உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Sunday, July 25, 2010

குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா?


பெண்களின் கல்வியறிவு அதிகமாகி இருப்பதாலும், அதிகமான பெண்கள் வேலை வாய்ப்பை தேடிக் கொண்டு திருமணம் செய்து கொள்வதாலும், கூட்டுக் குடும்ப முறை மெல்ல சிதைந்து தனிக்குடும்பங்கள் அதிகரித்து விட்ட காரணத்தினாலும் நீண்டகாலமாக வெளிநாடுகளில் மட்டுமே பிரபலமாக இருந்த குழந்தை காப்பகங்கள் நம்நாட்டிலும் தற்போது மிகவும் பிரபலம். தாய் தந்தையரை விட்டு வெகுதொலைவில் வாழும் ஆண் – பெண் இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தைகளை காப்பகங்களில் விட்டு செல்வதைத் தவிர மாற்று வழிகள் தற்போது இல்லை என்றும் நிலை. சிகரெட் குடிப்பதை உடல் நலத்திற்கு தீங்கானது என்ற அறிவிப்பை படித்துக்கொண்டே புகைபிடிக்கும் ஒருவரின் மனநிலை எவ்வளவு குழப்பத்தில் இருக்குமோ அதே அளவு குழப்பத்துடன் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை காப்பகங்களில் விட்டு விட்டு வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

காப்பக குழந்தைகளின் தாய்மார்களுகு உள்ள பொதுவான பயங்கள் பின்வருமாறு:

ஒரு நாளில் அதிகமான நேரம் தன்னைவிட்டு பிரிந்திருந்தால் தன் மீது உள்ள பாசம் குறைந்து விடுமோ?

குழந்தைகளின் அறிவு வளர்ச்சியும் பேச்சு வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுவிடுமோ?

நம் குழந்தை பிற குழந்தைகளிடம் இருந்து தவறான பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொண்டு விடுமோ?

பணத்துக்காக குழந்தைகளை கவணிக்காமல் விட்டு விட்டு வேலைக்குச் செல்வது சரியா? தவறா?

மேற்கண்ட சந்தேகங்கள் குழந்தைகளை காப்பங்களில் விடும் பெற்றோர்களை கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும்.

குழந்தைகளை வீட்டில் வைத்து வளர்க்கும் போது பெற்றோர் அவர்களுடன் அடிக்கடி பேசவும், அவர்களுடன் விளையாடவும், அவர்களின் தேவைகளை உடனுக்குடன் கவணித்து நிறைவேற்றவும் முடியும். உணவளிக்கும் போதும் உடைமாற்றும் போதும், உறங்கவைக்கும் போதும் குழந்தையுடன் அன்னை எதையேனு பேசிக்கொண்டே காரியங்களை கவணிப்பார். இதன் மூலம் குழந்தைகளின் அறிவு வளர்ச்சி, புரிந்து கொள்ளும் திறன் மற்றும் பேச்சுத்திறன் ஆகியவை இயல்பாக வளர்ச்சி அடையும். பல காப்பகங்களில் ஒருவர் பல குழந்தைகளை கவணிக்கும் நிலை உள்ளது. அக்காப்பகங்களில் வளரும் குழதைகளுக்கு மேற்சொன்ன வளர்ச்சிகள் இயல்பாக இராது.

குழந்தைகள் எவ்வளவு நேரம் காப்பகங்களில் இருந்தாலும் அன்னை மீதுள்ள பாசப்பினைப்பு குறைய வாய்ப்பில்லை. அன்னையர் குழந்தைகளை கவணிக்கும் போது உணர்ச்சிமயமாகி அன்பைப் பொழிவர் குழந்தைகளை ஆர்வமூட்ட குழந்தைகளே எதிர்பார்க்கா வண்ணம் வெவ்வேறு விதமாக நடந்து கொள்வர். அதனால் அன்னையருக்கும் குழந்தைக்குமான உறவு சுவாரசியமாக இருக்கும். காப்பகங்களில் கவணித்துக்கொள்ளும் தாதியர் குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட வேலையை செய்வதால் அவர்களின் நடவடிக்கைகள் உணர்ச்சி குன்றியதாகவும் இயந்திரத்தனமாகவும் இருக்கும். அவ்வாறில்லாமல் நல்ல தாதியராக இருந்தாலும் கூட குழந்தை அன்னையோடும் தாதியோடும் சேர்ந்த பாசப்பிணைப்பை வளர்த்துக்கொள்ளுமே தவிர அன்னையிடம் ஒருபோதும் பாசம் குறைய வாய்ப்பில்லை. மனதில் அலுப்பு ஏற்படும் போதும், உடல் சோர்வடையும் போதும் மனதில் ஏதேனும் கலக்கம் ஏற்படும் போதும் குழந்தை தானாக தாயைத் தேடி வருவதிலிருந்து அன்னை மீதுள்ள பாசத்தை தெரிந்து கொள்ளலாம்.

கோபமுடன் நடந்துகொள்வது, பிடிவாத குணம், அவளவுக்கு அதிகமாக மற்றவரை சார்ந்திருப்பது ஆகிய குணங்களை காப்பக குழந்தை பிற குழந்தைகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது. குழந்தைகள் வீட்டில் இந்த குணங்களுடன் நடந்து கொண்டால் உடனுக்குடன் கண்டிகப்படுவர். ஆனால் காப்பாங்களில் அவ்வாறு கண்டித்து தேவையற்ற நடத்தைகளை திருத்த வாய்ப்பு குறைவு.

சூழ்நிலைக் கட்டாயத்தால் குழந்தைகளை காப்பகங்களில் விட்டு விட்டு வேலைக்கு செல்வது தவறாகாது. சிறப்பாக நடத்தப்படும் முழுமையான கவணிப்புள்ள காப்பகங்களில் குழந்தைகளை விடுவது நன்மையைக் கொடுக்கும். மூன்று அல்லது நான்கு குழந்தைகளை ஒருவர் கவணித்துக் கொள்ளும் காப்பகங்களிலேயே குழந்தைக்கு முழுமையாக கவணிப்பு கிடைக்க வாய்ப்புண்டு. அவ்வாறான காப்பகங்களில் வளரும் குழந்தைகள் பலவிதமான தூண்டுதல்களைப் பெற்று புதிய திறன்களை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புகளைப் பெறும். வீட்டில் வளர்க்கப்படும் குழந்தையைவிட சிறந்து விளங்கும்.

ஒரு வேளை முழுமையான கவணிப்பற்ற காப்பகங்களில் குழந்தை விடப்பட்டு வளர்ச்சியில் பின்னடைவு இருந்தால் உடனடியாக அக்குழந்தையை வீட்டில் வளர்க்க வேண்டும். அது முடியாது என்றால் வேறு நல்ல காப்பகத்திற்கு மாற்றிவிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குழந்தையின் வளர்ச்சி முழுமையாக இருக்க வாய்ப்புகள் உண்டு.

Tuesday, July 20, 2010

உங்களின் சிறு குழந்தை அதிக துறுதுறுப்புடனும் கவனக்குறைவுடனும் உள்ளதா?


குழந்தைகள் ஓடியாடி விளையாடிக் கொண்டு துறுதுறுவென இருப்பது நன்று. அது அவர்களின் உடல் நலத்தையும் அறிவு வளர்ச்சியையும் நமக்கு உணர்த்துவதாக அமையும். ஆனால் சில குழந்தைகள் மிக அதிக துறுதுறுப்புடனும், மிகுந்த கவனக்குறைவுடனும் காணப்படுவர். இது ஒரு உளவியல் நோயாகும்.

· பள்ளியில் கொடுக்கப்படும் படிப்பு தொடர்பான வேலைகளை அதிக பிழையுடன் செய்தல்.
· ஒரு விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே அதை பாதியில் விட்டு விட்டு அடுத்த விளையாட்டில் ஈடுபடுதல்
· பெற்றோர்களும் பிறரும் என்ன சொல்கிறார்கள் என்று காது கொடுத்து கேட்காமல் தன் போக்கில் விளையாடுதல்.
· அறிவுரைகளை பின்பற்றாமல் இருத்தல்.
· எந்த வேலைகளையும் முடிக்காமல் அறைகுறையாக விட்டுவிடுதல்.
· தன் பொருட்களை அடிக்கடி தொலைத்துவிடுதல்.
· அன்றாட வேலைகளை கூட மறந்துவிடுதல்.
· சுலபமாக கவணத்தை சிதற விடுதல்.
· எப்போதும் ஓடிக் கொண்டும் எதன் மீதாவது ஏறிக்கொண்டும் இருத்தல்.
· பள்ளிக்குப் போகும் குழந்தையாக இருந்தால் தன் இடத்தில் அமறாமல் ஓடிக் கொண்டு இருத்தல்.
· ஏதாவது கேள்வி கேட்கும் போது கேள்வியை முடிக்கும் முன்பே பதில் கூறுதல்.
· வரிசையில் காத்திருக்காமல் அங்குமிங்கும் ஓடுதல், பொறுமையிழந்து காணப்படுதல்.

இது போன்ற அறிகுறிகள் தொடர்ந்து காணப்பட்டால் இந்நோய்க்கு கவணக்குறைவும்-மீச்செயலும் கலந்த நோய் (Attention-Deficit-Hyperactive Disorder -ADHD) என்று பெயர். பொதுவாக இந்நோய் 7 வயதிற்கு முன்பாகவே தொடங்கிவிடும். பள்ளி செல்லும் குழந்தைகளில் ஐந்து சதவீதம் பேருக்கு காணப்படும் இந்நோய் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளிடமே அதிகம் காணப்படுகிறது.

இக்குழந்தைகள் அதிக கவணக் குறைவுடன் காணப்படுவர். தன் மனம்போன போக்கில் விளையாடிக்கொண்டும். ஏதேனும் காரியங்களை செய்து கொண்டும் இருப்பர். எப்போதும் அளவுக்கதிகமான வேகத்துடன் அதிகமான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பர். பெற்றோர்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்க மாட்டார்கள். சூழ்நிலையில் உள்ள தூண்டுதல்களால் மிக எளிதாக கவணச்சிதைவுக்கு உட்படுவர். இக்குழந்தைகளுக்கு செய்யும் செயல்களோடு ஒன்றிப்போகும் ஆற்றல் இராது. எச்செயலையும் தொடங்கி முடிக்குமளவுக்கு தனித்திறமை இல்லாத இக்குழந்தைகள் சமூகத்திறமையும், கல்வி கற்கும் திறமையும் குன்றியவர்களாக இருப்பர். பிற குழந்தைகள் விளையாடும் போது இவர்கள் குறுக்கீடு செய்வதால் மற்ற குழந்தைகளால் இவர்கள் புறக்கணிக்கப்படுவர்.

இக்குழந்தைகளின் நடத்தையை சரிபடுத்த மிகுந்த பொறுமையும் மதிநுட்பகும் அவசியம். மூளையின் செயற்குறைபாட்டினாலும் உடலியல் காரணங்களாலும் இந்நோய் ஏற்பட்டாலும் கூட தொடர்ந்து மருந்துகளைக் கொடுத்து குணப்படுத்த முயற்சிப்பது நல்லதல்ல. அதற்கு மாறாக அவர்களின் நடத்தைகளை மாற்றுவது நல்லது. இக்குழந்தைகள் அமைதியான, நாம் விரும்பும் நடத்தையை வெளிப்படுத்தும்போது அவைகளை ஊக்குவிக்க வேண்டும். விரும்பத்தகாத நடத்தைகளை கண்டும் காணாதது போல் அலட்சியப்படுத்த வேண்டும். அவ்வாறு நடந்து கொள்வது நல்ல நடத்தைகளை அதிகப்படுத்த உதவும்.

இக்குழந்தைகளை பெற்றோர்கள் தானாக விளையாடிக் கொண்டிருக்கிறது என்று நினைத்து விட்டுவிடாமல் அடிக்கடி அவர்களின் செயல்களில் குறுக்கிட்டு அவர்களை கவணிக்க வேண்டும். அவர்களின் நடத்தையை சரிசெய்ய வேண்டும். இக்குழந்தைகள் பிற குழந்தைகளோடு விளையாடும்போது பெற்றோர் அருகில் இருந்து மற்றவர்களைப் போல விளையாட நெறிப்படுத்த வேண்டும்.

பிறரோடு பேசுவது, பழகுவது போன்ற சமூகத்திறன்களை இக்குழந்தைகளுக்கு தொடர்ந்து கற்பித்து வர வேண்டும். மேலும் அவர்களை தான் நடந்து கொள்ள வேண்டிய விதம் பற்றி வாய்விட்டு கூறச் செய்ய வேண்டும். உதாரணமாக “நான் வேகமாக ஓடி கீழே விழுந்து விடுகிறேன்”, இனி மெதுவாக ஓட வேண்டும், அம்மா அழைத்தால் திரும்பிப் பார்ப்பதில்லை, இனி திரும்பிப் பார்க்க வேண்டும். என தனக்குத் தானே பேசி தன் நடத்தையை மேம்படுத்த இக்குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும்.

மற்ற குழந்தைகளின் பெற்றோர்களை விட கவணக்குறைவும் மீச்செயலும் கலந்த நோய் கொண்ட குழந்தைகளின் பெற்றோர் அதிக மன அழுத்தம் கொண்டவர்களாக காணப்படுகின்றனர். இன்னும் சில குடும்பத்தில் தாங்கள் செய்யும் எல்லாவற்றிற்க்கும் இக்குழந்தைகளே காரணம் எனக்கூறி இவர்களை பலிகடாவாக்கும் பெற்றோர்களும் உண்டு. எனவே பெற்றோர்கள் உளவியல் ஆலோசனை பெறுவது கட்டாயம். அத்தகைய ஆலோசனை குழந்தையின் நோயை விரைவில் குணமாக்க உதவும்.

நோய் மிகத் தீவிரமாக உள்ள குழந்தைகளுக்கு சிகிச்சையளித்து கல்வியும் கற்பிக்க சிறப்பு பள்ளிகள் உள்ளன. உளவியல் முறைப்படி நடத்தப்படும் இப்பள்ளிகளிலும் சேர்த்து குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கலாம். ஆனால் அந்த அளவுக்கு நோய் தீவிரமானதாக இருக்க வேண்டும். சேர்க்கப்படும் சிறப்புப் பள்ளிகள் தரமானவையாகவும் இருக்க வேண்டும்.

Monday, July 19, 2010

குழந்தைகளுக்கு எவ்விதமான உடைகளை அணிவிக்க வேண்டும்?


ஆள் பாதி; ஆடை பாதி என்பது பெரியவர்களுக்கு மட்டுமல்ல. நம் குழந்தைகளுக்கும் பொருந்தும். நல்ல ஆடைகளை அணிந்திருக்கும் குழந்தைகள் மற்றவர்களை கவரும் விதத்தில் நல்ல தோற்றத்தினை பெற்றிருக்கும்

நம் குழந்தைகளுக்கு நாகரீகமான ஆடைகளை அணிவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பல பெற்றொர்கள் குழந்தைகள் தங்கள் உடலை காத்துக் கொள்ளத்தான் ஆடை என்பதை மறந்து பொருத்தமில்லாத உடைகளை அணிவித்து அவர்களை அவஸ்தைக்கு உள்ளாக்குகிறார்கள். கையும் முதுகும் இல்லாத கவுன் ஒன்றை அணிந்து கொண்டு குளிர்காலத்தில் நடுங்கிக்கொண்டே செல்லும் குழந்தையை நீங்கள் பார்த்திருக்கலாம். முழுக்கை பணியனும் காலைத் தடுக்கிவிடும் மிக நீள பேண்டும் அணிந்து கொண்டு செல்லும் பையன்கள் பலர். இத்தகைய குழந்தைகளின் பெற்றோர் தங்கள் கெளரவத்திற்காகவே குழந்தைகளுக்கு இது போன்ற ஆடைகளை அணிவித்து வசதிக் குறைவை உண்டாக்குகிறார்கள்.

குழந்தைகளுக்கு என வாங்கப்படும் ஆடைகளின் நிறம் அவர்களின் இயற்கையான நிறத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். உடலுக்கு பொருத்தமில்லாத நிறங்களில் உடைகளைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. மிக விலையுயர்ந்த ஆடைகளை வாங்குகிறோம் என்ற எண்ணத்தில் இரண்டு மூன்று வருடங்களுக்கு அணிவிக்க வசதியாக பெரிய அளவு துணிகளை வாங்குவதையும், உடை தைப்பதையும் தவிர்த்து அந்தந்த வயதுக்கேற்ற அளவு உடைகளையே வாங்கவும் தைக்கவும் வேண்டும்.

வீட்டில் உள்ள சகோதரர்கள் அனைவருக்கும் அல்லது சகோதரிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியான உடைகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு ஓரே மாதிரியான உடைகள் பொருத்தமில்லாமல் போவதோடு குழந்தைகளின் தனித்தன்மையையும் பாதிக்கும்.

சில பெற்றொர்கள் தன் முதல் குழந்தையின் ஆடைகள் நன்றாகவே இருக்கின்றன என்பதால் அதையே தங்கள் இரண்டாவது குழந்தைக்கும் அணிவிக்கின்றனர். இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். முதல் குழந்தையின் உடைகளை இரண்டாவது குழந்தைக்கு அணிவிப்பதில் சில உளவியல் பிரச்சனைகள் உள்ளன. எந்த குழந்தையும் தன் உடைகளை தன் கண் முன்னே பிறர் அணிவதை விரும்பாது. அவ்வாறு தன் உடைகளை பிற குழந்தை அணிந்திருப்பதை பார்க்கும் குழந்தை தனக்குள்ள முக்கியத்துவம் பறிபோய் விட்டதாக எண்ணிக் கொள்ளும். ஆண் குழந்தையின் உடைகளை பெண் குழந்தைக்கு அணிவிப்பதும், பெண் குழந்தைகளின் உடைகளை ஆண் குழந்தைக்கு அணிவிப்பதும் பால் சார்ந்த நடந்தைகளை கற்றுக் கொள்வதில் ஊறுபாடுகளை உண்டாக்கும். ஆண் உடைகளையே அணிந்து வளரும் பெண் குழந்தை ஆண் தன்மையுடன் வளர வாய்ப்புண்டு. அதைப்போன்றே பெண் உடைகளை அணிந்து வளர்க்கப்பட்ட எண்ணற்ற ஆண் குழந்தைகள் பிற்காலத்தில் பெண்களாகவே மாறிவிட்ட நிகழ்வுகளும் உண்டு. எனவே உடைகள் நன்றாக இருக்கின்றன என்பதற்காக அவைகளை அணிவித்து உள்ளத்திலும் வளர்ச்சியிலும் குறைபாடுகளை உண்டாக்கக் கூடாது.

நவீனம் என்ற பெயரில் சிறு குழந்தைகளின் உடல் தெரியும் உடைகளை தேர்ந்தெடுக்கக் கூடாது. உடலை சரியான முறையில் மறைக்காத இவ்வுடைகள். உடல் நலக் கேட்டை உண்டாக்கும். பிற்காலத்தில் சமுதாயத்திற்கு பொருந்தாத கவர்ச்சியான உடைகளை அணிய இதுவே அடிப்படை காரணமாகவும் அமையலாம்.

இறுக்கமாகவும் இல்லாத மிகத் தளர்வாகவும் இல்லாத, மிகமிக விலையுயர்ந்ததாகவும் இல்லாத தரக்குறைவாகவும் இல்லாத முழு உடலையும் மறைத்து தொந்தரவு தராத, உடல் முழுவதையும் வெளிக்காட்டாத நல்ல உடைகளையே குழந்தைகளுக்கு என வாங்க வேண்டும்.

நல்ல உடைகளை அணிவித்து உடை பற்றிய விழிப்புணர்வை சிறுவயதிலேயே குழந்தைகளிடத்தில் ஏற்படுத்தி விட்டால் அது பிற்காலத்தில் நேர்த்தியாக உடையணிந்து வாழ்க்கையில் மதிப்பும் மரியாதையுடனும் வாழ அவர்களுக்கு உதவும்.

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP