திருக்குறள் – உளவியல் உரை
திண்ணியர் ஆகப் பெறின் (அதிகாரம் 67 – 666)
இவ்வுலகில்
அறிவுப் பற்றாக்குறையுடையோர் வெகுசிலரே.
சாதாரண வாழ்க்கையில் வெற்றியாளராக திகழ்வதற்கு சாதாரண அளவு அறிவே
போதுமானது. அச்சாதாரண அளவு அறிவு அனைவருக்கும் உள்ளது. ஆளுமைப் பிரச்சனையுடையவர்களே இவ்வுலகில்
அதிகமாக காணப்படுகின்றனர். அறிவிருந்தும் தேவையான
ஆளுமைப் பண்புகள் இல்லாததாலேயே பலர் வாழ்க்கையில் பிரச்சனைகளுடன் வாழ்ந்து
வருகிறார்கள். ஒருவர் சிறந்த ஆளுமைப்
பண்புகளைக் கொண்டிருந்தால் அவரை திண்ணியர் எனலாம். நவீன உளவியலில் பல்வேறு ஆளுமைப் பரிமாணங்கள்
எடுத்துக் கூறப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று
கடின ஆளுமையாகும். எண்ணற்ற பணிகளை திறம்பட
முடித்துக்காட்டும் மிகச்சிறந்த வழக்குரைஞர்களையும் செயலர்களையும் உளவியலர் பேட்டி
கண்டு அவர்களின் ஆளுமையை ஆராய்ந்த போது இவ்வாளுமை பரிமானம் கண்டறியப்பட்டது. உதாரணமாக டிபேக்கி என்னும் இதய நோய் வல்லுநர் ஒருவர்
இருந்தார். அவர் ஒருநாளைக்கு பத்து முதல்
பதினைந்து மணிநேரம் சிகிச்சை அளிப்பதில் ஈடுபட்டிருந்தார். ஒரு சாதாரண இதயநோய் மருத்துவர் ஒரு வருடத்தில்
சராசரியாக செய்யும் அறுவை சிகிச்சைகளை டிபேக்கி ஒரு மாதத்தில் செய்து முடித்து
விடுவார். இதில் ஆர்ச்சரியமான செய்தி
டிபேக்கியின் வயது 80க்கும் மேலாகும்.
இவ்வளவு கடின உழைப்பிலும் எவ்வித மனவழுத்தமும் அவரிடம் காணப்படவில்லை. எவ்வாறு இப்படி மனவழுத்தம் இல்லாமல்
வெற்றிகரமாக எண்ணற்ற சிக்கலான இதய அறுவை சிகிச்சைகளை செய்கிறீர்கள் என
டிபேக்கியிடம் கேட்ட போது அவர் தான் செய்யும் ஒவ்வொரு இதய அறுவை சிகிச்சையையும்
சவாலாக எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.
மேலும் தன்னால் அறுவை சிகிச்சை சூழ்நிலைகளை தன் கட்டுக்குள் வைத்திருக்க
முடியும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார். எல்லாவற்றையும் விட தான் சிறந்த இதய
அறுவை சிகிச்சை வல்லுநராக இருப்பது மக்களுக்கு சிகிச்சையளிக்கவே என்றும் தான்
இத்தகைய சிக்கலான அறுவை சிகிச்சைகளை செய்யாவிட்டால் பின் யார்தான் செய்வார் என்று
கடமை உணர்வு கொண்டவராகவும் காணப்பட்டார்.
அதனாலேயே டிபேக்கி மிகச்சிறந்த இதய நோய் வல்லுநராக புகழ் பெற்று விளங்கினார்.
0 comments:
Post a Comment