உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Friday, June 8, 2012

குழந்தைகளை விடுதியில் சேர்த்து படிக்க வைக்கலாமா?

இக்கால குழந்தைகளுக்கு கல்வி மிக அவசியமானது. என்னவாவது செய்து தங்கள் குழந்தைகளை அதிக மதிப்பெண் பெற வைத்து விட்டால் பின்னர் தங்களுக்கு கவலை இல்லை என்பது பெற்றோர்களின் கருத்தாக இருக்கிறது. அதற்கேற்றால் போல நாடு முழுவதும் தரம் வாய்ந்த பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய எல்லா பள்ளிகளுமே விடுதி வசதி கொண்டவைகளாக இருக்கின்றன. குழந்தைகளை சேர்க்கப்போனால் விடுதியுடன் கூடிய சேர்க்கையையே பள்ளி நடத்துபவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அவ்வாறே விடுதியில் குழந்தைகளை சேர்த்து விட்டால் பெற்றோருக்கும் பெரிய பாரம் குறைகிறது. மாணவர்களின் மதிப்பெண்களும் உயருகின்றன. இதைப் பார்க்கும் பல பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளையும் விடுதியில் சேர்த்து படிக்க வைத்தால் என்ன என்ற யோசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

குழந்தைகளை வீட்டில் வைத்து வளர்ப்பது தற்காலத்தில் சற்று சிரமமான காரியம் தான். அதிலும் குறிப்பாக பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியராக இருந்தால் அவர்களை பராமரித்து படிக்க வைப்பது சிரமத்திலும் சிரமம். அதிகாலையில் எழுந்திருக்கவே எழுந்திருக்காத குழந்தையை எழுப்பி படிக்க வைக்க வேண்டும். சரியான நேரத்திற்குள் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். மாலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட டியூசன்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இதற்கிடையில் குழந்தைகளுக்கு ஏற்படும் கவனச்சிதைவை சரியாக கண்கானித்து அதை ஒழிக்க தக்க முயற்சி எடுக்க வேண்டும். இத்தனையும் செய்து அதிக மதிப்பெண் பெற வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. அதனால் ஒரு விடுதியுடன் கூடிய நல்ல பள்ளியில் குழந்தையை இளம் வயதிலேயே சேர்த்து விட்டால் பெற்றோர் தங்கள் வேலைகளைப் பார்க்கலாம். குழந்தையின் படிப்பும் நன்றாக இருக்கும்.

எண்ணிப்பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும் ஒரு குழந்தையை விடுதியில் சேர்த்து படிக்க வைப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பெற்றோர் தங்கள் குழந்தைகளை வீட்டில் வைத்து வளர்ப்பதே நல்லது. அதுதான் சரியான முறையும் கூட. வீட்டில் வைத்து வளர்க்கப்படும் குழந்தைக்கு பெற்றோர் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை கவனித்து அதுபோல தங்கள் நடத்தையை அமைத்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. வீட்டையும் குடும்பத்தையும் பராமரிப்பது எப்படி? பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி? விருந்தினர்களை உபசரிப்பது எப்பது? மற்றவர்களும் இணங்கிப் போவது எப்படி? பிறருக்கு ஏன் உதவி செய்ய வேண்டும்? என்பது போன்ற முக்கியமான விஷயங்களை பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள். மேலும் குழந்தைகளுக்கு அவ்வப்போது அம்மா அப்பாவுடன் இருக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றும். அதுபோன்ற நேரத்தில் பெற்றோருடன் வளரும் குழந்தைகளுக்குப் பிரச்சனை இல்லை. ஒருநாள் பள்ளிக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் பெற்றோருடன் இருந்து விளையாடி மகிழலாம். விடுதியில் வளரும் குழந்தைகளுக்கு இந்த வாய்ப்பு இல்லை. விடுதிக் குழந்தைகள் சற்று உடல் நலம் சரியில்லை என்றால் கூட விதிமுறைப்படி செய்ய வேண்டிய வேலைகளை செய்தே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தீவிரமாக உடல் நலம் பாதிக்கப்பட்டால் தான் கடமைகளிலுருந்து விலக்குப் பெற முடியும். சாப்பாட்டு விஷயத்திலும் அது போன்றே தான். வீட்டில் பல்வேறு வகையான சத்துப் பொருள்களை உண்டு வளரும் குழந்தைகள் விடுதியில் திட்டம் போட்டு வழங்கப்படும் தினசரி உணவுகளை உண்டு அலுப்புக்கு உள்ளாகிவிடுவர்.

விடுதியில் வளரும் குழந்தைகளிடம் ஒருசில ஆளுமை குறைபாடுகளும் காணப்படுகின்றன. பெரும்பான்மையான விடுதியில் வளர்ந்த குழந்தைகள் வெளிஉலகுக்கு வரும்போது மிக மென்மயானவர்களாக இருக்கின்றனர் அல்லது சற்று கோமாளித்தனம் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு வீட்டில் வளர்ந்த குழந்தைகளைப் போல வாழ்க்கையின் நடைமுறைகள் அவ்வளவாக தெரிவதில்லை. தன்னைப் பற்றி அதிகம் சிந்திப்பவர்களாகவும் சற்றே சுயநலம் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் பிறரைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. உறவினர்கள் மீதான மரியாதையும் இவர்களிடம் குறைவாக இருக்கிறது.

அப்படியானால் விடுதியில் குழந்தைகளை சேர்க்கவே கூடாதா என்ற கேள்வி எழலாம். சுழ்நிலை சந்தர்ப்பங்களை கருத்தில் கொண்டு ஒரு குழந்தையை விடுதியில் சேர்க்கலாமா வேண்டாமா என்பதை பெற்றோர்களே முடிவு செய்து கொள்ளலாம். என்னிடம் உளவியல் ஆலோசனை பெற வந்த ஓர் தாயிடம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அவர் பெண் குழந்தையை விடுதியில் சேர்த்து விடுமாறு நானே ஆலோசனை கூறினேன். அந்த முடிவு அத்தாயின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது. அவருக்கும் அவர் கணவருக்கும் தீராத சண்டை. அவர் கணவர் வேலையில்லாதவர். வீட்டிலேயே பெரும்பான்மையான நேரம் இருந்து கொண்டு குடும்பத்தினரிடம் வம்பு செய்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக குழந்தையையும் கொடுமைப் படுத்த ஆரம்பித்து விட்டார். எப்போது பார்த்தாலும் திட்டிக் கொண்டே இருப்பது, அடித்து துன்புறுத்துவது ஆகியவை சாதாரணமாகி விட்டது. இது போன்ற சூழ்நிலையில் வீட்டில் ஓர் குழந்தை வளர்வதை விட விடுதியில் வளர்வது எவ்வளவோ மேல். இதே போல் வெளியூர்களில் அல்லது வெளிநாடுகளில் பெற்றோர் வசித்தல், குழந்தை வளரும் சூழ்நிலை சரியில்லாமல் இருத்தல், யாரேனும் ஒரு பெற்றோர் இல்லாமல் இருத்தல் போன்ற காரணங்களுக்காகவும் விடுதியில் குழந்தையை சேர்ப்பது தவறல்ல.

தவிர்க்க முடியாத காரணங்களுக்காக குழந்தைகளை விடுதியில் சேர்க்கலாம். ஆனால் அத்தியாவசிய காரணம் எதுவுமே இல்லாமல் குழந்தையை விடுதியில் தள்ளுவது சரியல்ல. என்னால் என் குழந்தையை வளர்க்க முடியவில்லை, யாரேனும் வளர்த்துக் கொடுத்தால் அதற்கு பணம் கொடுத்து விடலாம் என்று நினைக்கும் பெற்றோர்களே குழந்தைகளை காரணமில்லாமல் விடுதியில் சேர்க்க முடிவெடுப்பர்.

திறமையான பெற்றோராக இருந்து நல்ல முறையில் குழந்தைகளை வளருங்கள்.

0 comments:

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP