உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Tuesday, August 14, 2012

நாகரீகம் என்ற பெயரில் குழந்தைகளை அசௌகரியத்திற்கு ஆளாக்கலாமா?


நம்மை விட நம் குழந்தைகளை சிறப்பாக வளர்க்கவே நாம் அனைவரும் விரும்புகிறோம். அதிலும் குழந்தைகள் அழகாக இருக்க வேண்டும் என்பதில் நமக்கு அலாதிப் பிரியம். குழந்தைகளை நாகரீகமாக வளர்க்க வேண்டும் என்பதற்காக பலவற்றை நாம் அவர்கள் மீது திணிக்கிறோம். குழந்தைகளுக்கான உடைகள் அவைகளில் ஒன்று. பாவாடை சட்டையும், வேட்டியும் சட்டையும் போட்டு வளர்ந்த பெற்றோர்க்கு தன் குழந்தைக்கு நவ நாகரீக உடைகள் அணிவித்து வளர்க்க வேண்டும் என்று ஆசை இருக்கலாம். இதுபோன்ற பெற்றோர்களே தற்போது அதிகம். இவர்கள் தங்கள் பையன்களுக்கு வாங்கும் துணிகள் எல்லாம் கரடுமுரடாக, பதினைந்துக்கும் மேற்பட்ட பொத்தான்களுடன் இருக்கின்றன. பெண் குழந்தைகளுக்கு வாங்கும் துணிகள் எல்லாம் கையில்லாமல், முக்கால்வாசி முதுகு தெரியும்படி, தொப்புளுக்கு மேலே இருக்குமாறு பார்த்தே வாங்குகிறார்கள். இவைகளை சின்ன வயதில் போட்டு அழகு பார்த்தால் தான் உண்டு என்பதே இந்த உடைகளை வாங்குவதற்காக பெற்றோர் கூறும் வியாக்கியானம். ஆனால் இதுபோன்ற உடைகளை எல்லா சூழ்நிலைகளிலும் அணிவிக்க முடியாது. விஷேசங்களுக்கு செல்லும் போதெல்லாம் இருப்பதில் புதிய உடையை அணிவித்து குழந்தைகளை கூட்டிச் செல்வது தான் நம் கலாச்சாரம். குளிர்காலத்தில் அப்படி வெளியே செல்லும் குழந்தைகள் எல்லாம் கையில்லாமல், முதுகு போர்த்தாமல் நடுங்கிக் கொண்டுதான் செல்கிறார்கள். வெயில்காலத்தில் மோட்டா சட்டை பேண்டுகளை அணிந்து செல்லும் பையன்கள் ஏராளம். விவரம் இல்லாததால் பெற்றோர் சொல்லும் துணிகளை அணிந்து கொள்ளும் இக்குழந்தைகள் விவரம் தெரியும் பருவத்தில் நிச்சயமாக அசௌகரியத்தை உண்டாக்கும் இத்துணிகளை அணியவே மாட்டார்கள்.

குழந்தைகளின் ஆடைகள் காட்டன் துணியினால் தைக்கப்பட்டிருக்க வேண்டும். மெல்லியதாக இளகும் தன்மையுடன் இருந்தால் மிகவும் நல்லது. தலை வழியாக போட்டு கழட்டும் உடைகள் என்றால் எளிதாக போட்டு கழட்டும் வண்ணம் இருக்கிறதா என்பதை குழந்தைகளுக்கு போட்டுப் பார்த்து வாங்க வேண்டும். குளர் காலம், வெயில் காலம், மழைக் காலம் என எல்லா சூழ்நிலைகளிலும் அணியும் வண்ணம் பொதுவான வடிவமைப்பில் உள்ள துணிகளை வாங்குவதே சிறந்தது. குழந்தைகளுக்கு அதிகப்படியான உடைகள் தேவைப்படுவதால் பொதுவான வடிவமைப்பில் உள்ள துணிகள் அத்தேவையை நிறைவேற்றும். நூற்றுக்கு தொன்னூற்றி ஒன்பது பெற்றோர் குழந்தையின் அளவைவிட இரண்டு சைஸ் அதிகம் உள்ள துணிகளையே வாங்குகிறார்கள். குழந்தைகள் வளர வளர சரியாகிவிடும் என்னும் எண்ணமே அதற்குக் காரணம். இவ்வளவு விலை கொடுத்து வாங்குகிறோம், ஐந்தாறு வருடங்களுக்காவது போட வேண்டாமா என்ற ஆதங்கம் இன்னொரு காரணம். ஆனால் எந்த உடையும் அவ்வளவு வருடங்களுக்கு வராது. தற்போது தயாரிக்கப்படும் எல்லா ரெடிமேட் ஆடைகளும் 25 அல்லது 30 சலவைகளுக்கு மட்டுமே தாங்கும் வண்ணம் தயாரிக்கப்படுகின்றன. அதற்கு மேல் தாங்குவது நம் அதிஷ்டத்தைப் பொறுத்தது. எனவே மிகப்பெரிய சைஸ் உடைகளை வாங்கி பின் குத்துவது, கயிறு கட்டி இறுக்குவது, காலுக்கு கீழே மடித்து விடுவது போன்ற செய்து குழந்தைகளை தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களின் தற்போதைய அளவு உடைகளை வாங்கி அடிக்கடி அணிவிப்பதே நல்லது. அப்படி செய்யும் போது குழந்தை வளர்ந்து உடை சிறியதாக ஆவதற்கும், உடை பழையதாகி கிழிவதற்கும் சரியாக இருக்கும்.

தேவைக்கு அதிகமாக குழந்தைகளின் தலையில் எண்ணெய் பூசுவது இன்னொரு தொந்தரவு. சின்ன வயதில் அதிக எண்ணெய் தடவினால் தலைமுடி அதிகமாக வளரும் என்பது பெற்றோர்களின் எண்ணம். அதில் உண்மையில்லை. எவ்வளவு எண்ணெய் பூசினாலும் குறிப்பிட்ட அளவு வளர்ச்சியே இருக்கும். முடி வளர்ச்சி ஜீன்களாலும், குரோமோசோம்களாலும் தான் தீர்மாணிக்கப்படுகிறது. தலையில் முடியை அழகாக சீவி நல்ல தோற்றத்தை உண்டாக்கும் அளவுக்கு எண்ணெய் தடவினால் அதுவே போதும்.

பெண் குழந்தைகளுக்கு கண்ணுக்கு மை தீட்டுவது, உதட்டுக்கு சாயம் பூசுவது போன்றவற்றை சிறு வயதிலிருந்தே அறிமுகப்படுத்துவதில் தவறில்லை. ஆனால் அவைகளை அளவுக்கு மீறி பயன்படுத்துவது குழந்தைகளின் தோலுக்கு எதிர் விளைவுகளை உண்டாக்கும்.

குழந்தைகளுக்கு அணிவிக்கும் செறுப்புகள் அதிக இறுக்கமானவையாக இல்லாமல் இருக்க வேண்டும். ஷூக்களும் அப்படியே வாங்கப்பட வேண்டும். சாக்ஸ் இல்லாமல் கண்டிப்பாக ஷூ அணிவிக்கவே கூடாது. அப்படி அணிவிக்கப்பட்ட செறுப்பு, ஷூக்களையும் ஒரு மணிக்கு ஒரு முறை கழட்டி கால்களின் இறுக்கத்தை தவிர்ப்பது நல்லது.

திருமணம் போன்ற விஷேசங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றால் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை அவர்களை சிறுநீர் கழிக்க அழைத்துச் செல்ல வேண்டும். சற்று விபரம் தெரியும் வயது குழந்தைகள் என்றால் சிறுநீர் வருகிறதா என்பதை இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை கேளுங்கள். அவர்களுக்கு அடிக்கடி குடிக்க தண்ணீர் கொடுப்பதும் அவசியம். தேவையான அளவு தண்ணீர் கொடுப்பது குழந்தைகள் சோர்வடையாமல் இருக்க உதவும்.

நம் குழந்தைகள் நாகரீகமாக இருப்பது நல்லது தான். ஆனால் அவஸ்தைக்குள்ளாகக் கூடாது என்பதில் உறுதியாயிருங்கள்.





1 comments:

திண்டுக்கல் தனபாலன் August 14, 2012 at 12:47 AM  

தங்களின் ஒவ்வொரு பதிவும் பெற்றோர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்துக்கள் ஐயா... நன்றி...

தொடர வாழ்த்துக்கள்...

அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP