உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Tuesday, February 23, 2010

புத்தக விமர்சனம்

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ஆர்.முத்துகுமார் அவர்கள் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல் “அத்வானி”. சமகாலத்தில் வாழும் குறிப்பிட்டு சொல்லும் தலைவர் ஒருவரைப் பற்றிய நூல் இது. அத்வானியின் சுவாசம் ஹிந்துத்வா, உயிர் ஆர்.எஸ்.எஸ் என்று அறிமுகப்படுத்தி அத்வானியை ஓர் இந்து தலைவராக சித்தரிக்க முயற்சி செய்வது போல் நூலை கொண்டு சென்ற ஆசிரியர் முடிவில் அவர் ஓர் செயல்வீரர் என அத்வானியின் ஓர் ஆளுமைப் பண்பையே நிலைநாட்டியிருக்கிறார். நூலில் அவர் தன் சொந்த மாகாணத்திலிருந்து புறப்படது முதல் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது வரையிலான நிகழ்வுகள் விவரிக்கப்பட்டுள்ளன. விவரிக்கப்பட்ட நிகழ்வுகளைக் கொண்டு ஆராயும் போது செயல் புரிய வேண்டும் என்ற மனத்தீ அத்வானிக்குள் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருப்பதை நன்கு உணர்ந்து கொள்ளலாம்.

ஓர் பள்ளி ஆசிரியராக தன் பணியைத் தொடங்கியவர் ஒரு நாட்டின் பிரதமர் வேட்பாளராக ஆறிவிக்கப்படும் அளவுக்கு உயர்கிறார் என்றால் அவர் உழைப்பு சாதாரணமாக இருக்க முடியாது என்பதற்கு உதாரணமாக இராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களில் கட்சியை வளர்க்க அத்வானி பட்ட கஷ்டங்களை உதாரணமாகக் கொள்ளலாம். ”பின் வாங்குவதில் அவருக்கு உடன்பாடில்லை, உழைப்பு, கடும் உழைப்பு, வெறித்தனமான முதலீட்டைச் செய்தார்” என்ற ஆசிரியரின் வரிகள்தான் அத்வானியின் உயர்வை விளக்கும் சொற்கள்.

தீதையாள், நானாஜி தேஷ்முக், அடல் பிகாரி வாஜ்பாய், குஷாபாவ் தாக்ரே போன்ற தலைவர்களுடன் பழகி பணியாள் போல் வேலை செய்த அனுபவமே அத்வானியை விரைவிலேயே தலைவராக உயர்த்தியது எனக் கொள்ளலாம். ஆயினும் தான் தலைவராக விரும்பவில்லை, தொண்டராக பணியாற்றவே விருப்பம் என்பதை அத்வானியின் ஆழ்மனம் பலமுறை தெரிவித்திருப்பதை பல நிகழ்வுகளின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. வாஜ்பாயே நீங்கள் தான் தலைவர் என்று சொன்ன போது கூட “இல்லை எனக்கு சரியாக பேசத் தெரியாது” என்று யதார்த்தமாக மறுத்ததை அதற்கு ஓர் உதாரணமாகக் கொள்ளலாம்.

பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை விளக்கும்போது “இம்மாதிரி எல்லாம் நடக்கும் என்பதை இவர் எதிர் பார்த்தாரா இல்லையா?” என்று குறிப்பிடுகிறார். அதுபோலவே அத்வானி நடக்குமா என்று நினைக்காத பலவும் அவர் அரசியல் வாழ்க்கையில் நடந்துள்ளன என்பதை புத்தகம் முழுவதும் விவரிக்கப்பட்டுள்ள நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. கரசேவை ஊர்வலமும் அவ்வாறே நடந்திருக்க வேண்டும். அவர் போட்ட திட்டம் அந்த அளவுக்கு செயல்படுத்தப்படும் என்று அவரே எதிர்பார்த்து இருக்க மாட்டார். அத்வானியின் ரத யாத்திரை பாரதிய ஜனதா கட்சியை இந்த அளவுக்கு உயர்த்தி முக்கியத்துவம் வாய்ந்த ஓர் கட்சியாக மாற்றும் என்று வாஜ்பாய் கூட எதிர்பார்த்து இருக்க மாட்டார். அதைப் போலவே புத்தகத்தின் இறுதி பத்தியில் கூறியிருப்பதைப் போல “தோற்றால் நிச்சயமாக கட்சியை பின்னால் இருந்து இயக்க மாட்டார். இளைய தலைமுறைக்கு வழிவிட்டு விடுவார்” என்பதும் இவ்வளவு விரைவிலேயே நடக்கும் என்பதை அத்வானி எதிர்பார்த்து இருக்க மாட்டார்.

இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஓர் அரசியல் தலைவரைப் பற்றிய புத்தகம் என்பதால் சுதந்திரத்திற்கு முன்பிருந்து தற்காலம் வரையிலான அரசியல் நிகழ்வுகளை கூறாமல் அத்வானியின் வரலாற்றை மட்டும் எழுதுவது சாத்தியமில்லை. எனவே புத்தகம் எல்லா முக்கிய அரசியல் நிகழ்வுகளையும் விலாவரியாக அலசுகிறது. அந்த வகையில் முதல் அத்தியாயத்திலேயே பாபர் மசூதி இடிப்பை நேரலை ஒலிபரப்பு போன்று விளக்கியிருக்கிறார் ஆசிரியர். மகாத்மா காந்தி படுகொலையின் உண்மை நிலை, எமர்ஜென்சி காலத்து கொடுமைகள், காங்கிரஸ் ஆட்சி இழக்கும் போதெல்லாம் நடந்த எதிர்கட்சி கூட்டனி உருவாக்கங்கள் என எல்லா நிகழ்வுகளும் மிக தெளிவாக சுருக்கமாகவும் அத்வானியின் வரலாற்றோடு சம்பந்தப்படுத்தி விளக்கப்பட்டுள்ளது.

புத்தகத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடிவது பிரமோத் மகாஜன் என்னும் இளைய தலைமுறை தலைவரின் மாபெரும் ஆளுமை. அத்வானியின் பாத யாத்திரை திட்டத்தை இரத யாத்திரையாக மாற்றியதே பிரமோத் மகாஜன் தான் என படிக்க நேரும் போது மறைந்த அத்தலைவரின் செயலூக்கத்தை எண்ணி வியப்படையாமல் இருக்க முடியவில்லை. பிரமோத் மகாஜன் போன்ற இளம் தலைவர்கள் இல்லாதது கூட அத்வானியின் பிரதமர் கனவு நிறைவேறாமல் போனதற்கு ஓர் காரணமாக இருக்கலாம் என்று ஓர் உணர்வு ஏற்படுகிறது.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் போது பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அத்வானியை மதவாதி, ஓர் இனத்திற்கு எதிரானவர், ஆபத்தான மற்றும் சிக்கலான நேரங்களில் நொறுங்கிப் போய்விடக் கூடியவர் என்றெல்லாம் உருவகப்படுத்தினாலும் கூட அவர் மதச்சார்பற்றவர் என்பதே மிகப் பெரிய எதிர்மறை கூறாக அமைந்து விட்டது. ஆனால் ஒரு மனிதனின் குழந்தைப் பருவம் இறுதி வரை அம்மனிதரின் ஆளுமையிலும் அவர் புரியும் செயல்களிலும் தாக்கம் செய்து கொண்டே இருக்கும் அந்த வகையில் பார்க்கும் போது பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் அத்வானிக்கு ஏற்பட்ட வாலிப வயது அனுபவங்களே அவரின் வயோதிக காலத்திலும் வழிநடத்திக் கொண்டு இருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளலாம். அடிபட்டவர்கள் விரைவில் மறந்து விடுவதில்லை.

அத்வானியால் எழுதப்பட்ட எனது தேசம், எனது வாழ்க்கை என்ற மிகப் பெரிய நூலில் காணப்படும் எல்லா விசயங்களும் இந்நூலில் காணப்படுகின்றன. ஒரு மிகப் பெரிய செயல் வீரரை பற்றி அறிந்து கொள்ள உதவும் சிறந்த நூல் இதுவாகும். இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க இங்கே செல்லுங்க URL: http://nhm.in/shop/978-81-8493-140-2.html

0 comments:

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP