உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Tuesday, August 7, 2012

குழந்தைகளுக்கு கனவு வருமா? அதனால் ஏதேனும் பாதிப்புகள் உண்டா

ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது தொடர்ச்சியான கற்பனைகள், சிந்தனைகள் அல்லது மனவெழுச்சிகள் மனதில் தோன்றி கடந்து செல்வதையே கனவுகள் என்கிறோம். கனவுகள் எல்லா மனிதர்களுக்கும் தோன்றும். பிறந்து இரண்டு வாரங்கள் முடிந்தவுடன் கனவுகள் மனதில் தோன்றத் தொடங்கி விடுகின்றன. விழித்திருக்கும் போது குழந்தையைச் சுற்றி நடக்கும் விஷயங்களே தூங்கும்போது கனவுகளாக உருவெடுக்கின்றன. அதனால் இரண்டு வாரம் முடிந்தவுடன் தொடங்கும் ஆரம்பகால கனவுகள் சாதாரணமானவையாகவே இருக்கும். குழந்தையின் விழிப்புணர்ச்சி அதிகரிக்கத் தொடங்கும்போது கனவுகளின் வீரியம் மற்றும் தன்மையும் மாறத் தொடங்குகிறது. அதிக அனுபவமில்லா காலத்தில் குழந்தையின் மனதில் தோன்றும் கனவுகள் பெரும்பாலும் நல்ல கனவுகளே. இக்கனவுகள் குழந்தையின் சிந்திக்கும் திறனை மேம்படுத்த உதவுகின்றன. குழந்தை காணும் கனவுகளின் அளவுக்கும் அக்குழந்தையின் சிந்தனை மற்றும் அறிவு வளர்ச்சிக்கும் நெருங்கியத் தொடர்பு உள்ளதாக உளவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெற்றோரின் அரவணைப்பில் இருக்கும் வரை நல்ல கனவுகளையே காணும் குழந்தைகள் ஓடியாடி விளையாடத் தொடங்கியவுடன் பல்வேறு அனுபவங்களைப் பெறத் தொடங்கி விடுகிறார்கள். அதுமுதற்கொண்டு குழந்தைகளின் எதிர்மறை அனுபங்களையும் அடிப்படையாகக் கொண்டு பயமுறுத்தும் கனவுகளும் வர ஆரம்பித்து விடும்.

குழந்தைகளுக்கு பயத்தை உண்டாக்கும் பயங்கரக் கனவுகள் 18 மாதத்தில் தொடங்குகிறது. ஆழ்ந்த தூக்கத்தில் குழந்தைகள் இருக்கும் போது பல பயமுறுத்தும் கனவுகள் அவர்களுக்குத் தோன்றலாம். பதினெட்டு மாதத்தில் தொடங்கும் இப்பயங்கர கனவுகள் மூன்று முதல் நான்கு வயது வரையிலான காலகட்டத்தில் மிக அதிகமாகத் தோன்றும். கற்பனை உணர்ச்சி உச்சகட்டத்தில் இருக்கும் இச்சமயத்தில் குழந்தைகள் தங்கள் பகற்கனவை தூக்கத்திலும் தொடர்வர். மிகப் பெரிய பூதமோ அல்லது ஆபத்தை உண்டாக்கும் விலங்குகளோ குழந்தைகளின் கனவில் தோன்றி அவர்களை பயமுறுத்தும். தப்பிக்கவே முடியாத ஆபத்தில் மாட்டிக்கொண்டு உதவி ஏதும் கிடைக்காத நிலையில் இருப்பது போன்று குழந்தைகள் பீதியடைந்து போவர். வாரத்திற்கு குறைந்தது ஒன்று அல்லது இரண்டு முறை இது போன்ற கனவுகள் குழந்தைகளுக்கு தோன்றலாம். எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகள் படிக்கும் குழந்தைகள் தெளிவான கற்பனைத் திறனைப் பெற்றிருப்பர். அவர்களின் அன்றாட வாழ்க்கை அதிக செயல்பாடுகள் கொண்டதாகவும், அவர்கள் வளரும் சூழ்நிலை அதிக பயமுறுத்தும் தூண்டல்கள் நிறைந்ததாகவும் இருக்கும். உடன் பிறந்தோர் மற்றும் வயதினையொத்த பிற குழந்தைகள் குழந்தைகளின் மனதில் அதிக பயத்தை உண்டாக்கும் வகையில் நடந்து கொள்வர். எல்லாவற்றிற்கும் மேலாக பெற்றோரை விட்டுப் பிரிந்து பள்ளிக்குச் செல்வது குழந்தைகளின் மனதில் பிரிவு பயத்தை உண்டாக்கி விடும். இவையனைத்தும் சேர்ந்து இரவில் தூங்கும் குழந்தையின் மனதில் பீதியைக் கிளப்பும் கனவுகளை உலவ விடும்.

பெற்றோரிடம் நிலவும் சண்டை, மகிழ்ச்சியற்ற குடும்ப நிலை, குடும்பத்தில் ஏற்பட்ட பிளவு, கடும் பொருளாதார பிரச்சனைகள் போன்றவையால் பாதிக்கப்படும் குழந்தைகளிடம் பயத்தை உண்டாக்கும் கனவுகள் அதிகமாக தோன்றும்.

குழந்தைகள் தூங்க ஆரம்பித்த பின் ஒருமணி நேரத்திற்குப் பின் இரண்டு மணிநேரத்த்திற்குப் பிறகு பயமுறுத்தும் கனவுகள் தொடங்கும். அவ்வாறு தோன்றும் பயமுறுத்தும் கனவு பத்து முதல் முப்பது நிமிடங்கள் வரை நீடிக்கும். இச்சமயத்தில் பயந்த குழந்தை திடீரென படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்து கொள்ளும். முகம் கதிகலங்கிப் போயிருக்கும். வீரிட்டுக் கத்தும். மூச்சு விடுதல் ஆழமாக இருக்கும். உடல் வியர்த்துப் போய்விடும். குழந்தை கால்களால் எட்டி உதைக்கும். கண்கள் பேயறைந்தது போல் பிதுங்கிக் கொள்ளும். இவையெல்லாம் நடக்கும் போது பெற்றோர் எவ்வளவு தேற்றினாலும் குழந்தை ஆறுதல் கொள்ளாது. பெற்றோருக்கு என்ன செய்வதென்றே தெரியாத குழப்பம் ஏற்படும். கனவு முடிந்தவுடன் குழந்தை மீண்டும் தூங்கத் தொடங்கிவிடும். தனக்கு ஓர் பயங்கரமான கனவு தோன்றியது என்ற நினைவே அக்குழந்தைக்கு இருக்காது. இக்கனவுகள் குழந்தையின் ஆளுமையோடோ அல்லது அதன் மனவெழுச்சிகளோடோ தொடர்பு கொண்டிருக்காது. நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் குழந்தையை திடீரென பின்னாலிருந்து தள்ளுதல், யாரேனும் மயங்கி விழுவதை குழந்தை பார்க்க நேரிடுதல், பிறருக்கு ஏற்படும் விபத்தொன்றினை குழந்தை பார்க்க நேரிடுதல் போன்ற சாதாரண காரணங்களால் தான் இது போன்ற பயமுறுத்தும் கனவுகள் குழந்தைகளுக்கு தோன்றுகின்றன.

குழந்தைகளுக்கு கனவு வராமல் தடுக்க வழியில்லை. ஆனால் கனவு வருவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை பெற்றோர்களால் குறைக்க முடியும். குழந்தை படுத்து உறங்கியதிலிருந்து ஒருமணி நேரம் வரை அருகிலேயே விழித்திருந்து உடலில் மாற்றங்கள் தோன்றும் போது தட்டிக் கொடுத்து ஆறுதல் அளிக்க வேண்டும். திடீரென குழந்தை விழித்துக் கொண்டு அழும்போது பதட்டப்படாமல் நிலைமையை சமாளிக்க பெற்றோர் கற்றுக் கொள்ள வேண்டும். மேலும் குழந்தைக்கு தாயத்து கட்டுதல், மந்தரித்தல் போன்ற மூட நம்பிக்கைகளில் இறங்காமல் இருப்பது நல்லது.

1 comments:

திண்டுக்கல் தனபாலன் August 7, 2012 at 5:28 AM  

சில சந்தேகங்கள் இருந்தது... உங்கள் பதிவின் மூலம் தெரிந்தது... நல்ல பல கருத்துக்கள் ஐயா...

தொடருங்கள்... நன்றி..

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP