வைத்திருக்கும்போது தாயை கட்டி அணைத்துக் கொள்ள முதல் குழந்தை ஓடிவரும் போது அதன் நெஞ்சில் கையை வைத்து தடுக்கும் தாய்மார்கள் உண்டு. அத்தோடு நிற்காமல் ‘இப்படி ஓடிவருகிறாயே, பாப்பா மீது விழுந்தால் என்ன ஆகும்’ தூரப்போ’ என துரத்துவதும் உண்டு. அப்போது தான் இது நாள் வரை ஓடிவந்து கட்டியணைத்தால் ஒன்றும் சொல்லாத அம்மா இப்போது மட்டும் துரத்துவது ஏன்? புதிய பாப்பா தானே அதற்கெல்லாம் காரணம் என்று சிந்திக்கும் குழந்தை பாப்பா மீது வெறுப்பை வளர்த்துக் கொள்ளத் தொடங்குகிறது. வீட்டுக்கு வரும் உறவினர், நண்பர்கள் என அனைவரும் புதிய குழந்தையைப் பற்றியே பேசுவது முதல் குழந்தையின் மனதில் உள்ள பகைமைக்கு தூபம் போடும். பின்நாட்களில் இரண்டு குழந்தைகளும் சண்டை போடும் போது பெற்றோர் தலையிட்டு முதல் குழந்தைக்கு பரிந்து பேசுவது இப்பகைமை உணர்ச்சியை எண்ணெய் விட்டு எரிய வைக்கும்.

பெற்றோர் இரண்டாவது குழந்தையை பெற்றுக் கொண்டவுடன் இரண்டு குழந்தைகளையும் சமமாக நடத்துவது அவசியம். முதல் குழந்தையின் முக்கியத்துவம் குறையாமல் பார்த்துக் கொள்வது ஓர் கலை. சின்ன சின்ன நடவடிக்கைகளின் மூலம் எளிதாக இரண்டு குழந்தைகளையும் சமமாக நடத்தலாம். தாய் பாப்பா தூங்கிக் கொண்டிருக்கும் போது முதல் குழந்தையை சற்று நேரம் மடியில் எடுத்து வைத்து பேச்சுக் கொடுத்து கொஞ்சலாம். முதல் குழந்தைக்குப் பிடித்தமான ஏதேனும் பொருட்களை வாங்கி வைத்திருந்து புதிய பாப்பா தூங்கும் சமயத்தில் ஆர்ச்சரியப்படுத்தும் வகையில் அளிக்கலாம். வெளியே குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது எதிர்படுவோர் புதிய குழந்தையைப் பற்றி மட்டுமே பேசினால் அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் முதல் குழந்தையைப் பற்றிய பேச்சும் வருமாறு பார்த்துக் கொள்ளலாம். இரண்டு குழந்தைகளுக்கும் ஏதேனும் வாங்கி வந்தால் அதை முதல் குழந்தையிடமே கொடுத்து நீ எடுத்துக் கொண்டு பாப்பாவுக்கும் கொடுத்து விடு எனக்கூறி முதல் குழந்தையின் முக்கியத்துவத்தை அதிகரிக்கலாம். இரண்டு குழந்தைகளும் சண்டை போட்டுக் கொண்டு பிரச்சணை பெரிதாகும் போது எப்போதும் சிறிய குழந்தைக்கு மட்டும் பரிந்து பேசுவதை நிறுத்திக் கொண்டு இருவருக்கும் பொதுவாகப் பேசலாம் அல்லது நடுநிலைமை வகித்து ஒருவரையும் திட்டாமல் இருக்கலாம். இது போன்று இன்னும் ஏராளமான முறைகளில் நடந்து கொள்வதன் மூலம் முதல் குழந்தையின் மீதான கவனம் குறையவில்லை என்பதை பெற்றோர் உணர்த்தி விடலாம்.

இவ்வாறு பெற்றோர்களால் சமமாக நடத்தப்படும் குழந்தைகளிடையே சகோதரப் பாசம் அதிகரித்து நல்லுறவு நீடிக்கும். உடன் பிறந்தோரிடம் நிலவும் இந்நல்லுறவு இரு குழந்தைகளின் மொழி வளர்ச்சி, அறிவு வளர்ச்சி ஆகியவற்றுக்கு துணைநிற்கும். அன்பு, பாசம் ஆகியவற்றின் ஆதாரமாக அமையும். விளையாட்டு, நகைச்சுவையுணர்வு ஆகியவற்றை வ:ளர்க்க உதவும்.




Tuesday, August 7, 2012

குழந்தைகளுக்கு கனவு வருமா? அதனால் ஏதேனும் பாதிப்புகள் உண்டா

ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது தொடர்ச்சியான கற்பனைகள், சிந்தனைகள் அல்லது மனவெழுச்சிகள் மனதில் தோன்றி கடந்து செல்வதையே கனவுகள் என்கிறோம். கனவுகள் எல்லா மனிதர்களுக்கும் தோன்றும். பிறந்து இரண்டு வாரங்கள் முடிந்தவுடன் கனவுகள் மனதில் தோன்றத் தொடங்கி விடுகின்றன. விழித்திருக்கும் போது குழந்தையைச் சுற்றி நடக்கும் விஷயங்களே தூங்கும்போது கனவுகளாக உருவெடுக்கின்றன. அதனால் இரண்டு வாரம் முடிந்தவுடன் தொடங்கும் ஆரம்பகால கனவுகள் சாதாரணமானவையாகவே இருக்கும். குழந்தையின் விழிப்புணர்ச்சி அதிகரிக்கத் தொடங்கும்போது கனவுகளின் வீரியம் மற்றும் தன்மையும் மாறத் தொடங்குகிறது. அதிக அனுபவமில்லா காலத்தில் குழந்தையின் மனதில் தோன்றும் கனவுகள் பெரும்பாலும் நல்ல கனவுகளே. இக்கனவுகள் குழந்தையின் சிந்திக்கும் திறனை மேம்படுத்த உதவுகின்றன. குழந்தை காணும் கனவுகளின் அளவுக்கும் அக்குழந்தையின் சிந்தனை மற்றும் அறிவு வளர்ச்சிக்கும் நெருங்கியத் தொடர்பு உள்ளதாக உளவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெற்றோரின் அரவணைப்பில் இருக்கும் வரை நல்ல கனவுகளையே காணும் குழந்தைகள் ஓடியாடி விளையாடத் தொடங்கியவுடன் பல்வேறு அனுபவங்களைப் பெறத் தொடங்கி விடுகிறார்கள். அதுமுதற்கொண்டு குழந்தைகளின் எதிர்மறை அனுபங்களையும் அடிப்படையாகக் கொண்டு பயமுறுத்தும் கனவுகளும் வர ஆரம்பித்து விடும்.

குழந்தைகளுக்கு பயத்தை உண்டாக்கும் பயங்கரக் கனவுகள் 18 மாதத்தில் தொடங்குகிறது. ஆழ்ந்த தூக்கத்தில் குழந்தைகள் இருக்கும் போது பல பயமுறுத்தும் கனவுகள் அவர்களுக்குத் தோன்றலாம். பதினெட்டு மாதத்தில் தொடங்கும் இப்பயங்கர கனவுகள் மூன்று முதல் நான்கு வயது வரையிலான காலகட்டத்தில் மிக அதிகமாகத் தோன்றும். கற்பனை உணர்ச்சி உச்சகட்டத்தில் இருக்கும் இச்சமயத்தில் குழந்தைகள் தங்கள் பகற்கனவை தூக்கத்திலும் தொடர்வர். மிகப் பெரிய பூதமோ அல்லது ஆபத்தை உண்டாக்கும் விலங்குகளோ குழந்தைகளின் கனவில் தோன்றி அவர்களை பயமுறுத்தும். தப்பிக்கவே முடியாத ஆபத்தில் மாட்டிக்கொண்டு உதவி ஏதும் கிடைக்காத நிலையில் இருப்பது போன்று குழந்தைகள் பீதியடைந்து போவர். வாரத்திற்கு குறைந்தது ஒன்று அல்லது இரண்டு முறை இது போன்ற கனவுகள் குழந்தைகளுக்கு தோன்றலாம். எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகள் படிக்கும் குழந்தைகள் தெளிவான கற்பனைத் திறனைப் பெற்றிருப்பர். அவர்களின் அன்றாட வாழ்க்கை அதிக செயல்பாடுகள் கொண்டதாகவும், அவர்கள் வளரும் சூழ்நிலை அதிக பயமுறுத்தும் தூண்டல்கள் நிறைந்ததாகவும் இருக்கும். உடன் பிறந்தோர் மற்றும் வயதினையொத்த பிற குழந்தைகள் குழந்தைகளின் மனதில் அதிக பயத்தை உண்டாக்கும் வகையில் நடந்து கொள்வர். எல்லாவற்றிற்கும் மேலாக பெற்றோரை விட்டுப் பிரிந்து பள்ளிக்குச் செல்வது குழந்தைகளின் மனதில் பிரிவு பயத்தை உண்டாக்கி விடும். இவையனைத்தும் சேர்ந்து இரவில் தூங்கும் குழந்தையின் மனதில் பீதியைக் கிளப்பும் கனவுகளை உலவ விடும்.

பெற்றோரிடம் நிலவும் சண்டை, மகிழ்ச்சியற்ற குடும்ப நிலை, குடும்பத்தில் ஏற்பட்ட பிளவு, கடும் பொருளாதார பிரச்சனைகள் போன்றவையால் பாதிக்கப்படும் குழந்தைகளிடம் பயத்தை உண்டாக்கும் கனவுகள் அதிகமாக தோன்றும்.

குழந்தைகள் தூங்க ஆரம்பித்த பின் ஒருமணி நேரத்திற்குப் பின் இரண்டு மணிநேரத்த்திற்குப் பிறகு பயமுறுத்தும் கனவுகள் தொடங்கும். அவ்வாறு தோன்றும் பயமுறுத்தும் கனவு பத்து முதல் முப்பது நிமிடங்கள் வரை நீடிக்கும். இச்சமயத்தில் பயந்த குழந்தை திடீரென படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்து கொள்ளும். முகம் கதிகலங்கிப் போயிருக்கும். வீரிட்டுக் கத்தும். மூச்சு விடுதல் ஆழமாக இருக்கும். உடல் வியர்த்துப் போய்விடும். குழந்தை கால்களால் எட்டி உதைக்கும். கண்கள் பேயறைந்தது போல் பிதுங்கிக் கொள்ளும். இவையெல்லாம் நடக்கும் போது பெற்றோர் எவ்வளவு தேற்றினாலும் குழந்தை ஆறுதல் கொள்ளாது. பெற்றோருக்கு என்ன செய்வதென்றே தெரியாத குழப்பம் ஏற்படும். கனவு முடிந்தவுடன் குழந்தை மீண்டும் தூங்கத் தொடங்கிவிடும். தனக்கு ஓர் பயங்கரமான கனவு தோன்றியது என்ற நினைவே அக்குழந்தைக்கு இருக்காது. இக்கனவுகள் குழந்தையின் ஆளுமையோடோ அல்லது அதன் மனவெழுச்சிகளோடோ தொடர்பு கொண்டிருக்காது. நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் குழந்தையை திடீரென பின்னாலிருந்து தள்ளுதல், யாரேனும் மயங்கி விழுவதை குழந்தை பார்க்க நேரிடுதல், பிறருக்கு ஏற்படும் விபத்தொன்றினை குழந்தை பார்க்க நேரிடுதல் போன்ற சாதாரண காரணங்களால் தான் இது போன்ற பயமுறுத்தும் கனவுகள் குழந்தைகளுக்கு தோன்றுகின்றன.

குழந்தைகளுக்கு கனவு வராமல் தடுக்க வழியில்லை. ஆனால் கனவு வருவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை பெற்றோர்களால் குறைக்க முடியும். குழந்தை படுத்து உறங்கியதிலிருந்து ஒருமணி நேரம் வரை அருகிலேயே விழித்திருந்து உடலில் மாற்றங்கள் தோன்றும் போது தட்டிக் கொடுத்து ஆறுதல் அளிக்க வேண்டும். திடீரென குழந்தை விழித்துக் கொண்டு அழும்போது பதட்டப்படாமல் நிலைமையை சமாளிக்க பெற்றோர் கற்றுக் கொள்ள வேண்டும். மேலும் குழந்தைக்கு தாயத்து கட்டுதல், மந்தரித்தல் போன்ற மூட நம்பிக்கைகளில் இறங்காமல் இருப்பது நல்லது.

Monday, August 6, 2012

பிரச்சனைகளை எதிர்கொள்ள குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது எப்படி?

பெற்றோர்களில் இருவிதம் உண்டு. தங்கள் குழந்தைகளுக்கு எல்லாம் செய்து கொடுத்து மகிழ்ச்சியாக வைத்திருக்கும் பெற்றோர் முதலாவது வகை. முடிந்ததை செய்வோம், மற்றதை அவர்களாகவே அடைய வேண்டியது என்பதை கொள்கையாக வைத்துக் கொண்டு குழந்தைகளை இயன்ற வரை காப்பாற்றும் பெற்றோர் இரண்டாவது வகை. இதில் எது சரி என கேட்டால் இரண்டுமே தவறு என்றுதான் சொல்ல வேண்டும். எல்லாவற்றையும் செய்து கொடுத்து பாதுகாப்பாகவே வளர்த்தால் பின்னர் குழந்தைகள் தானாக எதையுமே செய்யும் திறமை இல்லாதவர்களாக வளர்ந்து விடுவர். எதையுமே கண்டு கொள்ளாமல் தானாகவே தெரிந்து கொள்ளட்டும் என விட்டால் எல்லாவற்றிற்கும் பயந்து கொள்பவர்களாக குழந்தைகள் வளர்வர். அதுவும் பிரச்சனைகளை எதிர்கொண்டு தீர்ப்பதில் திறமை இல்லாமல் வளர்வர்.

பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை வாய்ப்பது அரிது. எல்லோர் வாழ்க்கையுமே பிரச்சனைகளை கொண்டது தான். ஒரு பிரச்சனை தீர்வதற்குள்ளாகவே இன்னொரு பிரச்சனை தோன்றிவிடும். யார் தனக்கு ஏற்படும் பிரச்சனைகளை திறமையாக கையாண்டு அதை தீர்த்து விடுகிறார்களோ அவர்களே வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வதாக கொள்ளப்படுகிறது. எனவே நம் குழந்தைகளுக்கு பிரச்சனை தீர்க்கும் திறனை கற்றுக் கொடுப்பது அவசியம்.

சிக்கலைத் தீர்க்கும் திறன் ஒருநாளில் உருவாவதில்லை. வாழ்க்கையின் போக்கில் பல ஆண்டுகள் அனுபவத்தின் காரணமாகவே சிக்கலைத் தீர்க்கும் திறன் வளர்ச்சியடைகிறது. இந்த அடிப்படையில் பார்க்கும் போது இது போன்று பத்து நாட்கள் பயிற்சி செய்தால் சிக்கலைத் தீர்க்கும் திறன் வளர்ச்சி அடைந்து விடும் என்பது போன்ற குழந்தைகளுக்கு கற்றுத் தரும் விதமான பயிற்சிகள் உளவியலலில் எதுவுமே இல்லை. எதைக் கற்றுக் கொடுக்கிறோம் என்பதை சொல்லாமல் மறைநிலையில் மட்டுமே பிரச்சனைகளை தீர்க்கும் திறனை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க முடியும். பெற்றோர்கள் தங்களுக்கு ஏற்படும் பல பிரச்சனைகளை தீர்க்க முனையும் போது குழந்தைகளை அருகில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தங்கள் பெற்றோர் எவ்வாறு பிரச்சனைகளை அணுகுகிறார்கள், என்னென்ன உத்திகளை பயன்படுத்துகிறார்கள், பிரச்சனைகளைத் தீர்க்க முடியாவிட்டால் என்ன செய்கிறார்கள். தேவைப்படும் போது உதவி கேட்டு பிறரை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பனவற்றை குழந்தைகள் பார்த்தும், அருகிலிருந்து கேட்டும் தெரிந்து கொள்வார்கள். இது அவர்கள் படிக்கும் செயல்முறைப் பாடம். வளர வளர பல பிரச்சனைகளை பெற்றோர் தீர்ப்பதைப் பார்க்கும் குழந்தைகள் ஒரு கட்டத்தில் வாழ்க்கையின் எல்லா பிரச்சனைகளையும் எவ்வாறு தீர்ப்பது என்பதை தெரிந்து கொள்வார்கள். ஆனால் பல பெற்றோர்கள், தங்களுக்கு பிரச்சனை ஏற்படும் போது குழந்தைகள் அருகில் இல்லாதவாறு பார்த்துக் கொள்கிறார்கள். பிரச்சனைகளினால் குழந்தைகளின் மனம் பாதிக்க்கப்படக் கூடாது என்ற எண்ணமே இதற்குக் காரணம். இவ்வாறு குழந்தைகளை பிர்ச்சனைக்குரிய சூழ்நிலைகளில் இருந்து அப்புறப்படுத்துவது அவர்கள் பிற்காலத்தில் பிரச்சனைகளைக் கண்டாலே ஓடி ஒளியும் நிலைக்கு அடிகோலும்.

ஒருசில குழந்தைகள் எவ்வளவு கற்றுக் கொண்டாலும் தனியாக ஒரு பிரச்சனையைத் தீர்க்கும் நிலை ஏற்பட்டால் தவிப்பிற்குள்ளாகிவிடுவர். அது போன்ற நிலை தங்கள் குழந்தைகளிடம் நிலவுவதாக பெற்றோர் நினைத்தால் அக்குழந்தைக்கு அருகிலேயே இருந்து பிரச்சனைகளை தீர்க்குமாறு தைரியம் அளிக்க வேண்டும். அச்சமயத்தில் எல்லா உதவிகளையும், மனரீதியான ஆதரவினையும் அளிக்க வேண்டும். ஓரிரு முறை பெற்றோரின் உதவியோடு சிக்கலைத் தீர்ப்பதில் வெற்றி காணும் குழந்தை தன்னால் சிக்கலைத் தீர்த்து விட முடியும் என்ற மன தைரியத்தை வளர்த்துக் கொள்ளும். விரைவிலேயே தனியாக பிரச்சனைகளை எதிர் கொள்ளும் திறமை அக்குழந்தையினிடம் தோன்றி விடும்.

பிரச்சனை வந்த பின் அதனைத் தீர்க்க முற்படுவதும் தீர்ப்பதும் திறமை. அத்திறமை வாய்க்கப் பெற்றாலே போதுமானது. ஆனால் தற்கால உளவியலில் சிறந்த ஆளுமையினர் பலரிடம் நடத்தப்ப்பட்ட ஆய்வுகளில் புதிய ஆளுமைப் பரிமானம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அது பிரச்சனை வருமுன்னே பிரச்சனைகளை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஆளுமைப் பண்பாகும். இவ்வாறு அடுத்த பிரச்சனை எப்போதும் வரலாம் என்று ஒன்றைத் தீர்த்து விட்டு அடுத்ததை எதிர்பார்த்து காத்திருக்கும் மனநிலை கொண்டவர்கள் எப்போது பிரச்சனை வந்தாலும் கலங்குவதில்லை. இவர்களிடம் அவசர காலத்தில் சிக்கலை எதிர்கொள்ளத் தேவையான கூடுதல் மன ஆற்றலும் காணப்படுகிறது. அதனால் எந்த பிரச்சனை எப்போது வந்தாலும் அதனை சுலபமாக முடித்துவிட்டு அடுத்ததை எதிர்கொள்ள காத்திருக்கிறார்கள். பெற்றோர் முதலில் இத்திறனை வளர்த்துக் கொண்டால் அது குழந்தைகளிடம் ஆளுமைப் பண்பாக உருவெடுத்து விடும்.

குண்டுக் குழந்தைகளின் உடல் எடையைக் குறைக்க அவர்களை நடைப்பயிற்சி செய்ய வைக்க வேண்டும். அதற்கு பெற்றோரும் குழந்தைகளுடன் நடக்க வேண்டும். மெதுவாக நடைப் பயிற்சி செய்ய ஆரம்பித்த உடன் படிப்படியாக நடையைக் அதிகப் படுத்த வேண்டும். சோதனை ஒன்றில் பெற்றோர் ஒருநாளைக்கு 2000 எட்டுக்களும் குழந்தைகள் 1000 எட்டுக்களும் நடையை அதிகப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இச்சோதனையில் எந்தெந்த பெற்றோர் 2000 எட்டுக்கள் நடையை அதிகப்படுத்தினார்களோ அவர்களின் குழந்தைகள் ஒருநாளைக்கு 2117 எட்டுக்கள் நடையை அதிகப்படுத்தி விரைவிலேயே தங்கள் எடையைக் குறைத்துக் கொண்டனர். சுறுசுறுப்பான பெற்றோர்களால் சுறுசுறுப்பான குழந்தைகளை உருவாக்க முடிந்தது.

எடைக்குறைப்பில் மட்டுமல்ல, சிக்கலைத் தீர்ப்பதிலும் அதுவே உண்மை. எப்போது வேண்டுமானாலும் பிரச்சனைகள் வரலாம். எதிர்பார்த்துக் காத்திருங்கள் உங்கள் குழந்தைகளோடு!

Wednesday, June 13, 2012

குழந்தைகளுக்கு பணம் கொடுக்கலாமா?

வீட்டில் இருக்கும் சாப்பாட்டை உண்பதை விட கடைகளில் திண்பண்டங்களை வாங்கி உண்பதிலேயே குழந்தைகளுக்கு ஆர்வம் அதிகம். அதிலும் தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்க்கும் குழந்தைகளுக்கு திண்பண்டங்களைப் பற்றிய விபரங்கள் அதிகமாக தெரிவதால் அவற்றை வாங்கி உண்ண வேண்டும் என்ற அவா அவர்களிடம் அதிகம். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர் ஏதேனும் வாங்கி உண்ண காசு கொடுத்து அனுப்புவது காலம் காலமாக இருந்து வரும் பழக்கம். அப்பழக்கம் தற்காலத்தில் சற்று வலிமையடைந்து இருக்கிறது. தங்கள் குழந்தைகளுக்கு குறைந்தது பத்து ரூபாய் முதல் அதிகப்பட்ச பணம் கொடுத்து அனுப்பும் பெற்றோர் தற்போது அதிகரித்து இருக்கிறார்கள்.

சிறுவயது குழந்தைகளுக்கு காசு கொடுத்து பழக்குவது அவர்களிடம் கெட்ட விளைவுகளையே உண்டாக்குகிறது. கையில் காசு இருப்பதால் நினைத்த போதெல்லாம் கடைக்குச் சென்று ஏதேனும் வாங்கி உண்ணும் குழந்தைகளுக்கு ஏதேனும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டு விடுகிறது. கடைக்குச் சென்று தான் விரும்புவதை வாங்கி உண்ணும் குழந்தைகள் வீட்டு உணவுகளை நாளடைவில் வெறுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். குழந்தைகள் வாங்கும் திண்பண்டங்களில் சாக்லெட்டுக்கே முதலிடம். அதிகமாக சாக்லெட் உண்ணும் குழந்தைகளுக்கு பற்சொத்தை விரைவில் ஏற்பட்டு பல்லைப் பிடுங்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது. கடையில் கிடைக்கும் ஆரோக்கியமற்ற பிற பொருட்களை வாங்கி உண்பதால் ஏற்படும் உடல்நலக் கேடும் அதிகம். பெற்றோர் திண்பண்டங்களை வாங்கிக் கொடுப்பதாயிருந்தால் சரியான திண்பண்டத்தை வாங்கிக் கொடுக்கலாம். எந்த திண்பண்டத்தையும் அளவுக்கு அதிகமாக உண்ணாதவாறு குழந்தையைக் கண்காணித்துக் கொள்ளலாம். தரமான பொருட்களை வாங்கிக் கொடுக்கவும் வாய்ப்பு உண்டு.

சிறுவயதிலிருந்தே தன் விருப்பம் போல் பலவற்றையும் வாங்கி சாப்பிட்டு பழகிவிட்ட குழந்தைகளுக்கு மேல்நிலைப் பள்ளி அல்லது கல்லூரி செல்லும் போது திண்பண்டங்களின் மீது வெறுப்பு ஏற்பட்டு அலுப்புத் தட்டி விடுகிறது. எப்போதும் போல் பெற்றோரிடம் இருந்து பணம் பெறும் அவர்கள் கையில் காசை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று யோசிக்கும் போது தான் மனக்கிளர்ச்சியை உண்டாக்கும் மதுப் பழக்கம் மற்றும் போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாவதெல்லாம் நடக்கிறது. அதிலும் காசு வைத்திருக்கும் நான்கைந்து நண்பர்கள் கிடைத்து விட்டால் நிலைமை விரைவிலேயே மோசமாகிவிடும். குழந்தைகளுக்கு காசு கொடுத்து பழக்கிய பெற்றோர் இச்சமயத்தில் வருத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

செலவு செய்வதற்காக குழந்தைகளுக்குப் பணம் கொடுப்பதை விட சேமிக்க கொடுக்கலாம். பணம் கொடுத்து தன் முன்னிலையிலேயே உண்டியலில் போடுமாறு பெற்றோர் குழந்தைகளை ஊக்கப்படுத்தலாம். பின்னாளில் இந்நடத்தை சேமிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் வளர்க்கும். குழந்தைப் பருவத்தில் இருந்தே சேமித்துப் பழகியவர்கள் பிற்காலத்தில் படித்து முடித்தவுடன் வேலைக்குச் சென்று விடுகின்றனர். மேலும் தான் பெறும் சம்பளப் பணத்தை கண்ணும் கருத்துமாக செலவு செய்பவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு குடும்ப பொறுப்பும் அதிகமாக இருக்கிறது. திட்டமிட்டு பொருட்களை வாங்கும் திறமை வளர்ந்து விடுகிறது.

கிடைத்த பணத்தையெல்லாம் செலவு செய்து வளரும் குழந்தைகள் பின்னாளில் மனதில் நினைத்ததையெல்லாம் வாங்கிக் குவித்து விடும் இயல்பினராக மாறிவிடுவர். மேலும் கடன் வாங்கியாவது செலவு செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டு பெரிய கடன் சுமையை தன் மீது இவர்கள் ஏற்றிக் கொள்வார்கள்.

பணம் இல்லாவிட்டால் என்ன நிகழும் என்பதை அவ்வப்போது குழந்தைகளுக்கு புரிய வைப்பது நல்லது. அப்போது தான் உதாரித்தனமாக செலவு செய்வதை பிற்காலத்தில் தவிர்ப்பார்கள். குறைவான பணத்தை எடுத்துக் கொண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்று பணம் போதவில்லை என்பதற்காக வேண்டிய பொருளை வாங்காமல் திரும்பி வரலாம். அப்படி வருவதை உணரும் குழந்தைகள் பணத்தின் அருமையை தானாகவே உணர்ந்து கொள்வார்கள். இதுபோன்ற மேலும் சில வழிமுறைகளை பயன்படுத்தி குழந்தைகளிடம் சிறுவயதிலேயே பணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். அதே சமயத்தில் குழந்தைகளை கஞ்சத்தனம் உள்ளவர்களாக உருவாக்கி விடக்கூடாது என்பதில் பெற்றோர் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவசியமான செலவுகளை செய்வதையும் அநாவசியமான செலவுகளை தவிர்ப்பதையும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதே சரியானது.

Monday, June 11, 2012

படிக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் கவனச்சிதைவை தடுப்பது எப்படி?

விழிப்புணர்வு முழுவதையும் ஒன்றின் மீது குவிப்பதே கவனமாகும். ஆப்பிள் கவனம் நம்மிடையே மிகவும் பிரபலமானது. அர்ச்சுனரின் ஆசிரியர் மற்ற மாணவர்களிடம் மரத்தில் என்ன தெரிகிறது என்று கேட்ட போது கவனச்சிதைவு உள்ள மாணவர்கள் இலை, பூ, கிளை போன்றவையெல்லாம் தெரிகிறது என்று பதிலளித்தனர். ஆனால் கவனம் சிதறல் இல்லாத அர்ச்சுனன் தான் அம்பு எய்து வீழ்த்த வேண்டிய ஆப்பிள் மட்டுமே தன் கண்களுக்கு தெரிவதாக ஆசிரியரிடம் கூறினார். ஆப்பிளை வீழ்த்தியும் காட்டினார். அது போன்ற கவனம் மட்டும் நம் குழந்தைகளுக்கு இருந்து விட்டால் எதையும் சாதித்து விடுவார்கள். ஆனால் நம் குழந்தைகளின் கவனமோ ஒரு நொடியில் ஓராயிர விஷயங்களுக்கு மாறிக் கொண்டிருக்கிறது. நுண்ணறிவு அதிகம் உள்ள குழந்தைகளுக்கும் கவனச்சிதைவு தான் முக்கிய தடைக்கல். மற்ற எல்லா விஷயத்திலும் குறையேதும் இல்லாத குழந்தைகளும் இந்த விஷயத்தில் மாட்டிக் கொள்கிறார்கள்.

நாம் வாழும் சூழ்நிலையும் வளர்ந்த சூழ்நிலையுமே கவனச்சிதைவுக்குக் காரணம்.

நம் சூழ்நிலையில் எண்ணற்ற தூண்டுதல் இருக்கின்றன. ஒவ்வொரு நொடிப் பொழுதும் கணக்கிலடங்காத தூண்டல்கள் நம் ஐம்புலன்களையும் தாக்கிக் கொண்டிருக்கின்றன. அவைகளில் நம் ஆர்வத்தைத் தூண்டுவனவே அதிகம். சூழ்நிலையில் இருந்து விலகிக் கொள்வதைத் தவிர இத்தூண்டல்களில் இருந்து தப்பிக்க வேறு வழியேதும் இல்லை.

பச்சிளம் குழந்தை பிறந்து சில மணி நேரங்களிலேயே கவனம் தொடங்கி விடுகிறது. தாய் தன்னை தூக்கி கையாளும் போது மேலே கீழே சாய்வது, அதற்குப் பின் சூழ்நிலையில் பொருட்கள் அசைவது ஆகியவற்றை குழந்தை கவனிக்கத் தொடங்கி விடுகிறது. பதினெட்டு மாதங்களுக்குப் பிறகு ஒன்றின் மீதான கவனத்தை தக்கவைத்துக் கொள்ள குழந்தை பழகிக் கொள்கிறது. நீடித்த கவனம் (Sustained Attention) என்று அழைக்கப்படும் இக்கவனமே பிற்காலத்திற்கு தேவையானது. பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு நீடித்த கவனத்தைப் பொறுத்தே படிப்புத் திறன் அமைகிறது. சிறு வயதிலிருந்தே நீடித்த கவனத் திறனை வளர்த்துக் கொண்ட குழந்தைகள் பெரியவர்களானாலும் அத்திறன் தொடரும். பொதுவாக வீட்டின் முதல் குழந்தைக்கு நீடித்த கவனம் குறைவாகவே இருக்கும். பெற்றோர் குழந்தையின் மீது உள்ள அதீத பிரியத்தால் ஏராளமான விளையாட்டு சாமான்களை வாங்கிக் குவிப்பர். புதிய புதிய விளையாட்டு சாமன்கள் கிடைக்கும் போதெல்லாம் குழந்தை பழையனவற்றை விட்டுவிட்டு புதிய ஒன்றின் மீது கவனத்தை செலுத்த ஆரம்பித்து விடும். பிற்காலத்தில் அதுவே பழக்கமாகி எப்போதும் புதிய விஷயங்களின் மீதே கவனம் செலுத்த மனம் அலைபாயும்.

மேற்கண்ட காரணங்களினால் கவனச் சிதறலைக் கொண்ட குழந்தைகளுக்கு தீர்வு என்ன?

• கவனச்சிதறல் கொண்ட குழந்தைகள் படிக்கும் போது பெற்றோ உடனிருப்பது அவசியம். குழந்தை படித்து முடிக்கும் வரை கூடவே அமர்ந்திருக்க வேண்டும். படித்துக் கொண்டிருக்கும் போது வேறு ஏதேனும் விஷத்தில் குழந்தை கவனம் செலுத்துவதாக தெரிந்தால் உடனே அதை விடுத்து படிக்கத் திரும்பும் படி குழந்தைக்கு அறிவுறுத்த வேண்டும்.

• குழந்தைகள் படிக்கும் போது சில பொருட்கள் அல்லது சில நிகழ்வுகள் அவர்களின் கவனத்தை ஈர்க்கலாம். அவைகளுக்கு தடை கற்கள் (Road Blocks) என்று பெயர். முடிந்த வரை படிக்கும் சூழல் தடைக் கற்கள் இல்லாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

• படிக்கும் சமயத்தில் சில பொருட்கள் அல்லது சில நிகழ்வுகள் படிப்பை துரிதப்படுத்தும். அது போன்றவைகளுக்கு தூண்டிகள் (Triggers) என்று பெயர். அதிகளவு தூண்டிகள் படிக்கும் சூழலில் இருப்பது நல்லது. காற்றோட்டத்தை அளிக்கும் மின்விசிறி, தண்ணீர் பாட்டில் போன்றவை தூண்டிகள் பட்டியலில் அடங்குபவை.

• படிக்கும் சமயத்தில் பெற்றோர் தொலைபேசி, தொலைக்காட்சி போன்றவற்றை அணைத்து விடுவது நல்லது. முடிந்தவரை வீட்டில் பிற வேலைகள் நடப்பதை குறைத்து விடுவது அவசியம்.

• படிக்கும் குழந்தைகளின் கவனம் பல விஷயங்களிலும் அலைந்து பெற்றோரிடம் ஏதேனும் பேச முற்படுவர். அவற்றை பின்னர் கேட்பதாக கூறி படிப்பதை தொடரச் செய்ய வேண்டும். படித்து முடித்தவுடன் குழந்தை சொல்ல வந்த விஷயத்தை ஆர்வமுடன் கேட்டுக் கொள்ளலாம்.

• கவனச் சிதறல் கொண்ட குழந்தைகளை அதிகாலையில் படிக்க வைப்பது நல்லது. மற்றவர்கள் உறங்கி கொண்டிருக்கும் அமைதியான சூழலில் இடைஞ்சல்கள் குறைவாக இருக்கும்.

இந்த முறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் குழந்தைகளின் கவன சிதறலை பெருமளவு குறைக்க முடியும்.

Friday, June 8, 2012

குழந்தைகளை விடுதியில் சேர்த்து படிக்க வைக்கலாமா?

இக்கால குழந்தைகளுக்கு கல்வி மிக அவசியமானது. என்னவாவது செய்து தங்கள் குழந்தைகளை அதிக மதிப்பெண் பெற வைத்து விட்டால் பின்னர் தங்களுக்கு கவலை இல்லை என்பது பெற்றோர்களின் கருத்தாக இருக்கிறது. அதற்கேற்றால் போல நாடு முழுவதும் தரம் வாய்ந்த பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய எல்லா பள்ளிகளுமே விடுதி வசதி கொண்டவைகளாக இருக்கின்றன. குழந்தைகளை சேர்க்கப்போனால் விடுதியுடன் கூடிய சேர்க்கையையே பள்ளி நடத்துபவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அவ்வாறே விடுதியில் குழந்தைகளை சேர்த்து விட்டால் பெற்றோருக்கும் பெரிய பாரம் குறைகிறது. மாணவர்களின் மதிப்பெண்களும் உயருகின்றன. இதைப் பார்க்கும் பல பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளையும் விடுதியில் சேர்த்து படிக்க வைத்தால் என்ன என்ற யோசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

குழந்தைகளை வீட்டில் வைத்து வளர்ப்பது தற்காலத்தில் சற்று சிரமமான காரியம் தான். அதிலும் குறிப்பாக பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியராக இருந்தால் அவர்களை பராமரித்து படிக்க வைப்பது சிரமத்திலும் சிரமம். அதிகாலையில் எழுந்திருக்கவே எழுந்திருக்காத குழந்தையை எழுப்பி படிக்க வைக்க வேண்டும். சரியான நேரத்திற்குள் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். மாலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட டியூசன்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இதற்கிடையில் குழந்தைகளுக்கு ஏற்படும் கவனச்சிதைவை சரியாக கண்கானித்து அதை ஒழிக்க தக்க முயற்சி எடுக்க வேண்டும். இத்தனையும் செய்து அதிக மதிப்பெண் பெற வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. அதனால் ஒரு விடுதியுடன் கூடிய நல்ல பள்ளியில் குழந்தையை இளம் வயதிலேயே சேர்த்து விட்டால் பெற்றோர் தங்கள் வேலைகளைப் பார்க்கலாம். குழந்தையின் படிப்பும் நன்றாக இருக்கும்.

எண்ணிப்பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும் ஒரு குழந்தையை விடுதியில் சேர்த்து படிக்க வைப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பெற்றோர் தங்கள் குழந்தைகளை வீட்டில் வைத்து வளர்ப்பதே நல்லது. அதுதான் சரியான முறையும் கூட. வீட்டில் வைத்து வளர்க்கப்படும் குழந்தைக்கு பெற்றோர் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை கவனித்து அதுபோல தங்கள் நடத்தையை அமைத்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. வீட்டையும் குடும்பத்தையும் பராமரிப்பது எப்படி? பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி? விருந்தினர்களை உபசரிப்பது எப்பது? மற்றவர்களும் இணங்கிப் போவது எப்படி? பிறருக்கு ஏன் உதவி செய்ய வேண்டும்? என்பது போன்ற முக்கியமான விஷயங்களை பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள். மேலும் குழந்தைகளுக்கு அவ்வப்போது அம்மா அப்பாவுடன் இருக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றும். அதுபோன்ற நேரத்தில் பெற்றோருடன் வளரும் குழந்தைகளுக்குப் பிரச்சனை இல்லை. ஒருநாள் பள்ளிக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் பெற்றோருடன் இருந்து விளையாடி மகிழலாம். விடுதியில் வளரும் குழந்தைகளுக்கு இந்த வாய்ப்பு இல்லை. விடுதிக் குழந்தைகள் சற்று உடல் நலம் சரியில்லை என்றால் கூட விதிமுறைப்படி செய்ய வேண்டிய வேலைகளை செய்தே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தீவிரமாக உடல் நலம் பாதிக்கப்பட்டால் தான் கடமைகளிலுருந்து விலக்குப் பெற முடியும். சாப்பாட்டு விஷயத்திலும் அது போன்றே தான். வீட்டில் பல்வேறு வகையான சத்துப் பொருள்களை உண்டு வளரும் குழந்தைகள் விடுதியில் திட்டம் போட்டு வழங்கப்படும் தினசரி உணவுகளை உண்டு அலுப்புக்கு உள்ளாகிவிடுவர்.

விடுதியில் வளரும் குழந்தைகளிடம் ஒருசில ஆளுமை குறைபாடுகளும் காணப்படுகின்றன. பெரும்பான்மையான விடுதியில் வளர்ந்த குழந்தைகள் வெளிஉலகுக்கு வரும்போது மிக மென்மயானவர்களாக இருக்கின்றனர் அல்லது சற்று கோமாளித்தனம் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு வீட்டில் வளர்ந்த குழந்தைகளைப் போல வாழ்க்கையின் நடைமுறைகள் அவ்வளவாக தெரிவதில்லை. தன்னைப் பற்றி அதிகம் சிந்திப்பவர்களாகவும் சற்றே சுயநலம் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் பிறரைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. உறவினர்கள் மீதான மரியாதையும் இவர்களிடம் குறைவாக இருக்கிறது.

அப்படியானால் விடுதியில் குழந்தைகளை சேர்க்கவே கூடாதா என்ற கேள்வி எழலாம். சுழ்நிலை சந்தர்ப்பங்களை கருத்தில் கொண்டு ஒரு குழந்தையை விடுதியில் சேர்க்கலாமா வேண்டாமா என்பதை பெற்றோர்களே முடிவு செய்து கொள்ளலாம். என்னிடம் உளவியல் ஆலோசனை பெற வந்த ஓர் தாயிடம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அவர் பெண் குழந்தையை விடுதியில் சேர்த்து விடுமாறு நானே ஆலோசனை கூறினேன். அந்த முடிவு அத்தாயின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது. அவருக்கும் அவர் கணவருக்கும் தீராத சண்டை. அவர் கணவர் வேலையில்லாதவர். வீட்டிலேயே பெரும்பான்மையான நேரம் இருந்து கொண்டு குடும்பத்தினரிடம் வம்பு செய்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக குழந்தையையும் கொடுமைப் படுத்த ஆரம்பித்து விட்டார். எப்போது பார்த்தாலும் திட்டிக் கொண்டே இருப்பது, அடித்து துன்புறுத்துவது ஆகியவை சாதாரணமாகி விட்டது. இது போன்ற சூழ்நிலையில் வீட்டில் ஓர் குழந்தை வளர்வதை விட விடுதியில் வளர்வது எவ்வளவோ மேல். இதே போல் வெளியூர்களில் அல்லது வெளிநாடுகளில் பெற்றோர் வசித்தல், குழந்தை வளரும் சூழ்நிலை சரியில்லாமல் இருத்தல், யாரேனும் ஒரு பெற்றோர் இல்லாமல் இருத்தல் போன்ற காரணங்களுக்காகவும் விடுதியில் குழந்தையை சேர்ப்பது தவறல்ல.

தவிர்க்க முடியாத காரணங்களுக்காக குழந்தைகளை விடுதியில் சேர்க்கலாம். ஆனால் அத்தியாவசிய காரணம் எதுவுமே இல்லாமல் குழந்தையை விடுதியில் தள்ளுவது சரியல்ல. என்னால் என் குழந்தையை வளர்க்க முடியவில்லை, யாரேனும் வளர்த்துக் கொடுத்தால் அதற்கு பணம் கொடுத்து விடலாம் என்று நினைக்கும் பெற்றோர்களே குழந்தைகளை காரணமில்லாமல் விடுதியில் சேர்க்க முடிவெடுப்பர்.

திறமையான பெற்றோராக இருந்து நல்ல முறையில் குழந்தைகளை வளருங்கள்.

Monday, May 14, 2012

வீட்டிலேயே அடைந்து கிடக்கும் குழந்தையை பிறருடன் பழகச் செய்வது எப்படி?

”மனிதன் சமூகத்தில் வாழக்கூடிய விலங்கு” என்று கூறி பிறரோடு கலந்து பழக வேண்டிதன் அவசியத்தை உணர்த்துகிறார் உளவியலின் தந்தை சிக்மண்ட் ப்ராய்ட். பிறரோடு பழகுதல் என்னும் இத்திறன் ஒரு குழந்தை தாயின் கருப்பையில் இருக்கும்போதே தொடங்கி விடுகிறது. முதலில் தன் தாயுடன் இணக்கம் கொண்டு இருக்கும் கருவே குழந்தையாகப் பிறந்த பின் பிறர் அனைவரோடும் இணைந்து வாழும் திறனைப் பெற்று வளரும். கருவாக இருக்கும்போது தாய் வயிற்றில் இணக்கம் கொண்டு இருக்க முடியாத குழந்தைகளுக்கே பிறந்ததற்கு பின் மற்றவர்களோடு பழகுவதில் பல பிரச்சனைகள் உண்டாகும். பிறரோடு பழகும் திறமியில்லாத சமூகத் திறன் குறைந்த குழந்தைகளே எப்போதும் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பர். சமூகத் திறன் இல்லாத குழந்தைகளுக்கு குழந்தைப் பருவத்தில் கூடி விளையாட நண்பர்கள் இருக்க மாட்டார்கள். வாலிப வயதில் தவறான நடத்தைகளில் ஈடுபட்டு தன் வாழ்க்கையை கெடுத்துக் கொள்வர். வயது வந்த நடுத்தர பருவத்தில் தன் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ள யாருமே இல்லாமல் பல மனப்பிரச்சனைகளுக்கு உள்ளாவர்.

குழந்தைகள் வெளியே சென்று யாருடனும் விளையாடாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அக்காரணங்கள் யாவை என்பதையும் குழந்தைகளிடத்தில் சமூகத் திறன்களை வளர்ப்பது எப்படி என்பதையும் காண்போம்:

குழந்தைகளின் சமூகத் திறன் பெற்றோர்களின் சமூகத் திறமையை பொறுத்து அமைகிறது. அதிலும் குறிப்பாக தாயின் சமூகத் திறனை பொறுத்து அமைகிறது. தாய் பிறருடன் நன்கு பேசி பழகக்கூடிய திறமையையும், பிறரின் மனநிலையை புரிந்து கொள்ளக்கூடிய திறனையும், பிறரோடு இணங்கி வாழும் திறனையும் பெற்றிருந்தால் அத்திறனை குழந்தை பிறப்பிலேயே பெற்று விடுகிறது. சமூகத் திறன் இல்லாத தாயால் வளர்க்கப் படும் குழந்தைகளுக்கு எதிர்மறை விளைவுகள் பல ஏற்படும். உதாரணமாக ஒரு தாய் தன் கணவன் வேலைக்குச் சென்றவுடன் நன்றாக சாப்பிட்டு விட்டு கதவைச் சாத்தி குழந்தையுடன் தூங்க ஆரம்பித்து விடுவார். வெளியில் யாரையும் பார்க்காமல் பிற குழந்தைகளுடன் விளையாடாமல் வளர்ந்த அக்குழந்தைக்கு பேச்சே வராமல் போய்விட்டது.

ஆடிசம் என்று கூறப்படும் நோயுள்ள குழந்தைகள் சமூகத் திறன் குறைந்த குழந்தைகளாக இருப்பர். சாதாரணமாக வளர்ச்சிப் பருவத்தில் குழந்தைகள் தானாகவே சமூக உறவுக்கான ஆயத்த நிலையை அடைந்து பெற்றோரைத் தவிர பிறருடன் பழக வேண்டும் என்ற உந்துதல் கொள்வர். ஆனால் ஆடிச நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் அவ்வாறான ஆயத்த நிலை எதுவும் காணப்படுவதில்லை. மேலும் பிறருடன் பழகுவதில் முக்கிய பங்கு வகிப்பது பேசும் திறமை தான். ஆடிசக் குழந்தைகளின் மொழித்திறன் குன்றி இருப்பதால் அவர்களால் அதிக வார்த்தைகள் பேசி திறமையாக பிறருடன் பழக முடியாது. ஆடிச குழந்தைகள் சைகைகளையே அதிகம் பயன்படுத்துவர்.

சில ஆண் குழந்தைகள் பிற ஆண் குழந்தைகளுடனே விளையாட விரும்புவர். ஆனால் அவர்களுக்கு ஆண் நண்பர்கள் அருகில் இருக்க மாட்டார்கள். எனவே பெண் குழந்தைகளுடன் விளையாட கூச்சப்பட்டுக் கொண்டு வீட்டுக்குள்ளேயே ஏதாவது விளையாடிக் கொண்டு இருந்து விடுவர். இதைப் போன்றே பெண் குழந்தைகளுக்கும் ஏற்படலாம். வசிப்பிடத்தின் அருகே ஒத்த வயதுள்ள பெண் குழந்தைகள் இல்லாத போது ஆண் நண்பர்களுடன் விளையாடுவதை தவிர்த்து பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து விடுவர். பத்து வயதுக்கு மேல் தான் இதுபோன்ற எதிர்பார்ப்புகளும் பிடித்தங்களும் தோன்றுகின்றன. மிகச்சிறு வயதில் இதுபோன்ற பிடித்தங்கள் குழந்தைகளிடம் காணப்படுவதில்லை. எல்லா குழந்தைகளுடன் விளையாடுவதையே சிறு குழந்தைகள் விரும்புவர். உங்கள் குழந்தைக்கு இது போன்ற ஏதேனும் பிரச்சனை உள்ளதா என ஆராய்ந்து பாருங்கள்.

சில பெற்றோர் தங்கள் குழந்தைகள் வசிப்பிடம் அருகே உள்ள பிற குழந்தைகளுடன் விளையாடுவதை விரும்ப மாட்டார்கள். எனவே குழந்தைகள் வெளியே போகாதவாறு வீட்டுக்குள்ளேயே விளையாடும் அளவுக்கு தேவையான விளையாட்டு சாமான்களை வாங்கிப் போட்டு விடுவர். அதனால் குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே விளையாடப் பழகி கொள்வர். இத்தகைய குழந்தைகள் பெரியவர்களானதும் பெற்றோர் விரும்பினால் கூட யாருடனும் நட்பு வைத்துக் கொள்ளாமல் தனித்து இருக்கவே விரும்புவர். நாளடைவில் அத்தனிமையே பல மனப் பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்து விடும்.

ஒருசில குழந்தைகள் வெளியே சென்று பிறருடன் கலந்து விளையாடும் போது அக்குழந்தையை பிற குழந்தைகள் யாவரேனும் உருட்டி மிரட்டி பயமுறுத்தலாம். கேலி கிண்டல் செய்யலாம். இவ்வாறு பிறரால் மிரட்டப்பட்டு, கேலி கிண்டல் செய்யப்படும் குழந்தைகள் வெளியே செல்லவே பயந்து கொண்டு வீட்டுக்குள்ளேயெ அடைந்து கிடப்பர்.

மேற்கண்ட காரணங்களால் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் குழந்தைகளை வெளியே சென்று பிறரோடு கலந்து பழக என்ன செய்யவேண்டும்?

பெற்றோர் அதிலும் குறிப்பாக தாய் குழந்தைகள் முன்பு பிறரோடு நன்கு பேசிப் பழக வேண்டும். அடிக்கடி பக்கத்துவீடு அல்லது உறவினர் வீட்டுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று பிறரிடம் அறிமுகப் படுத்தி கலந்துரையாட செய்ய வேண்டும்.

குழந்தைகள் முன்பு எப்போதும் பிறரைப் பற்றிய குறைகளைக் பெற்றோர் பேசிக் கொண்டு இருக்கக் கூடாது. யாரைப் பற்றி குறை கூறி பேசுகிறோமோ அவர்களிடம் குழந்தைகள் பேசாது. நாம் பேசுவதை குழந்தைகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தால் பிறரைப் பற்றிய நேர்மறையான நல்ல விஷயங்களையே பேச வேண்டும். இந்த உலகில் உள்ள அனைவரும் நல்லவர்களே என்ற அபிப்பிராயத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்துவது நல்லது.

சிறு குழந்தைகள் சைகைகளைப் பயன்படுத்தி பிறரோடு தொடர்பு கொள்வதை முளையிலேயே கிள்ள வேண்டும். ஆமாம் என்பதற்கு பதிலாக தலையசைத்து பதில் சொல்லும் குழந்தைகளை ‘ஆமாம்’ என்று சொல் என பெற்றோர் பேசிப் பழக்க வேண்டும்.

உங்கள் குழந்தை குறைவான வெளிஉலகப் தொடர்பு கொண்டுள்ளது என நீங்கள் கருதினால் வீட்டுக்குள் ஏராளமான விளையாட்டுக் பொருட்களை வாங்கிப் போடாதீர்கள். அதிலும் குறிப்பாக கம்ப்யூட்டரில் விளையாடும் வீடியோ விளையாட்டுக்கள், செல் போன்களில் விளையாடும் விளையாட்டுக்கள் ஆகியவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது. தொலைக்காட்சி பார்ப்பதைக் கூட ‘குறிப்பிட்ட நேரம் மட்டும் தான் தொலைக்காட்சி பார்க்க வேண்டும்’ என்று அறிவுறுத்தி அளவாக அனுமதிப்பது நல்லது.

குழந்தைகள் வெளியே சென்று விளையாடும் சமயம் ஆரம்பத்தில் சிறிது காலம் பெற்றோரும் குழந்தைகளுடன் இருக்கலாம். பெற்றோர் உடனிருக்கிறார்கள் என்ற மன தைரியம் குழந்தைகள் மனதில் ஏற்பட்டு விட்டால் பயந்து கொள்ளாமல் வெளியில் விளையாட ஆரம்பிப்பர். மேலும் நம் குழந்தைகளை யாரேனும் கேலி கிண்டல் செய்து, மிரட்டுகிறார்களா அல்லது வேறு ஏதேனும் எதிர்மறை பிரச்சனைகள் உள்ளனவா என பெற்றோர்களால் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் பிற குழந்தைகளை மிரட்டி விடாமல் பிரச்சனைகளை பெற்றோர்கள் சமாளிக்க வேண்டும்.

இப்படியெல்லாம் செய்வதன் மூலம் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் குழந்தையின் சமூகத் திறனை வளர்க்கலாம்.

Thursday, March 29, 2012

பரிசுப் பொருளில் உங்களின் அடையாளம் - தினமலர் - 28.03.2012

Friday, February 17, 2012

குழந்தைகளை சாதனையாளராக உருவாக்குவது எப்படி?


வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தாலும் எல்லா குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்களாகும் போது சாதனையாளர்களாக உருவாவதில்லை. பண வசதியும் பிற வசசிகளும் கொண்ட பல குழந்தைகள் பிற்காலத்தில் எந்த சாதனைகளும் செய்யாமல் சாதாரணமானவர்களாகவே இருந்து விடுகின்றனர். அதே சமயத்தில் ஒன்றுமே இல்லாத சூழ்நிலையில் வளர்ந்தாலும் சில குழந்தைகள் தன் முயற்சியால் ஏதேனும் சாதித்து இந்த உலகில் தங்கள் இருப்பை பதிவு செய்து விடுகின்றனர். குழந்தை வளர்ப்பு முறையும், ஆளுமைப் பண்புகளுமே குழந்தைகளை சாதனையாளர்களாக உருவாக்குகின்றன.

Thursday, February 9, 2012

குழந்தைகளுக்கு ஏற்படும் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி?

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். நல்ல ஆரோக்கியமான உடலே நல்வாழ்வுக்கும் மகிழ்ச்சிக்கும் அடிப்படை ஆகும். குழந்தைகள் விசயத்தில் இது இரண்டு விதத்தில் மிகவும் முக்கியமானது. முதலாவது குழந்தைகளின் ஆரோக்கியம் பெற்றோர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கிறது. இரண்டாவது உடல்நலக் குறைபாட்டினால் ஏற்படும் வலி போன்ற அசௌகரியங்களை குழந்தைகளால் தாங்கிக் கொள்ள முடியாது. அதனால் கூடுமானவரை குழந்தைகளின் உடல்நலம் கெடாமல் பார்த்த்துக் கொள்வது பெற்றோரின் கடமை.

Friday, February 3, 2012

குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுவது எப்படி?

பெற்றோர் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய மிகப்பெரிய கல்வி தன் மீது நம்பிக்கை கொள்வது எப்படி என குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பது தான். பிற்காலத்தில் தன்னை காத்து வந்த பெற்றோர்களே

Friday, January 20, 2012

குழந்தைகள் பெற்றோர்கள் எதிர்பார்ப்பது போல் ஏன் உருவாவதில்லை?

உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் தன் மகனையும் வருங்காலத்தில் கிரிக்கெட் வீரராக உருவாக்க வேண்டும் என்று நினைத்து சிறு வயது முதலே எல்லா வகையான பயிற்சிகளையும் கொடுத்து வளர்த்து

Tuesday, January 17, 2012

குழந்தைகள் அதிகப்படியான அமைதியாகவும் ஆர்ப்பாட்டமாகவும் இருப்பது ஏன்?

ஒரு குழந்தை துறுதுறுவென இருக்கிறதா அல்லது மிகவும் அமைதியாக இருக்கிறதா என்பது அக்குழந்தையின் மரபு நிலையைப் பொறுத்தது. குழந்தை மிக சுறுசுறுப்பாக இருப்பது குழந்தை அன்னையின் வயிற்றில்

Monday, January 16, 2012

குழந்தைகள் மற்றவர்களிடம் பழகும் விதம்

என்னை சந்திக்க தங்கள் ஆறு வயது குழந்தையுடன் பெற்றோர் இருவர் வந்தனர். பேசிக் கொண்டிருந்தவர்கள் குழந்தையைப் பற்றிய குறைகளை பகிர்ந்து கொள்ளத் தொடங்கினர். படித்தல், திறமைகள் என ஒவ்வொன்றாக

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP