உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Tuesday, December 22, 2009

புத்தக விமர்சனம்

சோமவள்ளியப்பன் அவர்கள் எழுதி கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ள புதிய நூல் நெ.1 சேல்ஸ்மேன். நுகர்வோர் உளவியல், சந்தையியல் போன்ற அயல்நாட்டு ஆங்கிலப் புத்தகங்களை படித்துவிட்டு ஜப்பானிலும், அமெரிக்காவிலும் என்ன நடந்தது என்று மொழிபெயர்ப்பு செய்யாமல், தன் சொந்த அனுபவத்தைக் கொண்டே நம் ஊரில் யார் யார் என்னென்ன செய்தார்கள், எப்படி முன்னேறினார்கள் என்ற உள்ளூர் உதாரணங்களோடு வெளிவந்திருக்கும் நூல் இதுவாகும்.

நீங்கள் வாங்க வேண்டாம், இது விற்பனை அல்ல, சும்மா பாருங்கள் என்று சொல்லியவரிடம் வாக்குவம் கிளினரை வாங்கியது, வாங்காத வீட்டு கடனுக்காக 7500 ரூபாய் கொடுத்தது, ரூ 2500 கொடுத்து நட்சத்திர ஓட்டலின் சிறப்பு அங்கத்தினராக மாறியது என தான் ஏமாந்த கதைகளைச் சொல்லி விற்பனையாளர் வேலையைப் பற்றி விளக்கமாக முதல் அத்தியாயத்திலேயே வாசகர்களுக்கு விளக்குகிறார் ஆசிரியர். சந்தை, சந்தையியல், நுகர்வோரியல், யார் நுகர்வோர், யார் வாடிக்கையாளர், நுகர்வோரியல் மற்றும் சந்தையியல் தத்துவங்கள் என ஒரு கல்லூரிப் பாட நூலில் சொல்ல வேண்டிய விஷயங்கள அனைத்தையும் முதல் அத்தியாயத்தில் மிக சுருக்கமாக புரியும்படி எளிமையாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

எனக்குத் தெரிந்து இன்று நாட்டில் யாரையும் வேண்டாம் என்று சொல்லாமல் சேர்த்துக் கொள்வது சேல்ஸ்மேன் வேலைக்கும் வாட்சுமேன் வேலைக்கும் தான். கல்லூரி படிப்பு முடித்த ஏராளமான இளைஞர்கள் திடீரென நவநாகரீக உடை, தோல்பை என சேல்ஸ்மேன்களாக மாறி விலாச அட்டைகளோடு கொஞ்ச நாட்களுக்கு திரிவார்கள். பின்னர் ஒரு மாதம் கழித்துப்பார்த்தால் தாடியோடு வேறு வேலை தேடி வலம் வருவார்கள். இதற்கு காரணம் சேல்ஸ்மேன் வேலையைப் பற்றி எதுவும் தெரியாமல் பையை கையில் எடுப்பதுதான். அவர்களைப் போன்றவர்களுக்கு இரண்டாம் அத்தியாயம் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. தொடர்ந்து கொட்டுகிற மழையோ, உடல் நலக் குறைவோ விற்பனை இலக்குகள் மாறாது என்ற உண்மையில் ஆரம்பித்து சேல்ஸ்மேன் வேலையின் இயல்பை இந்த அத்தியாயத்தில் சுவாரசியமான உதாரணங்களோடு தெரிந்து கொள்ளலாம்.

திட்டமிட்டு விற்பது எப்படி என்று விளக்கும் மூன்றாம் அத்தியாயம் சற்றே விரிவானது. சிறு வயதில் இருந்து கல்கண்டு புத்தகத்தில் லேனா தமிழ்வானன் அவர்களின் ஒரு பக்க கட்டுரையை படித்து வந்த நான் திட்டமிடல் பற்றிய அவரின் கருத்துக்களை ஒருபக்க கட்டுரையிலும் பயணக்கட்டுரையிலும் படித்திருக்கிறேன். ஆசிரியர் லேனா தமிழ்வானனின் இலங்கைப் பயணம் ஒன்றின் திட்டத்தை நேரடியாக பார்த்து அந்த அனுபவத்தோடு மூன்றாம் அத்தியாயத்தை தொடங்கியிருக்கிறார். நாம் அனைவருமே சிறந்த திட்டமிடுபவர்கள்தான். ஏராளமான திட்டங்கள் மனதில் போட்டுவைக்கப்பட்டுள்ளன. ஆனால் எந்த திட்டமாவது நினைத்ததுபோல் நிறைவேறியிருக்கிறதா? இதற்கு காரணம் நம் திட்டங்கள் இதைச் செய்ய வேண்டும், அதை முடிக்க வேண்டும் என்பது போன்ற பொது திட்டங்களாக இருப்பதுதான். இதை இப்படி முடிக்க போகிறேன். அதை அவரிடம் உதவி கேட்டு முடிக்கப் போகிறேன். என்பது போன்ற வழிமுறைகளோடு கூடிய குறிப்பான திட்டங்கள் நம்மால் தீட்டப்படுவதில்லை. அத்தகைய குறிப்பான திட்டங்களை தீட்ட வழிமுறைகளை பிண்ணிணைப்பு படிவங்களோடு மூன்றாம் அத்தியாயம் விளக்குகிறது. டேட்டாபேஸ் பற்றிய விளக்கங்கள் மூன்றாம் அத்தியாயத்தின் சிறப்பு. படிக்கும் வாசகர்கள் அனைவரையும் இவ்விளக்கங்கள் கவரும் என்பதில் ஐயமில்லை.

இந்த புத்தகத்தை நான் என் மேசை மீது வைத்திருந்த போது எங்கள் துறை பேராசிரியர் எடுத்துப் படித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் படித்து விட்டு புத்தகத்தை மேசை மீது வைத்து விட்டு சென்று விட்டார். அடுத்த நாள் என்னை பார்த்தவர் “நேற்று ஓர் புத்தகம் இங்கே வைத்திருந்தீர்களே? அந்தப் புத்தகம் எங்கே? படித்து விட்டு பின் கொடுக்கட்டுமா” என என்னைக் கேட்டார். அவர் தன் பாடநூல்களைத் தவிர பிற நூல்களை அதிகம் படிக்கமாட்டார். அவரைப் போன்றவர்களையே இந்த நூல் கவர்ந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் முதல் மூன்று அத்தியாயங்களின் ஈர்ப்பே ஆகும். மூன்று அத்தியாயங்களுமே சுவாரசியமான உதாரணங்கள், இயல்பான விளக்கங்கள், நடைமுறை பேச்சு வழக்கிலான தலைப்புகள் என எல்லோரையும் புத்தகத்தை படிக்கத் தூண்டுவது இந்த மூன்று அத்தியாயங்களே ஆகும்.

ஒரு சேல்ஸ்மேன் எப்படி தோற்றமளிக்க வேண்டும், எப்படி உடையனிய வேண்டும், என்னென்ன கையில் வைத்திருக்க வேண்டும் என்பதில் ஆரம்பித்து நுகர்வோரை அனுகுவது, அவர்களோடு உரையாடுவது, விற்பனை செய்யும் விதம் என சேல்ஸ்மேன் பற்றிய அனைத்து தொழில்நுட்பங்களையும் நான்காம் அத்தியாயத்தில் ஆசிரியர் விளக்கியிருக்கிறார். வாங்க வாய்ப்புள்ள நுகர்வோரை வாவாக்கள் என பெயரிட்டுள்ளது ஆசிரியரின் ஒரிஜினாலிடி என்னும் தன்மையைக் காட்டுகிறது. ஆங்கில சொல்லை அப்படியே மொழிபெயர்த்து வாசகர்களுக்கு புரியாத சொல்லொன்றை புகுத்தாமல் எளிமையாக பெயர் ஒன்றை கண்டுபிடித்திருப்பது நன்று. இப்புத்தகம் மொழிபெயர்ப்பு புத்தகம் போலும், பாடநூல் போல அலுப்பு தட்டாமல் இருக்க இதுவே காரணம் என்று கொள்ளலாம்.

எதிர்கொள்ளும் மனப்பாங்கே எதையும் நிர்ணயிக்கிறது எல்லா நுட்பமும் தெரிந்த சேல்ஸ்மேனும் சரியான மனப்பாங்கு கொண்டிருக்காவிட்டால் தோல்வியே காண்பார். எனவே நேர்மறையான மன்ப்பாங்கு கொண்டிருப்பது அவசியம். அதற்கான விளக்கங்கள், யுத்திகள் ஐந்தாம் அத்தியாயத்திலும், விற்பனையாளரின் பண்புகளை ஆறாம் அத்தியாயத்திலும் ஆசிரியர் நன்கு விளக்கியிருக்கிறார். பின்னினைப்பு படிவங்கள், படித்ததை நடைமுறைப்படுத்த உதவும் செயல்முறை கருவிகள்.

மாணவர்களுக்கு நுகர்வோர் உளவியல் பாடம் கற்பித்து முடித்தவுடன் பருவ இறுதியில் அனைவரையும் 50 முதல் 100 பேனாக்களை வாங்கி விற்று வர பணிப்பேன். நுகர்வோர் பற்றி அறிந்து கொள்ளவும் தன் விற்பனைத் திறமையை தெரிந்து கொள்ளவும் இப்பயற்சி உதவும். இதில் நான் கண்டது யாதெனில் வகுப்பில் சுவாரசியமாக பாடம் கேட்ட, அதிக மதிப்பெண் பெறும் மாணவ மாணவியர் யாரும் பேனாக்களை விற்க முடியாமல் அவதிபடுகிறார்கள் என்பதே அதற்கு காரணம் ‘வெட்கம்’ என்னும் தடைக்கல்லும் ‘சேல்ஸ்மேன்ஸிப்’ என்ற பண்பும் இல்லாததே ஆகும். நம் கருத்துக்களை சொல்வது, நம் அன்பை வெளிப்படுத்துவது, நாம் சொல்லும் வேலையை பிறரை செய்யவைப்பது, என வாழ்வின் பல விஷ்யங்களில் மேற்கூறிய வெட்கமும், சேல்ஸ்மேன்ஸிப் பண்பும் அங்கம் வகிக்கின்றன. இவ்விரு பண்புகளின் குறைபாடு தோல்வியில் முடியலாம். இப்பண்புகளை வளர்த்துக் கொள்வது வளர்ச்சிக்கு உத்திரவாதம். என்னுடைய நண்பர் பெண் பேராசிரியையை இதற்காகக்கூட இப்புத்தகம் ஈர்த்திருக்கலாம்! படித்தால் உங்களையும் ஈர்க்கும் இப்புத்தகத்தை வாங்க இங்கே செல்லுங்கள்: http://nhm.in/shop/978-81-8493-165-5.html

Thursday, November 19, 2009

புத்தக விமர்சனம்

தமிழீழ விடுதலைக்காக தனிப் பெரும் தலைவனாக இருந்து முப்பத்தி மூன்று ஆண்டு காலம் ஆயுதப் போராட்டம் நடத்திய போராளி, பெரும்பான்மையான தமிழ் இளைஞர்களின் நாயகன் பிரபாகரனின் மரணச் செய்தி வெளிவந்த சூட்டோடு சூடாக பதிப்பிக்கப்பட்டுள்ள புத்தகம் “பிரபாகரன்-வாழ்வும் மரணமும்”. நூல் ஆசிரியர் பா.ராகவன் பிரபாகரன் பற்றிய தகவல்களையெல்லாம் வேகமாக திரட்டி கோர்வையாக தொகுத்து எழுதியிருக்கும் இந்நூல் சுவாரசியமானது. ஒர் தலைவனின் வாழ்க்கை வரலாறு, ஓர் இனத்தின் விடுதலை போராட்ட வரலாறு, உரிமைப் போர் வீழ்ந்து போனதன் விளக்கம். ஆசிரியர், சரித்திரம் வெற்றிகளுக்கு மட்டுமல்லாமல் சமயத்தில் சரிவுகளுக்கும் அபாய விலை சொல்லிவிடும் என்று குறிப்பிட்டு இருப்பது போல பிரபாகரனின் மரணம் என்னும் விலையை விவரமாக சொல்லும் புத்தகம்.

போராட்டத்தின் தொடக்கப் பலியாடு ஆல்பிரட் துரையப்பாவின் கொலையிலிருந்து மாத்தையாவின் மரண தண்டனை, புலிகள் செய்த மாபெரும் தவறான முன்னால் பாரதப் பிரதமர் ராஜிவ் காந்திப் படுகொலை வரை ஆராய்ந்து பார்த்தால் பிரபாகரன் என்றொரு தனி மனிதனின் ஆளுமையே தமிழர் விடுதலைப் போரை நடத்தியிருப்பதை இப்புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள நிகழ்வுகளை கூர்ந்து கவணிக்கும் போது கண்டறிய முடிகிறது.

என் மண்ணில் என் விருப்படி அலைந்து திரியவும் வாழ்ந்து மகிழவும் இன்னொருவன்ன் எப்படித் தடைபோடலாம் என்று எளிமையான தர்க்கத்தை கருவாகக் கொண்டு எவ்வித அச்சுறுத்தல்களுக்கும் அடங்க மறுத்து சிலிர்த்து எழுந்த அத்தனை பேரையும் கண்டு அக்காட்சியை உரமாகக் கொண்டு வளர்ந்த வீரத் தமிழ் மகன் பிரபாகரன் என்பதை சொல்லும் இப்புத்தகம் அவரின் ஆளுமைக் கூறுகள் என சில குணங்களை படமிட்டு காட்டுகிறது. ”அவர் நண்பர்களுக்கெல்லாம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது, செய்து முடிக்கும் வல்லமை பிரபாகரனுக்கு மட்டுமே இருந்தது” என ஆசிரியர் குறிப்பிட்டு இருப்பதில் இருந்து சிறந்த செயல் வீரனின் ஆளுமையே பிரபாகரனின் ஆளுமை என்பதையும்

”உயரம் சற்று மட்டுத்தான் ஆனால் உறுதியான தேகம் எதையும் தாங்கும் என்பது போல பலசாலி போலிருக்கிறது. ஆனால் முகத்தில் என்ன ஒரு வசீகரப் புன்னைகை கண்ணில் தீப் பொறி மாதிரி ஏதோ ஒன்று” என்று குறிப்பிட்டு இருப்பதிலிருந்து பிரபாகரனின் நல்ல உடல் பலத்தையும், அதுவே அவரின் மன பலத்திற்கு காரணம் என்பதையும்

”பிரபாகரனிடம் இயல்பான ஒரு வழக்கம் உண்டு, அவரால் எந்த கூட்டத்திலும் சகஜமாக இருக்க முடியும். ஆனால் எந்தக் கூட்டத்தின் சட்டை சாயமும் ஒட்டாமல் பார்த்துக் கொள்வார்” என்று குறிப்பிட்டு இருப்பதில் இருந்து பிரபாகரனின் தனித்து நிற்கும் தாகத்தையும்

”நாமே சமைத்து சாப்பிட்டால் தான் சாப்பாட்டு ருசி குறித்து அதிகம் யோசிக்காமல் இருப்போம்” என புலிகளூக்கு அறிவுறுத்தியிருப்பதிலிருந்து இலட்சியத்தை அடைவதற்கான துறவற மனநிலையையும் அறிந்து கொள்ளலாம்.

ஒருவரின் வாழ்க்கையையும் வாழ்க்கையில் ஒருவர் செய்யும் செயல்களையும், அவர் வாழ்வின் முடிவையும் தீர்மானிப்பது லைப் ஸ்கிரிப்ட் என்னும் உளவியல் கூறுதான். சிறுவயதில், குறிப்பாக ஏழு வயதிற்குள்ளாக, இந்த லைப் ஸ்கிரிப்ட் நம் மனதில் உருவாகி விடுகிறது. பின்னர் ஒருவர் மரணம் அடையும் வரை அந்த லைப் ஸ்கிரிப்ட் அவரின் வாழ்வை தீர்மானிக்கிறது. ஒருவரின் லைப் ஸ்கிரிப்டை தெரிந்துகொள்ள அவருக்கு பிடித்த கதைகளைத் தெரிந்து கொண்டாலே போதுமானது. போராளி பிரபாகரனுக்கு பிடித்த கதைகள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் மாவீரன் பக்த்சிங் ஆகியோருடையது என்று ஆசிரியர் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். விளையாட வேண்டும். பள்ளிக்கூடம் போக வேண்டும் வீட்டுக்கு வந்தால் தாய்மடி என எல்லா பையன்களைப் போல் இல்லாமல் அடிக்கடி தனியே போய் உட்கார்ந்து யோசித்து, தனித்துவம் மிக்க பையனாக உருவெடுத்தது ஆகியவைக்கான காரணம் பிரபாக்ரனின் மனதில் உருவான புரட்சியாளன் லைப் ஸ்கிரிப்ட்தான் என்பதை புரிந்து கொள்ளலாம். இறுதிவரை போர் களத்திலேயே இருந்து உயிர்விட்டதற்கான ஊக்கியும் இதுவே. பலரும் கூறி வருத்தப்படுவது போல் பிரபாகரன் இலங்கையின் ஒரு பகுதியை ஆட்சி செய்தாலும் ஜனநாயக வழிக்கு வராமல் போனதற்கு காரணமும் அவருடைய லைப் ஸ்கிரிப்டாக இருக்கலாம்.

முன்னால் இந்திய பிரதமர் ராஜிவ் படுகொலை பற்றி ஸ்ரீபெரும்புதூர் அத்தியாயம் விவரமாக அலசியிருக்கிறது. ராஜிவ் காந்தி பற்றிய பிரபாகரனின் புரிதலை ஆசிரியர் நன்கு விளக்கியிருக்கிறார். தொடர்ந்து இரண்டு மூன்று அத்தியாயங்களைப் படிக்கும் போது சாதாரன வாசகனுக்கு புரிவது ஒரு பேரரசின் ஆட்சியாளருக்கு சிறு இனக் கூட்டத்தின் இன்னல்கள் புரிவது கடினம் என்பதும், ஓர் இனப் போராளிக்கு ஓர் பேரரசின் இராஜதந்திர முடிவை புரிந்து கொள்வது கடினம் என்பது மட்டுமே விளங்குகிறது. இந்திய இலங்கை ஒப்பந்தமும் அதைத் தொடர்ந்து ராஜிவ் காந்தி படுகொலையையும் தவறான புரிதல்களால் ஏற்பட்ட சரிசெய்யவே முடியாத விரிசல்கள் என்பதையும் சாதாரன வாசகனுக்கு இந்த அத்தியாயங்கள் புரிய வைக்கின்றன.

போர்க்களத்தில் விடுதலைப்புளிகள் நீண்ட நாள் போராடி தாக்குபிடித்ததற்கு அவர்களின் யதார்த்த போர்கள அனுப்வங்களே காரணம் என்பதையும் சில அத்தியாயங்களைப் படிக்கும் போது தெரிந்துகொள்ளலாம். ”இலங்கை வீரர்களுக்கு குறி பார்த்து சுடத் தெரியாது என்பது ஒன்று. வெட்டவெளியில் சுற்றி வளைக்கப்பட்டு சிக்கிக் கொண்டாலும் விடுதலைப் புலிகளுக்கு தப்பிக்கத் தெரியும் என்பது இரண்டாவது” என புலிகள் உணர்ந்ததாக ஆசிரியர் எழுதியிருப்பது இதற்கு ஓர் உதாரணம்.

இறந்த கதை என்னும் 25ம் அத்தியாயத்தில் உலகத் தமிழர்களின் மனநிலையை உணர்ந்து கொள்ள ஓர் வாய்ப்பை வழங்கியிருக்கிரார் ஆசிரியர். பிரபாகரன் மரணம் பற்றிய வதந்திகளை தொகுத்து வழங்கி இருக்கிறார் ஆசிரியர். இவ்வதந்திகளையே உலகத் தமிழர்களின் வெளிப்பட்ட எதிர்பார்புகளாகக் கொண்டால் பிரபாகரன் பற்றிய மற்றவர்களின் மனப்பாங்கை நன்கு புரிந்து கொள்ளலாம். பிரபாகரன் இறந்த செய்தி கேட்ட இரவில் அழுத, பகலில் வருத்தம் கொண்ட, தொலைக்காட்சி முன்பே அமர்ந்திருந்தவர்களின் மனநிலையே இறுதி அத்தியாயம் நன்கு விளக்குவது.

புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ள பிரபாகரன் தொடர்பான படங்கள் ஒரு சிரத்தையுள்ள தலைவனின் வாழ்க்கையை நம் கண்முன்னே நிறுத்துகின்றன. பிரபாகரனின் திருமணப்படம் ஓர் பாலைவனச் சோலை. போர், போராட்டம் என தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையானாலும் தனிமனித உணர்வுகளும் முக்கியமானவை, தவிர்க்க இயலாதவை என்பதை பிரபாகரனின் காதலும், கல்யாண படமும், குழந்தைகளுடனான குடும்ப படமும் நமக்கு உணர்த்துகின்றன.

விடுதலைப் போராட்டமோ, அல்லது வேறு எதுவானாலும் கொண்ட முயற்சியில் வெற்றி பெற விழையும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய செயல்வீரன் ஒருவரைப் பற்றிய நூல் இது. கிழக்கு பதிப்பகத்தின் சிறந்த நூல் பிரபாகரன்-வாழ்வும் மரணமும். இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க இந்த முகவரிக்கு செல்லுங்கள்: http://nhm.in/shop/978-81-8493-150-1.html

Friday, October 23, 2009

குழந்தைகளை விரும்பத்தகாத நடத்தைக்காகவும், அவர்கள் பெற்றோர் சொல் பேச்சு கேட்காத போதும் அடிக்கலாமா? சூடு வைத்தல் போன்ற பிற தண்டனைகளைக் கொடுக்கலாமா?


குழந்தைகள் பிறக்கும் போது எந்த நடத்தையையும் தன்னகத்தே கொண்டு பிறப்பதில்லை. மாறாக இந்த உலகில் வளரும் போது பிற மனிதர்களை கூர்ந்து நோக்கி, அவர்களுடன் உறவாடி நடத்தைகளைக் கற்றுக் கொள்கிறார்கள். எனவே குழந்தைகள் விரும்பத்தகாத முறையில் நடந்து கொள்கிறார்கள் என்றால் அந்நடத்தை அவர்களின் பெற்றோரிடமோ, அவர்கள் வளரும் சூழ்நிலையில் உள்ள பிறரிடமோ காணப்படலாம். அவர்களிடமிருந்தே அந்நடத்தையை குழந்தைகள் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் கற்றுக்கொண்ட விரும்பத்தகாத நடத்தையை மாற்ற வேண்டுமெனில், குடும்பத்தில் உள்ள யாரையாவது பார்த்து அந்நடத்தையை கற்றுக் கொண்டிருந்தால் முதலில் அவர் தன் நடத்தையை மாற்றி கொள்ள வேண்டும். நாளடைவில் அக்குழந்தையும் அந்த விரும்பத்தகாத நடத்தையை கைவிட்டு விடும்.

ஒருவேளை குழந்தைகள் விரும்பத்தகாத நடத்தையை நமக்குத் தெரியாத வேறு யாரையாவது பார்த்து கற்றுக் கொண்டிருந்தால், குழந்தையிடம் அந்நடத்தை ஏன் விரும்பத்தகாகது, அதை எப்படி மாற்றிக் கொள்ளலாம் என பெரியவர்களிடம் சொல்வதைப்போல விளக்கிக் சொல்ல வேண்டும். தொடர்ந்து மனம் தளராமல் பல நாட்கள் இப்படி சொல்லிக் கொண்டே வந்தால் குழந்தை விரைவில் அந்த நடத்தையை மாற்றிக் கொள்ளும்.

ஒரு வேளை அடித்துதான் திருத்த முடியும் என்ற கட்டாயம் ஏற்பட்டாலும் கூட, ‘அடித்து விடுவேன், சூடு வைத்து விடுவேன், உதைத்து விடுவேன்’ என சத்தம் போட்டு மிரட்டலாம். அடித்து விடுவேன் என சத்தமாக கூறிக் கொண்டே கையை ஓங்கலாமே தவிர, ஓங்கிய கையால் ஒருநாளும் அடிக்கக் கூடாது. சூடு வைத்து விடுவேன் என்று ஒரு கம்பியை எடுத்து காட்டலாமே தவிர ஒரு நாளும் சூடு போட்டு விடக்கூடாது.

நீங்கள் அடித்து மிரட்ட ஆரம்பித்து விட்டால் உங்கள் மீது குழந்தைக்கு இருக்கும் பயம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்துவிடும். ஒரு கட்டத்தில் தப்பு செய்யும் குழந்தை தைரியமாக செய்ய ஆரம்பித்துவிடும். அப்பா, அம்மாவுக்கு தெரிந்தால் மீறி மீறிப் போனால் அடிப்பார்கள் அவ்வளவுதான், வேறென்ன செய்து விடப் போகிறார்கள் என்ற மன நிலை ஏற்பட்டு விடும். அந்த மனநிலையை உருவாவதற்கு நீங்கள் காரணமாகி விடாதீர்கள்.

Wednesday, October 7, 2009

குழந்தைகள் எதைக் கேட்டாலும் இப்போதே வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்களே? அது இயல்பானதுதானா? அதை நாம் ஊக்குவிக்கலாமா?


குழந்தைகள் இன்ப விதியின் அடிப்படையில் வளர்பவர்கள். அதாவது எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், ஒரு போதும் துன்பத்தை அனுபவிக்க கூடாது என்பதே அவர்களின் வாழ்க்கைக் கோட்பாடு. எனவே அவர்கள் தன் மனதில் எழும் ஆசைகளை உடனுக்குடனே நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என நினைப்பதும், தன் தேவைகளை உடனுக்குடன் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதும் இயற்கையானது தான். இந்த நடத்தையின் காரணமாகத்தான் எதாவது ஒரு பொம்மையைக் கேட்கும் குழந்தை “ எனக்கு ஒரு பொம்மை வேண்டும், இப்போதே, இன்றைக்கே வேண்டும்” என கேட்பது. அதற்காக குழந்தையின் ஆசையை நாம் உடனே நிறைவேற்றி விடவேண்டும் என்று துடிதுடிக்க வேண்டியதில்லை. அது நம்மால் முடியவும் முடியாது. மேலும் ஓரிரு முறை அவ்வாறு உடனுக்குடன் குழந்தையின் ஆசையை உடனே தீர்த்து வைத்தால் அதுவே பழக்கமாகி பின்னர் நாம் எப்போது அவ்வாறு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். பிற்காலத்தில் தான் நினைப்பது உடனே நடக்கவில்லை என்றால் அக்குழந்தைக்கு மனச்சோர்வும், மன முறிவும் ஏற்படும். அது ஓர் ஆளுமைக் குறைபாடாக உருவெடுத்து வாழ்க்கையின் பல தோல்விகளுக்கு காரணமாக அமைந்துவிடும்.

தற்கால உளவியல் ஆய்வுகள் யார் தன் உள்ளுணர்வு ஆசைகளை கட்டுப்படுத்தி சிறிது பொறுத்திருந்து பின்னர் சரியான வேளை வரும்போது தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் திறமை பெற்றிருக்கிறார்களோ அவர்களே சிறந்த வெற்றியாளர்களாக திகழ்கிறார்கள் எனக் கண்டறிந்துள்ளன. இத்திறமை படைத்தவர்களுக்கு நுண்ணறிவு சற்று குறைவாக இருந்தாலும் அது அவர்களின் வெற்றியைப் பாதிப்பதில்லை எனவும் தெரியவந்துள்ளது. இத்திறமையை நாம் குழந்தைப் பருவத்திலேயே வளர்த்து விட்டால் குழந்தைகள் பெரியவர்களாகும் போது அது ஓர் வாழ்க்கை முறையாக மாறிவிடும்.

இப்போதே ஓர் பொம்மை வேண்டும் என்று குழந்தை கேட்டால், இரண்டு மணி நேரம் வேலை இருக்கிறது. முடித்துவிட்டு நாம் இருவருமே சென்று வாங்கி வரலாம் என்று கூறுங்கள். இன்றே ஐஸ்கிரீம் வேண்டும் என்றால் இன்று முடியாது நாளை வாங்கித்தருகிறேன் என்று கூறி அடுத்த நாள் வாங்கித் தாருங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் “சற்றே தள்ளிப்போடும் மனநிலையையும்” பொறுமையையும் குழந்தைகளிடத்தில் இளம் வயதிலேயே விதைத்து விடலாம்.

ஓடு மீன் ஓட உறுமீன் வரும்வரை காத்திருக்க வையுங்கள் உங்கள் கொக்கை. உலகில் வெற்றியாளராக்குங்கள்.

Tuesday, October 6, 2009

குழந்தைகளுக்கு என்ன திறமை உள்ளது என்பதையும் எதிர்காலத்தில் அவர்கள் என்ன துறையில் பிரகாசிப்பார்கள் என்பதையும் எப்படித் தெரிந்து கொள்வது?


ஒரு மனிதனின் வெற்றிக்கு அடிப்படையாகத் திகழ்வது நுண்ணறிவாகும். இதை ஐ.க்யூ என்று குறிப்பிடலாம். நுண்ணறிவு அதிகமாக உள்ள யாவரும் வெற்றியாளராகத் திகழ வாய்ப்புள்ளது. நுண்ணறிவு பற்றிய உளவியல் கோட்பாடுகளில் வலியுறுத்திக் கூறப்படும் விஷயம் யாதெனில் எல்லா மனிதர்களுக்கும் பொதுவான நுண்ணறிவும் அதோடு சிறப்பு நுண்ணறிவும் இருக்கும் என்பதுதான். உதாரணமாக ஒருவருக்கு பொது நுண்ணறிவும் அதோடு கணிதத்தில் சிறந்து விளங்குவதற்கான சிறப்பு நுண்ணறிவும் இருக்கலாம். மற்றொருவருக்கு பொது நுண்ணறிவும் அறிவியலில் சிறந்து விளங்குவதற்கான சிறப்பு நுண்ணறிவும் இருக்கலாம். அதைப்போல உங்கள் குழந்தைக்கும் பொது நுண்ணறிவோடு எதாவதொரு சிறப்பு நுண்ணறிவு கட்டாயம் இருக்கும். பிற்காலத்தில் எந்த சிறப்பு நுண்ணறிவு தங்களிடம் இருக்கிறதோ அந்தத் துறையிலேயே குழந்தைகள் வல்லுநர்களாக விளங்குவார்கள்.

ஒரு குழந்தை பொம்மைகளை உடைத்து விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து “என் மகன் பெரிய இஞ்ஜினியராக வருவான்” என்றெல்லாம் குழந்தைகளின் எதிர்காலத்தை கணிக்க முடியாது. அதற்கு மாறாக உளவியல் முறை சோதனைகளைக் கொண்டு குழந்தைகளின் திறன்களைக் கணிக்கலாம். தற்போது குழந்தைகளின் நுண்ணறிவு, படிப்புத்திறன், எந்தப் பாடத்தில் சிறப்பாக படிக்கிறார்கள் என்பதை கண்டறிதல் போன்றவற்றை அளவிட உளவியல் சோதனைகள் உள்ளன. மேலும் குழந்தைகள் எந்தத் துறையில் ஆர்வம் கொண்வர்களாக இருக்கிறார்கள்? அவர்களின் நாட்டங்கள் யாவை போன்றவைகளைச் சோதிக்க தனித்தனி உளவியல் சோதனைகள் தற்போது உள்ளன. குழந்தைகளை அச்சோதனைகளுக்கு உட்படுத்துவதன் மூலம் அவர்களின் திறன்களையும், துறைசார் ஆர்வங்களையும் கண்டறியலாம்.

பொதுவாக எந்த வயதில் குழந்தைகளை இச்சோதனைகளுக்கு உட்படுத்தலாம் என்ற கேள்வி எழும். நுண்ணறிவுச் சோதனைகளை எந்த வயதிலும் செய்து பார்க்கலாம். ஆர்வச் சோதனை, நாட்டச் சோதனை ஆகியவற்றை 10 வயதிற்கு மேல் 13 வயதிற்குள் செய்து குழந்தைகளின் ஆர்வம், நாட்டம் ஆகியவைகளை கண்டறிவது நல்லதாகும். பெற்றோர்களும் நாட்டில் என்னென்ன துறைகள் உள்ளன, அதற்கான வேலை வாய்ப்புகள் யாவை? புதிதாகத் தோன்றியுள்ள வேலை வாய்ப்புகள் யாவை? அவ்வேலைகளைப் பெற என்ன படிக்க வேண்டும் என்பனவற்றை தெரிந்தவர்களாக, விழிப்புணர்வு உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியம். வேலைப் பெயர் அகராதி போன்ற நூல்களை படிப்பதன் மூலம் இவ்வறிவைப் பெறலாம்.

Monday, October 5, 2009

புத்தக விமர்சனம்

பழைய காலத்தைப் போல் என்ன வியாதிக்கு என்ன மருந்து கொடுத்தால் என்ன? மருத்துவர் சொல்வதை செய்வோம் என்று சொன்னதை மட்டுமே செய்தவர்கள் இப்போது இல்லை மாறாக சொல்லாததையும் செய்து முடிக்கும் நோயாளிகளே தற்போது அதிகம். மருத்துவ அறிவியல் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து இருப்பதுதான் இதற்கு காரணம் ஆகும். காய்ச்சல் என்றால் கூட கையோடு சிறுநீர்ப் பரிசோதனை செய்து கொண்டு மருத்துவரைப் போய் பார்க்கலாம் என்பவர்களும், குழந்தைகளுக்கு உடம்புக்கு முடியவில்லை என்றால் டெர்மோமீட்டரை வைத்து காய்ச்சலின் அளவு தெரிந்து கொண்டு குழந்தையின் வயதுக்கேற்ப 5, 6, அல்லது 7 மில்லி பாராசெடமால் மருந்து கொடுத்துவிட்டு பின்னர் மருத்துவரை சென்று பார்க்கும் தாய்மார்களும் தற்போது சர்வசாதாரணம்.

இச்சூழ்நிலையில் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் பற்றிய அடிப்படைத் தகவகளை விளக்கிச் சொல்லும் விதமாக டாக்டர்.சு.முத்து செல்லக்குமார் எழுதிய கொலஸ்ட்ரால் குறைப்பது எப்படி என்ற நூல் நலம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. கொழுப்பு என்றால் என்ன என்று தொடங்கி எந்தெந்த உணவுப் பொருள்களில் எவ்வளவு கொழுப்பு இருக்கின்றன என விளக்கும் முழுமையான புத்தகம் இது.

இல்லாத ஒன்றை உப்பி ஊதி பெரிதாக்கி விடுவது மனித இயல்பு. கொழுப்பினால் உண்டாகும் ஆபத்து பற்றிய விஷயத்திலும் நடந்து இருப்பது இதுதான் என்பதை முதல் அத்தியாயத்திலேயே விளக்குகிறார். எல்லோரும் சேர்ந்துதான் கொழுப்பை அதிபயங்கர வில்லனாக்கி விட்டார்கள். உண்மையில் கொழுப்பு அப்படிப்பட்ட வில்லன் இல்லை என ஒரு மருத்துவரே சொல்லிவிட்டால் பிறகு நாம் ஏன் பயப்படவேண்டும் என்ற உணர்வை முதல் அத்தியாயம் ஏற்படுத்துகிறது. உடலுக்குத் தேவையான சக்தியைத் தருவது, உடல் நலத்துக்குத் தேவைப்படும் பல்வேறு செயல்பாடுகளிலும் பங்கு கொள்வது செல்களின் செயல்பாட்டை சீராக்குதல் என கொழுப்பு நல்ல வேலைகளை செய்வதை ஆசிரியர் விளக்கமாக எழுதியிருக்கிறார். இந்த விஷயங்கள் பலரும் சொல்லாமல் மறைத்த விஷயங்களாகத் தெரிகின்றன.

இரண்டாம் அத்தியாயம் கொழுப்பு நல்லதா, கெட்டதா என்ற கேள்வியோடு தொடங்கி கொழுப்பின் நற்செயல்களை முழுவதுமாக விளக்குகிறது. ஒரு சிலர் கொழுப்பு அதிகமானால் இதய நோய் வரும் என்ற ஒரே எண்ணத்துடன் கொழுப்பு உணவுகளை அறவே ஒதுக்கி விடுகிறார்கள். ஆனால் அவர்கள் இதய நோய் இல்லாமல் இருந்தாலும் கூட வேறு பல நோய்களை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஏன் அவர்களுக்கு அப்படி பிற நோய்கள் வருகின்றன என்பதை இந்த அத்தியாயத்தை படிக்கப்படிக்கவே புரிந்து கொள்ளலாம். கொழுப்பை அறவே ஒதுக்கும் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டியது இரண்டாம் அத்தியாயம்.

சாதாரணமாக கடையில் வாங்கி உண்ணும் பொருள்களில் என்ன கொழுப்பு இருக்கும், எவ்வளவு கொழுப்பு இருக்கும் என்பது யாருக்குத் தெரியும்? விபரங்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தாலும் அதை புரிந்து கொள்வதற்கு தேவையான அடிப்படை அறிவு நிறையப் பேருக்கு இருப்பதில்லை. ஆசிரியர் நல்ல கொழுப்பு என்றால் எது? கெட்ட கொழுப்பு என்றால் எது என கொழுப்பின் வகைகளை விளக்கி, டப்பாவில் எழுதப்பட்டிருக்கும் விவரங்களை வைத்து நல்ல கொழுப்பின் அளவை கண்டுபிடிப்பதற்கு கூறியுள்ள வழி மிக எளிமையானதாக இருக்கிறது. பெரிய வியாதிகள் வராமல் தடுக்கும் ஆபத்பாந்தவனாக ஒமேகா-3, ஒமேகா-6 கொழுப்பு வகைகளின் நற்செயல்களை நாம் யாரும் சாதாரணமாக கேள்விப்பட்டிருக்க முடியாது.

உடல் பருமனாகும் போது உடலில் ஒரு சில பகுதிகள் தான் பெருத்துப் போகின்றன. உதாரணமாக நடுவயதைத் தாண்டிய ஆண்கள் அனைவருமே ஏறத்தாழ பெருத்த வயிறு கொண்டவர்களாகவே தோற்றமளிக்கிறார்கள். ஏன் வயிறு மட்டும் இப்படி பெருத்துப் போகிறது என்ற கேள்வி தொந்தியுள்ள ஆண்களைப் பார்க்கும் போதெல்லாம் தோண்ரும் கேள்வி. ஆசிரியர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் எந்தெந்த இடத்தில் கொழுப்பு திசுக்கள் அதிகமாக இருக்கின்றன என கூறியிருக்கிறார். அதைப் படிக்கும் போதுதான் நம் கேள்விக்கு சரியான விடை தெரிகிறது.

கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான காரணங்களில் ஒன்றாக மன அழுத்தத்தையும் ஆசிரியர் எழுதியிருக்கிறார். உதாரணமாக மன அழுத்தத்தில் இருப்பவர்கள் தங்களின் பிரச்சனைக்கு வடிகாலாக சிப்ஸ் போன்ற கொழுப்பு நிறைந்த நொறுக்குத் தீனிகளை அதிகமாக சாப்பிடுகின்றனர். இதனால் இவர்களையும் அறியாமல் உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கிறது என்பது மிகச் சரியான விளக்கம். மன அழுத்தம் அதிகரிக்கும் போது அதிகமாக உணவு உண்டு தன் மன அழுத்தத்தை போக்கிக் கொள்வது ஒரு சிலரின் ஆளுமைக் கூறு. இந்த நடத்தையை பற்றி உளவியலில் நிறைய ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதிக கொலஸ்ட்ரால் உண்டாக்கும் நோய்கள் அனைத்தையும் ஆசிரியர் பட்டியலிட்டு இருக்கிறார். இதன்மூலம் தெரியவருவது எல்லா நோய்களுக்குமே கொலஸ்ட்ரால் அதிகரிப்பு காரணமாக இருக்கிறது என்பதுதான். அதிகக் கொலஸ்ட்ராளுக்கான அறிகுறிகளை எவ்வாறு கண்டறியலாம் என்பது படங்களுடன் விளக்கப்பட்டிருக்கிறது. கொலஸ்ட்ராலின் அளவை கண்டறிய செய்யப்படும் சோதனைகளையும் விரிவாகவே விவரித்திருக்கிறார் ஆசிரியர். கொலஸ்ட்ரால் சோதனைகள் பற்றிய அடிப்படை அறிவு பெறவும், யார் எப்போது கொலஸ்ட்ரால் சோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற ஐயங்களைப் போக்கிக் கொள்ளவும் இவ்விவரங்கள் உதவியாக இருக்கும்.

கொலஸ்ட்ரால் என்னென்ன உணவுப் பொருள்களில் இருக்கின்றன? அதன் அளவு யாது? என்ற விவரப்பட்டியலையும், கொலஸ்ட்ராலை தடுக்க செய்ய வேண்டிய உடல் பயிற்சிகளையும், கொலஸ்ட்ரால் பற்றி நமக்கு ஏற்படும் பொதுவான சந்தேகங்களுக்கான விளக்கங்களையும் ஆசிரியர் எழுதியிருக்கிறார்.

புத்தகத்தை படிக்கும் உங்களை ஆச்சரியப்படுத்தும் சில விஷயங்களும் இருக்கின்றன:

1. உணவில் உள்ள கொழுப்பை நீங்கள் கட்டுப்படுத்தினாலும் உடலுக்குள் கொழுப்பு உற்பத்தியாகிக்கொண்டு தான் இருக்கும்!

2. அதிகப்படியான கொழுப்பினால்தான் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன என்ற கருத்தை ஆராய்சியாளர்கள் மறுக்கிறார்கள்!

3. முட்டையின் மஞ்சல் கருவில் கொலஸ்ட்ரால் மிகுதியாக இருந்த போதிலும் அதனால் பாதிப்பு பெரிதாக இருப்பதில்லை என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்!

4. குழந்தைகளுக்கு 2 வயதிலேயே கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்யலாம்!

5. மது அருந்தினால் மாரடைப்பை தடுக்கலாம் என்பது உண்மையே! என்பனதான் அந்த ஆச்சரியமான செய்திகள்.

மருத்துவ துறை சார்ந்த புத்தகமானாலும் ஆசிரியர் ஜனரஞ்சகமான முறையில் புத்தகத்தை எழுதியுள்ளார். “கொழுப்பு எம்.ஜி.யாரா அல்லது எம்.என்.நம்பியாரா! என கேட்பது, “ஒருவரது நடத்தையை வைத்து உனக்கு கொழுப்பு அதிகம்டா எனக் கடுப்பில் சொல்லாமே தவிர, அவரைப் பார்த்தவுடன் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும் அல்லது இருக்காது என்று சொல்ல முடியாது” என்று எழுதியிருப்பது படிக்கும்போது மருத்துவ புத்தகம் படிக்கிறோம் என்ற உணர்வை குறைக்கிறது.

வயதில் மூத்த பேராசிரியர் ஒருவர் உடல் நலமின்மையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு போகும்போது மிகுந்த மன உளைச்சலுடன் வேண்டா வெறுப்பாகத்தான் போனார். ஒருவாரம் மருத்துவமனை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார். சில மாதங்கள் கழித்து பேசிக்கொண்டிருக்கும் போது அவர் தான் மருத்துவனையில் சிகிச்சை பெற்ற அனுபவத்தை சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தார். இறுதியாக அவர் சொன்னது “வருடம் ஒரு முறை நோய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மருத்துவமனையில் 10 நாட்கள் அட்மிட் ஆகிவிடவேண்டும். வெளியே வரும்போது உடல் முழுவதும் ஓவர்ஹால் செய்தது போன்ற உணர்வும் தெம்பும் கிடைக்கும்” என்பது தான். மருத்துவமனையின் சிகிச்சை முறை பயந்து கொண்டு சென்றவரையே பாசம் கொள்ளச் செய்து விட்டது. அதைப்போல கொலஸ்ட்ரால் குறைப்பது எப்படி என்ற இந்த நூலைப் முழுவதுமாக படிபவர்கள் மருத்துவ அறிவியலின் மீது நாட்டம் கொள்வார்கள்.

இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க இங்கே செல்லுங்க: http://nhm.in/shop/978-81-8368-974-8.html

Friday, September 25, 2009

குழந்தைகள் தங்களின் வயதிற்கு மீறிய வார்த்தைகள் பேசுவதையும், பெரிய மனிதர்கள் போல் நடந்துகொள்வதையும் சரி செய்வது எப்படி?

பெரியவர்களுக்கான எந்த பண்புகளையும் கொண்டிருக்காததால் தான் ‘குழந்தை’ என்று குழந்தைகளை அழைக்கிறோம். உணர்ச்சி பெருக்கு, கட்டுக்கடங்காத ஆற்றலை இயல்பாக வெளிப்படுத்துதல், எதையும் அடக்கி வைக்காமல் அவ்வப்போது வெளிப்படுத்துவது ஆகியவை குழந்தைகளின் முக்கியமான பண்புகள் ஆகும். ஆனால் சில குழந்தைகள் இத்தகைய பண்புகளை கொண்டுருக்காமல் முதிர்ந்த பெரியவர்களைப் போல் நடந்து கொள்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்கள் வளரும் குடும்ப சூழ்நிலை, பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு முறை, உறவினர்களின் ஊக்கம் ஆகியவையே ஆகும். சாதாரணமாக குடும்பத்தின் ஒரே குழந்தை, குடும்பத்தின் மூத்த குழந்தை ஆகியவர்களிடம் இப்பழக்கம் அதிகமாக காணப்படும். இதற்கு காரணம் இவர்களின் குடும்பத்தில் வேறு குழந்தைகள் யாரும் இல்லாததால் அவர்கள் தன் தாய் தந்தையைப் பார்த்தே பேசுவது, பிறரிடம் நடந்து கொள்வது போன்ற நடத்தைகளை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே அவர்களின் நடத்தை பெரியவர்களைப் போல் இருப்பதில் ஆச்சரியமில்லை. ஒரு சிலர் குழந்தைகள் பெரியவர்களைப் போல் பேசுவது, நடந்து கொள்வது ஆகியவற்றை விரும்புனாலும் பலர் குழந்தைதன்மையில்லாத குழந்தைகளை விரும்புவதில்லை. குழந்தைகள் பெரியவர்களின் பேச்சு, நடத்தைகளை கொண்டிருந்தால் அதை பின்வரும் வழிகளில் மாற்றலாம்.

பெற்றோர்களும், சுற்றியிருப்பவர்களும் குழந்தை பெரிய மனுஷத் தன்மையுடன் நடந்து கொள்ளும் போது அதை ஆச்சரியத்துடன் விவாதிக்காமல் அலட்சியப்படுத்த வேண்டும். எந்தவித எதிர்வினையும் வெளிக்காட்டக்கூடாது. தனது பேச்சை, நடத்தையை மற்றவர்கள் விரும்பவில்லை என்று உணர ஆரம்பித்தாலே குழந்தை தனது நடத்தையை விரைவில் மாற்றிக் கொள்ளும்.

பெற்றோர்கள் தனது குழந்தையின் பெரிய மனுஷத்தன்மையை பிறருடன் விவாதிப்பதை முழுமையான நிறுத்திக்கொள்ள வேண்டும். அதுவும் குறிப்பாக குழந்தையின் முன் இந்த பேச்சையே எடுக்கக் கூடாது.

எப்போதும் குழந்தையை தன் பாராமரிப்பிலேயே வைத்திருக்காமல் பிற சமவயது குழந்தைகளுடன் விளையாட, பழக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் பெரிய மனிதர்களைப் போல் பேசுவது, நடந்து கொள்வதில் தவறேதும் இல்லை. அவ்வப்போது அவ்வாறு நடந்து கொண்டால் நமக்கும் நகைச்சுவையாக இருக்கும். ஆனால் எப்போதும் அவ்வாறு நடந்து கொள்வது தான் வெறுப்பை ஏற்படுத்தும்.

Monday, September 14, 2009

மாணவர்களை பாதிக்கும் ஆபாச சினிமா போஸ்டர்கள் - தினமலர் 14.09.2009

Monday, September 7, 2009

பதிவுகள் தளத்தில் வெளியான கட்டுரை

மன அழுத்த மேலாண்மை – 2


நமது உடலின் செயல்பாடுகள் எல்லாவற்றையும் நரம்பு மண்டலமே கட்டுப்படுத்தி உடலின் சீரான செயல்பாட்டிற்கு காரணமாக விளங்குகிறது. நரம்பு மண்டலம் பல பிரிவுகளாக பிரிந்து உடலின் செயல்பாடுகளை கவனித்துக் கொள்கிறது. தானியங்கி நரம்பு மண்டலம் என்பது நரம்பு மண்டலத்தின் ஓர் முக்கிய பிரிவாகும். இந்த தானியங்கி நரம்பு மண்டலம் சிம்பதடிக் நரம்பு மண்டலம் மற்றும் பாரா – சிம்பதடிக் நரம்பு மண்டலம் என இரண்டு பிரிவாக பிரிந்து செயல்படுகிறது. சூழ்நிலை சாதாரணமாக இருக்கும் போது தானியங்கி நரம்பு மண்டலத்தின் பாரா – சிம்பதடிக் நரம்பு மண்டலம் நமது உடலின் செயல்பாடுகளை கவனித்துக் கட்டுப்படுத்தி வரும். இச்சாதாரண சமயங்களில் நாம் மூச்சை ஆழமாக இழுத்து விடாமல் மேலோட்டமாக மூச்சு விடுவோம். இரத்த அழுத்தம் சரியான அளவில் இருக்கும். இதயத்துடிப்பும் இயல்பாக இருக்கும். உடல் வியர்க்காது. சுரப்பிகள் இயல்பாக செயல்பட்டு சரியான அளவில் ஹார்மோன்களை சுரந்து கொண்டிருக்கும்.நாட்டில் சாதாரண் சமயங்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட போலீஸ் படை உள்ளது. திடீரெனெ ஏதாவது கலவரம், அடிதடி, ரகளை போன்றவை ஏற்பட்டு விட்டால் அவைகளை சமாளிக்க உள்ளது தான் அதிரடிப்படை. சாதாரண போலீஸ் படையால் சமாளிக்க முடியாத விஷயங்களை இந்த அதிரடிப்படை கட்டுப்படுத்தி விடும். இவர்களுக்கு என சிறப்பு பயிற்சிகளும், ஆயுதங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதைப் போலவே தானியங்கி நரம்பு மண்டலத்தின் அதிரடிப் பிரிவே சிம்பதடிக் நரம்பு மண்டலம் ஆகும். நமக்கு உணர்ச்சிகளும் மனவெழுச்சிகளும் சூழ்நிலையின் காரணமாக ஏற்படும் போது அச்சூழ்நிலையை சமாளிக்க ஏதுவாக பல உடலியல் மாற்றங்களை ஏற்படுத்துவது சிம்பதடிக் நரம்பு மண்டலமே ஆகும்... தொடர்ந்து படிக்க பதிவுகள் தளத்திற்கு செல்லுங்கள் http://www.geotamil.com/pathivukal/DR_SELVARAJA_ULAVIYAL_2.htm

Thursday, August 20, 2009

புத்தக விமர்சனம்

இந்திய ஆட்சிப் பணியை பல ஆண்டுகள் ஆற்றி பழுத்த அனுபவம் பெற்ற அ.கி.வெங்கடசுப்ரமணியன் அவர்கள் எழுதி மூன்று இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே ”மக்களாகிய நாம்” என்னும் நூல் வடிவம் பெற்றுள்ளது. ஆட்சிப் பணி ஆற்றி ஓய்வு பெற்றவர் எழுதிய புத்தகம் எனினும், புத்தகம் சிறந்த கல்விமான் ஒருவரால் எழுதப்பெற்றது போன்று திருக்குறளும், பாரதியார் பாடல்களும், புள்ளி விபரங்களும் புத்தகம் முழுவதும் அவ்வப்போது மேற்கோள் காட்டப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது.

குடியாட்சி (13 கட்டுரைகள்), உள்ளாட்சி (8 கட்டுரைகள்), கல்வி (6 கட்டுரைகள்) மற்றும் வாழ்க்கை (1 கட்டுரை) என நான்கு தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகளை பொருத்தமாக பிரித்து வழங்கியிருக்கிறார் ஆசிரியர். முற்சேர்க்கையாக சிந்திக்க சில கருத்துக்கள் என அறிவுஜீவிகளின் கருத்துக்களை வழங்கியிருக்கிறார். ஒருமுறை மாணவர்-ஆசிரியர் கூட்டுப் போராட்டம் நடைபெற்ற போது, போராட்டத்தில் பேசிய மாணவர் தலைவர் ஒருவர் “முதலில் அவர்கள் யூதர்களை...... என்ற கருத்தை மேற்கோள் காட்டி பேசிய போது உச்சந்தலையில் மயிர் கூச்செரிதல் ஏற்பட்டு உடல் முழுவதும் எனக்கு சிலிர்த்தது. மீண்டும் அதே மேற்கோளை இப்புத்த்கத்தின் ஆரம்பத்தில் படித்த போது புத்தகத்தை படித்து முடிக்கும் வரை அதே உணர்வு என்னுள் நீடித்தது.

குடியாட்சி பற்றிய தன் முதல் கட்டுரையிலேயே எத்தனையாவது சுதந்திர தினம் என பெருமையுடன் எழுதி கொண்டாடுகிறோமே அதற்கு சரியான சவுக்கடி கொடுத்திருக்கிறார். முதுமை என்பது நாம் எந்த முயற்சியும் செய்யாமலேயே நம்மை வந்து அடையும். ஆனால் முதிர்ச்சி நாமாக ஏற்படுத்திக் கொண்டால் தான் உண்டு. அது போல சுதந்திரத்திற்கு பிறகு வருடங்கள் பல ஆகிவிட்டன. ஆனால் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதா என்று வாசகரை கேள்வி கேட்டு மூத்த குடிமகன் ஆகியும் முதிரா இளைஞனாகத்தான் இந்தியா இருக்கிறது என பதிலும் தந்து விடுகிறார். அதற்கு உதாரணமாக தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தினை விளக்கும் ஆசிரியர் “19-ம் நூற்றாண்டில் பஞ்ச நிவாரணத்துக்காக ஆங்கிலேயே அரசு மேற்கொண்ட பணிகளையே மிகப் பெரிய அளவில் தொழில் நுட்ப வளர்ச்சி அடைந்துவிட்ட 21-ம் நூற்றாண்டிலும் நாம் மேற்கொண்டு இருக்கிறோம்” என கூறுகிறார்.

பொது ஜனம் அத்தனை பேரும் மழையில் நனையும் எறுமை மாடுபோல் ஆகிப் போனோம் என்று ஒத்துக்கொள்ளும் போது, மனிதனிமன் அறிவையும், மனித நேயத்தையும் வளர்க்கும் கல்விக் கூடங்களை நடத்த வேண்டிய அரசு அவற்றை தனியாரை நடத்தச் சொல்லி விட்டு மதுக்கடைகளை நடத்துவதில் ஆச்சரியம் இல்லை என்கிறார். ஆசிரியர் தீண்டாமை ஒழிக்கப்படவில்லை என்பதை மிக ஆணித்தரமாக Evidence என்ற அமைப்பு வெளியிட்ட புள்ளி விபரங்களுடன் விளக்கியிருக்கிறார். எதையும் முற்போக்கு சிந்தனையோடு செய்யாமல் அந்நியரை கைகாட்டிக் கொண்டிருக்கும் நமக்கு ஆசிரியர் சொல்லும் அறிவுரை “விடுதலைக்குப் பிறகு, வெள்ளையர்களை பொறுப்பாக்க முடியாது” என்பது தான்.

குடியாட்சி பகுதியில் இரண்டு கட்டுரைகள் காவல் துறை செயல்படும் விதம் பற்றியது. அண்மையில் ஒருவரின் மோட்டார் சைக்கிள் திருட்டுப் போனது. அவர் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கச் சென்றார். உதவி ஆய்வாளரோ புகாரை வாங்கிக் கொள்ளாமல் “போய் நன்றாக தேடிப் பார்த்துவிட்டு உண்மையிலேயே காணவில்லை என்றால் ஒருவாரம் கழித்து வா” என்று அவரை திருப்பி அனுப்பி விட்டார். 15 நாட்கள் கழித்து சென்ற போது ஒரு வார காலத்திற்கு காவல் நிலையத்தில் அந்த பொறுப்பு உதவி ஆய்வாளரை சந்திக்க இயலவில்லை. பின்னர் அறிமுகமான உயர் காவல் அதிகாரி ஒருவரிடம் விசயத்தை எடுத்துக் கூறி உதவி வேண்டிய போது “நீங்கள் போய் அந்த உதவி ஆய்வாளரை பாருங்கள், நான் அவரிடம் சொல்கிறேன் என்று அனுப்பி வைத்தார். இம்முறை அந்த உதவி ஆய்வாளரை சென்று விஷயத்தை எடுத்துச் சொன்ன போது அவர் புகாரை பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையை தரத் தயாராக இருந்தார். ஆனால் மேல் அதிகாரியிடம் எக்காரணம் கொண்டும் தெரிவிக்கக் கூடாது என்றும் நிபந்தையோடு ரூபாய் 100-ஐ பெற்றுக் கொண்ட பின்னரே புகாரை பதிவு செய்தார். இதை காவல் துறை மீது அளிக்கப்படும் மூன்று முக்கிய புகார்கள் என்னும் பகுதியில் 3வது புகாராக ஆசிரியர் விளக்கியிருகிறார். அதில் துளி அளவும் மிகை இல்லை என்பதற்கு நடைமுறையில் நிறைய ஆதாரங்களைக் கூறலாம்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தினை மிக முக்கியத்துவம் கொடுத்து விவரித்து இருக்கும் ஆசிரியர். அதன் எதிர்மறை விளைவுகளையும் கூறி வாசகர்களிடையே நல்ல விஷயத்திற்கு மட்டுமே இச்சட்டத்தினை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருக்க வேண்டும். உதாரணமாக கல்லூரி ஒன்றில் தற்காலிகமாக பணிபுரியும் ஆசிரியர் நிரந்தரமாக பணிபுரியும் ஆசிரியர் ஒருவரைப் பற்றி அவர் எத்தனை மணி நேரம் வகுப்பு எடுக்கிறார், அவர் பதவியின் பெயர் பதிவேட்டில் எவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்பது போன்ற தெரிந்த எளிய விஷயங்களை தெரிவிக்குமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் முதல்வரை பணிக்கிறார். முதல்வரும் வழக்குறைஞர் ஒருவரை அமர்த்திக்கொண்டு அக்கேள்விகளுக்கு சட்ட நுனுக்கங்களோடு பதிலளித்தார். உடனே அடுத்த சில விவரங்களை கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கும் பதில் அனுப்பப்பட்டது. இவ்வாறு வேலையற்றா வீனர்கள், மூடர்கள் சரியாக பயன்படுத்தப்பட வேண்டிய கருவியை தவறாகப் பயன்படுதிக்கொண்டு இருக்கிறார்கள். காலத்தை விரயமாக்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதும் உண்மையே.

கல்வி பகுதியில் செயல்வழிக் கற்றல் என்ற புதிய அணுகு முறையினை விளக்கமாக சொல்லியிருப்பதும், அதனை அறிமுகப்படுத்தியவர் அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் எம்.பி.விஜயகுமார். இ.சூ.ப அவர்கள் என பெயரை குறிப்பிட்டு அனைவரும் அறிந்து கொள்ள செய்திருப்பதும் பாராட்டக்குறியது. மேலும் அரசு பள்ளியிலேயே கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் கட்ட அண்டா, குண்டாவை அடமானம் வைத்து படிக்கும் மாணவர்களின் கண்ணீரை துடைக்க ஊர்தலைவரும் மக்களும் உழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருப்பதும் பாராட்டக்குறியது.

நோய் சிறிதென்றாலும், பெரிதென்றாலும் மருத்துவமனையின் வாசலை மிதித்து விட்டால் அலைச்சல் தான். மேலும் சிறு நோயாக இருந்து விட்டாலும் மருத்துவமனியிலிருந்து வெளிவர சிபாரிசு தேவைப்படுகிறது. திருட்டு கொடுத்துவிட்டு போனாலும் திருடிவிட்டு போனாலும் நம் காவல் நிலையங்களில் மரியாதையும், மனிதாபிமானமும் ஒன்றுதான். குறை நிவர்த்தி செய்ய போனாலும் குற்றவாளியாகப் போனாலும் வழக்கு முடிய வருடங்கள் பலவாகும் தான். இவற்றை மனதில் கொண்டுதான் எனது பேராசிரியர் “ஒரு நல்ல மனிதன் முடிந்த வரையில் மருதுவமனை, நீதிமன்றம், காவல் நிலையம் ஆகியவற்றின் படிகளை மிதிக்காமல் இருப்பது நலம்” என்று அடிக்கடி கூறுவார்.

எல்லாம் தெரிந்தும் ஏன் பொதுமக்கள் எதையுமே செய்வதில்லை? மேலே சொன்னது கூட விடையாக இருக்கலாம். ஆயினும் புத்தகத்தில் மண்டேலாவின் சுயசரிதத்தில் இருந்து எடுத்து சொல்லி இருப்பது போல் “நாம் விதைக்கும் விதைகளுக்கும் வளர்க்கும் பயிர்களுக்கும் நாமே பொறுப்பு” அ.கி.வேங்கடசுப்ரமணியன் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ”மக்களாகிய நாம்” நூல் இனிவரும் இளைய தலைமுறையினர் படிக்க வேண்டிய பாடநூல்.
இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க இங்கே செல்லுங்கள்:
http://nhm.in/shop/978-81-8493-061-0.html

Tuesday, August 18, 2009

பதிவுகள் தளத்தில் வெளியான கட்டுரை

மன அழுத்த மேலாண்மை – 1

கோடி கோடியாய் பணத்தைக் கொட்டி வியாபாரம் செய்யும் பெரும் வியாபாரியோ, அல்லது மரம் ஏறிப் பிழைக்கும் மிகச் சாதாரண தொழிலாளியோ அல்லது இவ்விருவருக்கும் இடைப்பட்ட நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த ஒருவரோ, யாராக இருந்தாலும் செல்போன் இல்லாமல் இனி அன்றாட வாழ்க்கையை வாழ முடியுமா?

கிரைண்டர், மிக்ஸி, வாஷிங்மெசின் போன்ற வீட்டு உபகரணங்கள் இல்லாமல் ஓர் குடும்பத்தலைவியால் இனி குடித்தனம் நடத்த முடியுமா? கவலைகள் இல்லாமல் இக்காலத்தில் குடும்பத்தலைவர் ஒருவரால் காலந்தள்ள முடியுமா? இவையாவும் இனி முடியாது. அப்படியே முடிந்தாலும் அடுத்தவர் உங்களை விடமாட்டார்.

இவைகளைப் போல, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியும் தகவல் தொடர்பு வளர்ச்சியும், மக்களிடம் பரஸ்பர உறவை பராமரிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ள இக்காலத்தில் மன அழுத்தம் இல்லாமல் மனிதர்களால் இனி வாழ முடியாது. மனிதர்கள் ஒவ்வொரு நிமிடமும் மன அழுத்தம் ஏற்படுத்தும் விஷயங்களைத் தேடிப் போய் கொண்டு இருக்கிறார்கள். இல்லையேல் உங்களுக்கு மன அழுத்தம் தரும் ஏராளமான விஷயங்களோடு உங்கள் உறவினர்களும் நண்பர்களும் உங்களை தேடி வந்து கொண்டிருக்கிறார்கள். . .

கட்டுரையை முழுமையாக படிக்க பதிவுகள் தளத்திற்கு செல்லுங்கள்:

http://www.geotamil.com/pathivukal/DR_SELVARAJ_ULAVIYAL_1.htm

Tuesday, August 11, 2009

பதில் தெரியாத கேள்விகளை தவிர்க்க வேண்டும் – தினமலர் 11.08.2009

Monday, August 10, 2009

சிறந்த வலைப்பதிவு விழா

ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வலைப்பதிவு விருதை திரு.பெரியார்தாசன் அவர்கள் வழங்கினார்.

சிறந்த வலைப்பதிவு விழா

சிறந்த வலைப்பதிவு விழா

Wednesday, July 22, 2009

புத்தக விமர்சனம்

மார்ட்டின் லூதர் கிங் சாத்வீகமாக போராடிக் கொண்டு இருந்தபோது அதே காலக்கட்டத்தில் தன் முஷ்டியையும் குரலையும் உயர்த்தி வெள்ளையர்களுக்கு எதிராக போர்ப்பிரகடனம் செய்த நாயகன் மால்கம் எக்ஸின் வரலாற்று நூல். உலகப் புகழ் நாயகர்கள் பலரை பற்றி எழுதியுள்ள மருதன் தனக்கே உரிய நடையில் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல் இது.

புத்தகம் படிக்க ஆரம்பித்து முதல் ஐந்தாம் அத்தியாயம் முடியும் வரை படிப்பது எல்லாம் Juvenile delinquent என்று அழைக்கப்படும் ஓர் இளம் குற்றவாளியைப் பற்றி படிப்பது போல் இருக்கிறது. மால்கம் எக்ஸ் என்னென்ன செய்தார் என்பதை தமிழ்ப்பட நாயகன் ஆரம்பத்தில் ஓர் தறுதலையாக அலைவதைப் போல் விளக்கியிருக்கிறார் ஆசிரியர். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டுக் கொள்கிறான் வெள்ளை காவலர்களிடம் பத்தாண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படும் போது 20 வயது மட்டுமே நிறைந்த ஓர் தனியாள் மால்கம் எக்ஸ். மது, மாது, வழிப்பறி, கொள்ளை, போதை வஸ்துகள் விற்பனை என எல்லாவற்றிலும் ஈடுபட்டு கிடைத்ததை உண்டு, கிடைத்ததைக் குடித்து கிடைத்த இடத்தில் சுருண்டு படுத்து காலத்தைக் கழித்த ஓர் இளைஞனுக்கு இதைவீட வேறு என்ன கிடைத்துவிடப் போகிறது? குற்றப் பின்னனியை மட்டும் விவரிக்கவில்லை நூலின் ஆசிரியர். ஏன் ஓர் கறுப்பு இளைஞர் இப்படி வாழ்ந்தான்? என்பதற்கு கறுப்பர்களின் மேல் அரசும் வெள்ளையர்களும் காட்டிய பாகுபாட்டை விளக்கமாக எடுத்துச் சொல்லி நமக்கு புரிய வைக்கிறார் ஆசிரியர்.

கட்டுக்கடங்காத காளையாக திமிரோடு சுத்திக் கொண்டு அட்டூழியம் செய்து வரும் ஓர் ரவுடி யார் புத்திமதி சொன்னாலும் கேட்க மாட்டான். திடீரென அவன் வாழ்க்கையில் ஓர் அனுபவம் ஏற்படும். அந்த அனுபவம் அவன் வாழ்க்கை பாதையையே மாற்றி விடும். ரவுடி அவனைப் போல் ஓர் ஆள் இந்த ஞாலத்தில் இல்லை என்று சொல்லும் அளவுக்கு மிக மிக நல்லவனாக மாறி விடுவான். நல்லவன் கெட்டவனாகவும், கெட்டவன் நல்லவனாகவும் மாறுவது மட்டுமல்ல போரளி புனிதனாக மாறுவதும் இப்படித்தான். அரவிந்தர் ஆசிரமம் அமைத்தது ஆன்மீகப் பாதையில் அடியெடுத்து வைத்தது எல்லாமே அவர் தம்பிக்கு ஏற்பட்ட நோயும், அதில் இருந்து அவர் மீண்ட விதமும் தான். இதை உளவியலில் Quantum personality change என்று அழைக்கிறோம். அத்தகைய ஆளுமை மாற்றம் மால்கம் எக்ஸ் வாழ்வில் அவர் சிறையில் இருக்கும் போது ஏற்படுகிறது.

நேஷன் ஆப் இஸ்லாம், எலிஜா என மால்கமின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பைபிளை போதிக்கும் பாதிரியரை வெட்கிக் தலைகுனிந்து வெளியேற்றும் அளவுக்கு மால்கம் மனதில் insight ஏற்படுகிறது. கனவுகளோடு உழைக்கும் போது காதல் ஏற்படாமல் போகாது என்பதற்கேற்ப பெட்டி என்னும் பெண்ணை காதலித்து மணந்து கொள்கிறார் மால்கம் எக்ஸ். பெட்டியும் பெண் குழந்தைகளும் என வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டு இருக்கும்போது எலிஜா தன் வாழ்வில் ஏற்படுத்திக் கொண்ட மாற்றங்களால் எக்ஸ் கடும் மன உளைச்சளுக்கு எப்படி ஆளாகிறார் என்பதை சில அத்தியாயங்கள் விளக்குகின்றன.

மார்டின் லூதர் கிங், மால்கம் எக்ஸ் இருவரும் ஒரு நோக்கத்திற்காக இரு வேறு பாதைகளில் பயணம் செய்தவர்கள் என்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டுவதோடு இருவரும் சந்தித்து கொண்ட சூழ்நிலைஅயை தத்ரூபமாக நமக்கு படம் பிடித்து நமக்கு விளக்குகிறார். உலகம் ஓர் புத்தகம் அதை சுற்றிப்பார்க்க பார்க்கத்தான் ஒரு புத்தகத்தை படிக்கும் போது பல விஷயங்களை தெரிந்து கொள்வது போல நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் முடியும். எலிஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஹஜ் பயணம் புறப்படும் மால்கம் ஆப்ரிக்க நாடுகள் பலவற்றையும் சுற்றி ஹஜ் பயணத்தை முடித்து அமெரிக்கா திரும்பும் போது அவர் சந்தித்த பல்லாயிரக்கணக்கான மக்கள், அவர்களோடு உரையாடியபோது கிடைத்த அனுபவங்கள் ஆகியவை மால்கமை முற்றிலும் மாற்றிவிடுகின்றன. வெறுப்புக்கு வெறுப்பே தீர்வாகாது என்பதை உணர்ந்து கொள்கிறார் மால்கம் இந்த மாற்றமே தான் அவர் மரணத்திற்கு காரணமாக இருக்குமோ என்பதை இறுதி அத்தியாயங்கள் மறைமுகமாக உணர்த்துகின்றன. ஆனால் உலகில் எந்த பிரச்சனைக்கும் தீர்வு அகிம்சையே என்ற அண்ணல் காந்தியின் தத்துவமே இப்புத்தகத்தை படிக்கும்போது மனதில் உயர்ந்து நிற்கிறது.

புத்தகத்தை முடிக்கும் ஆசிரியர் “மால்க்கம் எக்ஸின் தேவை முனெப்போதையும் விட இப்போது அதிகரித்து இருக்கிறது. ஆவேசமும் துடிதுடிப்பும் மிக்க ஒரு கலக்காரராக மால்க்கம் எக்ஸ் இன்று பார்க்கப்படுகிறார், கொண்டாடப்படுகிறார். மால்கம் எக்ஸின் சகாப்தம் முடிந்துவிடவில்லை” என முடிக்கிறார். கால வரிசைப்படி பின் இணைப்புகள் இரண்டு சேர்க்கப்பட்டிருக்கின்றன இவற்றில் மால்கம் எக்ஸின் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளையும் எழுத உதவிய நூல்கலையும் இணையத்தளங்களையும் விரிவாக கொடுத்திருக்கிறார் ஆசிரியர். இணையத்தளங்கள் மிகவும் தகவல் தரக்கூடியவையாக உள்ளன.

வெள்ளை இனவெறிக்கு எதிராகப் போர்க்குரல் கொடுத்த கருஞ்சிறுத்தையின் வீரகாவியம், தனிமனிதனின் வாழ்வில் ஓர் சமுதாயத்தின் தாக்கம், ஓர் இனம் தாழ்வு நிலையில் இருப்பதற்கான எதார்த்தமான காரணங்கள், தனிமனிதன் தான் உயர்வாக பூஜிக்கும் ஒருவரால் உயர்வதும் தாழ்வதும் இயல்பே என்பது என வாழ்வியல் தத்துவங்களை நமக்கு உணர்த்துகிறது. மருதனின் ”மால்கம் எக்ஸ்” மனதில் நிற்கக்கூடிய படைப்பே.

இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க இங்கே செல்லுங்கள்:
http://nhm.in/shop/978-81-8368-866-6.html

Monday, June 29, 2009

ஆபாச சி.டி மோகம் (page 1) – ஜுனியர் விகடன் 01-07-2009

ஆபாச சி.டி மோகம் (page 2) – ஜுனியர் விகடன் 01-07-2009

Sunday, June 21, 2009

புத்தக விமர்சனம்

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு

என்ற ஒரு குறளை மட்டும் மையமாக வைத்து அதற்கு விரிவான விளக்கவுரை எழுதினாற் போன்று வெளிவந்துள்ள புத்தகம் தான் “செல்வம் சேர்க்கும் விதிகள்” நூலாசிரியர் ரிச்சர்ட் டெம்ப்ளர் செல்வ செழிப்போடு விளங்க சிறப்பான 100 விதிகளை முன்வைத்திருக்கிறார். இந்த நூல் ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் அதனோடு தொடர்புடைய விதிகள் விளக்கப்பட்டுள்ளன.

‘நினைப்புதான் பிழைப்பை கெடுக்கிறது’ என்று சொல்லியே நம்மை எதையும் நினைத்துப்பார்க்க கூட விடாத மனநிலையை கொண்டிருக்கும் சமயத்தில், அதுதான் செல்வந்தராக விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது என்ற விழிப்புணர்வை 18 விதிகளைக் கொண்டு விளக்கியிருக்கிறார் ரிச்சர்ட் டெம்ப்ளர் இந்த பகுதியை படிக்கப் படிக்கவே தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபட்டு நம்மை உயர்வு மனப்பான்மை கொள்ளச் செய்கிறார். சமுதாயத்தில் ஒருபுறம் பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் இன்னொரு புறம் மேலும் மேலும் ஏழைகளாகவும் ஆகிக் கொண்டிருக்கிறார்கள் என்ற அங்கலாய்ப்புக்குக் காரணம் ஏழைகள் தங்களுடைய சூழ்நிலை, பின்புலம், வளர்ப்பு ஆகியவற்றின் காரணமாக ‘எனக்கு வேண்டாம்’ என்ற மனநிலையுடன் பணம் சேர்க்கும் விஷயங்களை அனுகுவது தான் என்ற ஏழ்மையின் உளவியலை எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.

நூலைப் படித்தால் பணக்காரர்களின் பண்புகளை தெரிந்து கொள்ளலாம். கடுமையாக உழைப்பவர்கள், ஒரு மாதத்தில் செய்யக் கூடிய வேலையை ஒரு நாளில் செய்பவர்கள், பணம் சம்பாதிப்பதை வேடிக்கை போல புன்னகையுடனே செய்பவர்கள் என பணக்காரர்களின் குணங்களை கூறியிருக்கிறார் ஆசிரியர். பணக்காரர்கள் பணத்தால் வாழ்கிறார்கள், பணத்தால் மூச்சு விடுகிறார்கள், பணத்தால் தூங்குகிறார்கள் எனவே நீங்களும் பணக்காரராக வேண்டுமானால் அவர்களோடு பேசிப்பாருங்கள், அவர்களை எப்படி பணக்காரர்களாக மாறினீர்கள் என்று வேள்வி கேளுங்கள், அவர்களின் வாழ்க்கை முறையை கூர்ந்து கவனியுங்கள் என்று கூறியிருப்பது யதார்த்த அணுகுமுறையும் பயிற்சியும் ஆகும். முதல் பகுதி மொத்தமாக உங்களின் மனோதத்துவத்தை மாற்றியமைக்கும். பணக்காரராக மாற வேண்டும் என்று மன அளவில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வரை பணக்காரராக வாய்ப்பில்லை. அதுவே மிகவும் முக்கியம் என்ற அடிப்படையை மையமாக வைத்தே முதல் பகுதியின் எல்லா விதிகளும் எழுதப்பட்டுள்ளன.

நிறையப் பேர் பணத்தை தேடிப் போகாததற்கு காரணம் அவர்கள் நிம்மதியை நாடிச் செல்வது தான். பணம் வரவர நிம்மதி குறையும் என்பது பரவலான நம்பிக்கை. ஓசோவும் கூட

“பணத்தை அடைந்தான் தூக்கத்தை இழந்தான்,
தூக்கத்தை அடைந்தான், பணத்தை இழந்தான்’ என்று கூறி எதாவது ஒன்றைத்தான் உங்களால் அடைய முடியும் என்று போதனை செய்திருக்கிறார். ஆனால் இப்படியெல்லாம் நடந்தால் நீங்கள் பணத்தை தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம் என கூறும் டெம்ப்ளர், பணமும் சம்பாதிக்கலாம் – நிம்மதியாகவும் தூங்கலாம் என அதற்கான வழிமுறைகளையும் சொல்கிறார்.

இரண்டாவது பகுதியில் விவரிக்கப்பட்டுள்ள விதிகள் அனைத்துமே செல்வந்தராவதற்கான நடைமுறை சாத்தியங்களை எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளன. செல்வந்தராவதற்கு அவர்களைப் போன்ற தோற்றம் அவசியம். நேர்த்தியாக உடையணிந்து உற்சாகமாக செல்லும்போது பிறர் நம்மை வரவேற்பதற்கும் சற்றே சரியில்லாமல் ஏனோதானோ என்று உடையணிந்து செல்லும்போது பிறர் நம்மை வரவேற்பதற்கும் நிறைய வித்தியாசத்தை நான் கண்டிருக்கின்றேன். ஒருநாள் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது வேகவேகமாக கார்கள் சென்று கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது ஒரு காரே இவ்வளவு வேகமாக செல்கிறதே, இரண்டு கார்கள் ஒன்று சேர்ந்தால் எல்லா கார்களையும் விரைவில் கடந்து சென்று விடுமே என்று நினைத்தேன். வீட்டுக்கு வந்து சேரும் போது நாம் ஒரு ஆள் வேலையை மட்டுமெ செய்து கொண்டிருக்கிறோம் இரண்டு ஆள் வேலையை செய்தால் முன்னேறி விடுவேன் என்ற யோசனை மனதில் தோன்றியது. கடுமையாக உழைப்பைத் தவிர வேறு எதையும் டெம்ப்ளர் முன் வைப்பதில்லை. ஆனால் சிறுசிறு குறிப்புகளை கொடுக்கிறார். நமக்காக உழைக்க வேண்டும், பணம் வரும் வழியிலேயே உழைக்க வேண்டும். பணக்காரராக வேண்டும் என்பதற்காக சிறு சிறு செலவுகளை கூட செய்யாமல் கஞ்சனாக இருக்க வேண்டியதில்லை என்பது போன்ற நுணுக்கமான குறிப்புகள் நாம் நம்பி வந்தவைகளை மற்றி சரியான பாதைய்யில் நம்மை செலுத்தும் வல்லமை கொண்டவை. பங்கு மார்கெட் பற்றியும் விரிவாக விளக்கியிருக்கிறார் டெம்ப்ளர். அதற்கென சில விதிகளை நிறுவி பங்கு மார்கெட்டின் அடிப்படையை புரிந்து கொள்ள செய்திருக்கிறார்.

பணம் சம்பாதிக்க வாய்ப்புகள் இல்லையே என நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு டெம்ப்ளர் சொல்வது “வாய்ப்புகள் நிறைய உள்ளன, அவைகளை நீங்கள் பார்க்க ஆரம்பித்துவிட்டால் போதும் உதைத்து ஸ்டார்ட் செய்ய வேண்டியது தான் நம் வேலை” என்பதாகும்.

செல்வந்தராவதற்கான வழிகளை சொன்ன இரண்டாம் பகுதியை கடந்து மூன்றாம் பகுதிக்குள் நுழைந்தால் இன்னும் பெரிய செல்வந்தராக அங்கே பல வழிகள் கூறப்பட்டுள்ளன. முயல் பண்ணை உதாரணம் மிகவும் சிறப்பானது. புதுவித சிந்தனை கொண்டிருப்பது, நவீன அறிவியில் முன்னேற்றங்களை பயன்படுத்திக் கொள்வது, விசய ஞானத்தை வளர்த்துக் கொள்வது, தன்னைம்பிக்கை ஆகியவற்றை இப்பகுதியில் விளக்கியுள்ளார் ஆசிரியர்.

செல்வந்தராக நிலைக்கவைக்க 4ம் பகுதி விதிகளைச் சொல்கிறது . குறைவாக செலவு செய்து பணக்காரனாகப் போகிறேன் என்று நினைத்துக் கொண்டு சீக்கு கோழியையும் சாயம் போகும் சட்டைகளையும் வாங்கி பணம் முழுவதையும் எப்படி வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள் சிலர் என்று விளக்கியிருப்பது இந்த பகுதியின் சிறப்பாகும்.

பகுதி 5 சம்பாதித்த செல்வத்தை பிறரோடு பகிர்ந்து கொள்வதை விளக்கும் விதிகளை கொண்டுள்ளது. உங்களிடம் இருப்பதை உலகிற்கு கொடுங்கள். அது இரட்டிப்பாக உங்களுக்கு திரும்ப வரும் என்ற தத்துவத்தை அடிப்படையாக கொண்டது இப்பகுதி. ஆனால் எப்படி கொடுக்க வேண்டும் எவற்றுக்கில்லாம் கொடுக்க வேண்டும் என்ற எச்சரிக்கைகள் பல தெரிவிக்கப்பட்டுள்ளன.

புத்தகத்தில் உள்ள 100 விதிகளையும் படித்து முடித்தவுடன் நிறைய விதிகள் நமக்கு முன்பே தெரிந்தவைகள் போன்ற உணர்வு ஏற்படுகிறது அதை உணரும்முன்பே “நிறைய விதிகள் உங்களுக்கு முன்பே தெரிந்திருக்கலாம். ஆனால் தெரிந்தவற்றை எத்தனை பேர் நடைமுறையில் செயல் படுத்துகிறீர்கள்” என்று கேள்வி கேட்டு நடைமுறையில் பலவீனர்களாக இருப்பதையும் சுட்டிக்காட்டி விடுகிறார் டெம்ப்ளர்.

“வாத்தை போலவே வாலாட்டுகிறது வாத்தை போலவே கத்துகிறது என்றால், அது வாத்தாகத்தான் இருக்கும்” என்று ஒரு விதியில் டெம்ப்ளர் குறிப்பிடுகிறார் அதைப்போல ஒரு சிறந்த புத்தகத்தைப் போல தோற்றமளிக்கிறது. ஒரு சிறந்த புத்தடகத்திற்கான கருப்பொருளை கொண்டுள்ளது. அப்படியானால் செல்வம் சேர்க்கும் விதிகள் ஒரு ...............

இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க இங்கே செல்லுங்கள்:
http://nhm.in/shop/978-81-317-2560-3.html

Wednesday, June 17, 2009

பள்ளிகள்தோறும் வேலைவாய்ப்பு வழிகாட்டு நிகழ்ச்சி – தினமணி 14.06.2009

Thursday, May 14, 2009

புத்தக விமர்சனம்

கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ரிச்சர்ட் டெம்ப்ளர் எழுதிய நிர்வாக விதிகள் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு நிர்வாகிகளுக்கான புத்தகம் மட்டுமல்ல சாதாரணமான, எதையாவது சாதிக்க வேண்டும் என்ற உந்துதல் கொண்ட மனிதர்களுக்கும் ஊக்கமூட்டும் நூல்.

ஒரு விளம்பரத்தில் ஒரு பெண் நோட்டீஸ்களை நிறைய கையில் வைத்துக் கொண்டு, அவ்வளியே போவோர், வருவோருக்கெல்லாம் கொடுத்துக் கொண்டிருப்பாள். நோட்டீஸை வாங்கும் அனைவருமே அதை பிரித்துக் கூட பார்க்க மாட்டார்கள். போகிற போக்கில் கசக்கி தூர எறிந்து விட்டு சென்று விடுவார்கள். இதைக் காணும் அப்பெண் மிகுந்த மனக் கவலையுடன் செய்வதறியாது நின்று கொண்டிருப்பாள். அப்போது அவ்வழியே வரும் ஒரு இளைஞன் அப்பெண்ணின் காதருகே சென்று ஓர் இரகசியத்தை கூறி விட்டுச் செல்வான். அடுத்ததாக ஒருவர் வரும்போது அப்பெண் ஒரு நோட்டீஸை எடுத்து நன்கு கசக்கி வருபவரின் கைகளில் கொடுப்பாள். வாங்கியவரோ அதிர்ச்சிக்குள்ளாகி விடுவார். ஏன் இந்தப் பெண் புதிய நோட்டீஸை கசக்கிக் கொடுக்கிறாரள்? என்ற கேள்வி அவரைத் துளைக்க நோட்டீஸை பிரித்து படிக்க ஆரம்பிப்பார். இதுதான் மனித இயல்பு. புதிதாக கொடுத்தால் கசக்கி வீசுவார்கள், கசக்கிக் கொடுத்தால் பிரித்துப் பார்ப்பார்கள். ரிச்சர்ட் பெம்ளரும் இதெ உத்தியைத் தான் பயன்படுத்துகிறார். என் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள் என்று கெஞ்சும் ஆசிரியர்களை விட்டு விலகி நின்று வித்தியாசமாக நான் கூறுவது போல் இல்லாவிட்டால் “வேறு புத்தகத்தை படிக்கச் செல்லுங்கள்” என்று வாசகர்களை மறைமுகமாக படிக்கத் தூண்டுகிறார். மேலும் தன் புத்தகம் எல்லோரிடமும் சென்றடைய எண்ணி “என் புத்தகத்தை படித்ததை இரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள், வேறு யாரையும் இதைப் பார்க்க அனுமதிக்காதீர்கள்” என்று சொல்லி புத்தகத்தை முடிக்கிறார்.

100 விதிகளைக் கொண்ட புத்தகத்தை இரண்டாக பிரித்துக் கொள்ளலாம். 34 விதிகள் பிறரை நிர்வகித்தல் பற்றியவை, 66 விதிகள் தன்னை ஒருவர் தரமாக்கிக் கொள்ள சொல்லப்பட்டிருப்பவை.

பிறரை நிர்வகித்தல் பகுதியில் நிறுவப்பட்டுள்ள விதிகள் பல நவீன மேலாண்மைக் கோட்பாடுகளை கடந்து வலுவான தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியவை. கூட்ட நேரத்தை 3 மணி என்று போடாமல் 3.45 என்று அறிவிப்பவரே புதுமை விரும்பி, அவரே வெற்றியாளர், வித்தியாசமானவர் என்று கூறும் விதி 4 நிர்வாகத்தில் புதுமை புகுத்துதலின் அவசியத்தை வலியுறுத்துகிறது. நாணயத்தோடு பேச வைக்கும் நுட்பம் அணைவரையும் கவரக் கூடியது.

படுக்கையில் சிறுநீர் போகும் குழந்தையை அடித்துத் திருத்த முடியுமா? அதற்கு பதிலாக இன்று இரவு நீ படுக்க்கையில் சிறுநீர் கழிக்காமல் இருந்தால் நாளை காலை உனக்கு ஓர் மிட்டாய் கொடுப்பேன் என்று கூறிப்பாருங்கள் குழந்தை படுக்கையில் சிறுநீர் போய் விட்டு, “நான் படுக்கையில் சிறுநீர் கழிக்கக் கூடாது என்றுதான் இருந்தேன் ஆனால் அவசரத்தில் போய்விட்டேன், நாளை முயற்சி செய்கிறேன்” என்று அடுத்த நாள் காலையில் எழுந்ததும் உங்களிடம் வந்து கூறும். நல்லது, நீ முயன்றதே பெரிய விஷயம், இந்தா ஒரு மிட்டாய், நீ விரைவிலேயே படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்திக் கொள்வாய் என்று எனக்கு மிகுந்த நம்பிக்கையிருக்கிறது என்று கூறி மிட்டாய் கொடுத்துப்பாருங்கள். விரைவிலேயே அக்குழந்தை படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்திக் கொள்ளும். சீனப் பழமொழியோடு ஆரம்பிக்கும் விதி 10 (அவர்கள் தவறு செய்யட்டும்) நமக்கு உணர்த்துவது இதைத்தான்.

திருட்டுப் போகாமல் பொருட்களை ஒருவர் பத்திரமாக காப்பாற்றிக் கொள்கிறார். அதில் அவர் வல்லவர் ஏனெனில் அவர் திருட்டுக் கொடுத்தவர். பலரும் பாராட்டும் விதத்தில் துணி மணிகளை வாங்குவதில் ஒருவர் வல்லவர் ஏனெனில் அவர் அசிங்கமான சட்டைகள் பலவற்றை வாங்கி முடித்தவர். இவர்களைப் போல நல்ல நிர்வாகியாக மாற ஆட்டைத் தொழுவத்திலும் மாட்டை கொட்டிலிலும் கட்டுவதை போன்ற தவறான முடிவுகள் பலவற்றை இளம்வயதிலேயே எடுங்கள். விரைவிலேயே நீங்கள் முடிவெடுப்பதில் திறமையானவராக மாறி விடுவீர்கள் என்று உணர்த்துகிறது விதி 11.

செவிலியர் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சொல்லித்தரும் முதல் பாடம் மருத்துவமனைக்கு வரும் மனிதர்களை நோயாளிகளாகப் பார்க்காமல் நோயோடு வந்துள்ள ஓர் மனிதர் என்றே காண வேண்டும் என்று தான். அதுவே மனிதநேய அணுகுமுறை. இன்றைய சூழலில் மனிதநேய அணுகு முறையே வலிமை பெற்று வளர்ச்சியடைந்து வருகிறது இதையே

“மலைகளையே அசைக்கும் மாமனிதனாக இருந்தாலும் சரி,
கார் கதவை திறந்து விடும் சாதாரண மனிதனாக இருந்தாலும் சரி........
அவரவர்க்கு உரிய மரியாதையை தராவிட்டால் ..........
என விதி 20 எச்சரிக்கிறது.

வாயைத் திறந்து எதையும் சொல்லாமல் மனதுக்குள்ளேயே நினைத்துக் கொண்டிருந்தால் வேலை நடக்காது. அழுகின்ற பிள்ளைக்கே பாலூட்டப்படும் என்பதை விதி 30ன் சாராம்சத்தில்

“அவர்களிடத்தில் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதை ஆரம்பத்திலேயே அறியச் செய்துவிடுவது நல்லது” என்று ஆசிரியர் வலியுறுத்துகிறார்.

மொத்தத்தில் 34 விதிகளையும் கடைபிடித்தோமானால் பிறரை நிர்வாகம் செய்வது 43% மேம்படும் என்பது என் கணிப்பு.

பகுதி 2 நம்மை மேபடுத்திக் கொள்ள உண்டாக்கப்பட்ட 66 விதிகளை கொண்டுள்ளது. இந்தப் பகுதியைப் படித்தபோது இரண்டு உளவியல் விஷயங்களை ஆசிரியர் எப்படி விதிகளாக மாற்றிக் கொடுத்துள்ளார் என்பது நினைவுக்கு வருகிறது. ஒன்று வேலை என்னும் போதைக்கு அடிமையாதல். சிலர் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டால் பின்னர் எப்போதும் போதை இல்லாமல் இருக்க மாட்டார்கள். அதைப்போல சிலர் வேலைக்கு அடிமையாகிவிடுவர். அவர்கள் எப்போது வேலை வேலை என்றே சுற்றிக் கொண்டு இருப்பார்கள். இரண்டு நாள் சேர்ந்தாற்போல் விடுமுறை வந்தால் அதை அவர்களால் கழிக்க முடியாது. இவ்வாறு இருப்பது ஓர் ஆளுமைக் குறைபாடே. இதையே விதி 38 விளக்குகிறது (வேலை உங்களை விழுங்கி விட வேண்டாம்.)

தங்கப்பதக்கம் சிவாஜி கனேசன் முதல் இன்று நேரமில்லாமல் உழைக்கும் பல காவல் துறை அதிகாரிகள் வரை பலருடைய குடும்பத்திலும் குழந்தைகளை நல்ல நிலைக்கு கொண்டுவர முடியவில்லையே என்ற கவலை மேகம் கண்ணீர் மழையை பொழிந்து கொண்டிருக்கிறது. ஏன் இப்படி நடக்கிறது என்று தெரியுமா? எப்போதும் வேலை – வேலை என்று தொழிலையே கவனத்தில் கொண்டிருப்பதால்தான். இந்தப் பிரச்சனை சரிசெய்ய தற்போது பணி-வாழ்வு சமநிலை என்ற கோட்பாடு உலகம் முழுவது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நேரமெ இன்றி உழைத்தால் முன்னேறி விடலாம் என்று இருப்பவர்களை பணி-வாழ்வு சமநிலை என்ற தத்துவத்தை முன்னிறுத்தி “என் இனிய நண்பர்களே, வீட்டுக்குச் செல்லுங்கள்” என்று விடைகொடிக்கிறார் ரிச்சர்ட் டெம்ளர் (விதி 71).

தொழில்நுட்ப கல்வி கற்று வெளிவரும் மாணவருக்கோ அல்லது மேலாண்மை கல்வி கற்று வரும் மாணவருக்கோ அவர் கற்ற கல்வியை அடிப்படையாக வைத்து தற்போது யாரும் வேலை அளிப்பதில்லை. நிகழ்காலத்தில் Soft skills எனப்படும் மென் திறன்களை சோதித்தே ஒருவருக்கு வேலை கொடுக்கிறார்கள் புதுவிதசிந்தனை, விரிந்த சிந்தனை, மன அழுத்த மேலாண்மை குறைவாக செயல்படும் நிர்வாகம் என மென் திறன்களை நிர்வாக விதிகளாக மாற்றி வாசகர்களின் மனதில் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்.

ஒரு புத்தம் படிப்பது நீண்ட பயணம் செய்வதை போன்றது. வழியில் திடீரென ஓர் பசுமையான கிராமத்தை காண்போம். பின்னர் உயிர் உள்ளவரை எந்நாளும் அந்நினைவு நம் மனதை விட்டு அகலாது. ரிச்சர்ட் டெம்பலரோடு பயணம் செய்த போது நானும் ஓர் மனதை விட்டு அகலாத பசுமையான கிராமத்தைக் கண்டேன். அது

“என் அம்மா என்னிடம் சொன்னார்” நீ ஓர் படை வீரனானால் பின்பு அதற்குத் தளபதியாகவும் ஆவாய், நீ ஓர் பாதிரியானால் போப்பாக நிறைவு பெறுவாய், பதிலாக நான் ஓவியனாகி, பிக்காஸோவாக நிறைவு பெற்றேன்” என்ற பிகாஸோ சொன்ன வாக்கியங்கள் தான்.

இப்புத்தகம் நீங்களும் சுகமாக பயணம் செய்வதற்கேற்ற நல்ல பாதை. புறப்படுங்கள்.

இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க இங்கே செல்லுங்கள்: http://nhm.in/shop/978-81-317-2559-7.html

Sunday, May 10, 2009

தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்களின் பெற்றோருக்காக – தினமலர் 10.05.2009

Thursday, April 2, 2009

புத்தக விமர்சனம்

பிரான்ஸ் நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர் வோல்ட்டேரின் நாவல் கேண்டீட் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. உலகின் தலைசிறந்த இலக்கியப் படைப்புகளில் ஒன்றாக கோடிக்கணக்கான மக்களால் கொண்டாடப்படும் இந்த ப்ரெஞ்சு நாவல் கேண்டீட்டை பத்ரி சேஷாத்ரி மொழிபெயர்த்துள்ளார். கிழக்கு பதிப்பகம் நூலை வெளியிட்டுள்ளது.

மனிதர்களின் இயல்புகளைப் பற்றி இரண்டு கோட்பாடுகள் உள்ளன. ஒன்று கோட்பாடு X. இன்னொன்று கோட்பாடு Y. மனிதர்கள் சோம்பேரிகள், அடிப்படையில் பொறுப்புள்ளவர்கள், அறிவீனர்கள், ஏமாற்றுக்காரர்கள், அவர்களை எப்போதும் கண்கானித்து மேலாண்மை செய்து வந்தால் மட்டுமே நல்ல நிலையில் வைத்திருக்க முடியும். கொஞ்சம் தளர்வான அணுகுமுறையைக் காட்டினாலும் வேலையைக் காண்பிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்ற கோட்பாடுகளை வழியுறுத்துவதே கோட்பாடு X ஆகும். இதனடிப்படையில் பார்த்தால் உள்ளுணர்வின் அடிப்படையில் இயங்கி இச்சையை நாடும் விலங்கைப் போன்றவனே மனிதன். மாறாக மனிதர்கள் அறிவுள்ளவர்கள், சுயனலமில்லாதவர்கள், நன்முறையில் சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்கள். பொறுப்பேற்று செய்ல்படக்கூடியவர்கள், அவர்களை கண்கானிக்கத் தேவையில்லை, அவர்கள் போக்கிலேயே விட்டுவிடலாம். அவரவர் வாழ்க்கையை நிர்ணயித்துக் கொள்ள அவரவர் வழிகளைத் தேடி இயங்குவர் என்ற கருத்துக்களை கொண்டது கோட்பாடு Y ஆகும். இதனடிப்படையில் பார்த்தால் மனிதர்கள் போற்றத்தகுந்தவர், மரியாதைக்குரியவர்கள்.

இந்த இரண்டு கோட்பாடுகளில் சரியானது எது என்று இன்னும் தீர்மாணமாக யாரும் சொல்லவில்லை. ஒரு சமயத்தில் கோட்பாடு X தான் சிறந்தது என்பதை நிரூபிக்க பல ஆதாரங்கள் அடுக்கடுக்காக கிடைக்கும். இன்னொரு சமயத்தில் கோட்பாடு Y தான் சரி என்று எடுத்துரைக்கும் வண்ணம் ஏராளமான நிகழ்வுகள் ஏற்படும். எனவே இரண்டு கோட்பாடுகளுமே இன்றளவும் இருக்கின்றன. கேண்டீட், கதாநாயகி குனிகொண்டே, ஜமீந்தார், தத்துவவாதி பாங்க்லாஸ், இன்னொரு தத்துவவாதி மார்ட்டின், விசுவாசி ககாம்போ என பல பாத்திரப்படைபுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த நாவலும் மனிதர்கள் நல்லவர்களா? அல்லது கெட்டவர்களா? என்று அலசி ஆராய்ந்து விட்டு தீர்வு எதுவும் சொல்லாமல், நல்லவர்களும் உண்டு, சுயநலவாதிகளும் உண்டு. ஆனால் அதைப்பற்றிக் கவலைப்படவேண்டாம், வேலையைப் பார்ப்போம் என வேறு பாதையில் வண்டியை திருப்பி விடுகிறது.

எளிமை, அடுத்தவரை நம்பும் தன்மை ஆகிய பண்புகளைக் கொண்ட கதாநாயகன் கேண்டீட் கதையில் முதல் அத்தியாயத்திலேயே காதல் வயப்பட்டு விடுகிறான். ஜமீந்தாரின் பதினேழு வயதான அழகான மகள் குனிகொண்டே தான் காதலி. சூடான தோசைக் கல்லை தொட்டவுடன் கை பழுத்துவிடுவது போல் காதலை தொடங்கியவுடன் சரியான அடி கொடுக்கிறார் ஜமீந்தார். கோட்டையை விட்டு துரத்தப்படும் கேண்டீட், இந்த உலகத்தின் இயல்பு என்ன என்று உங்களுக்கு காண்பிக்கிரேன் வாருங்கள் வாசகரே என்று நம்மை அழைத்துக் கொண்டு புறப்படுகிறான். இரண்டாவது அத்தியாயத்திலேயே இது ஆரம்பித்து விடுகிறது.

பல்கேரியர்களிடம் அடிவாங்கி கழுத்திலிருந்து அடித்தொடை வரை ஒவ்வொரு தசையும் நரம்பும் பிய்ந்து தொங்கும் போதும் சரி, வாழ்க்கையில் கடுமையாக நோய்வாய்ப்படும் சமயத்திலும் சரி, அல்லது தன் காதலி குனிகொண்டேயை மீண்டும் மீண்டும் இழக்கும்போதும் சரி, கேண்டீட்டை வழிநடத்துவது தத்துவவாதி பாங்க்லாஸின் தத்துவங்கள் தான். எதுவும் இப்போது இருப்பதை விட சிறப்பானதாக இருக்க முடியாது, உருவாக்கப்பட்ட அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காகவே எண்ணும் போது, அந்தக் காரணம் மிகச் சிறப்பான காரணமாகத்தான் இருக்க வேண்டும். எல்லாம் மிகச் சிறப்பானதற்கே என்பதே பாங்காலாக்ஸின் அடிப்படைத் தத்துவம். அடுத்தடுத்த சோதனைகளை கதாநாயகன் சந்திக்கும் போது இந்த தத்துவத்தின் அடிப்படையிலேயே எல்லாவற்றையும் எதிர் கொள்கிறான். இறுதியில் வாழ்க்கையைப் புரிந்து கொள்கிறான்.

இந்த நாவல் முழுவதுமே வோல்டேரின் தத்துவங்கள் தான். நம்பிக்கையிழந்த மனிதனுக்கு நம்பிக்கையை ஊட்டி வாழ்க்கையின் அடுத்த நிகழ்வை நோக்கி முன்னேறிச் செல்ல ஏதுவானதாக நிறைய நம்பிக்கை வாசகங்களை நாவல் முழுவதும் தூவியிருக்கிறார் வோல்டேர்.

வீழ்தலும் மனிதனின் சாபமும் வேண்டுமென்றே தான் இந்த மிகச்சிறந்த உலகத்துக்குள் புகுத்தப்பட்டுள்ளது என்று மனிதர்களின் தோல்விகளுக்கு விளக்கம் சொல்லும் ஆசிரியர், தோல்வி ஏற்படும்போது மனிதர்கள் என்ன சொல்வார்கள் என்பதை ஓர் கிழவியைக் கொண்டு உணர்த்துகிறார். “ஒரு நூறு முறையாவது தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்திருப்பேன் ஆனால் வாழ்வின் மீது இன்னமும் காதல் உள்ளது” என்ற கிழவியின் நம்பிக்கையை வெளிக்காட்டுகிறார். துன்பங்களை சுமந்து செல்வதுதான் வாழ்க்கை எல்லா கட்டத்திலும் எறிந்து விடாமல் அச்சுமைகளை தூக்கிச் செல்கிறோம். எல்லோருடைய வாழ்விலும் இது நடக்கத்தான் செய்கிறது. இதை சமாளிக்க என்ன வழி? உன் நினைவை வேறு பக்கம் திருப்பு, உன் சமமனிதன் ஒவ்வொருவனுடைய வாழ்க்கையையும் உற்று நோக்கு, உனக்கு தீர்வு கிடைக்கும் என்று வோல்ட்டேர் கூறுகிறார். பிரச்சனைகள் ஏற்படும் போது அதையே நினைத்துக் கொண்டே இருக்காமல் கவனத்தை பிற விஷயங்களில் திருப்பு, மனம் தளர்வடையும், நம்பிக்கை பூ பூக்கும் என்று கதைப் பாத்திரங்கள் வாசகர்களுக்கு அறிவுரை சொல்கிறார்கள்.

அவ்வப்போது அனைவருக்கும் ஏற்படும் மனப்பிரச்சனைகள் கேண்டீட்டுக்கும் ஏற்படுகிறது. 36 முறை கசையடி வேண்டுமா அல்லது மூளையில் 12 குண்டுகள் வேண்டுமா என்று அவனைக் கேட்கும் போது, இரண்டில் எதையும் தேர்ந்தெடுக்க அவன் விரும்பவில்லை. ஆனால் சூழ்நிலை அவனை விடுவதில்லை. இரண்டில் ஒன்றை கட்டாயம் தேர்ந்தெடுத்தே ஆகவேண்டும். Avoidance-avoidance மனக்குழப்ப நிலை கேண்டீட்டுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் ஏற்படுவது தானே!

நம் நடத்தையைத் தீர்மாணிப்பது சூழ்நிலையா? மரபுநிலையா? ஒருவன் நல்லவனாக இருப்பது சூழ்நிலையாலா? அல்லது ஒருவன் பிறப்பினாலேயே கெட்டவனாகப் பிறக்கிறானா? விவாதத்திற்குரிய இந்த கேள்விகளுக்கு நாவலாசிரியர் விடை சொல்லியிருக்கிறார். மனிதர்கள் பிறக்கும்போது ஓநாய்களாக பிறப்பதில்லை ஆனால் ஒநாய்களாக மாறிவிடுகிறார்கள் என்று சொல்லும் வோல்ட்டேர் சூழ்நிலையே நம்மை உருவக்குகிறது அல்லது உருக்குலைக்கிறது என்று எடுத்துரைக்கிரார். நல்ல பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன், படிக்காத தாய் தந்தையருக்கு பிறந்திருந்தாலும் கூட, முதல் மதிப்பெண் பெறுவதில்லையா? அதைப் போன்றது தான். கெட்ட நண்பனோடு சேர்ந்த நல்ல பையன் திருடனாக மாறிவிடுவதில்லையா? அதைப் போன்றது தான் சூழ்நிலையின் தாக்கமும்.

கதாநாயகி குனிகொண்டே நகைகளையும் பணத்தையும் திருட்டு கொடுத்து விட்டு வருந்துகிறாள். நமக்கு இதே போல் ஏற்பட்டால் எப்படி நம்மை தேற்றிக் கொள்வது. வழியிருக்கிறது இந்த உலகில் உள்ள எல்லாப் பொருட்களும் எல்லோருக்கும் சமமாகவே சொந்தம் என்று நம் புரிதலை மாற்றிக் கொள்வது தான் அந்த வழி, இதுதான் குனிகொண்டேவுக்கு பாங்க்லாஸ் சொல்லும் வழி.

உலகம் என்பது ஓர் புத்தகம், அதில் அதிக பக்கங்களை படிப்பவனே அனுபவசாலி, அறிவாளி. பயணம் செய்வது தான் இந்த பரந்த உலகை படிப்பதற்கான சிறந்த வழி. கதாநாயகன் கேண்டீட் பல நாடுகளுக்கும், புதியதோர் வளமான உலகத்திற்கும் சுற்ற வைக்கிறார் நாவலாசிரியர். பல்வேறு மனிதர்கள், பல்வேறு சூழ்நிலைகளைப் பார்த்த கேண்டீட் இறுதியாக நினைப்பது “ஒர் உலகத்தில் நம் கணக்கைத் தொடங்க முடியாவிட்டாலும் இன்னோர் உலகத்தில் தொடங்கலாம் புது விஷயங்களைப் பார்ப்பதும் சொல்வதும் எவ்வளவு மகிழ்ச்சியானது” என்பதை தான். எனவே ஓரிடத்திலேயே கிடப்பது புத்திசாலித்தனமல்ல. புதிய புதிய இடங்களுக்கு புறப்பட்டு செல்வது நல்லதுதான், அங்கே நடப்பவைகள் மகிழ்ச்சியானதாக இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம் புதுமையானதாகவாவது இருக்கும் என்று நம்மை பயணம் செய்து பண்பட சொல்கிறார் வோல்டேர்.

வாழ்க்கையில் துன்பங்கள் இல்லாமல் இருக்க வழி ஏதும் இல்லை. கவலைகள் இல்லாமல் வாழ வழியில்லை. கவலைகளோடு வாழ்வது எப்படி என்று வேண்டுமானால் கற்றுக் கொள்ளலாம் என்பது தான் சுற்றித்திரிந்து கதாபாத்திரங்கள் சோர்ந்து ஓரிடத்தில் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் போது உணரும் தத்துவம். தேடியலைந்து ஆசைப்பட்டவைகளை அடைந்த பின்னும் ஒருவருக்கும் நிம்மதியில்லை திருப்தியுமில்லை. அடுத்தடுத்து புதிது புதிதான ஆசைகளையும், நோக்கங்களையும் நாம் ஏற்படுத்திக் கொள்கிறோம் அதனால் தொடர்ந்து வேதனைகளையும், விரக்தியையும், அவமானங்களையும் சந்தித்தே ஆகவேண்டும் என்பதை இறுதி அத்தியாயத்தில் எல்லா கதாபாத்திரங்களும் நன்கு உணர்ந்து கொள்கிறார்கள், நாமும் தான்.

இன்னல்கள் நிறைந்த இந்த வாழ்க்கையை வாழ என்ன வழி? ஆரஞ்சுத் தோட்டத்தில் அமர்ந்து காற்று வாங்கிக் கொண்டிருக்கும் கிழவர் பதில் சொல்கிறார் – “எனக்குத் தெரியாது”. இன்னோர் இடத்தில் நடைபெறுவது, அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவது இவையெல்லாம் பற்றி நான் கவலைப்பட்டு என் தலையைக் குழப்பிக் கொள்வதில்லை என்றும் சொல்கிறார் கிழவர்.

அப்படியானால் என்னதான் செய்வீர்கள்? என்று கேட்கும் போது “என் தோட்டத்தில் விளையும் பழங்களை விற்பனைக்கு அனுப்புவதோடு நிறுத்திக் கொள்வேன்” என்று தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பதை எடுத்துச் சொல்கிறார் கிழவர்.

நாவலின் மூலம் வோல்ட்டேர் நமக்குச் சொல்லும் செய்தியும் இதுதான். அனைத்து உலகங்களிலும் எல்லா நிகழ்வுகளும் தொடர்ச்சியாக நடந்து கொண்டேதான் இருக்கின்றன. நிகழ்வுகள் நம்மை சந்தோஷப்படுத்தவோ அல்லது சோகப்படுத்தவோ முடியாது. அவைகள் நமக்கு அனுபவங்கள் மட்டுமே. எல்லாம் முடியும் போது எஞ்சியிருப்பது இந்த அனுபவங்கள் மட்டுமே. எனவே நிகழ்வுகளையே அடிப்படையாக கொண்டு உணர்வுகளோடு வாழ்க்கையை நடத்தத் தேவையில்லை. உழைப்பே எல்லாவற்றுக்கும் தீர்வு. உழைப்பு, நம்மை சோர்வு, பாவம் செய்தல், ஆசை ஆகிய மூன்று பெரும் தீமைகளில் இருந்து நம்மைக் காக்கும் என்பது தான் இந்தக் கதையின் சாராம்சம்.

நல்ல பல விஷயங்களை சொன்னாலும், நாவல் பாடப்புத்தகம் போல்தான் உள்ளது. தத்துவவாதிகளுக்கான புத்தகம் என்றே மனதில் நினைத்துக் கொண்டு எழுதப்பட்டது போல் தெரிகிறது. எனவே படித்து முடிக்கும் முன் சற்றே அழுப்புத் தட்டி விடுகிறது. சினிமாத்தனமான திருப்பங்கள் இல்லாமல் இல்லை. கதையின் முக்கிய பாத்திரங்கள் இறந்த பின் மீண்டும் உயிருடன் வருவது இதற்கு நல்ல உதாரணம்.

நாவலில் பொகோராண்டே ஒரு புத்தகத்தைப் பற்றி கூறும் போது “ஒரு சமயத்தில் அவற்றைப் படிப்பதால் எனக்கு மகிழ்ச்சி உண்டாவது போல் தோன்றியது. ஆனால் ஒன்றைப் போலவே இன்னொன்றும் இருக்குமாறு திரும்பத் திரும்ப வரும்...” என்று கூறிக் கொண்டு போவார். அது இப்புத்தகத்திற்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.

தத்துவார்த்தமான நாவல்களை அதன் சுவை குன்றாமல், உணர்வுகளை சிதைகாமல் மொழிபெயர்ப்பது மிக மிக கஷ்டமான வேளை. அந்த நாவலை ஆத்மார்த்தமாக விரும்பினால் ஒழிய இந்த பணியை செவ்வனே செய்ய இயலாது. ஆனால் மொழிபெயர்பாளர் பத்ரி சேஷாத்ரி மிகவும் ஈடுபாடுடன் மொழிபெயர்ப்பை செய்திருக்கிறார். ஆனாலும் சில இடங்களில் மொழிபெயர்ப்பை சற்றே எளிமையாக்கி இருக்கலாம்.

தெலுங்குப் படங்களை தமிழில் டப் செய்து வெளியிடுவார்கள் அதில் தெலுங்கிளிருந்து மொழிபெயர்க்கப்பட்ட டெலிபோன் உரையாடல் இப்படி இருக்கும்;

ஒருவர்: ஹலோ, நான் சவுக்கியம் இங்க, நீ சவுக்கியமா, அங்க.
இன்னொருவர்: சவுக்கியம் நான் இங்க, மேலே போ
நாவலின் சில இடங்களில் மொழிபெயர்ப்பும் இப்படித்தான் இருக்கிறது. சற்றே மொழிபெயர்ப்பை சாதாரணமாக ஆக்கியிருந்தால் கதை இன்னும் நன்றாக புரிய ஏதுவாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.

நாவலின் கடைசி வரியான ‘அதெல்லாம் சரி, தோட்டத்தில் வேலை செய்யப் போவோம்’ என்பது நடந்தவைகள், நடப்பவை, நடக்க இருப்பவை என பலவற்றையும் எண்ணிக் கொண்டு அமர்ந்து வியாக்கியானம் பேசிக் வீனாய் போய்க் கொண்டிருப்பவர்களை தட்டி எழுப்புகிறது. உழைத்துக் களைத்து பிழைக்க புறப்படச் சொல்கிறது.


டாக்டர். B. செல்வராஜ் Ph.D.,
முதுநிலை உளவியல் விரிவுரையாளர்,
அரசு கலைக்கல்லூரி,
கோவை – 641 018

இந்த புத்தகத்தை பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும், புத்தகத்தை வாங்கவும் கீழேயுள்ள URL-க்கு செல்லுங்கள்

URL of the book is: http://nhm.in/printedbook/881/Candide


Tuesday, March 31, 2009

Get my profile

Monday, March 2, 2009

பொதுத்தேர்வு பாரமல்ல…வரம் - தினமலர் 02.03.2009

Sunday, February 22, 2009

புத்தக விமர்சனம்

அமெரிக்காவின் முகத்தையும் முகவரியையும் மாற்றப் புறப்பட்டிருக்கும் ஒரு புயலின் சாதனைச் சரித்திரம் என்ற முன் அட்டை அறிமுகத்தோடு வெளிவந்துள்ள பராக் ஒபாமாவைப் பற்றிய ஆர்.முத்துக்குமார் எழுதிய புத்தகம் கிழக்கு பதிப்பகத்தின் சிறந்த வெளியீடு.

இயல்பாக ஜன்னல் வழியே அவ்வப்போது வெளி உலகை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் பெண்ணிடம், ‘இனிமேல் ஜன்னல் அருகே நின்று வெளியே பார்க்காதே’ என்று தாய் சொன்னால் என்ன நடக்கும்? எதிர்த்த வீட்டுக்கு ஒரு குடும்பம் குடிவந்துள்ளது. அக்குடும்பத்தில் வாலிபன் ஒருவனும் உள்ளான். எனவே அடிக்கடி ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தால் காதல்-கீதல் என்று எதாவது விபரீதத்தில் மகள் மாட்டிக் கொள்ளக்கூடாது என்ற எச்சரிக்கையிலேயே அம்மா அவ்வாறு சொல்லியிருப்பாள். பேசாமல் விட்டிருந்தால் பிரச்சனை இருந்திருக்காது. எச்சரிக்கை விடுத்தது முதல் மகள் மனதில் ‘ஏன் அம்மா அவ்வாறு சொன்னாள்? எதிர்த்த வீட்டில் என்ன இருக்கிறது? யார் வந்திருப்பார்கள்?’ என்ற கேள்விகள் ஏற்பட்டு ஜன்னல் வழியே எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் பன்மடங்கு அதிகமாகிவிடும். அம்மா இல்லாதபோது அடிக்கடி ஜன்னல் வழியே பெண் பார்த்துக் கொண்டிருப்பாள். ஆம்! அடக்கப் பட்டவைகளுக்கு ஆர்வம் அதிகம். தனியொருவரின் உணர்வுகளுக்கு மட்டுமல்ல, ஓர் இனத்தின் எழுச்சிக்கும் இது பொருந்தும். ஒபாமா என்ற ஒற்றை மனிதரின் வளர்ச்சி, அடக்கப்பட்ட கறுப்பினத்தின் எழுச்சி என்பதை புத்தகத்தில் ஆசிரியர் ஆப்ரிக்க அடிமைகளின் சுருக்கமான வரலாற்றின் மூலம் முன் வைத்திருக்கிறார்.

தாயின் காதலும், தந்தையின் கணக்கும் விவாகரத்தில் முடிந்தாலும் இளவயது ஒபாமா பரந்த உலகை திறந்த ஜன்னல் வழியே பார்க்க இரு தேசத்தை சேர்ந்த பெற்றோர்கள் தங்களையும் அறியாமல் அடித்தளம் அமைத்துக் விட்டிருக்கிறார்கள் என்பதை இளவயது ஒபாமாவின் ஆரம்ப அத்தியாயங்களில் புரிந்து கொள்ள முடிகிறது.

“கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்த ஒபாமா நூல் நிலையத்தின் மீது கவனம் கொண்டார். குண்டு குண்டு புத்தகங்களாக தேடித் தேடி படித்தார். பல நாயகர்கள் அந்த நூல் நிலையத்தில் தான் ஒபாமாவுக்கு அறிமுகம் ஆனார்கள். அரசியல், வாழ்க்கை என்ற அளவோடு தன்னுடைய வாசிப்பை ஒபாமா நிறுத்திக் கொள்ளவில்லை. இலக்கியம் படித்தார், பொருளாதாரம் படித்தார் வரலாற்றையும் விட்டு வைக்கவில்லை.”

என்று ஓர் அத்தியாயத்தில் சொல்லும் ஆசிரியர்,

“நண்பரே வணக்கம். என்னுடைய பெயர் பராக் ஒபாமா” என்று சகமனிதனின் தோளில் கைபோட்டு மனித உறவுகளை மேம்படுத்திக் கொண்ட ஒபாமாவின் யதார்த்த நடத்தையையும் விளக்கி

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம
யாஉள முன்நிற் பவை

என ஒபாமா பின்னாளில் பெருவெற்றி பெறப்போகிறவர் என்பதை முன் அத்தியாயங்களிலேயே விளக்கி விடுகிறார்.

புத்தகம் ஒபாமாவை உணர்ச்சிகள் நிரம்பிய ஓர் சாதாரண இளைஞனாக நம்முன்னே நிறுத்த தவறவில்லை. அம்மா அருகில் இருந்தால் அதீத உற்சாகம், போதைப் பழக்கம், புகைப்பழக்கம், மரியுவானாவும் மதுவும். மிஷெல் சொன்னதுகூட காதில் விழாமல் காதலில் விழுவது என இளவயது உணர்வுகளோடு ஒபாமா நமக்கு புத்தகத்தில் அறிமுகம் செய்து வைக்கப்படுகிறார்.

1992-ல் நான் டெமாக்ரடிக் கட்சிக்காரன் என்று பகிரங்கமாக வெளிப்படுத்தியதில் இருந்து புயல் வேகம் எடுக்கிறது ஒபாமாவின் அரசியல் வாழ்க்கை. வேகமெடுத்த வண்டி நவம்பர் 4, 2008-ல் வெள்ளை மாளிகையை அடையும் வரை ஓயாமல் பயணம் செய்திருக்கிறது.

சிகாகோவின் தெற்குப்பகுதியான சவுத்சயிட்டில் தன் சமூக பணியை துவக்கிய ஒபாமா, மாற்றத்தை அங்கிருந்துதான் ஆரம்பித்திருக்கிறார். ஆரம்பத்திலிருந்து அரசியல் வாழ்க்கைக்கு பொருந்திப் போவதை போன்றே ஒபாமாவுக்கு பணிகள் அமைந்தது ஆச்சரியம். நியூயார்க் சிடி காலேஜில் மாணவர்களை போராட தயார்படுத்துவது, ஹார்வர்ட் லா ரிவ்யூ பத்திரிக்கையில் ஓர் ஆசிரியராக இருந்தது என ஒபாமாவின் ஆரம்பகால வேலைகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஆசிரியர் பட்டியலிட்டிருக்கிறார். இளைஞர்கள் தங்கள் நீண்டகால லட்சியங்களை ஒட்டி தங்கள் ஆரம்பகால தொழில்களை அமைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை நன்கு உணர்த்த இது உதவுகிறது.

எல்லோராலும் அரசியலில் எளிதாக பிரகாசிக்க முடியாது. கொஞ்சம் ஏமாந்தாலும் சக அரசியல்வாதிகள் குழிதோண்டி புதைத்து விடுவார்கள். அதனால் தான் அரசியல் களத்தில் ஒருவர் முன்னேற வேண்டுமானால் அதிகாரத்தின் மீது ஆசை கொண்டவராக, பிறரை எப்போதும் தன்கீழே வைத்திருப்பவராக, தேவைப்பட்டால் எதிராளியை ஒன்றுமில்லாதவராக ஆக்கக்கூடிய சக்தி கொண்டிருக்க வேண்டும் என்று மாக்கியவெல்லியின் தத்துவம் கூறுகிறது. ஒபாமாவுக்கு எதிராக உறுமிய புலி ஆலிஸ் பால்மரை அடக்கி இல்லியனாய்ஸ் மாநிலத்தின் 13-வது மாவட்டத்தின் செனட்டாக உயர்ந்த ஒபாமாவுக்கு மேற்கண்ட குணங்கள் மிகவும் மென்மையாக அமைந்திருந்ததை நிகழ்வுகளோடு விளக்கியிருக்கிறார் நூலாசிரியர்.

ஒபாமாவின் வளர்ச்சியை விளக்கிக் கொண்டே போகிற போக்கில், ஏற்றிவிட்ட ஏணியாக இருந்த டேவிட் ஆக்ஸெல்ராட், சூசன் ரைஸ், காரென் கார்ன்ப்ளு, அந்தோணி லேக், சமாந்தா பவர், பீட்ரெளஸ், டேவிட் ப்ளஃப், பென்னி பிரிட்ஸ்கர், ராபர்ட் கிப்ஸ் போன்ற அரவணைத்த தோழர்களையும், ஆலோசகர்களையும் குறிப்பிட ஆசிரியர் தவறவில்லை. ஓர் மனிதனின் வெற்றி தனியொருவரின் முயற்சியால் வருவதல்ல, கூட்டுமுயற்சியே என்பதையே இது வெளிக்காட்டுகிறது. தன் சகாக்களுடன் இணைந்து பணியாற்றிய ஒபாமா தனக்கு கிடைத்த அத்தனை வாய்ப்புகளையும் சிந்தாமல் சிதறாமல் பயன்படுத்திக் கொள்கிறார். 70% வாக்குகள் பெற்று இல்லியனாய்ஸ் செனட்டராக உயர்ந்த ஒபாமா, அன்று தொடங்கி 136 மசோதாக்களை கொண்டுவந்ததை குறிப்பிட்டு ஒபாமா வாய்ப்புக்காக காத்திருந்தவர் அல்ல, வாய்ப்பை உருவாக்கிக் கொண்ட வெற்றியாளர் என்பதை விளக்குகிறார்.

இறுதிப் போர் அதிபர் தேர்தல். இதை விளக்கும் ஒரு சில இறுதி அத்தியாயங்களில் நூலாசிரியர் முத்துக்குமார் வாசகர்களை ஒபாமாவோடே பயணம் செய்ய வைக்கிறார். விறுவிறுப்புடன் பயணம் செய்யும் வாசகர்களுக்கு தேர்தல் களத்தை விட ஒபாமாவின்-ஓர் வெற்றியாளனின்-ஆளுமையை அதிகம் அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். ஓர் உளவியல் ஆய்வு எல்லா முன்னாள் அமெரிக்க அதிபர்களும் அளவான நுண்ணறிவோடு அதிகமான உணர்ச்சியறிவை கொண்டவர்கள் என்று கண்டறிந்துள்ளது. கல்லூரிகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர் வேலை கிடைக்காமல் சுற்றிக்கொண்டு இருப்பார். ஆனால் குறைவான மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவரோ சுய தொழில் தொடங்கி தொழிலதிபராக உயர்ந்திருப்பார். அதற்குக் காரணம் நூலறிவை விட உணர்ச்சியறிவு அதிகமாக இருப்பதுதான்.

நம்முடைய உணர்ச்சிகளை எப்போது, எங்கு, எப்படி, யாரிடம், எந்த அளவுக்கு வெளிப்படுத்த வேண்டும்?, எப்போது நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடை தெரிந்த மனிதனே உணர்ச்சியறிவு கொண்டவர். ஒபாமாவுக்கு இத்தகைய உணர்ச்சியறிவு இருப்பதை

நிதானம் தேவை,
துளியும் ஆயாசப்பட வில்லை ஒபாமா,
தெளிவாக இருந்தார் ஒபாமா,
துளியும் அலட்டிக் கொள்ளவில்லை ஒபாமா,
வலியச் சென்று பேசுவது ஒபாமாவுக்கு பிடித்தமான விஷயம்,

என்ற வரிகளை ஆசிரியர் பயன்படுத்தி ஒபாமாவின் தேர்தல் பிரச்சாரத்தை விளக்கும் போது விளங்கிக் கொள்ள முடிகிறது.

“ஒபாமா, நகத்தை கடித்துக் கொண்டு இருக்கவில்லை, கடுகடுப்பை வெளிப்படுத்தவில்லை. நிதானமாக இருந்தார். நடையில், பேச்சில், சிரிப்பில் எல்லாவற்றிலும். மெல்ல மெல்ல தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கின. ஒபாமாவின் வாயில் புன்சிரிப்பு எட்டிப்பார்க்க தொடங்கியது” - ஒபாமாவின் உணர்ச்சியறிவை படம் போட்டு காட்டும் சரியான பத்தி.

இவை மட்டுமல்லாமல் ஒபாமாவின் பேச்சாற்றல், பிறருடன் பழகும் திறன், கூட்டத்தினரை வசியப்படுத்தும் மேடை ஆளுமை, ஓயாத உழைப்பு என அவரின் ஆளுமைக் கூறுகளையும் ஆசிரியர் சரியாக சுட்டிக் காட்டி இருக்கிறார்.

ஒபாமாவின் வெற்றியை அலசும் கடைசிப் பக்கங்கள், வெற்றியாளராக வரத்துடிக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் வழிகாட்டி. பயன்படுத்தப்படாமல் இருப்பவற்றை மதிப்பு மிக்கதாக மாற்றும் மதிநுட்பம், பிறரின் அறிவை மட்டுமே தாக்கம் செய்யாமல் வாழ்க்கையை தீர்மாணிக்கும் அளவுக்கு தனி மனிதர்களிடம் கொள்ள வேண்டிய ஆர்வம், சமூக சிக்கல்களை சந்திகும்போது எதிர்கொள்ள வேண்டிய அவமானங்கள், சவால்களையும் சிக்கல்களையும், தடைகளையும் அச்சமின்றி முடிக்கும் துணிவு என வெற்றியின் மனிதக் கூறுகள் அணைத்தையும் கடைசிப் பக்கங்கள் எடுத்துரைக்கின்றன.

இந்த நூல் ஓபாமாவின் வாழ்க்கையையும், அவர் பெற்ற வெற்றிகளையும் மட்டுமே விளக்கும் நூல் எனக் கருதக்கூடாது. எங்கே எது நடந்தால் நமக்கென்ன? நாளைய சோற்றுக்கு நாம் எதாவது செய்வோம் என்று இருந்துவிட்ட சாமானியர்களுக்கு கறுப்பின அடிமைகள் பட்ட அவலத்தை விரிவாக சொல்லும் சுருக்கமான அத்தியாயங்கள் கொண்ட நூல் இது எனலாம். அமெரிக்காவில் அடிமை முறை எப்படி தோன்றியது, அடிமைகளின் இயல்பு என்ன, அவர்கள் பட்ட கஷ்டங்கள் என்னென்ன என்பவைகளை உணர்வுப்பூர்வமாக பல இடங்களில் விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.

பரஸ்பரம் கைகுலுக்கிக் கொள்ள முடியாது, வெள்ளையர் அருகே அமர்ந்து சாப்பிட முடியாது, வெள்ளையர் ஒருவரை கறுப்பருக்கு அறிமுகப்படுத்தி வைக்க முடியாது, மரியாதையான வார்த்தைகளை கொண்டு கறுப்பரை அழைக்கக் கூடாது என எல்லா இடங்களிலும் தயவு தாட்சண்யமின்றி கறுப்பு வெள்ளைப் படம் ஓடிக் கொண்டிருந்தது என கறுப்பர் பட்ட அவலங்களை பட்டியலிடும் ஆசிரியர் வெள்ளையர்களின் நிறவெறியை தோலுரித்து காண்பிக்கிறார். அன்றாட அவலங்களில் ஆரம்பித்து மார்டின் லூதர் கிங் போராட்டத்திற்கு தலைமையேற்பது வரை மிக சுவாரசியமாக அடிமைகளின் அவலங்களை விளக்கிக் கொண்டே போகிறார்.

கறுப்பு டைரி என்ற தலைப்பில் அடிமைகள் அமெரிக்காவில் வாழ்க்கையை தொடங்கி பட்ட கஷ்டங்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு பின்னிணைப்பாக புத்தகத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் 20, 1619-ம் ஆண்டு இருபது ஆப்ரிக்கர்கள் கப்பல் மூலமாக அமெரிக்காவின் ஜேம்ஸ்டவுன் பகுதிக்கு அடிமைகளாக அழைத்து வரப்படுவதில் ஆரம்பித்து அதன்பின் நடைபெற்ற பல முக்கிய நிகழ்ச்சிகளும், 2008-ல் ஒபாமா அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக தேர்வு செய்யப்படுவது வரை, வருஷக்கிரமமாக தொகுக்கப்பட்டு சுருக்கமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த பகுதியைப் படித்தாலே பல புத்தகங்களை படித்து குறிப்பெடுத்தால் கிடைக்கக் கூடியது போன்ற விவரங்கள் நமக்கு கிடைக்கின்றன.

அமெரிக்க அடிமைகளின் வரலாற்றை ஆபிரகாம் லிங்கனை விட்டு விட்டு சொல்ல முடியாதல்லவா? புத்தக ஆசிரியர் ஆபிரகாம் லிங்கன் அடிமைகளின் துயர்துடைக்க பட்ட கஷ்டங்களையும், இவ்விஷயத்தில் எவ்வளவு தீர்மானமாக இருந்தார் என்பதையும் தெளிவாக கூறுகிறார். “வாருங்கள் பேசித்தீர்துக் கொள்ளலாம் இல்லை, தீர்த்துவிட்டுத்தான் பேச வேண்டும் என்றால் அதற்கும் நான் தயார்” என்ற லிங்கனின் உறுதியான நடவடிக்கைகளை வைத்து அடிமைகள் என்று இனி யாருமில்லை, அனைவரும் இங்கே மனிதர்கள் என்று லிங்கன் அமெரிக்காவை தலை நிமிர வைத்ததை அறியலாம்.

ஒபாமா வரலாற்றை படிக்கும் போதே அமெரிக்காவின் தேர்தல் முறை மற்றும் ஆட்சி அதிகார முறைகளை இப்புத்தகத்தின் மூலம் நன்கு விளங்கிக் கொள்ள முடிகிறது. தேவையான இடங்களில் கதையை தொடர்ந்து சொல்லிக் கொண்டு போகாமல், இடைச்செருகலாக அமெரிக்க அரசியலமைப்பு விஷயங்களை புகுத்தியுள்ள ஆசிரியர், அவற்றை புரியுபடி சொல்லிவிட்டு பின் கதையை தொடர்கிறார்.

அமெரிக்காவின் அதிகார மையங்கள் பற்றி மிகத்தெளிவாக மொத்தமுள்ள மாகாணங்கள், குடியரசுத் தலைவர், மத்திய நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகள், இவ்விரண்டு அவைகளுக்கும் உறுப்பிணர்களை தேர்ந்தெடுக்கும் முறைகள், மாகாணத்தின் ஆளுநர் பதவி, பதவிக் காலங்கள் என அனைத்தும் கூறி விவரிக்கிறார் ஆசிரியர்.

எல்லாவற்றையும் விட வெள்ளை மாளிகையை விவரித்துள்ள விதம் சுவையானது. வெள்ளை மாளிகையின் மொத்த அறைகள், சமையல் கூடம், புல்வெளி என எல்லா இடங்களுக்கும் வாசகர்களை அழைத்துச் செல்கிறார் ஆசிரியர். தொடர்ந்து அமெரிக்க அதிபரை தலைமை பீடாதிபதி என்று நாமம் சூட்டி அவருக்கும் அவர் கீழே உள்ளவர்களுக்குமான ஆட்சி அதிகாரங்களை விளக்கிக் கொண்டே செல்கிறார். இப்பகுதியில் பிரசிடென்ஷியல் இம்யூனிடி என்றால் என்ன? என்பது போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது.

புத்தகத்தின் நடுவே திடீரென்று தீபாவளி வருவது போல் 14 வண்ண, பளபளக்கும், தற்போதைய புகைப்படங்கள். அனைத்து புகைப்படங்களும் வாசகர்களை பரவசமடைய செய்கின்றன.

உருவு கண்டு எள்ளல் வேண்டாம் என்பதற்கேற்ப மாற்றம் என்ற ஒற்றை வார்த்தையை தன் அரசியல் கோட்பாடாக முன்னிறுத்தி முன்னேறிய ஒபாமாவை பற்றிய இந்நூல் படித்து பாதுகாக்க வேண்டியது. ஒரு மனிதனைப் பற்றிய வரலாற்று நூல் என்பதை விட தன்னம்பிக்கை ஊட்டும் தமிழ் நூல் என இந்நூலைக் கொள்ளலாம். உழைப்புக்கு ஈடு இணை இல்லை என்ற தத்துவத்தின் அடிப்படையில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு கடுமையாக உழைத்தவர் ஒபாமா. முன்னால் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் முதல் முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது தன் அரசியல் வாழ்வை தொடங்கி சரியாக 16 ஆண்டுகளில் செல்வாக்கு நிறைந்த அவர் மனைவி ஹிலாரியை வேட்பாளர் போட்டியில் வென்று சாதித்த சாமானியன் ஒபாமாவின் வரலாற்றை சுவையாகச் சொல்லும் நூல் இது. மொத்தத்தில் அரைக் கறுப்பரை பற்றி அறிந்து கொள்ள உதவும் முழுமையான நூல்.

டாக்டர். B. செல்வராஜ் Ph.D.,
முதுநிலை உளவியல் விரிவுரையாளர்,
அரசு கலைக்கல்லூரி,
கோவை – 641 018

இந்த புத்தகத்தை பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழேயுள்ள
URL-க்கு செல்லுங்கள்

Thursday, January 22, 2009

உங்களின் உளவியல் சந்தேகங்கள், பிரச்சனைகள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை கீழே உள்ள comments பட்டனை அழுத்தியோ அல்லது bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பியோ கேளுங்கள். உளவியலில் உங்களுக்கு உள்ள எந்த சந்தேகம் வேண்டுமானாலும் கேளுங்கள் - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

Wednesday, January 21, 2009

உங்களுக்கு நீங்களே வேலை தேடிக் கொள்வது எப்படி? Part 1

உங்களுக்கு நீங்களே வேலை தேடிக் கொள்வது எப்படி? Part 2

உங்களுக்கு நீங்களே வேலை தேடிக் கொள்வது எப்படி? Part 3

How to write Bio-data part 1

How to write Bio-data part 2

Tuesday, January 20, 2009

அதிகரித்து வரும் விவாகரத்து வழக்குகள் குறித்து – தினமலர் 14.09.2008

புரிந்து கொள்ளுங்கள் – தினமலர் 30.03.2008

கோபம், அழித்து விடும்! – தினமலர் 23.03.2008

‘கல்வி கற்றுத்தர ஏழ்மை தடையல்ல’ – தினமலர் 25.06.2007

Parents advised to guide students during exam time – The New Indian Express 19.03.2007

‘டிவி’யில் கிரிக்கெட் பார்த்தால் மாணவர்களின் கவனம் சிதறும்’ – தினமலர் 19.03.2007

குற்ற தடுப்பு கருத்தரங்கு துவக்கம் – தமிழ் முரசு 15.03.2007

‘Avoid overloading children with summer courses’ - The Hindu 06.05.2006

நூல் வெளியீட்டு விழா – தினமலர் 12.01.2006

மனசுல குழப்பமா? மாயமாக வழி இருக்கு... – தினமலர் 23.09.2005

ஆளும் வளர… அறிவும் வளர... அற்புதமான யோசனைகள்! – தினமலர் 16.06.2005

How to handle stress? – The Hindu 14.02.2005

குழந்தைகளுக்கு ‘டென்ஷன்’ ஏன்? – தினமலர் 28.04.2004

விபத்துக்கு டிரைவர் உளவியல் கூறு காரணம்! – தினமலர் 29.02.2004

இந்தவாரம் இவர் – 18.01.2004

Posted by Picasa

Psycho-Social problems

படித்தது தேர்வு எழுதும் போது மறந்து விடுகிறதா? – தினமலர் 07.12.2003

கார்ட்டூன் நிகழ்ச்சியால் குழந்தையின் தொடர்பு கொள்ளும் திறன் பாதிக்கலாம். – தினமலர் 12.09.2002

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP