உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Monday, May 31, 2010

மதிப்பெண் குறைந்து போக யார் காரணம்?


ஒருவர் தேர்வில் மதிப்பெண் பெறுவதை பல காரணிகள் நிர்ணயிக்கின்றன. மாணவ/மாணவியரின் நுண்ணறிவு, பாடத்தின் கடிணத்தன்மை, தேர்வில் கேட்கப்படும் கேள்விகளின் கடினத்தன்மை, விடைத்தாள் திருத்தும் ஆசிரியரின் மனநிலை, அவர் விடைத்தால் திருத்தும் சூழ்நிலை ஆகியவை தேர்வு மதிப்பெண்ணை தீர்மாணிக்கும் விஷயங்கள் ஆகும். ஆயினும் இரண்டு காரணிகள் முக்கியமானவை அவை மாணவ/மாணவியின் நுண்ணறிவு மற்றும் தேர்வுக்கான தாயாரிப்பு ஆகியவை ஆகும்.

மாணவ நுண்ணறிவு பிறப்பிலேயே நிர்ணயிக்கப்பட்டதாகும். பெற்றோரின் நுண்ணறிவும் அவர்களின் மரபு காரணிகளும் சேர்ந்தே ஒருவரின் நுண்ணறிவு நிர்ணயிக்கப்படுகிறது. அதை நாம் மாற்ற இயலாது. எனவே இதுவரை படிக்காத குடும்பத்திலிருந்து வரும் மாணவனோ மாணவியோ மிக அதிக நுண்ணறிவுடன் இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்ப்பதற்கில்லை. ஆயினும் சில வேளைகளில் படிப்பறிவே இல்லாத பின்புலத்தில் இருந்து வந்த ஓர் மாணவனோ/மாணவியோ மிக அதிக நுண்ணறிவுடனும் இருக்கலாம். அவ்வாறு நடப்பது விதிவிலக்கேயன்றி எப்போதும் அவ்வாறு இருக்க வாய்ப்பில்லை. அதே போன்று நன்கு படிப்பறிவு கொண்ட பின்புலத்தில் இருந்து வந்த மாணவனோ/மாணவியோ குறைந்த நுண்ணறிவு கொண்டிருக்கவும் வாய்ப்புண்டு. பரம்பரையாலும் பிறப்பினாலும் நிர்ணயிக்கப்படுகிற இந்நுண்ணறிவின் தாக்கம் ஒருவரின் கல்வியில் 49 சதவீதமாகும்.

மீதமுள்ள 51 சதவீத தாக்கத்தை ஏற்படுத்துவது மாணவ/மாணவியரின் கடின உழைப்பும் பயிற்சியுமாகும். நுண்ணறிவு இல்லாத மாணவ/மாணவியர் கூட கடும் பயிற்சியின் மூலம் அதிக மதிப்பெண் பெற வாய்ப்புண்டு. அவ்வாறு கடினமாக உழைப்பது ஒரே நாளில் நடக்கக் கூடிய விஷயமல்ல. பெற்றோர்கள் சிறு வயதிலிருந்தே தன் குழந்தையை கடினமாக உழைத்து படிக்க பழக்கியிருக்க வேண்டும். தினமும் குறிப்பிட்ட நேரம் தனக்கு என்ன வேலையிருந்தாலும் அதை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு குழந்தைகளின் படிப்புக்காக உதவி செய்ய அவர்களுடன் அமர வேண்டும். படிக்கும் போது கவனச் சிதைவு ஏற்படாவண்ணம் நல்ல சூழலை அமைத்துக் கொடுப்பதோடு விரைவாக படிக்கும் முறைகளையும் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். மேலும் குழந்தைகளை தானே முயன்று கற்றுக்கொள்ள உதவி மட்டுமே செய்ய வேண்டும். மாறாக பெற்றோர் எக்காரியத்தையும் செய்து கொடுக்கக் கூடாது. உதாரணமாக ஓர் படத்தை எப்படி வரைவது என சொல்லிக் கொடுத்து குழந்தைகளையே வரையச் செய்ய வேண்டுமே தவிர பெற்றோரே வரைந்து கொடுக்கக் கூடாது. தொடர்ந்து பல ஆண்டுகள் இவ்வாறு செய்து வந்திருந்தால் முக்கியமான தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதென்பது மிகவும் எளிமையானதாக இருக்கும்.

ஆனால் இன்றைய பெற்றோர் பலர் குழந்தைகளை கஷ்டப்படுத்தக் கூடாது என்று நினைத்துக் கொண்டு சிறு வயதிலிருந்தே குழந்தைகளின் படிப்பு தொடர்பான எல்லா வேலைகளையும் பெற்றோர்களே செய்து விடுகின்றார்கள். குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதுமில்லை அவர்கள் கற்றுக் கொள்ள வாய்ப்பு கொடுப்பதுமில்லை. வேறு சில பெற்றோர்களோ குழந்தைகளில் தன்னம்பிகையை வளர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு அவர்களின் படிப்பு முதற்கொண்டு எவ்விஷயத்தையும் கண்டுகொள்வதில்லை. அவர்களின் விஷயங்களில் தலையிடுவதில்லை. அவர்கள் நன்றாக படித்தால் பிற்காலத்தில் அவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும். படிக்காவிட்டால் எப்படியோ பிழைத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று கூறி விலகிக் கொள்கிறார்கள். இவ்விரண்டு அணுகுமுறைகளுமே தவறாகும். அத்தகைய அணுகுமுறையில் ஏதோவொன்றை கடைபிடித்ததன் விளைவே குழந்தைகள் குறைந்த மதிப்பெண் பெறுவது. விதையொன்றைப் போட்டால் சுரையொன்று வராது என்பது போல பள்ளியில் சேர்த்து விட்டு பல வசதிகளை செய்து கொடுப்பதினால் மட்டுமே மதிப்பெண் கிடைக்காது. பெற்றோரின் அர்ப்பணிப்பும் அவசியம்.

வயதாகியும் குழந்தைகள் பேசாமல் இருப்பது ஏன்?


குறிப்பிட்ட வயதை அடைந்த பின்னரும், காதுகேளாமை, ஆடிசம் என்ற உளவியல் பிரச்சனை, மனவளர்ச்சி குறைபாடு ஆகிய பிரச்சனைகள் ஏதுமில்லாத போதும் குழந்தைகள் மற்ற குழந்தைகளைப் போல் பேசாமல் இருந்தால் அக்குழந்தைக்கு மொழியை பேசுவதில் குறைபாடு உள்ளது எனக் கொள்ளலாம். இக்குறைபாடு உள்ள குழந்தைகளால் ஓர் மொழியின் வர்த்தைகளை உச்சரிப்பதை கற்றுக் கொள்ளவும் அம்மொழியின் இலக்கணத்தை கற்றுக் கொள்ளவும் இயலாது.

குழந்தைகளுக்கு ஏன் இக்குறைபாடு ஏற்படுகிறது என்பதற்கான காரணம் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை. ஆயினும் மூளையே இதற்கான முக்கிய காரணம் என்று அனுமானிக்கப்பட்டுள்ளது. பேச்சுக் குறைபாடு கொண்டுள்ள குழந்தைகளின் மூளையில் ஏதேனும் பிறழ்வு இருக்கக்கூடும் என்று யூகிக்கப்பட்டுள்ளது. எத்தகைய பிறழ்வு என்பதை தற்போதைய மருத்துவ அறிவியல் இன்னும் கண்டறியவில்லை அதைப் போன்றே ஏதேனும் ஒரு மரபணு பேச்சுக் குறைபாட்டுக்கு காரணமாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆயினும் அது எந்த மரபணு என்று இன்னும் கண்டறியப்படவில்லை. பொதுவாக பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளிடமே இக்குறை அதிகமாக காணப்படுகிறது.

எல்லா குழந்தைகளும் எவ்வயதில் பேச ஆரம்பிக்கின்றனவோ அதே வயதில் பேச்சுக்குறைபாடு உள்ள குழந்தைகளும் பேச ஆரம்பிக்கின்றன. ஆனால் இவர்கள் பேச்சு வளர்ச்சியில் சாதாரணமாக குழந்தைகளைவிட மிக குறைவான முன்னேற்றத்தையே அடைகிறார்கள். வார்த்தைகளை உச்சரிப்பது இத்தகைய குழந்தைகளுக்கு மிக கடினமாக இருக்கும். இக்குறைபாடு குழந்தைகள் ஆறு-ஏழு வயதை அடையும் வரையில் கூட நீடித்து அவர்களின் படிக்கும் மற்றும் எழுதும் திறனைக்கூட பாதிக்கலாம். மற்ற குழந்தைகளைப் போல இயல்பாக ஒரு மொழியை கற்றுக்கொள்ள பேச்சுக் குறைபாடு உள்ள குழந்தைகளால் இயலாது. காது கேளாமை இல்லாத நிலையிலும் பேச்சுக் குறைபாடுள்ள குழந்தைகளால் வார்த்தைகளின் ஒலிகளை பிரித்தறிந்து கொள்ள இயலாது. இத்தகைய குழந்தைகளுக்கு மொழியின் ஓசை, இலக்கணம், போன்றவற்றை பற்றிய ஒட்டு மொத்த புலன்காட்சி நன்கு வளர்ச்சியடையாமலும் இருக்கும்.

பேச்சுக் குறைபாடுள்ள குழந்தைகள் நாளடைவில் தன்னுடைய குறையை உணர்ந்து கொண்டு வயதாக வயதாக பிறரிடம் பேசாமல் விலகிச் செல்ல முயற்சிப்பர். இதனால் அவர்களின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சியும் பாதிக்கக்கூடும்.

இக்குறையை போக்க குழந்தைகளின் சூழ்நிலையில் மொழியின் பங்கு அதிகமாக இருக்குமளவுக்கு பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் எவ்வாறு வார்த்தைகளை உச்சரிப்பது மற்றும் வாக்கியமாக பேசுவது ஆகியவைகளை பெற்றோர் முன்மாதிரியாக இருந்து கற்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். இவைகளே குழந்தைகளின் பேச்சு வளர்ச்சியை அதிகப் படுத்துவதில் நல்ல பலனை அளிக்கும். எனவே மிக விரைவில் தன் குழந்தைக்கு பேச்சு குறைபாடு உள்ளதா என்று கண்டறிந்து சிகிச்சையளித்தல் முக்கியமாகும். பெற்றோர்கள் இரண்டு வயது முதல் மூன்று வயதான தங்கள் குழந்தைகு என்னென்ன வார்த்தைகள் தெரியும் என்பதையும் இரண்டு வார்த்தைகள் கொண்ட வாக்கியங்கள் எத்தனை தெரியும் என்பதையும் கண்டறிய வேண்டும். குழந்தைக்கு 50 வார்த்தைகளுக்கும் குறைவாகவும், இரண்டு சொல் வாக்கியங்கள் ஒன்று கூடவும் தெரியவில்லை என்றால் அக்குழந்தை பேச்சுக் குறைபாடு உள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். பொதுவாக இரண்டு வயதில் அதிகமாக காணப்படும் இக்குறைபாடு 3 அல்லது 4 வயதாகும் போது மெதுவாக குணமாக ஆரம்பிக்கிறது அதற்கு காரணம் பேச்சுக் குறைபாட்டை உண்டாக்கும் சில ஊறுபாடுகள் தானாகவே சரியகிவிடுவதாகும்.

Friday, May 28, 2010

குழந்தைகளுக்கு திக்குவாய் ஏன் ஏற்படுகிறது


தட்டுத்தடங்கல்களோடு சரளமாக பேச முடியாத குறைதான் திக்குவாயாகும். திக்குவாய் உடல்ரீதியான பிரச்சனை இல்லை. வாயும் தொண்டையும் நன்றாக இருக்கும் போதே பலருக்கு திக்குவாய் ஏற்பட்டிருக்கிறது. திக்கித்திக்கி பேசுவது மனரீதியான பிரச்சனையின் காரணமாகத்தான். திக்குவாயர்கள் பேசும்போது திக்கித்திக்கி பேசுவார்கள். ஆனால் பாட்டு பாடச் சொன்னால் திக்காமல் தெளிவாக பாடி முடித்து விடுவார்கள். பேசும் போது தானாக யோசித்து பேச வேண்டியுள்ளது. எனவே எங்கே நாம் தவறாக பேசி விடுவோமோ, பிறர் நம்மை தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்ற பயத்தில் பேச்சு சரளமாக வருவதில்லை. ஆனால் பாட்டு யாரோ பாடியது. எனவே அதைப் பாடும் போது எவ்வித மன பயமும் இன்றி தெளிவாக திக்காமல் பாடி விடுகிறார்கள். இதிலிருந்தே திக்குவாய் மனம் தொடர்பான நோய் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

குழந்தைகளை அடக்கி அடக்கி வளர்த்தல் திக்குவாய் ஏற்பட முதல் காரணம் ஆகும். ‘அதைச் சொல்லாதே, இதைச் சொல்லாதே, சத்தம் போடாதே’ என்று எப்போதும் குழந்தைகளை மிரட்டிக்கொண்டே இருப்பது குழந்தைகளின் ஆழ்மனதில் கட்டுப்பாட்டை உண்டாக்கி இயல்பாக தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த இயலாத நிலைக்கு அவர்களை இட்டுச் செல்கிறது. ஒருவர் தன் சகோதரரை எதிர்த்து பேசாதே என்று சாட்டையை கையில் வைத்துக் கொண்டு மிரடிக் கொண்டே இருந்தார். அப்பையன் வளர வளர திக்குவாய் தோண்றி பெரியவனானதும் நல்ல திக்குவாயனாக மாறிவிட்டான். சிறு வயதில் மிரட்டிக் கொண்டே இருந்ததே இதற்கு காரணம்.

பழக்கத்தின் காரணமாகவும் குழந்தை பருவத்தில் திக்குவாய் உருவாகி பின் வாழ்க்கை முழுவதும் தொடரலாம். வீட்டில் தாத்தா, பாட்டி அப்பா அம்மா என யாராவது ஒருவருக்கு திக்குவாய் பழக்கம் இருந்தால் அவ்வீட்டில் வளரும் குழந்தை அவர்கள் பேசுவதை கூர்ந்து கவணித்து தானும் திக்கித்திக்கி பேச கற்றுக் கொண்டு விடும். ஒருவர் சிறுவயதில் தன் நண்பனுக்கு திக்குவாய் இருந்ததால் அவனை கேலி செய்யும் விதமாக திக்கி திக்கி பேசி கிண்டலடித்தார். பின்னர் அதுவே இவருக்கும் பழக்கமாகிப் போய்விட வயதாகிய காலத்தில் இன்னமும் திக்கி திக்கி பேசிக் கொண்டிருக்கிறார்.

மனதில் உள்ள தாழ்வு மனப்பான்மை சமூக சூழலில் ஒருவரை திக்கிப் பேச காரணமாக அமையலாம். கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் வகுப்பில் எழுந்து நின்று பிறர் முன்னிலையில் பேசும் போது மட்டும் திக்கிப் பேசுவார். ஆனால் வகுப்பிற்கு வெளியே தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவருக்கு திக்குவாய் இருக்காது. இயல்பாக பேசுவார் பிறர் முன்னிலையில் பேசும் போது தவறாக பேசி விடுவோமோ என்ற தாழ்வு மனப்பான்மையே திக்கிப் பேசுவதற்கு காரணம்.

திக்குவாய் குணமாகக் கூடிய ஓர் உளவியல் பிரச்சனை. குழந்தைகளுக்கு திக்குவாய் உள்ளது என்பதை கண்டறிந்து கொண்டால் உடனே உளவியல் மருத்துவரை அணுக வேண்டும். அத்தகைய குழந்தைகளுக்கு பேச்சு தொடர்பான உடல் உறுப்புகளில் எவ்வித குறையும் இல்லை எனச் சோதித்து தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குப் பின்னர் குழந்தைகள் திக்கிப் பேசினால் உடனே அதை திருத்தி நன்றாக பேச செய்ய வேண்டும். அதட்டிப் பேசாமல் அன்புடன் இதைச் செய்வது நன்று. அத்தகைய குழந்தைகளை பெற்றோர் தம் முன்னிலையில் பிறரிடம் பேச வைக்க வேண்டும். அதிகமான அளவுக்கு வெளியிடங்களுக்கு அழைத்து சென்று பிறரிடம் பயமின்றி உடையாட பெற்றோர் உதவ வேண்டும். திக்குவாய் குறையை குழந்தை முன்னிலையிலேயே அனைவரிடமும் சொல்லி கவலைப்படுவதை தவிர்ப்பது நன்று. மேலும் குழந்தை திக்காமல் நன்றாக பேசும் சமயங்களில் குழந்தையை முதுகில் தட்டிக் கொடுப்பது, தலையை தடவுவது போன்ற செயல்களின் மூலம் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

நன்கு வளர்ந்த பெரியவர்களுக்கு திக்குவாய் இருப்பின் அவர்களும் இக்குறையை போக்கிக் கொண்டு நன்றாக பேச முடியும். இவர்கள் முதலில் மனதை அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எவ்வித மனப்பதட்டமும் இல்லாத நிலையில் என்னால் பிறர் முன்னிலையில் திக்காமல் தெளிவாக பேச முடியும் என்று தனக்குத்தானே சுய கருத்தேற்றம் செய்து கொள்ள வேண்டும். தினமும் ஏதாவது ஒரு புத்தகத்தில் ஐந்து பக்கங்களை மிக மிக மெதுவாக ஒரு ஸ்டூலின் மீது ஏறி நின்று காலையிலும் மாலையிலும் படித்து வர வேண்டும். இவ்வாறு படிக்கும் முறைக்கு நீட்டிப் படித்தல் என்று பெயர். ஸ்டூலின் மீது ஏறி நின்று படிக்கும் போது முன்னால் நிறைய பேர் அமர்ந்திருப்பதாக கற்பனை செய்து கொண்டு படிக்க வேண்டும்.

திக்குவாய் உள்ளவர்கள் மேற்கண்ட பயிற்சிகளோடு ‘எனக்கு உள்ள திக்குவாய் பிரச்சனையிலிருந்து நான் வெளிவந்தே தீருவேன்’ என்று மனதினுள் பெருங்கோபம் கொள்ள வேண்டும். அவ்வுறுதியினை வலிமையாக்கும் விதமாக நீண்ட தூரம் நடைப் பயிற்சி செய்தல், நீண்ட நேரம் நீந்துதல், நீண்ட நேரம் கயிறு தாண்டுதல் போன்ற உடற்பயிற்சிகளை செய்யலாம்.

மேற்கண்ட பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் திக்குவாய் பிரச்சனையை விரைவில் தீர்த்துவிடலாம். தற்காலத்தில் உளவியல் வல்லுநர்கள் மேற்கண்ட பயிற்சிகளை அளிப்பதன் மூலம் ஆறே நாட்களில் திக்குவாயை குணமாக்குகிறார்கள். உங்களுக்கு திக்குவாய் இருந்தால் நீங்களும் முயன்று முன்னேறலாமே!.

ஊனமுற்ற குழந்தைகளை வளர்ப்பது எப்படி?


அரிதரிது மானிடராய் பிறத்தல் அரிது, கூன் குருடு செவிடின்றி பிறத்தல் அதனினும் அரிது என்பது அவ்வையார் கருத்து. மனிதப் பிறப்பில் குறைகள் எதுவுமின்றி பிறப்பது நன்று. ஆனால் சில குழந்தைகளுக்கு ஏற்படும் குறைகள் அக்குழந்தைகளையும் அவர்தம் பெற்றோர்களையும் கடும் துன்பத்திற்குள்ளாக்குகிறது.

பொதுவாக கண் பார்வை குறைபாடு, செவிட்டுத் தன்மை, உடல் உறுப்புகள் குறைபாடு ஆகியவை உடற்குறைகள் எனப்படும். இவற்றோடு மிக முக்கியமான இன்னொன்று மனவளர்ச்சி குறைபாடு ஆகும். இத்தகைய குறைகள் கொண்ட குழந்தைகளை ஊனமுற்றோர் என்றும் உடற்-மன குறையுடையோர் என்றும் அழைத்து வந்தோம். ஆனால் தற்போது இவர்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.

உடற்குறைபாடுகள் குழந்தைகளுக்கு பிறப்பிலேயே ஏற்படலாம். சில குழந்தைகளுக்கு பிறந்தபின் இடையில் ஏற்படலாம். பிறப்பிலேயே குறைகொண்ட குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மை போன்ற மனப்பிரச்சனைகள் பிறந்த பின் இடையில் ஊனம் ஏற்பட்ட குழந்தைகளை விட குறைவாக இருக்கும். ஊனமுற்ற குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர் நினைப்பது போல மிகவும் கஷ்டமானது அல்ல. மாற்றுத்திறனாளிகள் என்ற பெயருக்கேற்ப அவர்களுக்கு எதேனும் வேறு சிறப்பு திறன்கள் இருக்கும். ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறகும் என்பது போல கண் பார்வை குறையுடையோருக்கு காது மிக நன்றாக கேட்கும். காது கேட்காதவர்களுக்கு கூர்நோக்கும் திறன் இருக்கலாம். எனவே உடற்குறையுடைய குழந்தையினிடத்தில் உள்ள மாற்றுத்திறனை பெற்றோர் கண்டறிந்து அதனை ஊக்கப்படுத்த வேண்டும். ஊனமுற்ற குழந்தைகளை வளர்க்கும் போது அவர்களுக்கு சாதாரண குழந்தைகளை போல் எல்லா விவரங்களையும் தெரிவித்து சமூகத்தில் பிறரோடு பழகும் நாட்டமுள்ள குழந்தைகளாகவும், தன்னம்பிக்கை உள்ள குழந்தைகளாகவும் வளர்க்க வேண்டும். நிறைய ஊனமுற்ற குழந்தைகள் பிற்காலத்தில் கஷ்டப்படுவது தன்னம்பிக்கை இன்மையால் தான். கண் தெரியாவிட்டால் தடவி படித்துக் கொள்ளலாம். ஓர் ஆள் உதவிக்கு வைத்துக் கொண்டு எல்லா வேலைகளையும் செய்து கொள்ளலாம். காது கேட்காவிட்டால் ஒரு கருவி மாட்டி கேட்டுக் கொள்ளலாம். கால் இல்லாவிட்டால் மரக்கால் வைத்து நடக்கலாம், ஓடலாம். ஆனால் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் இவை எதையுமே செய்ய இயலாது.

சில ஊனமுற்ற குழந்தைகள் வளர வளர தங்கள் ஊனத்தை ஏற்க மறுத்து சாதாரணமானவர்களை விட அதிக திறமையுடன் நடந்து கொள்ள முயற்சிப்பார்கள். அதனால் பிறரின் வசைவுக்கும் ஆளாவார்கள். மொண்டிக்கு முந்நூறு குறும்பு என்று கூறுவது இதனால்தான். ஊனமுற்றவர்கள் தங்கள் உடலின் குறையை மனதளவில் ஏற்க மருப்பதால் தான் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். எல்லா ஊனமுற்ற குழந்தைகளுக்கும் தனக்களிக்கப்பட்ட உடலை குறையோடு ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை உண்டாக்க பெற்றோர்கள் சிறுவயதிலிருந்தே முயற்சிக்க வேண்டும்.

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை அதிகமாக சொல்லிக் கொடுக்க வேண்டியவர்கள், செய்து காண்பித்து பயிற்சி கொடுக்க வேண்டியவர்கள், எதுவுமே செய்ய முடியாத மிக குறைந்த மன வளர்ச்சி கொண்டவர்கள் என மூன்று பிரிவாக பிரிக்கலாம். இதில் சொல்லிக் கொடுத்து மேம்படுத்த வேண்டிய குழந்தைகளுக்கு பெற்றோர் அதிக முயற்சி எடுக்க வேண்டும். அவர்களுக்காக அதிக நேரம் செலவிட வேண்டும். தொடர்ந்து அவர்களுக்கு சொல்லிக்கொடுத்துக் கொண்டே இருப்பதன் மூலம் சாதாரண குழந்தைகள் போலவே அவர்களை வளர்க்கலாம். பயிற்சி கொடுத்து மேம்படுத்த வேண்டியவர்களுக்கு உளவியலரின் உதவியை நாடி சரியான பயிற்சி கொடுத்து அவர்களை மேம்படுத்த வேண்டும். ஒன்றுமே செய்ய முடியாத குழந்தைகளை போற்றி பாதுகாத்து வளர்க்க வேண்டும். அவர்களின் இறுதிக்காலம் வரை நலமுடன் இருக்க ஆவன செய்ய வேண்டியது பெற்றோரின் கடமை.

ஊனமுற்ற, மன வளர்ச்சி குறைந்த குழந்தைகளின் பெற்றோர் தாழ்வு மனப்பான்மையும், செய்வதறியா மனநிலையும், அவநம்பிக்கை கொண்டவர்களாகவும் மாறி விடுகிறார்கள். இதன் காரணமாக சிறிது காலம் ஊனமுற்ற குழந்தைகளை பற்றி கவலைப் பட்டு விட்டு பின்பு பற்றில்லாமல் வாழத் தொடங்கிவிடுகிறார்கள். இதன் காரணமாகவே பல ஊனமுற்றவர்கள் பிற்காலத்தில் முன்னேற்றமின்றி தாழ்ந்த நிலையில் உள்ளனர். எனவே ஊனமுற்ற குழந்தைகளைக் கொண்ட பெற்றோர் மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாறிவிட வேண்டும். குழந்தைகளுக்காக அதிக சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஊனமுற்றவர் பற்றி நிறைய விவரங்களை தேடிச் சென்று பெற வேண்டும். குறையுடையோர் நிறைவடைய உதவ வேண்டும். மண் சரியில்லை என்றாலும் அதை வீணாக்குவதும் பானையாக்குவதும் குயவனின் கையில் தானே உள்ளது!.

Saturday, May 15, 2010

குழந்தைகள் சரியாக சாப்பிடுவதில்லை என பெற்றோர்கள் புகார் செய்வது எதனால்? குழந்தைகளை நிறைய சாப்பிடவைக்க என்ன வழி?

எல்லா பெற்றோர்களுக்குமே தங்கள் குழந்தைகள் நிறைய சத்துள்ள உணவுவகைகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வளரவேண்டும் என்ற ஆசை சற்று அதிகமாகவே இருக்கும். அதற்காக தனக்கு உணவில்லாவிட்டாலும் பரவாயில்லை, குழந்தைகளுக்கு எவ்வளவு செலவானாலும் சத்தான உணவழிக்க வேண்டும் என பாடுபடுகிறார்கள். ஆனால் குழந்தைகளோ பெற்றோர் கொடுக்கும் உணவு வகைகளை தீண்டுவதே இல்லை. எதைக் கொடுத்தாலும் வேண்டாம் என அடம்பிடித்து சாப்பிட மறுக்கிறார்கள். இது பெற்றோருக்கு மிகுந்த மன வேதனையை அளிப்பதோடு குழுந்தையை அடித்தல், குழந்தை சாப்பிடாததால் அதனுடன் பேசாமல் இருத்தல் போன்ற எதிர்மறை விளைவுகளையும் உண்டாக்குகிறது.

ஏன் குழந்தைகள் சாப்பிடுவதில்லை என்பதை தெரிந்துகொள்ள ஒரு உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும்.

· குழந்தைகளுக்கு மிக அதிக உணவு தேவையில்லை. உதாரணமாக ஒரு பெரிய சாக்லெட் சாப்பிட்டால் அதற்கு மதிய உணவு தேவைப்படாது. எனவே மதிய உணவு கொடுத்தால் அதை சாப்பிட மறுப்பதில் வியப்பேதும் இல்லை.

· பெற்றோர்களுக்கு மற்ற குழந்தைகள் சாப்பிடும் அளவோடு தன் குழந்தை சாப்பிடும் அளவை ஒப்பிட்டு பார்க்கும் பழக்கம் உண்டு. அவ்வாறு ஒப்பிட்டு பார்க்கும் போது எப்போதும் அடுத்த குழந்தையை விட தன் குழந்தை குறைவாகவே உண்பதாக தோண்றும். இது ஒரு மாயத் தோற்றமே.

· தன் குழந்தை “நன்றாக சாப்பிடுகிறது” என பிறரிடம் சொன்னால் கண் திருஷ்டி ஏற்பட்டுவிடும் என்று நினைத்துக்கொண்டு பல பெற்றோர்கள் “என் குழந்தை சாப்பிடுவதே இல்லை” என குழந்தையின் முன்பாகவே பிறரிடம் சொல்லிக்கொண்டு இருப்பார்கள். அதை கூர்ந்து கவனிக்கும் குழந்தைகள் சாப்பிடுவதை தவிர்க்க ஆரம்பிக்கின்றன.

· குழந்தைகள் ஒரே உணவை எப்போதும் விரும்பி உண்பதில்லை அவர்களின் உடலில் என்ன சக்தி குறைவாக உள்ளதோ அந்த சக்தி அதிகமாக உள்ள உணவை விரும்பி சாப்பிடுவார்கள். உடலில் பற்றாக்குறையாக இருந்த சக்தி தேவையான அளவு சேர்ந்தவுடன் அந்த சக்தி இருக்கும் உணவை விரும்ப மாட்டார்கள். உதாரணமாக முட்டையில் உள்ள சக்தி குறைவாக இருக்கும் ஓர் குழந்தை முட்டையை தொடர்ந்து சில காலத்திற்கு விரும்பு சாப்பிடும். அக்குழந்தைக்கு முட்டையில் உள்ள சக்தி தேவையான அளவு உடலில் சேர்ந்தவுடன் முட்டையை அறவே வெறுக்க ஆரம்பித்துவிடும். எனவே ஒரே வகையான உணவை சாப்பிடுமாறு குழந்தையை கட்டாயப்படுத்தக்கூடாது. ஓர் உணவை சாப்பிடவில்லை எனில் வேறு உணவை கொடுத்து உண்ணச் சொல்ல வேண்டும்.

· தேவைக்கு அதிகமான உணவைக் கொடுத்தால் “உடல்பருமன்” ஏற்பட்டு குழந்தைகள் பெரியவர்களாகும் போது அதுவே அவர்களுக்கு பெரிய பிரச்சனையாக மாறிவிடும். எனவே உணவுப் பண்டங்களை திணித்து உடல் நோயை உண்டாக்க வேண்டாம்.

Friday, May 14, 2010

தகவல் தொழில்நுட்ப வசதிகளால் குழந்தைகள் தவறான விசயங்களை கற்றுக்கொள்வதை தடுப்பது எப்படி?


குழந்தைகளுக்கு உலக அறிவை புகட்ட வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். இப்பரந்த உலகை காணும் வண்ணம் குழந்தைகளுக்கு அறிவுக் கதவுகள் அனைத்தையும் திறந்து விட வேண்டும். அப்போதுதான் பிற்காலத்தில் குழந்தைகளால் பெற்றோர் துணையின்றி தனித்து இயங்க முடியும். ஆனால் சில வேளைகளில் குழந்தைகள் தன் வயதில் தெரிந்து கொள்ள தேவையில்லாத விஷயங்கள் பலவற்றை தெரிந்து கொள்கிறார்கள். வன்முறை உணர்வுகள், பாலியல் விஷயங்கள், தவறான நடத்தைகள், கொலை, கொள்ளை, கடத்தல் என பலவற்றை உதாரணமாகக் கூறலாம். தற்போது அடைந்துள்ள அறிவியல், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் மிக எளிதாக குழந்தைகள் இவற்றை தெரிந்து கொள்கிறார்கள்.

இது போன்ற எதிர்மறை விளைவுகள் எதுவுமின்றி சரியான அறிவு வளர்ச்சிக்கு வித்திடுவது பெற்றோரின் கையில் தான் இருக்கிறது. பெற்றோர்கள் தங்கள் உள்ளுணர்வின் ஆசைகலை கட்டுப்படுத்தவும், தள்ளிப் போட்டு சிறிது நேரத்திற்கு பிறகு தீர்த்துக்கொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டும். உதாரணமாக உறவினர் ஒருவரைப் பற்றி மிகக் கோபமாக பெற்றோர் விவாதிக்கும் போது குழந்தைகள் அருகில் இருந்து கவனித்தால் அவ்வுறவினர் மீது அவர்களும் குரோதத்தை வளர்த்துக்கொள்வார்கள். எனவே குழந்தைகள் அருகில் இருந்தால் சற்று நேரம் கழித்து அவர்கள் இல்லாத போது உறவினர் பற்றி பேசிக் கொள்ளலாம்.

குழந்தைகள் இருக்கும் போது தொலைக்காட்சி பார்க்கும் பெரியவர்கள் தேர்ந்தெடுத்த நல்ல நிகழ்ச்சிகளை ஓடவிட்டு அறிவை விருத்தியாக்கலாம். நாளிதழ்கள், மாத, வாராந்திர பத்திரிக்கைகளை தரமான, அறிவு வளர்ச்சிக்கு உதவுபனவா என தேர்ந்தெடுத்து வாங்கி வீட்டில் போட வேண்டும். மழை காலத்துக்கு குடை; வெயில் காலத்திற்கு வெள்ளை சட்டை என சூழ்நிலைக்கேற்ப மாற்றி பயன்படுத்துவது போல் மேற்சொன்ன யாவற்றையும் குழந்தைகளின் அந்தந்த வயதுக்கேற்ப பொருத்தமானவைகளாக தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்த வேண்டும்.

Thursday, May 13, 2010

குழந்தைகளின் வெட்கத்தைப் போக்கி சிறந்த ஆளுமை பண்புகளை வளர்ப்பது எப்படி?


குழந்தைகள் வளர்ச்சியடையும் போது அவர்கள் சமூகத்தில் பிறருடன் பழக வேண்டி இருக்கிறது. சமூக சூழ்நிலைகளில் பிறரை சந்திக்க நேரிடும்போது குழந்தைகளுக்கு வெட்க உணர்வு ஏற்படுவது இயற்கையான ஒன்றாகும். சாதாரணமாக ஓர் குழந்தை தன் வீட்டில் உள்ள அம்மா, அப்பா, மற்ற பிற குடும்ப உறுப்பினர்களுடன் இயல்பாக பழகும். நன்றாக வாயடிக்கும் ஆனால் புதியவர் ஒருவர் பெயரைக் கேட்டாலோ அல்லது வேறு விஷயங்களை விசாரித்தாலோ அவர்கள் முன் பேசவும், ஏதாவதொன்றை செய்யவும் மிகவும் வெட்கம் கொள்ளும்.

இரண்டு வழிகளில் வெட்கம் குழந்தைகளின் ஆளுமையில் இடம் பிடிக்கிறது. முதலாவதாக பரம்பரையின் காரணமாக பிறப்பிலேயே ஏற்படும் வெட்கமாகும். குழந்தையின் அப்பா, அம்மா கூச்ச சுபாவமுள்ளவர்களாக இருந்தால், அல்லது அவர்கள் குடும்பத்தில் சிலருக்கு கூச்ச சுபாவம் இருந்திருந்தால் அப்பண்பு குழந்தைகளுக்கும் கடத்தப்படும். இவ்வாறு பிறப்பால் கூச்ச சுபாவத்தைப் பெற்ற குழந்தைகளின் நரம்பு மண்டலம் எளிதில் தூண்டப்படுபவையாக அமைந்துள்ளன. எனவே சிறிய தூண்டுதல்கள் கூட எளிதான நரம்பு மண்டலத்தைத் தூண்டி கூச்சத்திற்கான எதிர்வினைகளை தோற்றுவிக்கின்றன.

இரண்டாவது சமூக சூழ்நிலைகளால் ஏற்படும் கூச்சம். பிறர் ஓர் குழந்தை பேசும் போது எப்படி அதை அங்கீகரிக்கிறார்கள். அல்லது அலட்சியப்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து கூச்ச சுபாவம் ஏற்படலாம். உதாரணமாக முதன் முதலாக ஓர் குழந்தை பலர் உட்கார்ந்திருக்கும் இடத்தில் இயல்பாக பேசியது. உடனே அங்கிருந்தவர்கள் “எப்படி பெரிய மனுஷி மாதிரி பேசுகிறார் பார்” எனக் கூறி ஓவென சிரித்து விட்டனர். இதைப் பார்த்த அக்குழந்தைக்கு அவமான உணர்ச்சி ஏற்பட்டது. அன்றிலிருந்து நான்கு பேர் புதியவர் இருக்கும் இடத்தில் பேசுவதை தவிர்த்தது. இவ்வாறு சூழ்நிலையில் உள்ள புதியவர்கள் குழந்தைகளிடத்தில் கூச்ச சுபாவத்தை ஏற்படுத்தலாம்.

மரபு நிலையில் வந்த கூச்சம், அல்லது கற்றுக் கொண்ட கூச்சம் என எதுவாயினும் அதை பின்வரும் வழிகளில் போக்கலாம்.

குழந்தைகள் அசட்டுத்தனமாகப் பேசினாலும், முதிர்ந்தவர்களைப்போல் பேசினாலும் அதை அங்கீகரிக்க வேண்டும் மாறாக பலர் முன்னிலையில் அவமானப்படும்படி கிண்டல் செய்யக்கூடாது.

கூச்ச சுபாவமுள்ள குழந்தைகளுக்கு பெற்றோர்கள் வீட்டில் உள்ள போது வெளி இடங்களில் பிறருடன் பேசுவது எப்படி, நடந்து கொள்வது எப்படி, பள்ளியில் பலர் முன்னிலையில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது எப்படி என பயிற்சி கொடுக்க வேண்டும். இப்பயிற்சியை திரும்பத்திரும்ப பல முறை தொடர்ந்து அளித்து வந்தால் கூச்சம் வெகுவாக குறைந்து விடும்.

கூச்சம் ஒருவரின் ஆளுமையையும் அன்றாட வாழ்க்கையையும் பாதிக்காத வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. அதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் கூச்சம் பல தீய செயல்களை செய்யவிடாமல் நம்மைத் தடுத்து அரண்போல் காக்கும். காந்தியடிகள் கூட தான் பல தவறுகளை செய்யாமல் இருக்க தன்னிடம் இருந்த கூச்சமே காரணம் என கூறியுள்ளார்.

கூச்சம் ஓர் பிரச்சனையாக உருவெடுத்து ஆளுமை வளர்ச்சியில் குறுக்கிடும் போது குழந்தைகளை உளவியல் நிபுணர்களிடம் அழைத்துச் சென்று “சமூக திறன்கள் பயிற்சி” அளிக்க வேண்டும். அதன் மூலம் குழந்தைகள் விரைவில் கூச்சத்திலிருந்து விடுபடுவார்கள்.

Tuesday, May 11, 2010

படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்?




படுக்கையில் சிறுநீர் கழிக்கும் நோயை ஆங்கிலத்தில் என்யூரிசிஸ் என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள். குழந்தைகள் படுக்கை, உடைகள் அல்லது பொருத்தமற்ற இடங்களில் தன்னிச்சையாகவோ அல்லது அனிச்சையாகவோ சிறுநீர் கழித்துவிடுவதே இந்நோயாகும். அல்சீமர் என்னும் நோயோ அல்லது பிற வகையான மறதி நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களும் படுக்கை அல்லது உடைகளில் சிறுநீர் கழிக்கும் நோய் கொண்டுள்ளனர். பகலிலும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளும் இருந்தாலும். பெரும்பாலும் இறவிலேயே படுக்கையில் சிறுநீர் கழிக்கும் இந்நோய் கிருஸ்து பிறப்பதற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே காணப்படுகிறது. குழந்தை வளர வளர இந்நோய் தானாகவே சரியாகிவிடும். அல்லது சிகிச்சையின் மூலம் சரியாக்கி விடலாம். ஒரு சில குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை ஐந்தாறு மாதங்கள் நிறுத்தி பின் மீண்டும் தொடரும் வாய்ப்புகளும் உண்டு. பொதுவாக ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தால் தான் அது பிரச்சனை. ஐந்து வயதுக்குற்பட்ட குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தால் அது நோயல்ல. அது பற்றி கவலைப்பட தேவையில்லை.

படுக்கையில் சிறுநீர் கழிக்க குறிப்பிட்ட உடலியல் அல்லது உளவியல் காரணத்தை தனித்து கூற இயலாது. பல காரணிகள் கூட்டாக இந்நோயை தோற்றுவிக்கின்றன. இந்நோய் உள்ள ஒரு சில குழந்தைகளினால் சிறுநீரகமும், சிறுநீர் பையும் சற்றே பிறழ்வான செயல்பாடுகளை கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதைப் போன்றே சிறுநீர்பை நிறைந்து விட்டதை சற்றே தாமதமாக உணர்ந்து கொள்ளும் நரம்பு மண்டலமும் இந்நோய்க்கு காரணமாக அமைகிறது. மேலும் பெற்றோர் சிறுவயதில் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் நோயை கொண்டிருந்ததும் குடும்பத்தில் யாரேனும் பிற உறுப்பினர்கள் இந்நோய் கொண்டிருந்ததும் தற்போது குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிக்க காரணமாக இருக்கலாம். குழந்தையின் மனதில் ஏதேனும் ஒரு மன அழுத்தத்தை உண்டாக்கக்கூடிய நிகழ்வு பதிந்திருப்பது படுக்கையில் சிறுநீர் கழிக்க காரணமாக அமைக்கிறது. பொதுவாக படுக்கையில் சிறுநீர் கழிப்பது வேறு ஏதோ ஒரு மனப்பிரச்சனையின் அறிகுறியாகும்.

படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகள் அவமானமும், பிறர் முன் தலைகுனிவும் கொள்வர், ஏணிப்படுக்கையில் படுப்பதையும் தவிர்ப்பர். தனித்திருத்தல், பிறருடனான பொருத்தப்பாட்டு பிரச்சனைகள், குறைவான தன்-மதிப்பு ஆகியவை படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளின் பிற உளவியல் பிரச்சனைகளாகும். எனவே இந்நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது அவசியமாகும்.

வெளிநாட்டில் இந்நோயை குணப்படுத்த அறிவியல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நவீன சிகிச்சைகள் அளிக்கின்றனர். குழந்தையின் உள்ளாடையில் ஓர் அல்ட்ரா சவுண்ட் கருவியை பொருத்திவிடுவர். இக்கருவி குழந்தையின் சிறுநீர்ப்பையின் அளவை கண்காணிக்கும். சிறுநீர்ப்பை முழு அளவை எட்டியவுடன் எச்சரிக்கை மணியை இக்கருவி எழுப்பும் உடனடியாக மணி சத்தம் கேட்ட குழந்தை எழுந்து சென்று சிறுநீர் கழித்து விட்டு வரலாம்.

இன்னொரு முறையில் குழந்தையின் உள்ளாடையில் எச்சரிக்கை மணியுடன் கூடிய பஞ்சடை (pad) வைக்கப்படும். எப்போதெல்லாம் இப்பஞ்சடை ஈரமாகிறதோ அப்போதெல்லாம் எச்சரிக்கை மணி ஒலிக்கும். உடனே குழந்தை எழுந்து சென்று சிறுநீர் கழித்து விட்டு வரும். நாளடைவில் மணி அடிக்காமலேயே எழுந்து சென்று சிறுநீர் கழிக்க குழந்தை கற்றுக் கொள்ளும்.

படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்த பின்வரும் சில எளிமையான முறைகளை நாம் கையாளலாம்.

இரவில் கடிகாரத்தில் குறிப்பிட்ட நேர இடைவெளிக்கு எச்சரிக்கை மணி ஓசை எழுப்பச் செய்து, குழந்தையை விழிக்க வைத்து, கழிவறைக்குச் சென்று சிறுநீர் கழிக்க வைத்து விட்டு வரலாம். சில நாட்கள் இவ்வாறு செய்தால் விரைவில் குழந்தை தானாக எழுந்து சென்று சிறுநீர் கழிக்க பழகிக்கொள்ளும்.

குழந்தைகள் தூங்கப் போக சில மணி நேரம் இருக்கும்போது நீரோ அல்லது பிற திரவ உணவுகளையோ கொடுப்பதை தவிர்க்கவும்.

பெற்றோர் குறிப்பிட்ட இடைவெளியில் சில மணி நேரத்திற்கு ஒருமுறை குழந்தையை எழுப்பி “சிறுநீர் கழிக்க வேண்டுமா” என வினவலாம். ஆம் எனில் கழிவறைக்குச் சென்று சிறுநீர் கழித்துவிட்டு வர உதவலாம்.

சிறுநீர் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்ற முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை பெற்றோர் குழந்தைகளிடத்தில் ஏற்படுத்தலாம்.

குழந்தைகள் இரவில் படுக்கையிலும் உடைகளிலும் சிறுநீர் கழிக்காத சமயங்களில் அந்நடத்தையை பாராட்டுவதும், சாக்லேட் போன்றவைகளை பரிசளிப்பதும் இந்நோயை விரைவில் குணமாக்கும்.

படுக்கையில் சிறுநீர் கழிக்கும் நோயை குணமாக்க மேற்சொன்ன எல்லா முறைகளை விட சிறந்த முறை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அன்பையும் மனரீதியான அரவனைப்பையும் அளிப்பதுதான்.

Monday, May 10, 2010

புதிதாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு ஆசிரியர் மீதுள்ள பயத்தை போக்குவது எப்படி?


முதன் முதலாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அனைவருமே மிக மகிழ்ச்சியாக வகுப்புகளுக்கு செல்வதில்லை. பல குழந்தைகள் ஒரு சில நாட்களுக்கு பள்ளி செல்லும் போது பயம் கொண்டர்வர்களாகவே செல்கிறார்கள். குறிப்பாக சில குழந்தைகள் ஆசிரியர்களைப் பார்த்து பயம் கொண்டு, அதனால் பள்ளிக்கு செல்ல பயம் கொள்கிறார்கள்.

பெற்றோர்கள் குழந்தைகளை வீட்டில் வளர்க்கும்போது சாப்பாடு ஊட்டும் போது அல்லது தங்களுக்கு குழந்தைகளை பணிய வைக்க வேண்டும் என்று நினைக்கும் போது அக்கம் பக்கத்தில் உள்ள யாரையாவது காட்டியோ, அல்லது குறிப்பிட்டு சொல்லியே பயமுறுத்தி வளர்ப்பது, குழந்தைகளை பிறரோடு சேர்ந்து வெளியிடங்களில் விளையாட அனுமதிக்காமல் வளர்ப்பது, பூச்சாண்டி வருகிறார் என்று கூறி வித்தியாசமாக பிம்பம் ஒன்றை குழந்தைகள் மனதில் வளர்ப்பது ஆகியவை குழந்தைகளின் ஆசிரியர் பற்றிய பயத்திற்கு அடிப்படை காரணங்களாகும்.

சில பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் முன் ஆசிரியர் சொல்லும் படி நடந்து கொள்ள வேண்டும், இல்லையெனில் அடித்து விடுவார் என்று எச்சரிக்கையாக கூறி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவர். இவ்வாறு கூறுவது ஆசிரியரை சந்திக்கும் முன்பே அவரைப் பற்றிய பய உணர்வை ஏற்படுத்த வழி வகுக்கும். சில ஆசிரியர்கள் முதல் நாள் பள்ளி திறந்த உடனேயே கையில் குச்சியும் முகத்தில் கடுகடுப்புமாக குழந்தைகள் முன் பூதம் போன்று தோன்றுவர். இத்தகைய ஆசிரியர்கள் இறுகிய மனம் கொண்ட குழந்தைகளின் மனதில் பள்ளியிறுதி காலம் வரைக்குமான பயத்தை உண்டாக்கி விடுவார்கள்.

சில குழந்தைகளுக்கு செனோ போபியா என்னும் புதியவர்கள் பற்றிய காரணமில்லாத, புரியாத பயம் இருக்கலாம். இரண்டு வயதுக்கு முன்பாக தாய் குழந்தையை பிரிந்து வேலைக்கு செல்வது, அம்மா வீட்டில் வளர்ப்பது, பச்சிளம் குழந்தையாக இருந்தபோது சிறிது நேரம் அழவிட்டு குழந்தையின் பசியாற்ற பால் ஊட்டுவது ஆகியவையே புதியவர்களை பார்த்து காரணமின்றி பயம் கொள்ள வைக்கின்றன. இத்தகைய குழந்தைகளை வளர்ப்பு முறையை மாற்றி கவனத்துடன் வளர்த்தால் புதியவர்கள் பற்றிய பயமின்றி வளர்க்கலாம்.

ஓர் குழந்தை தன் ஆசிரியருக்கு பூங்கொத்து ஒன்றை அன்பளிப்பாக கொடுக்க வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கிச் சென்றது. வகுப்பறைக்கு சென்றவுடன் நேராக ஆசிரியரிடம் சென்று பூங்கொத்தை கொடுத்தது. வகுப்பாசிரியர் குழந்தையை வாழ்த்தி பூங்கொத்தை பெற்றுக் கொள்ளாமல் “நீயே வைத்துக்கொள்” என்று கூறினார். குழந்தையின் முகம் வாடிவிட்டது. பேசாமல் பூங்கொத்தை தன் பைக்குள் வைத்துக்கொண்டு தன் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டது. மாலை வீட்டுக்கு வரும் நேரத்தில் குழந்தையின் தந்தை அக்குழந்தையை நேராக பள்ளி முதல்வரின் அறைக்கு அழைத்துச் சென்று அப்பூங்கொத்தை பள்ளி முதல்வருக்கு அளிக்கச் செய்தார். முதல்வர் மிகுந்த மகிழ்ச்சியுடன் “கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும் குழந்தாய்” என்று கூறி பெற்றுக் கொண்டார். அக்குழந்தை “நன்றி அம்மா” என்று கூறியது. அம்மா என்றழைப்பதும் அலறி ஓடுவதும் ஆசிரியரின் நடத்தையிலும் உள்ளது.

Friday, May 7, 2010

குழந்தைகளை உயரமாக வளர வைப்பது எப்படி?


தம் குழந்தைகள் உயரமாக வளர வேண்டும் என்ற ஆசை எல்லா பெற்றோருக்கும் உண்டு. உயரமானவர்களுக்கு சமூக சூழ்நிலைகளில் கூடுதல் முக்கியத்துவம் உண்டு. நான்கு பேர் மத்தியில் உயரமான ஒருவர் நிற்கும் போது இயல்பிலேயே உயரமானவர் மனதில் உயர்ந்த மனப்பான்மையும் குட்டையானவர் மனதில் தாழ்வு மனப்பான்மையும் ஏற்படுகிறது. மேலும் உயரமானவர்கள் தலைமைப் பண்பை எளிதில் வளர்த்துக்கொள்ள அவர்களின் உயரமே காரணமாக அமையும் சூழ்நிலைகளும் உண்டு.

உயரம் பாரம்பரியத்தினால் தீர்மானிக்கப்படுகிறது. கூர்ந்து நோக்கினால் தந்தையைப் போன்ற உயரத்தை ஆண் பிள்ளைகளும் தாயை போன்ற உயரத்தை பெண் பிள்ளைகளும் அடைகிறார்கள். தந்தை உயரமாக இருக்கும் சமயத்தில் மகன்கள் அதைவிட சற்று உயரமாகவும் தாய் குட்டையாக இருந்தால் மகள் அதைப் போன்றே குட்டையாகவும் வளர வாய்ப்புண்டு. மரபணுக்களால் ஒருவரின் உயரம் தீர்மானிக்கப்பட்டாலும் நம் முயற்சிகளின் மூலமும் குழந்தைகளின் உயரத்தை அதிகப்படுத்தலாம்.

உயரத்தை அதிகப்படுத்துவதில் சத்தான உணவு வகைகள் முக்கிய பங்காற்றுகின்றன. சரிவிகிதத்தில் தயாரிக்கப்படும் பானங்கள், மீன் எண்ணை, வைட்டமின் ஏ மற்றும் டி கொண்ட மாத்திரைகள், புரோட்டின் நிறைந்த எல்லா உணவுப் பொருட்கள் ஆகியவை உயரத்தை அதிகப்படுத்த வல்லவை. புரோட்டின் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகமாக உட்கொண்டதன் மூலம் ஜப்பானியர்களின் சராசரி உயரம் தற்போது அதிகரித்துள்ளது.

உணவோடு உடற்பயிற்சிகளும் சேர்ந்தால் விரைந்து உயரத்தை அதிகரிக்கலாம். ஓடுதல், கயிறு தாண்டுதல், உட்கார்ந்து எழுதல், உயரத்தில் உள்ள கம்பிகளை பிடித்து தொங்குதல், கதவில் கால்களை முன்னோக்கி மடக்கி கொண்டு தொங்குதல் போன்ற பயிற்சிகளை குழந்தைகளுக்கு கற்பித்தால் விரைவில் உயரமாக வளர்ந்து விடுவார்கள். ஆனால் அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி குழந்தைகள் உயரமாக வளர காரணமாக அமைந்தாலும் பிற்காலத்தில் ஏதேனும் பின் விளைவினை ஏற்படுத்திவிடும். எனவே அளவான உடற்பயிற்சி அளிப்பது நல்லது.

குழந்தைகள் உயரம் குறைவாக இருப்பது போல் தோண்றினால் மருத்துவமனைகளுக்கு செல்லும் போது மருத்துவரிடம் கூறி வயதுக்கேற்ற சராசரி உயரம் தம் குழந்தைகளுக்கு உள்ளதா என்று சோதித்துக் கொள்ளலாம். சராசரி உயரத்திற்கு குறைவாக இருந்தால் உடனடியாக உணவு அளித்தலையும், உடற்பயிற்சியையும் ஆரம்பிக்கலாம்.

குட்டையாக இருப்பவர்கள் குறுகிய மனதையும், உயரமாக இருப்பவர்கள் உயர்ந்த, பரந்த மனப்பான்மையையும் உயர்ந்த இலட்சியங்களையும் கொண்டிருப்பதாக உளவியல் கருத்து. எனவே உயரமானவர்களாகவும் உயர்ந்த மனப்பான்மையும் கொண்டவர்களாக உங்கள் குழந்தைகளை உருவாக்குங்கள்.

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP