உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Monday, August 20, 2012

உங்கள் குழந்தை வீட்டுப் பொருட்களை பிறருக்கு கொடுக்க சம்மதிப்பதில்லை. ஏன்?


ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தாய், தந்தை, குடும்பத்தில் உள்ளவர்கள் ஆகியோரோடு தன் வீட்டில் உள்ள பொருட்களின் மீதும் உணர்ச்சி பிணைப்பு ஏற்படும். வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களைப் போலவே பொருட்களுடனும் மன ரீதியான பிணைப்பை குழந்தைகள் இந்த வயதில் ஏற்படுத்திக் கொள்ளும். அம்மா அருகில் இருந்தால் குழந்தைகளுக்கு எத்தகைய தைரிய உணர்வு ஏற்படுமோ அதே போன்ற தைரிய எண்ணம் ஒரு சில பொருட்கள் குழந்தைகளின் அருகில் இருக்கும்போதும் ஏற்படும். குழந்தைகள் விடாமல் ஒரு பொம்மையை கட்டிபிடித்துக் கொண்டே இருப்பது இந்த காரணத்தினால் தான். அப்பொம்மையை யாரேனும் பிடுங்கி விட்டால் குழந்தையின் மனம் நிலைகுலைந்து போய்விடும். பொம்மையில் தொடங்கும் இந்த பழக்கம் நாளடைவில் வீட்டில் உள்ள பல பொருட்களுக்கும் பரவிவிடும். வேறு யாரேனும் வீட்டுப் பொருட்களை எடுத்து செல்லும்போது குழந்தைகள் அதை அனுமதிக்காததற்கு இதுவே காரணம்.

தொடக்கத்தில் சிறு குழந்தையாக இருக்கும்போது பிறருடன் தன் பொருட்களை பகிர்ந்து கொள்ளும் குழந்தை வயதாக வயதாக சற்று சுயநலம் மிகுந்ததாக மாறிவிடும். இது குழந்தையின் தவறல்ல. எல்லாக் குழந்தைகளின் இயல்பும் இதுதான். சில வருடங்கள் நிலவும் சுயநல எண்ணம் குழந்தையின் ஆளுமையை விட்டு விலகி விடலாம் அல்லது ஆளுமையில் நீடித்து நிலைத்து விடலாம். பெற்றோர் குழந்தையின் சுயநலப் போக்கை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே இது அமையும். ஒரு சில பெற்றோர் தன் குழந்தை வீட்டில் உள்ள பொருட்களை வேறு யாரையும் எடுக்க அனுமதிப்பதில்லை என்பதை கண்டு கொண்டவுடன் அதனை எல்லோரிடமும் பெருமையாக சொல்லிக் கொண்டே திரிவர். அதனைக் கேட்பவர்களும் ஆச்சரியத்துடன் ஏதேனும் பொருட்களை எடுப்பது போல் எடுத்து குழந்தையின் நடத்தையை சோதிப்பர். அப்போதெல்லாம் குழந்தை எப்பாடுபட்டாவது தன் பொருட்களை காப்பாற்றிக் கொள்ளும். எல்லாம் முடியும் தருவாயில் ‘பிற்காலத்தில் நன்றாகப் பிழைத்துக் கொள்வாய்’ என குழந்தையை பாராட்டி விட்டு பிறர் சென்று விடுவர். இதுபோன்ற பாராட்டுக்கள் குழந்தையின் தக்கவைத்துக் கொள்ளும் நடத்தையினை ஊக்குவித்துக் கொண்டே இருக்கும். நாளடைவில் அக்குணம் ஆளுமையில் ஒரு கூறாகவே மாறிவிடும். வேறு சில பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் தக்கவைத்துக் கொள்ளும் நடத்தையினை கண்டு கொள்ளவே மாட்டார்கள். அதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவும் மாட்டார்கள். குழந்தையும் வளர வளர தன் குணத்தினை மாற்றிக் கொண்டு பிறருடன் தன் பொருட்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்து விடும். பிற்காலத்தில் தன் அனுபவத்தின் துணை கொண்டு எதனைப் பகிர்ந்து கொள்ள வேண்டும், எதனை தனக்கென வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தானாகவே குழந்தை கற்றுக் கொள்ளும்.

உங்கள் குழந்தை பொருட்களை யாருக்கும் தராவிட்டாலும், அல்லது பிறரின் குழந்தை அதுபோல் நடந்து கொண்டாலும் அதனைப் பெரிதாக்காதீர்கள். அந்நடத்தையை கண்டும் காணததும் போல் அலட்சியப்படுத்தி செல்வதே போதுமானது.

1 comments:

திண்டுக்கல் தனபாலன் August 21, 2012 at 1:37 AM  

விளக்கம் மிகவும் அருமை சார்...
நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP