உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Friday, October 23, 2009

குழந்தைகளை விரும்பத்தகாத நடத்தைக்காகவும், அவர்கள் பெற்றோர் சொல் பேச்சு கேட்காத போதும் அடிக்கலாமா? சூடு வைத்தல் போன்ற பிற தண்டனைகளைக் கொடுக்கலாமா?


குழந்தைகள் பிறக்கும் போது எந்த நடத்தையையும் தன்னகத்தே கொண்டு பிறப்பதில்லை. மாறாக இந்த உலகில் வளரும் போது பிற மனிதர்களை கூர்ந்து நோக்கி, அவர்களுடன் உறவாடி நடத்தைகளைக் கற்றுக் கொள்கிறார்கள். எனவே குழந்தைகள் விரும்பத்தகாத முறையில் நடந்து கொள்கிறார்கள் என்றால் அந்நடத்தை அவர்களின் பெற்றோரிடமோ, அவர்கள் வளரும் சூழ்நிலையில் உள்ள பிறரிடமோ காணப்படலாம். அவர்களிடமிருந்தே அந்நடத்தையை குழந்தைகள் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் கற்றுக்கொண்ட விரும்பத்தகாத நடத்தையை மாற்ற வேண்டுமெனில், குடும்பத்தில் உள்ள யாரையாவது பார்த்து அந்நடத்தையை கற்றுக் கொண்டிருந்தால் முதலில் அவர் தன் நடத்தையை மாற்றி கொள்ள வேண்டும். நாளடைவில் அக்குழந்தையும் அந்த விரும்பத்தகாத நடத்தையை கைவிட்டு விடும்.

ஒருவேளை குழந்தைகள் விரும்பத்தகாத நடத்தையை நமக்குத் தெரியாத வேறு யாரையாவது பார்த்து கற்றுக் கொண்டிருந்தால், குழந்தையிடம் அந்நடத்தை ஏன் விரும்பத்தகாகது, அதை எப்படி மாற்றிக் கொள்ளலாம் என பெரியவர்களிடம் சொல்வதைப்போல விளக்கிக் சொல்ல வேண்டும். தொடர்ந்து மனம் தளராமல் பல நாட்கள் இப்படி சொல்லிக் கொண்டே வந்தால் குழந்தை விரைவில் அந்த நடத்தையை மாற்றிக் கொள்ளும்.

ஒரு வேளை அடித்துதான் திருத்த முடியும் என்ற கட்டாயம் ஏற்பட்டாலும் கூட, ‘அடித்து விடுவேன், சூடு வைத்து விடுவேன், உதைத்து விடுவேன்’ என சத்தம் போட்டு மிரட்டலாம். அடித்து விடுவேன் என சத்தமாக கூறிக் கொண்டே கையை ஓங்கலாமே தவிர, ஓங்கிய கையால் ஒருநாளும் அடிக்கக் கூடாது. சூடு வைத்து விடுவேன் என்று ஒரு கம்பியை எடுத்து காட்டலாமே தவிர ஒரு நாளும் சூடு போட்டு விடக்கூடாது.

நீங்கள் அடித்து மிரட்ட ஆரம்பித்து விட்டால் உங்கள் மீது குழந்தைக்கு இருக்கும் பயம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்துவிடும். ஒரு கட்டத்தில் தப்பு செய்யும் குழந்தை தைரியமாக செய்ய ஆரம்பித்துவிடும். அப்பா, அம்மாவுக்கு தெரிந்தால் மீறி மீறிப் போனால் அடிப்பார்கள் அவ்வளவுதான், வேறென்ன செய்து விடப் போகிறார்கள் என்ற மன நிலை ஏற்பட்டு விடும். அந்த மனநிலையை உருவாவதற்கு நீங்கள் காரணமாகி விடாதீர்கள்.

Wednesday, October 7, 2009

குழந்தைகள் எதைக் கேட்டாலும் இப்போதே வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்களே? அது இயல்பானதுதானா? அதை நாம் ஊக்குவிக்கலாமா?


குழந்தைகள் இன்ப விதியின் அடிப்படையில் வளர்பவர்கள். அதாவது எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், ஒரு போதும் துன்பத்தை அனுபவிக்க கூடாது என்பதே அவர்களின் வாழ்க்கைக் கோட்பாடு. எனவே அவர்கள் தன் மனதில் எழும் ஆசைகளை உடனுக்குடனே நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என நினைப்பதும், தன் தேவைகளை உடனுக்குடன் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதும் இயற்கையானது தான். இந்த நடத்தையின் காரணமாகத்தான் எதாவது ஒரு பொம்மையைக் கேட்கும் குழந்தை “ எனக்கு ஒரு பொம்மை வேண்டும், இப்போதே, இன்றைக்கே வேண்டும்” என கேட்பது. அதற்காக குழந்தையின் ஆசையை நாம் உடனே நிறைவேற்றி விடவேண்டும் என்று துடிதுடிக்க வேண்டியதில்லை. அது நம்மால் முடியவும் முடியாது. மேலும் ஓரிரு முறை அவ்வாறு உடனுக்குடன் குழந்தையின் ஆசையை உடனே தீர்த்து வைத்தால் அதுவே பழக்கமாகி பின்னர் நாம் எப்போது அவ்வாறு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். பிற்காலத்தில் தான் நினைப்பது உடனே நடக்கவில்லை என்றால் அக்குழந்தைக்கு மனச்சோர்வும், மன முறிவும் ஏற்படும். அது ஓர் ஆளுமைக் குறைபாடாக உருவெடுத்து வாழ்க்கையின் பல தோல்விகளுக்கு காரணமாக அமைந்துவிடும்.

தற்கால உளவியல் ஆய்வுகள் யார் தன் உள்ளுணர்வு ஆசைகளை கட்டுப்படுத்தி சிறிது பொறுத்திருந்து பின்னர் சரியான வேளை வரும்போது தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் திறமை பெற்றிருக்கிறார்களோ அவர்களே சிறந்த வெற்றியாளர்களாக திகழ்கிறார்கள் எனக் கண்டறிந்துள்ளன. இத்திறமை படைத்தவர்களுக்கு நுண்ணறிவு சற்று குறைவாக இருந்தாலும் அது அவர்களின் வெற்றியைப் பாதிப்பதில்லை எனவும் தெரியவந்துள்ளது. இத்திறமையை நாம் குழந்தைப் பருவத்திலேயே வளர்த்து விட்டால் குழந்தைகள் பெரியவர்களாகும் போது அது ஓர் வாழ்க்கை முறையாக மாறிவிடும்.

இப்போதே ஓர் பொம்மை வேண்டும் என்று குழந்தை கேட்டால், இரண்டு மணி நேரம் வேலை இருக்கிறது. முடித்துவிட்டு நாம் இருவருமே சென்று வாங்கி வரலாம் என்று கூறுங்கள். இன்றே ஐஸ்கிரீம் வேண்டும் என்றால் இன்று முடியாது நாளை வாங்கித்தருகிறேன் என்று கூறி அடுத்த நாள் வாங்கித் தாருங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் “சற்றே தள்ளிப்போடும் மனநிலையையும்” பொறுமையையும் குழந்தைகளிடத்தில் இளம் வயதிலேயே விதைத்து விடலாம்.

ஓடு மீன் ஓட உறுமீன் வரும்வரை காத்திருக்க வையுங்கள் உங்கள் கொக்கை. உலகில் வெற்றியாளராக்குங்கள்.

Tuesday, October 6, 2009

குழந்தைகளுக்கு என்ன திறமை உள்ளது என்பதையும் எதிர்காலத்தில் அவர்கள் என்ன துறையில் பிரகாசிப்பார்கள் என்பதையும் எப்படித் தெரிந்து கொள்வது?


ஒரு மனிதனின் வெற்றிக்கு அடிப்படையாகத் திகழ்வது நுண்ணறிவாகும். இதை ஐ.க்யூ என்று குறிப்பிடலாம். நுண்ணறிவு அதிகமாக உள்ள யாவரும் வெற்றியாளராகத் திகழ வாய்ப்புள்ளது. நுண்ணறிவு பற்றிய உளவியல் கோட்பாடுகளில் வலியுறுத்திக் கூறப்படும் விஷயம் யாதெனில் எல்லா மனிதர்களுக்கும் பொதுவான நுண்ணறிவும் அதோடு சிறப்பு நுண்ணறிவும் இருக்கும் என்பதுதான். உதாரணமாக ஒருவருக்கு பொது நுண்ணறிவும் அதோடு கணிதத்தில் சிறந்து விளங்குவதற்கான சிறப்பு நுண்ணறிவும் இருக்கலாம். மற்றொருவருக்கு பொது நுண்ணறிவும் அறிவியலில் சிறந்து விளங்குவதற்கான சிறப்பு நுண்ணறிவும் இருக்கலாம். அதைப்போல உங்கள் குழந்தைக்கும் பொது நுண்ணறிவோடு எதாவதொரு சிறப்பு நுண்ணறிவு கட்டாயம் இருக்கும். பிற்காலத்தில் எந்த சிறப்பு நுண்ணறிவு தங்களிடம் இருக்கிறதோ அந்தத் துறையிலேயே குழந்தைகள் வல்லுநர்களாக விளங்குவார்கள்.

ஒரு குழந்தை பொம்மைகளை உடைத்து விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து “என் மகன் பெரிய இஞ்ஜினியராக வருவான்” என்றெல்லாம் குழந்தைகளின் எதிர்காலத்தை கணிக்க முடியாது. அதற்கு மாறாக உளவியல் முறை சோதனைகளைக் கொண்டு குழந்தைகளின் திறன்களைக் கணிக்கலாம். தற்போது குழந்தைகளின் நுண்ணறிவு, படிப்புத்திறன், எந்தப் பாடத்தில் சிறப்பாக படிக்கிறார்கள் என்பதை கண்டறிதல் போன்றவற்றை அளவிட உளவியல் சோதனைகள் உள்ளன. மேலும் குழந்தைகள் எந்தத் துறையில் ஆர்வம் கொண்வர்களாக இருக்கிறார்கள்? அவர்களின் நாட்டங்கள் யாவை போன்றவைகளைச் சோதிக்க தனித்தனி உளவியல் சோதனைகள் தற்போது உள்ளன. குழந்தைகளை அச்சோதனைகளுக்கு உட்படுத்துவதன் மூலம் அவர்களின் திறன்களையும், துறைசார் ஆர்வங்களையும் கண்டறியலாம்.

பொதுவாக எந்த வயதில் குழந்தைகளை இச்சோதனைகளுக்கு உட்படுத்தலாம் என்ற கேள்வி எழும். நுண்ணறிவுச் சோதனைகளை எந்த வயதிலும் செய்து பார்க்கலாம். ஆர்வச் சோதனை, நாட்டச் சோதனை ஆகியவற்றை 10 வயதிற்கு மேல் 13 வயதிற்குள் செய்து குழந்தைகளின் ஆர்வம், நாட்டம் ஆகியவைகளை கண்டறிவது நல்லதாகும். பெற்றோர்களும் நாட்டில் என்னென்ன துறைகள் உள்ளன, அதற்கான வேலை வாய்ப்புகள் யாவை? புதிதாகத் தோன்றியுள்ள வேலை வாய்ப்புகள் யாவை? அவ்வேலைகளைப் பெற என்ன படிக்க வேண்டும் என்பனவற்றை தெரிந்தவர்களாக, விழிப்புணர்வு உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியம். வேலைப் பெயர் அகராதி போன்ற நூல்களை படிப்பதன் மூலம் இவ்வறிவைப் பெறலாம்.

Monday, October 5, 2009

புத்தக விமர்சனம்

பழைய காலத்தைப் போல் என்ன வியாதிக்கு என்ன மருந்து கொடுத்தால் என்ன? மருத்துவர் சொல்வதை செய்வோம் என்று சொன்னதை மட்டுமே செய்தவர்கள் இப்போது இல்லை மாறாக சொல்லாததையும் செய்து முடிக்கும் நோயாளிகளே தற்போது அதிகம். மருத்துவ அறிவியல் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து இருப்பதுதான் இதற்கு காரணம் ஆகும். காய்ச்சல் என்றால் கூட கையோடு சிறுநீர்ப் பரிசோதனை செய்து கொண்டு மருத்துவரைப் போய் பார்க்கலாம் என்பவர்களும், குழந்தைகளுக்கு உடம்புக்கு முடியவில்லை என்றால் டெர்மோமீட்டரை வைத்து காய்ச்சலின் அளவு தெரிந்து கொண்டு குழந்தையின் வயதுக்கேற்ப 5, 6, அல்லது 7 மில்லி பாராசெடமால் மருந்து கொடுத்துவிட்டு பின்னர் மருத்துவரை சென்று பார்க்கும் தாய்மார்களும் தற்போது சர்வசாதாரணம்.

இச்சூழ்நிலையில் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் பற்றிய அடிப்படைத் தகவகளை விளக்கிச் சொல்லும் விதமாக டாக்டர்.சு.முத்து செல்லக்குமார் எழுதிய கொலஸ்ட்ரால் குறைப்பது எப்படி என்ற நூல் நலம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. கொழுப்பு என்றால் என்ன என்று தொடங்கி எந்தெந்த உணவுப் பொருள்களில் எவ்வளவு கொழுப்பு இருக்கின்றன என விளக்கும் முழுமையான புத்தகம் இது.

இல்லாத ஒன்றை உப்பி ஊதி பெரிதாக்கி விடுவது மனித இயல்பு. கொழுப்பினால் உண்டாகும் ஆபத்து பற்றிய விஷயத்திலும் நடந்து இருப்பது இதுதான் என்பதை முதல் அத்தியாயத்திலேயே விளக்குகிறார். எல்லோரும் சேர்ந்துதான் கொழுப்பை அதிபயங்கர வில்லனாக்கி விட்டார்கள். உண்மையில் கொழுப்பு அப்படிப்பட்ட வில்லன் இல்லை என ஒரு மருத்துவரே சொல்லிவிட்டால் பிறகு நாம் ஏன் பயப்படவேண்டும் என்ற உணர்வை முதல் அத்தியாயம் ஏற்படுத்துகிறது. உடலுக்குத் தேவையான சக்தியைத் தருவது, உடல் நலத்துக்குத் தேவைப்படும் பல்வேறு செயல்பாடுகளிலும் பங்கு கொள்வது செல்களின் செயல்பாட்டை சீராக்குதல் என கொழுப்பு நல்ல வேலைகளை செய்வதை ஆசிரியர் விளக்கமாக எழுதியிருக்கிறார். இந்த விஷயங்கள் பலரும் சொல்லாமல் மறைத்த விஷயங்களாகத் தெரிகின்றன.

இரண்டாம் அத்தியாயம் கொழுப்பு நல்லதா, கெட்டதா என்ற கேள்வியோடு தொடங்கி கொழுப்பின் நற்செயல்களை முழுவதுமாக விளக்குகிறது. ஒரு சிலர் கொழுப்பு அதிகமானால் இதய நோய் வரும் என்ற ஒரே எண்ணத்துடன் கொழுப்பு உணவுகளை அறவே ஒதுக்கி விடுகிறார்கள். ஆனால் அவர்கள் இதய நோய் இல்லாமல் இருந்தாலும் கூட வேறு பல நோய்களை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஏன் அவர்களுக்கு அப்படி பிற நோய்கள் வருகின்றன என்பதை இந்த அத்தியாயத்தை படிக்கப்படிக்கவே புரிந்து கொள்ளலாம். கொழுப்பை அறவே ஒதுக்கும் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டியது இரண்டாம் அத்தியாயம்.

சாதாரணமாக கடையில் வாங்கி உண்ணும் பொருள்களில் என்ன கொழுப்பு இருக்கும், எவ்வளவு கொழுப்பு இருக்கும் என்பது யாருக்குத் தெரியும்? விபரங்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தாலும் அதை புரிந்து கொள்வதற்கு தேவையான அடிப்படை அறிவு நிறையப் பேருக்கு இருப்பதில்லை. ஆசிரியர் நல்ல கொழுப்பு என்றால் எது? கெட்ட கொழுப்பு என்றால் எது என கொழுப்பின் வகைகளை விளக்கி, டப்பாவில் எழுதப்பட்டிருக்கும் விவரங்களை வைத்து நல்ல கொழுப்பின் அளவை கண்டுபிடிப்பதற்கு கூறியுள்ள வழி மிக எளிமையானதாக இருக்கிறது. பெரிய வியாதிகள் வராமல் தடுக்கும் ஆபத்பாந்தவனாக ஒமேகா-3, ஒமேகா-6 கொழுப்பு வகைகளின் நற்செயல்களை நாம் யாரும் சாதாரணமாக கேள்விப்பட்டிருக்க முடியாது.

உடல் பருமனாகும் போது உடலில் ஒரு சில பகுதிகள் தான் பெருத்துப் போகின்றன. உதாரணமாக நடுவயதைத் தாண்டிய ஆண்கள் அனைவருமே ஏறத்தாழ பெருத்த வயிறு கொண்டவர்களாகவே தோற்றமளிக்கிறார்கள். ஏன் வயிறு மட்டும் இப்படி பெருத்துப் போகிறது என்ற கேள்வி தொந்தியுள்ள ஆண்களைப் பார்க்கும் போதெல்லாம் தோண்ரும் கேள்வி. ஆசிரியர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் எந்தெந்த இடத்தில் கொழுப்பு திசுக்கள் அதிகமாக இருக்கின்றன என கூறியிருக்கிறார். அதைப் படிக்கும் போதுதான் நம் கேள்விக்கு சரியான விடை தெரிகிறது.

கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான காரணங்களில் ஒன்றாக மன அழுத்தத்தையும் ஆசிரியர் எழுதியிருக்கிறார். உதாரணமாக மன அழுத்தத்தில் இருப்பவர்கள் தங்களின் பிரச்சனைக்கு வடிகாலாக சிப்ஸ் போன்ற கொழுப்பு நிறைந்த நொறுக்குத் தீனிகளை அதிகமாக சாப்பிடுகின்றனர். இதனால் இவர்களையும் அறியாமல் உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கிறது என்பது மிகச் சரியான விளக்கம். மன அழுத்தம் அதிகரிக்கும் போது அதிகமாக உணவு உண்டு தன் மன அழுத்தத்தை போக்கிக் கொள்வது ஒரு சிலரின் ஆளுமைக் கூறு. இந்த நடத்தையை பற்றி உளவியலில் நிறைய ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதிக கொலஸ்ட்ரால் உண்டாக்கும் நோய்கள் அனைத்தையும் ஆசிரியர் பட்டியலிட்டு இருக்கிறார். இதன்மூலம் தெரியவருவது எல்லா நோய்களுக்குமே கொலஸ்ட்ரால் அதிகரிப்பு காரணமாக இருக்கிறது என்பதுதான். அதிகக் கொலஸ்ட்ராளுக்கான அறிகுறிகளை எவ்வாறு கண்டறியலாம் என்பது படங்களுடன் விளக்கப்பட்டிருக்கிறது. கொலஸ்ட்ராலின் அளவை கண்டறிய செய்யப்படும் சோதனைகளையும் விரிவாகவே விவரித்திருக்கிறார் ஆசிரியர். கொலஸ்ட்ரால் சோதனைகள் பற்றிய அடிப்படை அறிவு பெறவும், யார் எப்போது கொலஸ்ட்ரால் சோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற ஐயங்களைப் போக்கிக் கொள்ளவும் இவ்விவரங்கள் உதவியாக இருக்கும்.

கொலஸ்ட்ரால் என்னென்ன உணவுப் பொருள்களில் இருக்கின்றன? அதன் அளவு யாது? என்ற விவரப்பட்டியலையும், கொலஸ்ட்ராலை தடுக்க செய்ய வேண்டிய உடல் பயிற்சிகளையும், கொலஸ்ட்ரால் பற்றி நமக்கு ஏற்படும் பொதுவான சந்தேகங்களுக்கான விளக்கங்களையும் ஆசிரியர் எழுதியிருக்கிறார்.

புத்தகத்தை படிக்கும் உங்களை ஆச்சரியப்படுத்தும் சில விஷயங்களும் இருக்கின்றன:

1. உணவில் உள்ள கொழுப்பை நீங்கள் கட்டுப்படுத்தினாலும் உடலுக்குள் கொழுப்பு உற்பத்தியாகிக்கொண்டு தான் இருக்கும்!

2. அதிகப்படியான கொழுப்பினால்தான் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன என்ற கருத்தை ஆராய்சியாளர்கள் மறுக்கிறார்கள்!

3. முட்டையின் மஞ்சல் கருவில் கொலஸ்ட்ரால் மிகுதியாக இருந்த போதிலும் அதனால் பாதிப்பு பெரிதாக இருப்பதில்லை என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்!

4. குழந்தைகளுக்கு 2 வயதிலேயே கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்யலாம்!

5. மது அருந்தினால் மாரடைப்பை தடுக்கலாம் என்பது உண்மையே! என்பனதான் அந்த ஆச்சரியமான செய்திகள்.

மருத்துவ துறை சார்ந்த புத்தகமானாலும் ஆசிரியர் ஜனரஞ்சகமான முறையில் புத்தகத்தை எழுதியுள்ளார். “கொழுப்பு எம்.ஜி.யாரா அல்லது எம்.என்.நம்பியாரா! என கேட்பது, “ஒருவரது நடத்தையை வைத்து உனக்கு கொழுப்பு அதிகம்டா எனக் கடுப்பில் சொல்லாமே தவிர, அவரைப் பார்த்தவுடன் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும் அல்லது இருக்காது என்று சொல்ல முடியாது” என்று எழுதியிருப்பது படிக்கும்போது மருத்துவ புத்தகம் படிக்கிறோம் என்ற உணர்வை குறைக்கிறது.

வயதில் மூத்த பேராசிரியர் ஒருவர் உடல் நலமின்மையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு போகும்போது மிகுந்த மன உளைச்சலுடன் வேண்டா வெறுப்பாகத்தான் போனார். ஒருவாரம் மருத்துவமனை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார். சில மாதங்கள் கழித்து பேசிக்கொண்டிருக்கும் போது அவர் தான் மருத்துவனையில் சிகிச்சை பெற்ற அனுபவத்தை சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தார். இறுதியாக அவர் சொன்னது “வருடம் ஒரு முறை நோய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மருத்துவமனையில் 10 நாட்கள் அட்மிட் ஆகிவிடவேண்டும். வெளியே வரும்போது உடல் முழுவதும் ஓவர்ஹால் செய்தது போன்ற உணர்வும் தெம்பும் கிடைக்கும்” என்பது தான். மருத்துவமனையின் சிகிச்சை முறை பயந்து கொண்டு சென்றவரையே பாசம் கொள்ளச் செய்து விட்டது. அதைப்போல கொலஸ்ட்ரால் குறைப்பது எப்படி என்ற இந்த நூலைப் முழுவதுமாக படிபவர்கள் மருத்துவ அறிவியலின் மீது நாட்டம் கொள்வார்கள்.

இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க இங்கே செல்லுங்க: http://nhm.in/shop/978-81-8368-974-8.html

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP