உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Monday, June 11, 2012

படிக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் கவனச்சிதைவை தடுப்பது எப்படி?

விழிப்புணர்வு முழுவதையும் ஒன்றின் மீது குவிப்பதே கவனமாகும். ஆப்பிள் கவனம் நம்மிடையே மிகவும் பிரபலமானது. அர்ச்சுனரின் ஆசிரியர் மற்ற மாணவர்களிடம் மரத்தில் என்ன தெரிகிறது என்று கேட்ட போது கவனச்சிதைவு உள்ள மாணவர்கள் இலை, பூ, கிளை போன்றவையெல்லாம் தெரிகிறது என்று பதிலளித்தனர். ஆனால் கவனம் சிதறல் இல்லாத அர்ச்சுனன் தான் அம்பு எய்து வீழ்த்த வேண்டிய ஆப்பிள் மட்டுமே தன் கண்களுக்கு தெரிவதாக ஆசிரியரிடம் கூறினார். ஆப்பிளை வீழ்த்தியும் காட்டினார். அது போன்ற கவனம் மட்டும் நம் குழந்தைகளுக்கு இருந்து விட்டால் எதையும் சாதித்து விடுவார்கள். ஆனால் நம் குழந்தைகளின் கவனமோ ஒரு நொடியில் ஓராயிர விஷயங்களுக்கு மாறிக் கொண்டிருக்கிறது. நுண்ணறிவு அதிகம் உள்ள குழந்தைகளுக்கும் கவனச்சிதைவு தான் முக்கிய தடைக்கல். மற்ற எல்லா விஷயத்திலும் குறையேதும் இல்லாத குழந்தைகளும் இந்த விஷயத்தில் மாட்டிக் கொள்கிறார்கள்.

நாம் வாழும் சூழ்நிலையும் வளர்ந்த சூழ்நிலையுமே கவனச்சிதைவுக்குக் காரணம்.

நம் சூழ்நிலையில் எண்ணற்ற தூண்டுதல் இருக்கின்றன. ஒவ்வொரு நொடிப் பொழுதும் கணக்கிலடங்காத தூண்டல்கள் நம் ஐம்புலன்களையும் தாக்கிக் கொண்டிருக்கின்றன. அவைகளில் நம் ஆர்வத்தைத் தூண்டுவனவே அதிகம். சூழ்நிலையில் இருந்து விலகிக் கொள்வதைத் தவிர இத்தூண்டல்களில் இருந்து தப்பிக்க வேறு வழியேதும் இல்லை.

பச்சிளம் குழந்தை பிறந்து சில மணி நேரங்களிலேயே கவனம் தொடங்கி விடுகிறது. தாய் தன்னை தூக்கி கையாளும் போது மேலே கீழே சாய்வது, அதற்குப் பின் சூழ்நிலையில் பொருட்கள் அசைவது ஆகியவற்றை குழந்தை கவனிக்கத் தொடங்கி விடுகிறது. பதினெட்டு மாதங்களுக்குப் பிறகு ஒன்றின் மீதான கவனத்தை தக்கவைத்துக் கொள்ள குழந்தை பழகிக் கொள்கிறது. நீடித்த கவனம் (Sustained Attention) என்று அழைக்கப்படும் இக்கவனமே பிற்காலத்திற்கு தேவையானது. பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு நீடித்த கவனத்தைப் பொறுத்தே படிப்புத் திறன் அமைகிறது. சிறு வயதிலிருந்தே நீடித்த கவனத் திறனை வளர்த்துக் கொண்ட குழந்தைகள் பெரியவர்களானாலும் அத்திறன் தொடரும். பொதுவாக வீட்டின் முதல் குழந்தைக்கு நீடித்த கவனம் குறைவாகவே இருக்கும். பெற்றோர் குழந்தையின் மீது உள்ள அதீத பிரியத்தால் ஏராளமான விளையாட்டு சாமான்களை வாங்கிக் குவிப்பர். புதிய புதிய விளையாட்டு சாமன்கள் கிடைக்கும் போதெல்லாம் குழந்தை பழையனவற்றை விட்டுவிட்டு புதிய ஒன்றின் மீது கவனத்தை செலுத்த ஆரம்பித்து விடும். பிற்காலத்தில் அதுவே பழக்கமாகி எப்போதும் புதிய விஷயங்களின் மீதே கவனம் செலுத்த மனம் அலைபாயும்.

மேற்கண்ட காரணங்களினால் கவனச் சிதறலைக் கொண்ட குழந்தைகளுக்கு தீர்வு என்ன?

• கவனச்சிதறல் கொண்ட குழந்தைகள் படிக்கும் போது பெற்றோ உடனிருப்பது அவசியம். குழந்தை படித்து முடிக்கும் வரை கூடவே அமர்ந்திருக்க வேண்டும். படித்துக் கொண்டிருக்கும் போது வேறு ஏதேனும் விஷத்தில் குழந்தை கவனம் செலுத்துவதாக தெரிந்தால் உடனே அதை விடுத்து படிக்கத் திரும்பும் படி குழந்தைக்கு அறிவுறுத்த வேண்டும்.

• குழந்தைகள் படிக்கும் போது சில பொருட்கள் அல்லது சில நிகழ்வுகள் அவர்களின் கவனத்தை ஈர்க்கலாம். அவைகளுக்கு தடை கற்கள் (Road Blocks) என்று பெயர். முடிந்த வரை படிக்கும் சூழல் தடைக் கற்கள் இல்லாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

• படிக்கும் சமயத்தில் சில பொருட்கள் அல்லது சில நிகழ்வுகள் படிப்பை துரிதப்படுத்தும். அது போன்றவைகளுக்கு தூண்டிகள் (Triggers) என்று பெயர். அதிகளவு தூண்டிகள் படிக்கும் சூழலில் இருப்பது நல்லது. காற்றோட்டத்தை அளிக்கும் மின்விசிறி, தண்ணீர் பாட்டில் போன்றவை தூண்டிகள் பட்டியலில் அடங்குபவை.

• படிக்கும் சமயத்தில் பெற்றோர் தொலைபேசி, தொலைக்காட்சி போன்றவற்றை அணைத்து விடுவது நல்லது. முடிந்தவரை வீட்டில் பிற வேலைகள் நடப்பதை குறைத்து விடுவது அவசியம்.

• படிக்கும் குழந்தைகளின் கவனம் பல விஷயங்களிலும் அலைந்து பெற்றோரிடம் ஏதேனும் பேச முற்படுவர். அவற்றை பின்னர் கேட்பதாக கூறி படிப்பதை தொடரச் செய்ய வேண்டும். படித்து முடித்தவுடன் குழந்தை சொல்ல வந்த விஷயத்தை ஆர்வமுடன் கேட்டுக் கொள்ளலாம்.

• கவனச் சிதறல் கொண்ட குழந்தைகளை அதிகாலையில் படிக்க வைப்பது நல்லது. மற்றவர்கள் உறங்கி கொண்டிருக்கும் அமைதியான சூழலில் இடைஞ்சல்கள் குறைவாக இருக்கும்.

இந்த முறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் குழந்தைகளின் கவன சிதறலை பெருமளவு குறைக்க முடியும்.

1 comments:

திண்டுக்கல் தனபாலன் June 11, 2012 at 1:28 AM  

நல்ல பதிவு சார் ! நன்றி !

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP