உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Tuesday, July 20, 2010

உங்களின் சிறு குழந்தை அதிக துறுதுறுப்புடனும் கவனக்குறைவுடனும் உள்ளதா?


குழந்தைகள் ஓடியாடி விளையாடிக் கொண்டு துறுதுறுவென இருப்பது நன்று. அது அவர்களின் உடல் நலத்தையும் அறிவு வளர்ச்சியையும் நமக்கு உணர்த்துவதாக அமையும். ஆனால் சில குழந்தைகள் மிக அதிக துறுதுறுப்புடனும், மிகுந்த கவனக்குறைவுடனும் காணப்படுவர். இது ஒரு உளவியல் நோயாகும்.

· பள்ளியில் கொடுக்கப்படும் படிப்பு தொடர்பான வேலைகளை அதிக பிழையுடன் செய்தல்.
· ஒரு விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே அதை பாதியில் விட்டு விட்டு அடுத்த விளையாட்டில் ஈடுபடுதல்
· பெற்றோர்களும் பிறரும் என்ன சொல்கிறார்கள் என்று காது கொடுத்து கேட்காமல் தன் போக்கில் விளையாடுதல்.
· அறிவுரைகளை பின்பற்றாமல் இருத்தல்.
· எந்த வேலைகளையும் முடிக்காமல் அறைகுறையாக விட்டுவிடுதல்.
· தன் பொருட்களை அடிக்கடி தொலைத்துவிடுதல்.
· அன்றாட வேலைகளை கூட மறந்துவிடுதல்.
· சுலபமாக கவணத்தை சிதற விடுதல்.
· எப்போதும் ஓடிக் கொண்டும் எதன் மீதாவது ஏறிக்கொண்டும் இருத்தல்.
· பள்ளிக்குப் போகும் குழந்தையாக இருந்தால் தன் இடத்தில் அமறாமல் ஓடிக் கொண்டு இருத்தல்.
· ஏதாவது கேள்வி கேட்கும் போது கேள்வியை முடிக்கும் முன்பே பதில் கூறுதல்.
· வரிசையில் காத்திருக்காமல் அங்குமிங்கும் ஓடுதல், பொறுமையிழந்து காணப்படுதல்.

இது போன்ற அறிகுறிகள் தொடர்ந்து காணப்பட்டால் இந்நோய்க்கு கவணக்குறைவும்-மீச்செயலும் கலந்த நோய் (Attention-Deficit-Hyperactive Disorder -ADHD) என்று பெயர். பொதுவாக இந்நோய் 7 வயதிற்கு முன்பாகவே தொடங்கிவிடும். பள்ளி செல்லும் குழந்தைகளில் ஐந்து சதவீதம் பேருக்கு காணப்படும் இந்நோய் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளிடமே அதிகம் காணப்படுகிறது.

இக்குழந்தைகள் அதிக கவணக் குறைவுடன் காணப்படுவர். தன் மனம்போன போக்கில் விளையாடிக்கொண்டும். ஏதேனும் காரியங்களை செய்து கொண்டும் இருப்பர். எப்போதும் அளவுக்கதிகமான வேகத்துடன் அதிகமான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பர். பெற்றோர்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்க மாட்டார்கள். சூழ்நிலையில் உள்ள தூண்டுதல்களால் மிக எளிதாக கவணச்சிதைவுக்கு உட்படுவர். இக்குழந்தைகளுக்கு செய்யும் செயல்களோடு ஒன்றிப்போகும் ஆற்றல் இராது. எச்செயலையும் தொடங்கி முடிக்குமளவுக்கு தனித்திறமை இல்லாத இக்குழந்தைகள் சமூகத்திறமையும், கல்வி கற்கும் திறமையும் குன்றியவர்களாக இருப்பர். பிற குழந்தைகள் விளையாடும் போது இவர்கள் குறுக்கீடு செய்வதால் மற்ற குழந்தைகளால் இவர்கள் புறக்கணிக்கப்படுவர்.

இக்குழந்தைகளின் நடத்தையை சரிபடுத்த மிகுந்த பொறுமையும் மதிநுட்பகும் அவசியம். மூளையின் செயற்குறைபாட்டினாலும் உடலியல் காரணங்களாலும் இந்நோய் ஏற்பட்டாலும் கூட தொடர்ந்து மருந்துகளைக் கொடுத்து குணப்படுத்த முயற்சிப்பது நல்லதல்ல. அதற்கு மாறாக அவர்களின் நடத்தைகளை மாற்றுவது நல்லது. இக்குழந்தைகள் அமைதியான, நாம் விரும்பும் நடத்தையை வெளிப்படுத்தும்போது அவைகளை ஊக்குவிக்க வேண்டும். விரும்பத்தகாத நடத்தைகளை கண்டும் காணாதது போல் அலட்சியப்படுத்த வேண்டும். அவ்வாறு நடந்து கொள்வது நல்ல நடத்தைகளை அதிகப்படுத்த உதவும்.

இக்குழந்தைகளை பெற்றோர்கள் தானாக விளையாடிக் கொண்டிருக்கிறது என்று நினைத்து விட்டுவிடாமல் அடிக்கடி அவர்களின் செயல்களில் குறுக்கிட்டு அவர்களை கவணிக்க வேண்டும். அவர்களின் நடத்தையை சரிசெய்ய வேண்டும். இக்குழந்தைகள் பிற குழந்தைகளோடு விளையாடும்போது பெற்றோர் அருகில் இருந்து மற்றவர்களைப் போல விளையாட நெறிப்படுத்த வேண்டும்.

பிறரோடு பேசுவது, பழகுவது போன்ற சமூகத்திறன்களை இக்குழந்தைகளுக்கு தொடர்ந்து கற்பித்து வர வேண்டும். மேலும் அவர்களை தான் நடந்து கொள்ள வேண்டிய விதம் பற்றி வாய்விட்டு கூறச் செய்ய வேண்டும். உதாரணமாக “நான் வேகமாக ஓடி கீழே விழுந்து விடுகிறேன்”, இனி மெதுவாக ஓட வேண்டும், அம்மா அழைத்தால் திரும்பிப் பார்ப்பதில்லை, இனி திரும்பிப் பார்க்க வேண்டும். என தனக்குத் தானே பேசி தன் நடத்தையை மேம்படுத்த இக்குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும்.

மற்ற குழந்தைகளின் பெற்றோர்களை விட கவணக்குறைவும் மீச்செயலும் கலந்த நோய் கொண்ட குழந்தைகளின் பெற்றோர் அதிக மன அழுத்தம் கொண்டவர்களாக காணப்படுகின்றனர். இன்னும் சில குடும்பத்தில் தாங்கள் செய்யும் எல்லாவற்றிற்க்கும் இக்குழந்தைகளே காரணம் எனக்கூறி இவர்களை பலிகடாவாக்கும் பெற்றோர்களும் உண்டு. எனவே பெற்றோர்கள் உளவியல் ஆலோசனை பெறுவது கட்டாயம். அத்தகைய ஆலோசனை குழந்தையின் நோயை விரைவில் குணமாக்க உதவும்.

நோய் மிகத் தீவிரமாக உள்ள குழந்தைகளுக்கு சிகிச்சையளித்து கல்வியும் கற்பிக்க சிறப்பு பள்ளிகள் உள்ளன. உளவியல் முறைப்படி நடத்தப்படும் இப்பள்ளிகளிலும் சேர்த்து குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கலாம். ஆனால் அந்த அளவுக்கு நோய் தீவிரமானதாக இருக்க வேண்டும். சேர்க்கப்படும் சிறப்புப் பள்ளிகள் தரமானவையாகவும் இருக்க வேண்டும்.

0 comments:

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP