உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Monday, June 28, 2010

குழந்தைகளை தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்கலாமா!


அன்மையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று குழந்தைகள் நர்சரி பள்ளிக்கு செல்லும் முன் 5000 மணி நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துவிடுகின்றனர் என்று தெரிவிக்கிறது. இது கல்லூரியில் ஓர் பட்டம் பெறுவதற்கு படிப்பதற்காக செலவிடும் நேரத்திற்கு சமமானது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. நம் நாட்டிலும் இதே நிலைமைதான் என்பதில் சந்தேகமில்லை. வீட்டுக்கு வீடு தொலைக்காட்சியும் கம்ப்யூட்டரும் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் குழந்தைகளை தொலைக்காட்சி பார்க்க விடாமல், கம்ப்யூட்டரில் விளையாடாமல் தடுப்பது இயலுமா என்பது சந்தேகத்திற்குரிய விஷயமாகி விட்டது.

குழந்தைகள் அளவுக்கு அதிகமாக தொலைக்காட்சி பார்பதானாலும், கம்ப்யூட்டரில் விளையாடுவதானாலும் பல தீய விளைவுகள் உண்டாகின்றன. உடல் பருமன், சோம்பேறித்தனம், புதுவித சிந்தனை வளர்ச்சியடையாமை ஆகியவை அதிகமாக தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளிடம் காணப்படலாம். இக்குழந்தைகளுக்கு பிறரோடு தொடர்பு கொள்ளும் திறன் குறைவாக இருக்கும். எனவே குறைவான நண்பர்களை பெற்றிருப்பர். விரைவிலேயே கண் பார்வை குறைபாடு ஏதேனும் ஏற்பட வாய்ப்புண்டு. இக்குழந்தைகளால் படிப்பில் ஆர்வத்தைக் கண்பிக்க இயலாது. பிற்காலத்தில் இவர்கள் யதார்த்த வாழ்க்கையை எதிர்கொள்ள இயலாமல் துன்புறுவர். அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பதால் ஏற்படும் பின் விளைவுகள் இவை.

அதே சமயத்தில் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை முற்றிலும் பார்க்காத குழந்தைகளுக்கு சில சங்கடங்கள் உண்டாகும். வகுப்பில், பிற இடங்களில் தன் வயதையொத்த குழந்தைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் சில கதாப்பாத்திரங்களைப் பற்றியோ அல்லது கதைகளைப் பற்றியோ பேசிக் கொண்டிருக்கும் போது தொலைக்காட்சி பார்க்காத குழந்தைகள் எதுவும் புரியாமல் தவிக்கலாம். குழந்தைகளின் தற்போதைய பேஷன் என்னெவென்று தெரியாமலும், பயன்படுத்தும் பொருட்கள் என்னவென்று தெரியாமலும் இக்குழந்தைகள் தவிப்பர்.

குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதால் பல நல்ல பலன்களும் உண்டு. உதாரணமாக தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளின் பேச்சுத் திறன் சிறப்பாக வளர்ச்சியடையும், அதிகமான புதிய சொற்களை விரைவாக கற்றுகொள்வர். மொழி வளர்ச்சி மிக வேகமாக இருக்கும். மேலும் உடையணியும் விதம், பிறரிடம் எப்படி பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வது தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளிடம் சிறப்பாக இருக்கும்.

மேலும் குறிப்பிட்ட நன்மைகள் அனைத்தும் குழந்தைகள் எந்த நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே அமையும். அதிகமான வீடுகளில் பெற்றோர் சினிமா நிகழ்ச்சிகளையும் நெடுந்தொடர்களையுமே ஓட விடுகின்றனர். அதனால் குழந்தைகளும் இவைகளையே பார்த்து பெற்றோர்களைப் போல நடந்து கொள்கின்றனர். சினிமா நிகழ்ச்சிகள், நெடுந்தொடர்கள் ஆகியவற்றை தவிர்த்து குழந்தைகள் சேனலை அதிகம் பார்க்கும்படி செய்ய வேண்டும். அதிலும் புதிய பொருட்களை உருவாக்குவது, சித்திரம் வரைவது, வாழ்த்து அட்டைகளை உருவாக்குவது, அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய தகவல் தரும் நிகழ்ச்சிகள், விலங்குகளின் வாழ்க்கையைப் பற்றிய நிகழ்ச்சிகள், பிற நாடுகள், மக்களின் பழக்க வழக்கங்கள் பற்றிய நிகழ்ச்சிகள், மற்றும் சுற்றுலா தலங்கள் பற்றிய நிகழ்ச்சிகளை பெற்றோர் தேர்ந்தெடுத்து குழந்தைகளை பார்க்கச் செய்ய வேண்டும். அவ்வாறு நிகழ்ச்சிகளை தினமும் குறிப்பிட்ட நேரம் பார்க்கச் செய்வது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு பெற்றோர் செய்யும் உதவியாக அமையும்.

எப்போதும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையே பார்த்துக் கொண்டிருப்பது, கம்ப்யூட்டரில் விளையாடிக் கொண்டிருப்பது தவறு. தொலைக்காட்சியே பார்க்காமல் இருப்பதும் தவறு தேர்ந்தெடுத்த நிகழ்ச்சிகளை குழந்தைகளை தினமும் பார்க்கச் செய்வது அவர்களின் அறிவு வளர்ச்சிக்கு வித்திடுவதாக அமையும். உங்கள் வீட்டுக்குள் வரும் உலகத்தை உங்கள் குழந்தைகளுக்கு காட்டுவதாக அமையும்.

Wednesday, June 23, 2010

குழந்தைகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருப்பது எப்படி?


குழந்தைகள் சில குணங்களை பிறப்பிலேயே மரபுத்தன்மைகளின் காரணமாக பெற்றிருக்கும். வளர வளர அக்குணங்கள் ஆளுமைப் பண்புகளாக உருவெடுக்கும். பிறப்பில் அமைந்த குணங்களை தவிர்த்து பிற நடத்தைகள் அனைத்தையும் குழந்தைகள் வளர வளர பிறைப் பார்த்து கற்றுக் கொள்கின்றனர். பெற்றோர், குடும்பத்திலுள்ள பிற உறுப்பினர்கள், குழந்தை வளரும் சூழ்நிலையில் உள்ள மற்றோர்களின் நடத்தைகளைப் பார்த்து குழந்தைகள் தன் நடத்தைகளை வடிவமைத்துக் கொள்கின்றனர்.

பார்த்துக் கற்றல் கோட்பாடு தற்கால உளவியலில் மிக முக்கியமான ஒன்றாகும். நம் நடத்தைகள் அனைத்தும் சமூக சூழலில் பிறரோடு ஏற்படும் தொடர்பின் மூலம் உருவானவை என்பதே இக்கோட்பாட்டின் மையக் கருத்தாகும். குழந்தை அப்பாவைப் போல நடப்பது, அம்மாவைப் போல சிரிப்பது, தாத்தாவைப் போல உட்காருவது, பாட்டியைப் போல் தூங்குவது ஆகியவை இக்கோட்பாடு உண்மை என்பதற்கு சில உதாரணங்கள். பிறரின் நடத்தையை பின்பற்றுவது குழந்தையின் வாழ்க்கையில் பிறந்து ஆறு வாரங்களுக்குப் பின் துவங்குகிறது. குழந்தை அம்மா சிரிப்பதைப் பார்த்து அதைப் போன்றே திருப்பி சிரிப்பது தான் முதல் பார்த்துக் கற்றுக்கொள்ளும் நடத்தை. ஏழு அல்லது எட்டு வயதிற்குள் அநேகமாக எல்லா நடத்தைகளையும் குழந்தை பிறரைப் பார்த்து கற்றுக் கொண்டு விடுகிறது. அதற்குப் பின்னர் குழந்தையின் எல்லா புதிய நடத்தைகளுக்கும் ஏழு அல்லது எட்டு வயதிற்குள் கற்றுக் கொண்ட நடத்தைகளே அடிப்படையாக அமையும். எனவே ஏழு அல்லது எட்டு வயது வரை குழந்தைகள் முன் மிகவும் எச்சரிக்கயாக நடந்து கொள்ள வேண்டும்.

பெரியவர்களைப் போலன்றி குழந்தைகள் கூர்ந்து கவனிக்கும் திறமை பெற்றவர்கள். எனவே அவர்கள் கவனிக்கவா போகிறார்கள் என்று அஜாக்கிரதையாக நடந்து கொள்வது கடும் பின் விளைவுகளை உண்டாக்கும் பேசும் போது நாம் பயன்படுத்தும் சொற்கள், பிறரிடம் பேசும் முறை, பிறரிடம் பேசும் விதம், உடையணியும் முறை, வீட்டிலும் வெளியிலும் சாப்பிடும் முறை போன்றவற்றை மிகுந்த கவனமுடன் தீர்மானித்து பெற்றோர்கள் தங்கள் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். இவ்விசயத்தில் அநேக பெற்றோர்கள் தவறிழைக்கின்றார்கள். உதாரணமாக

· இரட்டை வேடம் போடுதல்
· குழந்தைகள் முன் பிறரிடம் போய் பேசுதல்
· கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துதல்
· குழந்தைகளுக்கு தெரியும் வகையில் சிறு சிறு திருட்டுகளில் ஈடுபடுதல்
· குழந்தைகள் முன்னிலையில் உறவினர் மற்றும் பிறறைப் பற்றி தவறாக விவாதித்தல்
· குழந்தைகள் முன்னிலையில் சுயநலமுடன் நடந்து கொள்ளல்
· குழந்தைகள் முன் சிகரெட் குடித்தல் மற்றும் பாலியல் சரசங்களில் ஈடுபடுதல்
· மனைவி-கணவன் தகறாறு செய்து கொள்ளல்
· மனைவி கணவனையும், கணவன் மனைவியையும் மரியாதை இன்றி நடத்துதல்

போன்றவைகள் குழந்தைகள் மனதில் நன்கு பதிந்து அவர்களும் அவ்வாறே நடந்து கொள்கிறார்கள்

மேலே குறிப்பிட்டவைகளை விட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆளுமை வெளிப்பாடு. பெற்றோர் எத்தகைய ஆளுமைகளை குழந்தைகள் முன் வெளிப்படுத்துகிறார்களோ அவ்வாறான ஆளுமையே குழந்தைகளுக்கும் அமையும். எடுத்துக்காட்டாக மிகவும் சிக்கலான சூழ்நிலை ஒன்றை சமாளிக்க இயலாமல் ஒரு தந்தை மனமுடைந்து போகிறார் என்றால் அவருடைய குழந்தையும் பிற்காலத்தில் அதைப் போன்றே கடும் சூழ்நிலைகளை சமாளிக்க இயலாமல் வருந்தும். எனவே எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களாகவும், ஏற்று நடக்கும் மனப்பாங்கு உடையவர்களாகவும் நம்மை முதலில் மாற்றிக் கொண்டு பின் அவ்வாளுமையை குழந்தைகள் முன் வெளிப்படுத்துவது நன்று.

நாம் மட்டுமே முயன்று குழந்தைகளின் நடத்தையை முழுமையாக மாற்றியமைக்க இயலாது. எனவே நம்மைத் தவிர வேறு பலர் நல்ல பழக்கங்களை கொண்டவராக இருப்பதை நாம் அறிய நேரிட்டால் நம் குழந்தைகளுக்கும் அதைக் காண்பித்து “நீயும் அதைப் போன்று நடந்து கொள்வது விரும்பத்தக்கதாகும்” என்று கூறுவது நல்ல பயனை அளிக்கும். நாம் என்னதான் முயன்றாலும் நம்மால் கைவிடமுடியாத கெட்ட பழக்கங்கள் சில நம்மிடம் இருக்கலாம். அதை நம் குழந்தைகள் பின்பற்றும்போது “என்னால் கைவிட முடியாத இந்நடத்தையால் நான் துன்பமடைந்து கொண்டு இருக்கிறேன்.” நீ அதை பின்பற்ற வேண்டாம் என் நல்ல நடத்தைகளை மட்டும் நீ பின்பற்றினால் நான் மகிழ்ச்சி கொள்வேன் என்று வெளிப்படையாக குழந்தைகளிடம் கூறிவிட வேண்டும்.

ஒரு தாய் தன் அறிவுரையையும் கேட்காமல் அதிகமாக சர்க்கரை உண்ணும் தன் மகனை பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் அழைத்துச் சென்று அதிக சர்க்கரை உண்பதை கைவிடுமாறு தன் குழந்தைக்கு அறிவுறுத்த வேண்டினார். அதைக் கேட்ட இராமகிருஷ்ணர் ஒரு வாரம் கழித்து குழந்தையை அழைத்து வருமாறு அப்பெண்மணியைக் கேட்டுக் கொண்டார். அவ்வாறே ஒரு வாரம் கழித்து அழைத்துச் செல்லப்பட்ட அப்பையனிடம் “சர்க்கரை அதிகமாக உண்பது உடலுக்கு கேடு, எனவே அதை விட்டுவிடு என்று இராமகிருஷ்ணர் அறிவுரை கூறினார். அதைக் கேட்ட அப்பையனின் தாய் இந்த அறிவுரையை சென்ற வாரமே நீங்கள் என் குழந்தைக்கு வழங்கியிருக்கலாமே சுவாமி? என்று பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரிடம் வினவினார். இராமகிருஷ்ணர் சென்ற வாரம் வரை நானும் அதிக சர்க்கரை உண்டு வந்தேன், நான் தவறு செய்து கொண்டு குழந்தைக்கு அறிவுரை கூறக் கூடாது. எனவேதான் என்னை முதலில் திருத்திக் கொண்டு என்னிடம் வந்தவரை திருந்துமாறு இப்போது கேட்டுக் கொள்கிறேன் என்று பதிலளித்தார். குழந்தைகளுக்கு நல்ல முன் மாதிரியாக இருப்பது என்பது இதைப் போன்று நாமும் உண்மையான நல்ல பழக்கங்களை கொண்டிருப்பது அல்லது உண்மையாகவே நம் தவறுகளை திருத்திக் கொள்வது என்பதுதான். மாறாக குழந்தைகளுக்குத் தெரியாமல் நீங்கள் தவறு செய்தால் அதை உணர்ந்து கொண்ட குழந்தை உங்களுக்குத் தெரியாமல் அதே தவறை செய்யும்.

Monday, June 21, 2010

குழந்தைகளின் இடக்கை பழக்கம் தவறானதா?


குழந்தைகள் பிறந்த பின்னர் வளர வளர பல திறன்களைக் கற்றுக் கொள்வார்கள். குழந்தைகள் வளரும் சூழ்நிலை, அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் ஆகியவற்றைப் பொறுத்து குழந்தைகளின் கற்றுக்கொள்ளும் திறன்கள் அமையும். மரபுப்பண்புகளின் மூலம் பிறப்பிலேயே அமைபவை என சில திறன்கள் உண்டு. அத்தகைய திறமைகளில் ஒன்றுதான் கைத்திறன். ஏதாவது ஒரு கையினை எழுதுதல், விளையாடுதல் போன்ற நம் பெரும்பான்மையான செயல்களுக்கு மற்றொரு கையை விட அதிகமாக பயன்படுத்துவது கைத்திறன் என்கிறோம். இடதுகையினை அதிகமாக பயன்படுத்துவதினால் அது இடது கைத்திறன் எனவும் வலது கையினை அதிகமாக பயன்படுத்தினால் அது வலதுகைத்திறன் எனவும் அழைக்கப்படும். உலகில் மிகக் குறைவான் சதவீதம் பேரே இடது கைத்திறன் பெற்றுள்ளனர். பெரும்பான்மையானவர்கள் வலது கைத்திறன் கொண்டவர்கள்தான் அதன் காரணமாக வலது கையினை பெரும்பானமையாக பயன்படுத்துவதே சரி என்ற எண்ணமும் இடது கையினை பயன்படுத்துவது தவறானது என்ற எண்ணமும் பெற்றோர்களிடம் நிலவி வருகிறது. எனவே இடது கைத்திறன் குழந்தைகளின் பெற்றோர் மிகுந்த கவலைக்குள்ளாகி தங்கள் குழந்தைகளை வலது கையினை பயன்படுத்துமாறு பணிக்கின்றனர்.

உண்மையில் இடது கைப் பழக்கத்தினால் எந்த பாதிப்பும் கிடையாது. இடது கையினை பயன்படுத்துவதால் செயல்படும் வேகமும் குறையாது வலது கைத்திறன் கொண்ட குழந்தைகள் எவ்வளவு திறமையுடனும் வேகத்துடனும் எல்லா செயல்களையும் செய்கிறார்களோ அதே திறன்டனும் வேகத்துடனும் இடது கைத்திறன் குழந்தைகள் செயல்புரிவர். இடது கைக்காரர்களால் வலது கைத்திறனாளிகள் போல் வேகமாக செயலாற்ற முடியாது என்று பெற்றோர் கொண்டிருக்கும் தவறான கருத்தினால் இடதுகை குழந்தைகளை வலது கையைப் பயன்படுத்தி செயலாற்ற கட்டாயப் படுத்தும் போதுதான் அவர்களின் செயலாற்றும் வேகம் குறைந்து போகிறது. இயல்பான கைத்திறனையும் பயன்படுத்தாமல், புதிய கையினையும் பயன்படுத்த பழக வேண்டி இருப்பதாலேயே செயல்திறன் குறைந்து விடுகிறது.

நாம் முன்பே கண்டது போல் ஓர் குழந்தை தன் வலது கையினை அதிகமாக பயன்படுத்துமா அல்லது இடது கையினை அதிகமாக பயன்படுத்துமா என்பது மரபு நிலையினால் தீர்மானிகப்படுகிறது. தற்கால மருத்துவ ஆய்வுகள் கருவிலிருக்கும் மூன்று மாத குழந்தை வலது கையினையோ அல்லது இடது கையினையோ தன் வாயில் வைத்து சூப்புவதை கண்டறிந்துள்ளன. எனவே இப்பழக்கம் பிறப்பதற்கு முன்பே, கருவிலிருக்கும்போதே தொடங்கிவிடுகிறது என்பதை நாம் அறிய வேண்டும். தற்காலத்தில் சினிமா போன்ற ஊடங்களில் இடது கைத்திறன் கொண்டவர்களை மிக ஸ்டைலானவர்களாக முன்னிலை படுத்தப்பட்டு வருகிறது. எனவே இடதுகைத்திறன் குழந்தைகளின் பெற்றோருடைய மனக்கவலை சற்றே குறைந்து, இடதுகை பழக்கத்தை வரவேற்கும் மனப்பான்மை அதிகரித்துள்ளது.

Sunday, June 20, 2010

குழந்தைகள் விரல் சூப்புவது ஏன்?


குழந்தைகள் விரல் சூப்புவதால் அவர்களின் பற்கள் வெளியே நீட்டிக்கொண்டு வந்து விடும். விரல் சூப்பும் குழந்தைகளின் வாய் கூர்மையாகி முக அமைப்பும் மாறி விடும். இப்பழக்கம் எதேச்சையாக ஏற்படுவது அல்ல. விரல் சூப்பும் பழக்கம் வலுவான உளவியல் காரணங்களைக் கொண்டுள்ளது.

குழந்தை பிறந்த பின்பு சரியான நேரத்திற்கு குறிப்பறிந்து பாலூட்ட வேண்டியது தாயின் கடமையாகும். சில குழந்தைகளுக்கு குறைவான அளவு உணவே போதுமானது. இதையும் தாய் புரிந்து கொள்ள வேண்டும். சரியான அளவு உணவைப் பெறும் குழந்தை எந்தவிதப் பிரச்சனையுமில்லாமல் வளர்ச்சியடையும். சில வேலைகளில் தாய் தன் குழந்தைக்கு அளவுக்கு அதிகமாக உணவளிக்கலாம். உதாரணமாக குழந்தை பசி, வயிற்று வலி, உடல் அசெளகரியம், பயம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக அழலாம். ஆனால் குழந்தை அழும்போதெல்லாம் அது பசிக்கு மட்டுமே அழுகிறது என நினைக்கும் தாய் அக்குழந்தை அழும்போதெல்லாம் அதற்கு பாலூட்டி விடுகிறார். இதனால் குழந்தை அளவுக்கு அதிகமான திருப்தியைப் பெறுகிறது. இன்னொரு புறம் வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு வீட்டிலிருந்து கவணித்து உணவளிக்க முடியாமல் புட்டிப் பாலை தயார் செய்துவிட்டு கிளம்பி விடுவர். அதிகமான உணவு தேவைப்பட்டாலும் குழந்தைகளுக்கு கிடைக்காது. இத்தகைய குழந்தைகள் தேவைக்கும் குறைவான உணவைப் பெற்று திருப்தியின்றி வளர்ந்து வரும். இவ்வாறு அளவுக்கு அதிகமான திருப்தியோ அல்லது திருப்தியின்றியோ வளரும் குழந்தைகள் எப்போதும் எதையாவது உண்று கொண்டே இருக்க வேண்டும் என்ற உணர்வு கொண்டவர்களாக வளர்கின்றனர். அதன் காரணமாகவே எதையாவது மென்று கொண்டே இருக்கின்றனர். உண்க எதுவும் கிடைக்காத குழந்தைகள் கைவிரலை சூப்பத் தொடக்கி விடுகின்றனர். இதற்கு வாய்சார்ந்த நடத்தை என்று பெயர்.

கைசூப்புவது உணவுப் பற்றாக்குறை என்பதற்கு இப்பழக்கம் எழ்மை நிலையிலுள்ள குழந்தைகளிடையே தான் அதிகமாக காணப்படுகிறது என்ற உண்மையே சான்றாகும். இப்பழக்கத்தைப் போக்க தேவையான அளவு குழந்தைக்கு உணவளிக்க வேண்டும். தொடர்ந்து உணவளித்து வந்தால் பற்றாக்குறை நீங்கி உண்க வேண்டும் என்ற உணர்வு குறைந்து விடும். அப்போது கைசூப்பும் பழக்கம் தானாகவே மறைந்து விடும். குண்டான குழந்தைகள் கைசூப்பிக் கொண்டிருந்தால் அவர்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் கொழுப்பு சத்தற்ற, உடல் பருமனை உண்டாக்காத உணவுகளை தொடர்ந்து அளித்துவர வேண்டும். உணவு உண்ணும் செயலால் உண்டாகும் திருப்தி உயர்ந்தபட்ச அளவை தொட்டவுடன் குழந்தைகள் தானாகவே உண்பதை நிறுத்திக் கொண்டுவிடும். அப்போது விரல் சூப்புவதையும் விட்டு விடும். அதற்கு மாறாக விரல் சூப்பும் குழந்தைகளை அடிப்பதால் பலன் கிடைக்காது. விரலுக்கு வேப்பெண்ணையை தேய்த்து விட்டாலும், கசப்பினை சூப்பி துப்பிவிட்டு பின் மீண்டும் விரல் சூப்ப குழந்தைகள் ஆரம்பித்துவிடும்.

Tuesday, June 15, 2010

முதலில் நல்ல மதிப்பெண் பெற்று படிக்கும் குழந்தைகள் போகப்போக சரியாக படிக்காதது ஏன்?


குழந்தைகளின் படிக்கும் திறமை அவர்களுக்கு இயற்கையிலேயே அமைந்துள்ள நுண்ணறிவையும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்களுக்கு அளிக்கும் பயிற்சியையும் பொறுத்து அமையும். பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் தொடக்க காலத்தில் பெற்றோர் குழந்தையின் கல்வியில் அதிகம் ஆர்வம் காண்பிப்பர். குறிபாக மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு சொல்லிகொடுப்பது முறையாக நடந்து கொண்டிருக்கும். தொடக்ககால ஆர்வமும், குழந்தைகளின் பாடங்கள் பெற்றோரல் கற்பிக்கக் கூடிய வகையில் மிக எளிமையானதாகவும் இருப்பது ஆகியவை அவ்வாறு முறையாக வீட்டில் குழந்தைகளுக்கு கற்பிப்பதற்கு காரணங்கள் எனலாம். குழந்தை அடுத்தடுத்த வகுப்புகளுக்கு செல்லும்போது பாடங்கள் பெற்றோரால் புரிந்து கற்பிக்க முடியாத வகையில் கடினமாகி விடுவதாலும், குழந்தையின் கல்வி மீது இருந்த தொடக்க கால ஆர்வம் குறைந்து போவதாலும் வீட்டில் கற்பிப்பதை பெற்றோர்கள் மெதுவாக கைவிட்டு விடுகின்றனர். அதற்கு பதிலாக குழந்தைகளை டியூசன் போன்ற பிற வகுப்புகளுக்கு அனுப்பி விடுகின்றனர். பள்ளியில் சொல்லிக் கொடுத்தாலும் பெற்றோரின் கவனிப்பும் அக்கறையும் குழந்தைகள் நன்கு படிக்க அவசியமாகும். இதன் காரணமாகவே நாளாக நாளாக குழந்தைகளின் படிப்பார்வம் குறையத் தொடங்குகிறது.

பெண்களுக்கு 10 வயதிலிருந்து 13 ½ வயது வரையும் ஆண்களுக்கு 11 வயதிலிருந்து 14 ½ வயது வரையும் பூப்பெய்துவதற்கான பாலியல் மாற்றங்கள் உடலில் நடந்து கொண்டிருக்கும். இச்சயமத்தில் விவரிக்க இயலாத அளவுக்கு ஹார்மோன் மாற்றங்கள் உடலுக்குள் நடந்து கொண்டிருக்கும். இதனால் குழப்பமான மனநிலை, எதிலும் கவனம் செலுத்த இயலாத மனநிலை ஆகியவற்றுடன் குழந்தைகள் இருப்பர். அதனால்தான் 8ம் வகுப்பு வரை முதல் மதிப்பெண்ணே பெற்றுவரும் ஓர் மாணவனோ மாணவியோ ஒன்பதாம் வகுப்பு முதல் பல பாடங்களில் மிகக் குறைவான மதிப்பெண் எடுப்பதும் தோல்வியடைவதும் நடைபெறுகிறது.

பெற்றோர்கள் பாலியல் முதிர்ச்சியினால் குழந்தைகளின் உடல், மன நிலையில் ஏற்படும் மாற்றங்களையும் அதனால் அவர்கள் கல்வித் திறன் குறைவதையும் கவணத்தில் கொண்டு குழந்தைகளை படிபடி என்று துன்புறுத்தாமலும், குறைந்த மதிப்பெண் பெற்று வரும்போது அவமானப்படுத்தாமல் ஆறுதளாக இருப்பதும் குழந்தைகள் தன் குறைபாட்டிலிருந்து மீண்டு வர உதவியாக இருக்கும். மேலும் எல்.கே.ஜி படிக்கும் போது குழந்தைகளின் படிப்பில் காட்டிய அதே ஆர்வத்தை இறுதிவரை கொண்டிருப்பது குழந்தைகளின் மதிப்பெண் குறையாமல் காக்க உதவும்.

Sunday, June 13, 2010

குழந்தைகள் கோபத்தில் தலையில் அடித்துக் கொள்வது, தலையை சுவரில் மோதிக் கொள்வது ஏன்?


சில குடும்பங்களில் வளரும் குழந்தைகள் மிகுந்த கோபம் கொண்டவர்களாக வளர்கின்றனர். ஆக்ரோஷமாக வளரும் இக்குழந்தைகள் ஏதேனும் பிரச்சனை வரும் போது தலையை சுவரில் மோதிக் கொள்வதும் கைகளால் தன் முகத்தில் தானே அறைந்து கொள்வதும் சாதாரணமான நடத்தையாகும். குழந்தைகளின் இக் கோப நடத்தையை எப்படி சரி செய்வதென்று தெரியாமல் பெற்றோர் மனக்கலக்கம் அடைந்து இருப்பர்.

தலையில் அடித்துக் கொள்ளும், தலையை சுவரில் மோதிக் கொள்ளும் குழந்தைகளின் பெற்றோர்களில் தாயோ, தந்தையோ யாராவது ஒருவர் மிகுந்த கோபம் கொண்டவர்களாக இருப்பர். பெற்றோர்களின் இக்கோபத்தை பார்த்தே குழந்தை ஆக்ரோஷமாக நடந்துகொள்ள பழகிக்கொள்கிறது. மேலும் குடும்பத்தின் ஒற்றைக் குழந்தைகளே இது போன்ற நடத்தைகளில் ஈடுபடுகின்றன. ஒரு குழந்தை என்பதால் அதிகமான செல்லம் கொடுக்கும் பெற்றோர் குழந்தை எதைச் செய்தாலும் அவர்களிடம் எதிர்மறையாக நடந்து கொள்வதில்லை. அதன் காரணமாக குழந்தைகளின் கோப நடத்தை அதிகமாகிக் கொண்டே செல்லும்.

கூட்டுக் குடும்பத்தில் வளரும் குழந்தைகளும் இவ்வாறு நடந்து கொள்ளலாம். தாத்தா, பாட்டி மற்றும் மற்ற உறவினர் நிறைந்துள்ள பெரிய வீட்டில் வளரும் குழந்தை சுவரில் தலையை முட்டிக் கொள்வது போன்ற நடத்தையில் ஈடுபடுவதை அனைவரும் சிலாகித்துப் பேசுவது குழந்தைகளின் இவ்வெதிர்மறை நடத்தையை அதிகரிக்கும். தன் நடத்தையைப் பற்றி பிறரிடம் குடும்ப உறுப்பினர்கள் பேசுவதை கேட்கும் குழந்தைகள் அனைவரின் கவணமும் தன்மீது இருப்பதாக நினைத்துக் கொள்ளும். பின்னர் எப்போதெல்லாம் தன் மீது பிறரின் கவனம் குறைந்து விட்டது என குழந்தை நினைக்கிறதோ அப்போதெல்லாம் ஆக்ரோஷமான எதிர்மறை நடத்தைகளை வெளிக்காண்பிக்கும்.

குழந்தைகளின் இவ்வாறான நடத்தையை குறைக்க நினைக்கும் பெற்றோர்கள். குழந்தைகள் தங்கள் தலையில் அடித்துக் கொள்ளும் போதும், தலையில் முட்டிக் கொள்ளும் போதும் அந்நடத்தையை கண்டு கொள்ளாமல் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். “நீ இவ்வாறு நடந்து கொள்வது எனக்கு பிடிக்காது” என்று குழந்தையிடம் தெளிவாக கூற வேண்டும். இந்நடத்தையைப் பற்றி கவலையடைந்திருப்பதாகவோ காட்டிக் கொள்வதோ அல்லது இதுபற்றி பிறரிடம் சொல்வதோ கூடாது. கூட்டுக் குடும்பமாக இருந்தால் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக குழந்தையின் இந்நடத்தை மீது கவனம் செலுத்துவதை புறக்கணிக்க வேண்டும். மாறாக குழந்தை இவ்வாறு நடந்து கொள்வதை குறைக்க வேண்டி அக்குழந்தையை அடிப்பதும் ஏசுவதும் குழந்தையின் கோப நடத்தையை அதிகப்படுத்தவே செய்யும்.

Friday, June 11, 2010

குழந்தைகள் எப்போதும் மூக்கை குடைவது ஏன்?

நன்கு படித்து திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் பணி புரியும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஒர் பெண் தன் குழந்தையிடம் பல கெட்ட பழக்கங்கள் காணப் படுவதால் மிகுந்த மனக்கவலை அடைந்திருப்பதாக தெரிவித்தார். நான்கு வயது நிரம்பிய அவரின் மகன் அடிக்கடி மூக்கில் விரலை நுழைத்து குடைந்து கொண்டிருக்கின்றான் என்பதும் அப்பையனிடம் காணப்படும் பல கெட்ட பழக்கங்களில் ஒன்று என்றும் அப்பெண் தெரிவித்தார். யார் இருக்கிறார்கள், யார் பார்க்கிறார்கள் என்ற கவலை இன்றியும், வீடு, பொது இடம் என எங்கும் அடிக்கடியும் தன் மூக்கை குடைந்து கொண்டிருக்கும் அப்பையனின் நடவடிக்கையில் அத்தாய் மனமுடைந்து போய் காணப்பட்டார். இக்கெட்ட பழக்கத்தை போக்க என்ன செய்வதென்று தனக்கு தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

வசதியான வீட்டுக் குழந்தையானாலும், ஏழைக் குழந்தையானாலும், படித்தவரின் குழந்தையானாலும், படிக்காதவரின் குழந்தையானாலும் சிறு வயதில் மூக்கை குடைவது இயல்பானதே. பிறரை பார்த்தே இப்பழக்கத்தை முதன் முதலாக குழந்தைகள் கற்றுக்கொள்கின்றன. வீட்டில் பெற்றோரோ அல்லது வேறு யாரேனுமோ மூக்கை குடைவதை பார்க்கும் குழந்தை தானும் அதுபோலவே செய்ய ஆரம்பிக்கின்றது. மூக்கை குடையும் போது, தோலை சொரியும் போது கிடைக்கும் சுகத்தைப் போல் ஒருவித இன்பம் கிடைக்கும். இவ்வின்பத்தை அனுபவித்து பழகிய குழந்தை தொடர்ந்து மூக்கை குடைந்து கொண்டே இருக்கும். மூக்கை குடைவதற்கு வேறு எந்த காரணமும் கிடையாது. வளர்ச்சியடையும் போது பிறர் முன்னிலையில் மூக்கை குடையக் கூடாது என்று விவரம் தெரிந்து குழந்தைகள் தானாகவே மூக்கை குடைவதை நிறுத்திக் கொள்வர்.

மூக்கில் புண் உண்டாகும் வரை குடைந்து கொண்டே இருந்தாலோ அல்லது குடைந்த கையை கழுவாமலேயே திண்பண்டங்களை உட்கொண்டாலோ தான் இந்நடத்தையை ஓர் பிரச்சனை என எடுத்துக் கொள்ள வேண்டும். மாறாக பிறர் முன்னிலையில் தன் குழந்தை மூக்கை குடைந்து கொண்டிருக்கிறதே என எண்ணி பெற்றோர் அவமானமும் கவலையும் அடையத் தேவையில்லை ஏனென்றால் எல்லா குழந்தைகளுக்கும் இப்பழக்கம் உள்ளதால் யாரும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

மூக்கை குடையும் பழக்கத்தை குழந்தைகள் தீவிரமாக கொண்டிருந்தால் பெற்றோர் “மூக்கை குடைவது ஓர் தீய பழக்கம்” என்று குழந்தைகளுக்கு அடிக்கடி சொல்லிவர வேண்டும். அவர்கள் மூக்கை குடையும் போது அன்போடு விரல்களை எடுத்துவிட வேண்டும். குழந்தைகள் முன் பெரியவர்கள் மூக்கு குடைவதை அடியோடு நிறுத்தி விட வெண்டும். தொடர்ந்து இவைகளை கடைபிடித்து வந்தால் விரைவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாறாக பெற்றோர் அவமான உணர்ச்சி கொண்டு மூக்கு குடையும் குழைந்தைகளை அடிப்பதாலோ, திட்டுவதாலோ அல்லது பிறவகை தண்டனைகளை கொடுப்பதாலோ எந்தவித பயனும் ஏற்படாது.

Thursday, June 10, 2010

நன்றாக படிக்கும் குழந்தை படித்ததை எழுத சங்கடப்படுவது ஏன்?


உங்கள் குழந்தை எவ்வளவு படிக்கக் கொடுத்தாலும் சலிக்காமல் படித்துவிட்டு விளையாடப் போய்விடும். ஆனால் எழுத்து வேலை கொடுத்தால் எழுத சங்கடப்பட்டுக் கொண்டு, மிகக் குறைவாக எழுதிவிட்டு விளையாடப் போய் விடுகிறதென்றால் அதற்கு சில காரணங்கள் இருக்கலாம்.

சிலர் குழந்தைகளை மிக இளம் வயதிலேயே பள்ளியில் சேர்த்து விடுவர். உதாரணமாக 2½ வயதிலேயே பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் உண்டு. அவ்வாறு மிக இளம் வயதிலேயே பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு பெண்சிலைப் பிடித்து எழுதும் வலிமை விரல்களில் இருக்காது. பள்ளியில் அக்குழந்தைகளுக்கு அதிக எழுத்து வேலைகள் கொடுக்கப்பட்டால், விரல்களில் வலி ஏற்பட்டு எழுத்துப் பணிகளின் மீது இளம் வயதிலேயே வெறுப்பு உண்டாகிவிடும். அதனால் பின்னர் அவர்கள் எழுதுவதை தவிர்ப்பர். அவர்களின் கையெழுத்தும் அழகாக இருக்காது.

சில குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் தொடக்கத்தில் அதிகமாக விளையாட அனுமதிப்பர். சிறு வயதில் விளையாட விடுவோம். பின்னர் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு செல்லும் போது அதிக நேரம் படித்தால் போதும் என்ற எண்ணத்திலேயே அவ்வாறு பெற்றோர்கள் நடந்து கொள்கின்றனர். ஆனால் ஆரம்ப காலத்தில் நன்கு விளையாடிப் பழகிய குழந்தை நீண்ட நேரம் ஓரிடத்தில் அமர்ந்து எழுதும் திறமையை வளர்த்துக் கொள்ளாமல் எழுத்துப் பணிகளை புறக்கணித்து விட்டு விளையாட்டிலேயே ஆர்வம் காட்டும்.

இக்குறையைப் போக்க பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்:

தன் குழந்தை எழுதுவதை தவிர்க்கிறது என்று அதை பிறரிடம் சொல்லி கவலைப்படுவதை தவிர்த்து விட்டு சிறிது சிறிதாக எழுதும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும். 10 நிமிடங்கள் எழுதி முடித்தவுடன் சிறிது ஓய்வு கொடுத்து விட்டு மிண்டும் எழுதுமாறு குழந்தையை பணிக்க வேண்டும்.

குழந்தை எழுதும் சமயத்தில் ‘நீ எழுதிக் கொண்டிரு, ஒரு சிறிய வேலையை முடித்து விட்டு வந்து விடுகிறேன்’ என்று பெற்றோர் போய்விடக்கூடாது. குழந்தை எழுதி முடிக்கும் வரை அதன் அருகிலேயே அமர்ந்திருக்க வேண்டும். பெற்றோர் வேறு வேலைக்கு சென்று விடுவதாலேயே குழந்தையும் விளையாட ஓடிவிடுகிறது.

எழுதும் இடத்தில் பிற எந்த பொருட்களும் இல்லாதவாறு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் மேஜை முழுவதும் புத்தகங்களையும் பொருட்களையும் பரப்பி வைத்துக் கொண்டு எழுதுமாறு பெற்றோர் கட்டாயப்படுத்துகின்றனர். அவ்வாறான சூழ்நிலையில் எழுதும் குழந்தைகளின் கவனம் பல்வேறு பொருட்களின் மீது குவிந்து எழுத்துப் பணி தடைபடும்.

பெற்றோர் குழந்தைகளுக்கு அழகிய, மனதை கவரும் விதத்திலான எழுது பொருட்களை வாங்கி அன்பளிப்பாக கொடுக்க வேண்டும். புதுவகையான எழுது பொருட்களை வாங்கிக் கொடுப்பது குழந்தையின் எழுதும் ஆர்வத்தை தூண்டும்.

Wednesday, June 2, 2010

ஏதோ ஒரு பாடத்தில் மட்டும் ஆர்வம் அதிகமாக இருப்பது ஏன்?


ஒரு குழந்தை கணக்கு பாடத்தில் ஆர்வம் அதிகம் கொண்டதாகவும் மொழி, வரலாறு போன்ற பாடங்களில் ஆர்வம் குறைந்தும் காணப்படும். இன்னொரு குழந்தை வரலாறு பாடத்தில் ஆர்வம் கொண்டதாகவும் பிற பாடங்களில் ஆர்வம் குறைந்தும் காணப்படும். இதற்கு காரணம் அவர்களின் நுண்ணறிவாகும்.

மனிதனின் நுண்ணறிவு பல கூறுகளால் ஆக்கப்பட்டது. நுண்ணறிவைப் பற்றிய உளவியல் கோட்பாடு ஒன்றின் படி நம் அனைவரின் நுண்ணறிவும் இரண்டு கூறுகளால் ஆக்கப்பட்டது என கொள்ளப்படுகிறது. வாழ்வதற்கு தேவையான அடிப்படை அறிவை வழங்கும் பொதுக் காரணி ஒன்றும், ஏதேனும் ஓர் சிறப்பு திறமைக்கு காரணமான சிறப்பு காரணி ஒன்றும் நம் நுண்ணறிவில் உள்ளது. இதன் படி பள்ளி சென்று படிப்பதற்கு தேவையான பொது நுண்ணறிவு காரணியும் அதோடு ஏதோ ஒரு பாடத்தில் சிறந்து விளங்கக் காரணமாக சிறப்பு காரணியும் எல்லா குழந்தைகளுக்கும் இருக்கும். அதன் காரணமாகவே எல்லா பாடங்களையும் படிப்பதோடு கணக்கு, அறிவியல் அல்லது மொழிப்பாடம் என ஏதோ ஒன்றில் மாணவர்கள் அதிக ஆர்வமும் தனித்திறமையும் பெற்று விளங்குகிறார்கள். சில குழந்தைகள் எந்த பாடத்திலும் ஆர்வமில்லாமல் ஒவியம், இசை, நடனம் சமூக சேவை என வேறு எதேனும் விஷயங்களில் ஆர்வம் கொண்டிருக்கலாம்.

குழந்தைகளின் ஆர்வத்தை கண்டறிய உளவியல் நாட்டச் சோதனைகள் பல உருவாக்கப்பட்டுள்ளன. இந்நாட்டச் சோதனைகள் குழந்தைகள் என்ன துறையில் அல்லது பாடத்தில் ஆர்வம் உள்ளவர்களாக விளங்குகிறார்கள் என்பதை கண்டறியும் திறன் படைத்தவை. அதைப் போன்ற நாட்டமுள்ள பாடங்களில் கவனம் செலுத்திப் படித்தால் பிற்காலத்தில் என்னென்ன பணிக்கு செல்லலாம் என்று தெரிந்து கொள்ள வசதியாக “பணி விவர அகராதிகளும்” உருவாக்கப்பட்டுள்ளன. வளர்ந்த நாடுகளில் தங்கள் குழந்தைகள் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே இச்சோதனைகளுக்கு அவர்களை உட்படுத்தி ஆர்வங்களை கண்டறிந்து விடுகிறார்கள் பின் அதற்கேற்ற படிப்புகளையும் வேலைகளையும் தேர்ந்தெடுக்க குழந்தைகளுக்கு பெற்றோர் உதவி செய்கிறார்கள்.

சிலர் நன்றாக நிறைய பேசும் இயல்பு கொண்டவர்களாக இருப்பர். அவர்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் நாலு பேரிடம் பேசிக்கொண்டிருக்கவே விருப்பப்படுவர். பேசாமால் இருக்கச் சொன்னால் அவ்வாறிருக்க அவர்களால் முடியாது. அதைப் போன்றே பேசாமல் அமைதியாக இருக்கும் சுபாவம் கொண்டவர்களை கலகலவென பேச கட்டாயப்படுத்தினால் அது அவர்களால் முடியாது. இதைப் போன்றதே பொறியியல் துறைகளில் ஆர்வமில்லா ஒருவரை அத்துறை சார்ந்த படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துவதும்.
தற்போது பெற்றோர்கள் நாட்டில் என்ன துறையை எல்லோரும் தெர்ந்தெடுத்து படிக்கிறார்களோ அதே துறையை தம் குழந்தைகளையும் தேர்ந்தெடுத்து படிக்க வெண்டும் என கட்டாயப்படுத்துகிறார்கள். அவ்வாறு கட்டாயப்படுத்துவது முட்டாள்தனம். எந்த துறையை சார்ந்த படிப்பை தேர்ந்தெடுத்து படித்தாலும் அதில் முன்னேற வாய்ப்புகள் உள்ளன. அதை புரிந்து கொள்ளாமல் ஆர்வமில்லா குழந்தையை இலட்சக்கணக்கில் பணத்தை நன்கொடையாக கொடுத்து குறிப்பிட்ட பாடப்பிரிவில் சேர்த்து விட்டாலும் அவர்களால் அதில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற முடியாது. சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும்!.

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP