உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Thursday, May 13, 2010

குழந்தைகளின் வெட்கத்தைப் போக்கி சிறந்த ஆளுமை பண்புகளை வளர்ப்பது எப்படி?


குழந்தைகள் வளர்ச்சியடையும் போது அவர்கள் சமூகத்தில் பிறருடன் பழக வேண்டி இருக்கிறது. சமூக சூழ்நிலைகளில் பிறரை சந்திக்க நேரிடும்போது குழந்தைகளுக்கு வெட்க உணர்வு ஏற்படுவது இயற்கையான ஒன்றாகும். சாதாரணமாக ஓர் குழந்தை தன் வீட்டில் உள்ள அம்மா, அப்பா, மற்ற பிற குடும்ப உறுப்பினர்களுடன் இயல்பாக பழகும். நன்றாக வாயடிக்கும் ஆனால் புதியவர் ஒருவர் பெயரைக் கேட்டாலோ அல்லது வேறு விஷயங்களை விசாரித்தாலோ அவர்கள் முன் பேசவும், ஏதாவதொன்றை செய்யவும் மிகவும் வெட்கம் கொள்ளும்.

இரண்டு வழிகளில் வெட்கம் குழந்தைகளின் ஆளுமையில் இடம் பிடிக்கிறது. முதலாவதாக பரம்பரையின் காரணமாக பிறப்பிலேயே ஏற்படும் வெட்கமாகும். குழந்தையின் அப்பா, அம்மா கூச்ச சுபாவமுள்ளவர்களாக இருந்தால், அல்லது அவர்கள் குடும்பத்தில் சிலருக்கு கூச்ச சுபாவம் இருந்திருந்தால் அப்பண்பு குழந்தைகளுக்கும் கடத்தப்படும். இவ்வாறு பிறப்பால் கூச்ச சுபாவத்தைப் பெற்ற குழந்தைகளின் நரம்பு மண்டலம் எளிதில் தூண்டப்படுபவையாக அமைந்துள்ளன. எனவே சிறிய தூண்டுதல்கள் கூட எளிதான நரம்பு மண்டலத்தைத் தூண்டி கூச்சத்திற்கான எதிர்வினைகளை தோற்றுவிக்கின்றன.

இரண்டாவது சமூக சூழ்நிலைகளால் ஏற்படும் கூச்சம். பிறர் ஓர் குழந்தை பேசும் போது எப்படி அதை அங்கீகரிக்கிறார்கள். அல்லது அலட்சியப்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து கூச்ச சுபாவம் ஏற்படலாம். உதாரணமாக முதன் முதலாக ஓர் குழந்தை பலர் உட்கார்ந்திருக்கும் இடத்தில் இயல்பாக பேசியது. உடனே அங்கிருந்தவர்கள் “எப்படி பெரிய மனுஷி மாதிரி பேசுகிறார் பார்” எனக் கூறி ஓவென சிரித்து விட்டனர். இதைப் பார்த்த அக்குழந்தைக்கு அவமான உணர்ச்சி ஏற்பட்டது. அன்றிலிருந்து நான்கு பேர் புதியவர் இருக்கும் இடத்தில் பேசுவதை தவிர்த்தது. இவ்வாறு சூழ்நிலையில் உள்ள புதியவர்கள் குழந்தைகளிடத்தில் கூச்ச சுபாவத்தை ஏற்படுத்தலாம்.

மரபு நிலையில் வந்த கூச்சம், அல்லது கற்றுக் கொண்ட கூச்சம் என எதுவாயினும் அதை பின்வரும் வழிகளில் போக்கலாம்.

குழந்தைகள் அசட்டுத்தனமாகப் பேசினாலும், முதிர்ந்தவர்களைப்போல் பேசினாலும் அதை அங்கீகரிக்க வேண்டும் மாறாக பலர் முன்னிலையில் அவமானப்படும்படி கிண்டல் செய்யக்கூடாது.

கூச்ச சுபாவமுள்ள குழந்தைகளுக்கு பெற்றோர்கள் வீட்டில் உள்ள போது வெளி இடங்களில் பிறருடன் பேசுவது எப்படி, நடந்து கொள்வது எப்படி, பள்ளியில் பலர் முன்னிலையில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது எப்படி என பயிற்சி கொடுக்க வேண்டும். இப்பயிற்சியை திரும்பத்திரும்ப பல முறை தொடர்ந்து அளித்து வந்தால் கூச்சம் வெகுவாக குறைந்து விடும்.

கூச்சம் ஒருவரின் ஆளுமையையும் அன்றாட வாழ்க்கையையும் பாதிக்காத வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. அதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் கூச்சம் பல தீய செயல்களை செய்யவிடாமல் நம்மைத் தடுத்து அரண்போல் காக்கும். காந்தியடிகள் கூட தான் பல தவறுகளை செய்யாமல் இருக்க தன்னிடம் இருந்த கூச்சமே காரணம் என கூறியுள்ளார்.

கூச்சம் ஓர் பிரச்சனையாக உருவெடுத்து ஆளுமை வளர்ச்சியில் குறுக்கிடும் போது குழந்தைகளை உளவியல் நிபுணர்களிடம் அழைத்துச் சென்று “சமூக திறன்கள் பயிற்சி” அளிக்க வேண்டும். அதன் மூலம் குழந்தைகள் விரைவில் கூச்சத்திலிருந்து விடுபடுவார்கள்.

1 comments:

Thakshathra February 16, 2020 at 7:24 AM  

நல்ல விடயம்

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP